அத்தியாயம் 4
“ஆமா, உன் பேரு கிளியோ பாட்ரா பாரு. எவன் டி உனக்கு பஞ்சவர்ணம்னு பேர் வச்சான். எப்படி ஸ்டைலா கூப்பிட்டாலும், கேவலமா தான் இருக்கு. சரி உனக்கு ஒரு பேர் வைப்போம்”, என்று சொல்லி கொண்டே யோசித்தவன், “இனி உன்னை வர்ணானு, கூப்பிடுறேன் சரியா?”, என்றான்.
“சரி மாமா”, என்று சொல்லி கொண்டே அவனுடன் நடந்தாள்.
பைக் எடுத்து கொண்டு வந்தவன், “உக்காரு”, என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினான்.
பயத்துடன் விழித்து கொண்டிருந்தாள் பஞ்சு.
“ஏய் வர்ணா, என்ன ஆச்சு? ஏறுடி”
“எனக்கு பயமா இருக்கு. இதுல நான் போனதே இல்லை. கீழ விழுந்துட்டேனா, என்ன செய்ய மாமா?”
“இது வேறயா? என்னை பிடிச்சுக்கோ”, என்று தைரியம் சொன்னான்.
பயத்துடன் ஏறி அமர்ந்தவள், பல்லி போல் அவன் முதுகில் ஒட்டி கொண்டு வந்தாள்.
“ஏண்டி இப்படி உக்காந்தா, மனுஷன் எப்படி வண்டி ஓட்ட? கொஞ்சம் விலகி உக்காந்து தோளை பிடிச்சுக்கோ”
“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி நகர்ந்து அமர்ந்தாள்.
ஒரு வழியாக மார்க்கெட் சென்று வண்டியை நிறுத்தியவன், அவளுடன் இருந்து காய் எல்லாம் வாங்கி கொடுத்தான். அது வரை, எல்லாம் நன்றாக தான் சென்றது.
இரண்டு பை முழுவதும் காய் வாங்கி கொண்டு வந்தவர்கள், வண்டியில் ஏறின உடனே, ஒரு பையை அவனுக்கு முன் வைத்தான். இன்னொரு பையை அவள் கையில் கொடுத்து மடியில் வைத்திருக்க சொன்னான்.
“அது வண்டியே சுமக்கும் மாமா”, என்றவள் அதையும் அவன் முன்னே வைத்தாள்.
முன்னால் இருந்த பை, அவன் கழுத்தை திருப்ப விடாமல் செய்ததால், “இப்படி வச்சா, நான் வண்டியை எப்படி ஓட்டுவேன்? சரி ஏறு வர்ணா”, என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவளும் ஏறி அமர்ந்தாள்.
ஒரு அடி வண்டி சென்றிருக்கும், குறுக்கே ஒரு பையன் ஓடியதால், உடனடியாக பிரேக் அடித்தான் ஆதி.
அவன் பிரேக் அடித்ததில், பையில் உள்ள ஒரு கத்தரிக்காய் கீழே விழுந்தது.
“மாமா தான், வண்டியை நிப்பாட்டிருக்காங்களே”, என்று நினைத்து கொண்டு அதை எடுக்க கீழே இறங்கினாள்.
முன்னே “அந்த பையனுக்கு எதுவும் ஆச்சோ?”, என்று கவனம் வைத்திருந்த ஆதி, இவள் இறங்கியதை கூட கவனிக்காமல் வண்டியை ஓட்டி கொண்டு சென்றே விட்டான்.
இங்கே “மாமா, மாமா”, என்று கத்தி கொண்டு அவன் பின்னால் ஓடி வந்த பஞ்சை, அவன் கவனிக்கவே இல்லை.
பாதி வழி சென்ற பின்னர் தான் உணரவே செய்தான். “என்ன, பின்னாடி ஆள் இல்லாத மாதிரி இருக்கு?”, என்று நினைத்து கொண்டே, கை வைத்து துழாவி பார்த்தவன் திகைத்தான்.
“அச்சச்சோ, பாதி வழியில் விழுந்துட்டாளோ?”, என்று நினைத்து கொண்டு வண்டியை திருப்பி கொண்டு அதே பாதையில் வந்தான்.
அந்த பையன் குறுக்கே வந்த இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. “ஐயோ என்ன ஆச்சு?”, என்று நெஞ்சு முழுக்க பதட்டத்துடன் அந்த இடத்தை நெருங்கினான் ஆதி.
“ஐயோ, என் மாமா என்னை நடு ரோட்ல, விட்டுட்டு போய்ட்டாரே!”, என்று சத்தம் கேட்டு கூட்டத்தை விலக்கி பார்த்தான். அங்கே சேலை முந்தானையை எடுத்து முக்காடு போட்டு கொண்டு, குத்தவச்சு உக்காந்து புலம்பி கொண்டிருந்தாள் பஞ்ச வர்ணம்.
“ஐயோ மானத்தை வாங்குறாளே”, என்று நினைத்து கொண்டே அவளை நெருங்கியவன், “எந்திரி டி. நீ ஏறாம இருந்துட்டு இப்படி கூட்டத்தை கூட்டி வச்சிருக்க. வீட்டுக்கு வா”, என்று கை பிடித்து தூக்கி விட்டான்.
“வந்துட்டீங்களா மாமா?”, என்று கேட்டு கொண்டே எழுந்தவள், பக்கத்தில் இருந்தவன் காலில் ஒரு எத்து வைத்தாள்.
அவளை வண்டியில் உக்கார செய்து விட்டு “தயவு செஞ்சு என்னை பிடிச்சுக்கோ டி. இருக்கியா இல்லையான்னே, தெரிய மாட்டிக்கு”, என்று சொல்லி கொண்டே அவள் கையை பிடித்து தன்னுடைய வயிற்றை சுற்றி போட்டான்.
எதுவோ ஒரு புது விதமான உணர்வை அனுபவித்தாள் பஞ்சு. சிறிது தூரம் சென்ற பிறகு “எதுக்கு அவனை மிதிச்ச?”, என்று கேட்டான் ஆதி.
“அந்த எடுபட்ட நாயி நான் மாமாவை காணும்னு சொன்ன உடனே, நான் உங்க மாமாவை கண்டு பிடிச்சு தரேன். என்கூட வாரியான்னு கேட்டான். அவன் முழியே சரி இல்லை. எங்கயாவது கூட்டிட்டு போய் வித்துட்டான்னா அதான்”, என்றாள் பஞ்சு.
“ஹ்ம்ம் விவரம் தான்”, என்று சொல்லி கொண்டே வீட்டில் வண்டியை நிப்பாட்டியவன் “இன்னும் இவ கூட வண்டில போக கூடாது”, என்று முடிவு எடுத்தான்.
அடுத்து எதையோ செய்து சாப்பிட்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்றவன், சகுந்தலாவை போனில் அழைத்தான்.
“என்ன டா அதுக்குள்ளே போனு? புது கல்யாணம், புது பொண்டாட்டி ஹ்ம்ம் கலக்குற ஆதி”, என்று கிண்டலடித்தாள் சகுந்தலா.
“நீ அடங்கவே மாட்ட மா. சரி எப்ப வர?”
“நான் வர நாள் ஆகும் டா. நான் பொறந்து வளர்ந்த ஊரை ரசிக்கிறேன். அது உனக்கு பொறுக்காதே. அப்படியே அப்பனை மாதிரியே பொறந்துருக்க டா”
“நீ என்ன வேணும்னாலும் திட்டிக்கோ மா. ஆனா, சீக்கிரம் வந்துரு ப்ளீஸ். இங்க இவ தொல்லை தாங்க முடியலை. வெஸ்டர்ன் டாய்லட்டை போய் அடிச்சு துவைக்கிற கல்லுனு நினைச்சு, அடிச்சு உடைச்சிட்டா.
நடு வீட்டுல துணி காய போட்டு, என்னை கீழ விழ வச்சிட்டா. அது கூட பரவால்ல. சமையல் செய்ய விறகு பொறுக்கிட்டு வாரா மா. என்னால இவளை மேய்க்க முடியல. நீ வந்துரு ப்ளீஸ்”
“ஆதி”
“ம்ம் சொல்லு மா. வர தான?”
“அவ உன் பொண்டாட்டி டா. இனிமே நீ தான் அவளுக்கு எல்லாமும். அவளுக்கு தெரியாததை சொல்லி கொடு. ஆனா, திட்டாத கோப படாத. பத்து நிமிசம் உன்கிட்ட பேசுற பேசண்ட்ஸ் கிட்ட சிரிச்சு பேசுற நீ, காலம் முழுக்க உன் கூட இருக்கும் உன் பொண்டாட்டி கிட்டயும், அன்பா பழகு.
அவ தெரியாம செய்ற விசயங்களை எரிச்சல் படாம ரசிச்சு பாரு. நீ இந்த சகுந்தலாவோட பையன். என்னைக்கும் உன்னால யாரையும் நோகடிக்க முடியாது. எனக்காக என் பேச்சை கேட்டு பஞ்சை கல்யாணம் செஞ்ச. அதுக்காக, உடனே அவளை காதலிக்கணும்னு சொல்லல. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா காதலிக்க ஆரம்பி சரியா?”
“ம்ம்”
“என்ன ம்ம்? புரிஞ்சதா டா?”
“ம்ம் புரிஞ்சது”
“என்ன புரிஞ்சது?”
“காதலிக்க ஆரம்பிக்கணும்னு”
“ஹ்ம் சரி. ஆனா, சீக்கிரம் ஆரம்பிச்சிரு டா. நான் கண்ணு மூடுறதுக்குள்ளே, என் பேர பிள்ளையை பாக்கணும்”
“சராசரி அம்மா மாதிரி பேசாத சகு. உனக்கு நல்லாவே இல்லை”
“அப்ப சரி, சகுந்தலாவா சொல்றேன். சீக்கிரம் அவளை காதலிச்சு உடனே ஒரு பிள்ளையை பெத்து, என் கையில் தர. அப்படி இல்லைன்னா….”
“என்ன? அப்படி இல்லைன்னா? அப்படி செய்யலைன்னா என்ன சொல்லுவ? சீனியை சாப்பிடுவன்னு சொல்லுவ, அப்படி தான?”
“கண்டிப்பா, இனி அப்படி சொல்ல மாட்டேன் டா ஆதி”
“திருந்திட்டியாம்மா? அப்ப என்ன செய்வ?”, என்று ஆவலாய் கேட்டான்.
“வெறும் சீனி சாப்பிட்டா, நல்லாவே இல்லை டா ஆதி. பிடிச்ச சுவீட்டா கடைல வாங்கி சாப்பிடுவேன்”
“அதான, நீயாவது திருந்துறதாவது?”
“என்கிட்ட வாய் அடிக்காம, அவளை எங்கயாவது வெளிய கூட்டிட்டு போ. நான் இங்க பிசி. என்னை டிஸ்டர்ப் பண்ணாத.”
“ஏன், அங்க அப்படி என்ன வெட்டி முறிக்கிற?”
“பல்லாங்குழி விளையாடிட்டு இருக்கேன் டா. நான் தான் முத்து போடணும்.”
“நீ முத்து போடாத. நீயே அதுக்குள்ளே விழுந்துரு. வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
சகுந்தலா சொன்ன வார்த்தைகள், அவனை சுற்றி வந்தது. மார்க்கெட்டில் அவளை விட்டுவிட்டு வந்தவுடன், தரையில் முக்காடிட்டு அமர்ந்து புலம்பி கொண்டிருந்த பஞ்சு அவனுடைய நினைவுக்கு வந்தாள். அவன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
“ஆதி, இனி அவளை ரசிக்கணும்” என்று மனதுக்குள் நினைத்து கொண்டான். “அவள் செய்கையை ரசிக்கிறியா? இல்லை, ஐயோன்னு அலறுறியான்னு பாப்போம்” என்று சிரித்தது விதி.
“அம்மா, உன்னை எங்கயாவது வெளில கூட்டிட்டு போக சொன்னா. வா போகலாம் கிளம்பு. அப்புறம், உன்னோட பழைய சேலை கட்ட வேண்டாம். அம்மா வாங்கி கொடுத்ததை கட்டு”, என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான்.
“சரி”, என்று கிளம்பி வந்தாள் பஞ்சு.
நேரடியாக ஒரு ஐஸ்க்ரீம் பார்லர்க்கு அழைத்து சென்றான் ஆதி. “குச்சி ஐஸ் மட்டும் தான் மாமா, சாப்பிட்டுருக்கேன். இது நல்லா இருக்கு”, என்று சொன்னாள் பஞ்சு.
கீழே குனிந்து சாப்பிட்டு கொண்டிருந்தவன், அவள் குரலில் தலையை நிமிர்த்தி அவளை பார்த்தான். பார்த்தவன் திகைத்தான். அங்கே கையை வைத்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்தாள் பஞ்சு.
“ஐயோ”, என்று தலையில் அடித்தவன், “இதுக்கு தான் வர்ணா, இந்த ஸ்பூன் கொடுத்துருக்காங்க. அதை வச்சி சாப்பிடு”, என்று சொல்லி விட்டு தன்னுடைய கர்ச்சிஃப் எடுத்து, அவள் உதட்டை துடைத்து விட்டான்.
அவன் தொடுகையில் நெளிந்தாள் பஞ்சு. “போய் கையை கழுவிட்டு வா”, என்று அனுப்பினான்.
“எங்க மாமா போய் கழுவணும்?”
“அதோ, அங்க லைட் எறியுது பாரு, அங்க தான்”
அங்கே போனவள் உடனே திரும்பி வந்தாள்.
“மாமா”, என்று அலறி கொண்டே ஓடி வந்தாள். எல்லாருடைய பார்வையும், இவர்களை நோக்கி திரும்பியது.
அவள் அலறலில் தலையில் அடித்து கொண்டவன் “என்ன வர்ணா? கை கழுவலையா?”, என்று கேட்டான்.
“அங்க, தண்ணி வரலை மாமா”
“என்னது வரலையா? வா பாப்போம்”, என்று சொல்லி விட்டு அவளை கூட்டி கொண்டு நடந்தான்.
“குழாயை எப்படி திருக்கினாலும், எனக்கு மட்டும் தண்ணி வர மாட்டிக்கு. ஆனா, இன்னும் ஒரு ஆள் வந்து கழுவினார். அவருக்கு மட்டும் வந்துச்சு. அதே குழாய்ல நானும் கழுவ போனேன். ஆனா வரலை. குச்சி வச்சி சாப்பிடாம, கை வச்சு சாப்பிட்டதுனால, எனக்கு மட்டும் வர மாட்டிக்கோ மாமா?”
“போடி லூசு” என்று சொல்லி விட்டு கையை பைப் அடியில் வைத்தான். தண்ணீர் வந்தது.
“உங்களுக்கு மட்டும் எப்படி மாமா, குழாயை திருக்காமலே தண்ணி வந்தது?”
“இதை திருக்க கூடாது, இப்படி கீழ கையை நீட்டினா அதுவே வரும்”, என்று சொல்லி கொடுத்தான்.
“இந்த ஊரில் எல்லாமே அதிசயமா இருக்கு மாமா “
“ஊரில் அதிசயம் இல்லை. நீ தான் உலக அதிசயம். வா போகலாம்”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தான்.
“சரி வா, உனக்கு சுடிதார் வாங்கி தரேன்”, என்று சொல்லி ஜவுளி கடைக்கு கூட்டி சென்றான் ஆதி.
போகும் முன் அவள் கையை பிடித்தவன் “இங்க பாரு வர்ணா, இங்க இருக்குற என்ன வேணும்னாலும் கேளு. நான் வாங்கி தரேன். ஆனா, எல்லாருக்கும் கேக்குற மாதிரி மாமா மாமான்னு கத்த மட்டும் செய்ய கூடாது சரியா? வா”, என்று உள்ளே கூட்டி போனான்.
“ம்ம்” என்று மண்டை ஆட்டி விட்டு அவனுடன் சென்றாள் பஞ்சு. இரண்டு சுடிதாரை எடுத்தவன் “அளவு சரியா இருக்கான்னு, இந்த ரூமில் போய் போட்டு பாரு”, என்று அனுப்பினான். போவதற்கு முன் அவளை இழுத்தவன் “அவள் காதில் சேலைக்கு மேலேயே, போட்டு பாரு” என்று சொன்னான்.
“சி போங்க மாமா”, என்று வெட்க பட்டு கொண்டு உள்ளே போனாள்.
“இப்ப எதுக்கு வெக்க படுறா? நிறைய கடையில் கேமரா வைக்கிறாங்கன்னு சொன்னதுனால சொன்னேன். லூசு”, என்று சொல்லி விட்டு அவள் வரவுக்காக காத்திருந்தான்.
போன உடனேயே பயந்து போய் வெளியே வந்தாள் பஞ்சு. அவள் முகம் கலவரமாக இருந்தது. அவன் அருகில் வந்து, அவனை ஒட்டி கொண்டு நின்றாள்
“என்ன ஆச்சு வர்ணா?”, என்று பதட்டத்துடன் கேட்டான் ஆதி.
“உள்ள… உள்ள…. கண்ணாடி, கண்ணாடில பேய் இருக்கு மாமா”
“என்ன டி உளறுற? இங்க எப்படி பேய்?”
“நீங்க வேணா வாங்க மாமா, நான் காட்டுறேன். அது நான் செய்றதை எல்லாம் செய்யுது மாமா”
“கண்ணாடி, நீ செய்றதை தான செய்யும்?”
“லூசு மாமா, அது எனக்கும் தெரியும். ஆனா, இங்க நிறைய பேய் இருக்கு மாமா. எல்லா பேயும் என்னை மாதிரியே செய்யுது. அப்பவே கத்திருப்பேன். நீங்க கத்த கூடாதுன்னு சொன்னதுனால தான், அமைதியா வந்தேன் “
“சரி வா பாப்போம்”, என்று திறந்து அதை பார்த்தவன், வந்த கோபத்தை அடக்கி கொண்டு “அவ செய்கையை ரசிக்கணும். கோப படாத ஆதி”, என்று தனக்குள் சொல்லி கொண்டான்.
“வர்ணா இந்த ரூம் சுத்தி கண்ணாடி வச்சிருக்காங்க. அதனால தான், நீ அத்தனை தடவை தெரிஞ்சிருக்க. பேயும் கிடையாது, பிசாசும் கிடையாது போதுமா?”, என்று சொல்லி விட்டு அந்த இரண்டு டிரெஸையும் வாங்கி கொண்டு வந்தான்.
அவன் பின்னே வந்தவள் முகம் “பாக்க தான மாமா கண்ணாடி? அப்புறம் அத்தனை எதுக்கு வச்சிருக்காங்க?”, என்று கேட்டாள் பஞ்சு
“கடைக்காரன் லூசு வர்ணா, உன்னை மாதிரி அறிவாளி இல்லை”, என்று சொல்லி அப்போதைக்கு அவள் கேள்வியில் இருந்து தப்பித்தான்.
“அடுத்து எங்க போக” என்று யோசித்தவனின் கண்ணில் பட்டது, அந்த சூப்பர் மார்க்கெட்.