தாழம்பூ வாசம் நீ…..
23
நீல வண்ண சுடியில்… துள்ளி குதித்து சிரித்தபடி ஓடிய தன் மனைவியை துரத்தியபடியே சென்றான் லிங்கா…
அம்முவும் அவனுடன் கையை நீட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு தன் கால்களை உதைத்தபடி சித்தப்பாவின் கைகளில் சவாரி செய்து கொண்டிருந்தாள்.
லிங்காவின் முகமும்.. புன்னகையில் இருக்க… சின்ன ஆனந்தத்துடன்… தன் மனையாளை நெருங்கிக் கொண்டிருந்தான். அந்த சிரிப்பும்.. அவளின் அலட்டாத பாவமும் இன்றுதான் முதல் முதலில் அவனை ஈர்த்தது..
இத்தனை நாட்கள், லிங்காவிடம்.. ஏதோ ஒரு மிதப்பு… ‘கலயாணம் என்ன.. அவ்ளோ பெரிய விஷயமா… எல்லோரும் வாழ்றாங்க… நமக்கு மட்டும் என்ன வர போகுது..’ என்ற ஒரு மிதப்பு. அந்த குருட்டு தைரியத்தில் கல்யாணம் செய்து கொண்டான். இல்லை பிஸினஸ்தான் செய்து கொண்டான்.
ஆனால், ‘வாழ்தலில் பிஸினஸ் என்ற கான்சப்ட் இல்லையே… அதில் உள்ளத்தால் கண்டுகொள்ளுதல்… புரிதல்.. காத்திருத்தல்.. காத்திருக்க வைத்தல்… என வழிமுறைகள் உண்டே.. இவனோ அந்த வஞ்சி போன பின் எல்லாம் பிசினஸ் என நின்று கொண்டான். ஏதோ அதை தூக்கி நிறுத்துவதாக எண்ணி… வட்டம் சதுரம் எல்லாம் போட்டு.. திருமணம் முடித்துக் கொண்டான்.
ஆக அவசரத்தில் கல்யாணம்.. அவகாசமாக.. ‘எனக்கு தக்க மாற்றிக் கொள்வேன் என்ற அசட்டு துணிச்சல்.. எப்போதும் போல. எல்லாம் மாற்றுவேன் என்ற எண்ணம்.. அதுவும் சக்தி அவனை பொறுத்த வரை சிறு பெண்.. சொன்னால் புரிந்து கொள்வாள்..’ என நினைத்துவிட்டான்.
முதலிரவில் அவனின் மனநிலையில் பெரிதான எதிர்பார்ப்பில்லை என்றாலும்.. அந்த சூழ்நிலை அவனை தாக்கியது.. கூடவே அழகான என் மனைவி என உரிமை கொண்ட மனமும்.. இருக்க… அவளிடம் நெருங்க அன்றே அவன் முயன்றான் தான்… ஆனால், முதல் நாளே அவளின் குழப்ப முகம் அவனை தடுத்து.. சிறுபெண்.. பயம்.. என ஒரு எண்ணம் அவனுக்கு… ஒன்று இரண்டு நாளில் மாற்றம் வரும் என எப்போதுமான எண்ணம் லிங்காக்கு.
[the_ad id=”6605″]
அடுத்தடுத்த நாட்களில், சக்தி என்பவள் வேறாக இருந்தாள். சலனமில்லா முகம்.. மனதை படிக்க முடியாத ஒரு ரசனை பார்வை என தன்னை எதற்குள்ளோ ஒழித்துக் கொண்டாள் போல சக்தி.. அதில் அவளின் ப்ரியத்தையும் சேர்த்து ஒழித்துக் கொண்டாள். அவனை பார்த்தபடி.. ரசித்தபடி.. அவனின் கதைகளை கேட்டபடி இருந்தாள்..
தன் வீட்டில் அவனும், தன் அப்பாவும் பேசுவதை பார்த்துக் கொண்டிருப்பாள்.. இரவில் அவன் நெருங்க நினைத்து சொல்லும் கதைகளை எல்லாம் ஆசையுடன்தான் கேட்பாள்.. ஆனால், அதற்கு மேல்… லிங்காவின் பார்வையோ செய்கையோ மாறினால்.. சக்தி சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள்.
லிங்காவிற்கும் அதனை கேள்வி கேட்க முடியவில்லை. அந்த ஷணம் அவள் சட்டென தன்னை, நம்பாத… அந்நியப் பார்வைப் பார்க்கும் போது எப்படி கணவனாக லிங்காவால் நெருங்க முடியும்… எனவே தள்ளி நின்று கொண்டான்.. இங்கு அவனின் வட்டம் சதுரம் எந்த கணக்கிடுதலும் வேலை செய்யவில்லை.. புரியவில்லை அவளை..
ஆனால், லிங்காக்கு இந்த பத்து நாளும் ஒரு எண்ணம்… ‘ஒரு சிறு பெண்ணால்… என் கணவன் என்ற உரிமையை எடுக்க விடாமல் தள்ளி வைக்க முடியுமா… வாய்திறந்து பேசாமல்.. மெலிதான அந்த தேகம் என்னை பார்வையாலே தள்ளி வைக்குமா… ம்… முடிகிறதே… சக்தி என்ற சிறு, ம்கூம்… என் மனைவியால் முடிகிறதே… அதற்கு கட்டுப்பட்டு நானும் நிற்கிறேனே…’ என ஆனந்த சிரிப்புதான் அது, இப்போது… லிங்காவின் முகத்தில் தெரிவது.
சக்தி, இப்போது காவ்யாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்…
காவ்யா, சக்தி ஓடி வந்ததை பார்த்து “என்ன அண்ணி” என சத்தம் கொடுக்க… லிங்கா சுதாரித்து.. அறை வாயிலிலேயே நின்றான்.
சக்தி “அம்மு….” என சொல்லி மூச்சு வாங்கினாள்.
வெளியே அம்முவின் சத்தம் கேட்க… வெளியே வந்த காவ்யா கண்டது அண்ணனின் புன்னகை முகத்தைத்தான்.
காவ்யா… கிண்டலாக தன் அண்ணனை பார்த்து “ண்ணா, உன்னை பார்த்தா…. இப்படி ஓடி வராங்க அண்ணி…. “ என்றாள் கிண்டலாக.
லிங்கா “ஏய்… போடி… “ என சொல்லி உள்ளே சென்றான்.
சக்தி கதவுக்கு பின்னால் நிற்க… அது கதவை திறக்கும் போதே… தெரிந்தது… கணவனுக்கு. லிங்கா “அம்மு.. சித்தி எங்க…” என கூறிக் கொண்டே.. அந்த அறையை அலச…
சக்தி தப்பிக்க நினைக்க.. கையை பிடித்துக் கொண்டான் லிங்கா… அம்மு “பே…. பே..” என் கத்த தொடங்கினாள் சிரித்தபடி…
சக்தி “அம்மு என்ன பிடிச்சிட்டாளா…. ம்….” என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள். அதுவரை ஒழிந்திருந்த தீபக்… அம்மு “நான் வின்… நீங்கதான் சித்தி கண் மூடனும்” என்றான் தரையில் கால்கள் படாமல் குதித்தப்படி.. அதில் சக்தியின் முகம் விளையாட்டாய் சோகம் காட்டிக் கொண்டிருந்தது.
லிங்கா இதையெல்லாம் அப்படியே பார்த்திருந்தான்.. ஏதும் பேசவோ.. பிள்ளைகளுக்கு நடுவில் வரவோ இல்லை… தன்னவளை எப்படியாவது மனதால்… படித்துவிட.. நெருங்கி விட வேண்டும் என்ற ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் லிங்கா.
இதெல்லாம் இப்போது இந்த ஐந்து மணி நேரத்தில் வந்ததுதான்.. லிங்காக்கு.
தீபக் “வாங்க சித்தப்பா… இப்போ நாம ஒழிஞ்சிக்கலாம்… “ என்றான் இப்போது சித்தப்பாவையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டான் பையன்.
காவ்யா “அப்போ நானும் வரேன்” என சேர்ந்து கொண்டாள். இப்படியே இவர்களின் ஆட்டம் தொடர்ந்தது.
[the_ad id=”6605″]
லதாக்கு இந்த நான்கு நாட்களாக தன் கணவனின் முகம் வாடி இருப்பது தெரிந்தது.. ஆனால், நன்றாகத்தான் பேசினான் அவளிடம்.. எனவே கேட்க ஒரு தயக்கம் மனையாளுக்கு.
எங்கேனும் அவன் மனம் வருந்துமோ என ஒரு தயக்கம்.. எனவே அமைதியாக இருந்தாள்.. மற்றபடி வீட்டில் எல்லாருடனும் சகஜமாகத்தான் இருந்தான் இளா.
இளாக்கு, ஒரு சின்ன ‘தாங்கல்..’ அவன் மனதில். ‘தன்னால்தான்.. தன் தம்பி தலையை கொடுத்துவிட்டானோ…’ என ஒரு மனத்தாங்கல்… அது உள்ளே ஓடிக் கொண்டிருந்தது இளாக்கு. அந்த வருத்தம் என்ன மறைத்தும் மனையாளுக்கு புரிந்து விட்டது போல…
இளா, இன்று மதியம் உறங்கி எழுந்து… அலுவலகம் செல்லாமல் தோட்டத்தில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தான். லதா டீயுடன் அங்கு சென்றாள். கணவன் போன் பேசி முடிக்கும் வரை… அவனையேப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.. சத்தியமாக காதல் பார்வை இல்லைதான்.
இளாவும் அவ்வபோது போன் பேசியபடியே “என்ன” என புருவம் உயர்த்தி வினவினான்.. மனையாள் பதிலே சொல்லாமல் அப்படியே பார்த்திருந்தாள்.
போன் பேசி முடித்த இளாக்கு ஏதோ சந்தோஷ செய்தி கிடைத்தது போல.. மனையாள் வேறு, வைத்த கண் எடுக்காமல் பார்க்கவும் லேசான வெட்கம் சேர்ந்து கொள்ள… லேசாக சிரித்தபடி.. “என்ன டி..” என்றான் குரல் சற்று இளகி இருந்தது.
ஆனால், லதா முகத்தை தூக்கி வைத்திருந்தாள்… பதிலில்லை எனவும் மீண்டும் இளா “என்ன ப்பா” என்றான் சிநேகிதனான குரலில்.
லதா “என்னாச்சு… ஏதாவது பிரச்சனையா… ஏதோ மாதிரி இருக்கீங்க…” என்றாள்.
இளாக்கு சற்று தெம்பு வந்தது… மனைவி கவனித்து கேட்கிறாள் என்பது தான் அந்த தெம்பிற்கு காரணம்.. ஆனாலும் கொஞ்சம் பயம் வந்தது..’மீண்டும் என்னை பற்றி தப்பாக நினைத்துவிடுவாளோ..’ என.
ஒரு பெருமூச்சுடன் இளா “பயமா இருக்கா..” என்றான் திடமான குரலில் அவளை ஆராயும் பார்வை பார்த்து.
லதா “இல்ல… என்னன்னு தான் கேட்டேன்… சொல்லுங்க” என்றாள் கடு கடு குரலில்.
இளா “இல்ல ப்பா, நிலத்தை விற்கனும்… வேற ஒன்னும் இல்ல.. அதான் அலைச்சல்… வேற பெரிய பிரச்சனை இல்ல… நான் தெளிவா இருக்கேன்… சரியா…” என்றான்.
லதா “எதுக்கு விற்கனும்..” என்றாள்.
[the_ad id=”6605″]
இளா “தங்கம்… இது பிஸ்னஸ்… டா, சொல்லனும்னா… முதல்லேர்ந்து சொல்லனும்… அதனால இது வேண்டாம்…. என்னை நம்பு ப்பா…” என்றான் ஒரு மாதிரி குரலில்.
கணவனின் குரல் மாற்றத்தில்… லதாக்கு சர்வமும் நடுங்கி போனது… “இளா… இளா… நான் சும்மா தான் கேட்டேன்… எனக்கு எந்த பயமும் இல்ல… நீங்க டல்லா இருக்கவும் கேட்டேன்… “ என அவனின் கைகளை பற்றிக் கொண்டாள் மனையாள்.. ஏனோ, கணவனின் முக வாட்டத்தை பொருக்க முடியவில்லை அவளால்.
இளாவும் மெலிதாக சிரித்தான் “தேங்க்ஸ் ப்பா…” என்றான்.. மனையாளில் கைகளை தனக்குள் வாங்கியபடியே..
அப்போது விளையாடிக் கொண்டிருந்த படை, அங்கே பிரவேசம் ஆனது… தீபக் கத்திய படியே வந்தான் “சித்தப்பா…. வாங்க…” என கத்தியபடியே வர… சக்தி அவனை துரத்திக் கொண்டு வந்தாள்.
அவசரமாக தங்கள் கைகளை பிரித்துக் கொண்டனர்… அந்த காதல் தம்பதி.
பின்னால், லிங்கா அம்முவுடன் சக்தியை துரத்தியபடியே வந்தான்… அதற்குப்பின் காவ்யா… வந்தாள்.
தீபக்… “பவர்.. கொடுங்க சித்தப்பா “ என விளையாட்டையே மாற்றியபடியே கத்த.
சக்தி “டேய்… என்னடா நீ அவுட்… கேம்ம மாத்தாத… தீபக்” என கத்தியபடியே அவனை துரத்தினாள்..