காலை அலாரத்தில்தான் விழிப்பு வந்தது சக்திக்கு. அவசரமாக எழுந்து அதனை ஆப் செய்தாள். கணவன் எழுந்து விடுவானோ என பார்க்க.. அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவளின் கைகள்.. அவனின் தாடியை மென்மையாக தடவியது ‘என்னை எழுப்பவில்லை.. கோவமா’ என கேட்டுக் கொண்டிருந்தாள் தன்னுள்.
அவளின் தீண்டலில் லிங்காக்கு விழிப்பு வந்தது.. மனம் அந்த அதிகாலையில் குளிர்ந்து போனது.. கூடவே அவளின் வாசம் வேறு.. தன் கண்களை திறக்க… சக்தி, அவன் கன்னத்தில் தன் கை வைத்து.. அமர்ந்திருந்த கோலம்தான் தெரிந்தது.. சக்திக்கு வெட்கம் வர.. கையை இழுத்தாள்.. தன் கன்னத்துடன் சேர்த்து அழுத்தி பிடித்துக் கொண்டான் கணவன்.
அப்படியே நிமிர்ந்து படுத்தபடியே அவளை முறைத்தான்.. ம்.. முயன்றான்.. சக்திக்கு, நேற்றைய நிலை நினைவு வர… “சாரி.. ங்க, நான் அப்படியே பேசிட்டே… ப்ளீஸ் சாரிங்க..” என்றாள்.
லிங்காக்கு மனதின் அழுத்தம் அவ்வளவு இல்லைதான், ஆனால் கண்களில் ஏதோ ஆவல்.. என்னமோ எதிர்பார்க்கிறான்.. மனம் அவளின் இந்த ஸ்பரிசத்திலும் வார்த்தையிலும் மகிழ்ந்தாலும்.. அவள் முதலில் தன்னை தேடவில்லையே என ஒரு குறை.. அது கண்களில் வழிகிறது, அதை படிக்க தெரியவில்லை மனையாளுக்கு.
சக்திக்கு அவனின் பார்வை புரியவில்லை.. “என்னங்க” என்றாள். என்ன சொல்ல முடியும் லிங்கா அமைதியாக கண் மூடிக் கொண்டான்..
அதற்குள், லதா அழைத்துவிட்டாள் சக்தியை. அவசர அவசரமாக குளித்தாள்.. புடவையை கட்ட தொடங்கினாள்.. இப்போது சற்று பழகியிருந்தாள்.. இந்த புடவைக்கு. லிங்கா இவளின் சத்தத்தில் எழுந்து அமர்ந்தான்.
[the_ad id=”6605″]
தன் அளவான மேக்கப்பை முடித்துக் கொண்டு சக்தி கணவனிடம் வந்தாள் “எப்பிடி இருக்கேன்..” என்றாள் முகம் மலர.
கணவன் எழுந்து கொண்டான் ஒன்றும் சொல்லாமல்.. அதை பார்த்தவள் முகம், வாடி போனது.. பின்னிலிருந்து அனைத்துக் கொண்டாள்.. “ஏங்க இவ்வளோ கோவம்… “ என்றாள். பதிலே இல்லை.
சக்தியின் போன் மீண்டும் ஒலிக்க தொடங்கியது.
கணவனின் முன் வந்து, இறுக அனைத்துக் கொண்டாள்.. எம்பி அவனின் முகத்தில் முத்தம் வைத்தாள்.. “ச்சு.. தாடிய ஷேவ் பண்ணுங்க.. நல்லாவே இல்ல… நெத்தி எட்டவே மாட்டேங்குது.. கொஞ்சம் கம்மியா வளர்ந்திருக்கலாம் நீங்க..” என்றாள் குறையான குரலில்.. ஆனால், அவனின் முகத்தை தன் முத்தத்தால் நனைத்துவிட்டே ஒழுங்காக நின்றாள் மனையாள்.
இப்போது மூன்றாவது முறை போன் ஒலிக்கவும்.. “கூலா கீழ வரணும்..” என்றாள் தன் சுட்டு விரலை தூக்கி. சொன்னவள், தன் போனை.. ஒரு இடுப்பில் பின் செய்யும் பர்சில் போட்டுக் கொண்டு அவசர அவசரமாக கீழே வந்தாள் சக்தி.
அவளின் எல்லா செய்கைகளுக்கும் அப்படியே நின்றான் கணவன்.. உள்ளுக்குள்.. அப்படி ஒரு ஆனந்தம். மனையாள்.. தானே வந்து கட்டிபிடித்து முத்தம் தருவது இதுவே முதல்முறை.. எனவே, கோவமே என காட்டிக் கொண்டு நின்றான் கணவன், அவளின் செய்கைகளை ரசித்தபடி.
அப்பா டா.. கணவனுக்கு எல்லா அழுத்தமும் குறைந்தது. முகம் பழைய நிலை கொண்டது கண்ணாடியின் முன் சென்று நின்றான் தன் தாடியை நீவியபடியே.. “சக்தி கொடு” என அவளின் உதடுகளில் விசில் சத்தம் வந்தது.
கீழே, காவ்யாவிற்கு நலங்கு வைத்து.. அவர்களின் குலதெய்வ பூஜையுடன் திருமண நிகழ்வுகள் இனிமையாக தொடங்கியது.
குடும்பத்தின் கடைசி திருமணம்.. அண்ணன்கள் இருவரும் வளர்ந்து.. நிதி நிலைமையை சீராக்கி செய்யும் நிகழ்வு. எனவே தங்கைக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்திருந்தனர்.
மதியமே மண்டபம் வந்துவிட்டனர் காவ்யா வீட்டினர். மாலையில் அரவிந்த் வீடு வர.. அழகாக மைத்துனர்கள் முன் நின்று வரவேற்று… மாப்பிளையை உள்ளே அழைத்து சென்றனர்.
சிறப்பாக நிச்சயம் மூன்று மாதம் முன்பே முடிந்திருந்ததால்.. இப்போது முதல்நாள் சம்பிரதாயமாக சின்னதாக தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். அதை அடுத்து ரிசப்ஷன் நடந்தது.
மறுநாள் விமர்சையாக காவ்யா அரவிந்த் திருமணம் நடந்தது.
லிங்கா சொல்லியபடியே சக்தி பிங்க் வண்ண பட்டுதான் கட்டி இருந்தாள். என்ன, கணவன் அருகிலேயே இந்த இரண்டு நாட்களாக வரவில்லை. லதா பின்னாடியே சுற்றினாள், இல்லை காமாட்சி சொல்லிய வேலைகளை செய்து கொண்டிருந்தாள். ஆக, காதல் கணவன் இஸ் ஹாட்.
அம்மு முழுக்க முழுக்க… லிங்கா அல்லது மூர்த்தியிடம்தான் இருந்தாள். மதிய விருந்து முடிந்து ஈரோடு கிளம்ப வேண்டும் புதுமண தம்பதிகள்.
மாலையில் அங்கே அரவிந்த் வீட்டின் சார்பாக ஒரு வரவேற்பு இருக்கிறது. எனவே, சீக்கிரம் என அரவிந்த் வீடு பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர்.
[the_ad id=”6605″]
காவ்யா அழுதே சலித்தாள் இன்னும் கண்ணீர் நின்றபாடில்லை.. காவ்யாவின் மாமனார், மாமியார் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது, அரவிந்தோ.. அவளின் கை பிடித்து நின்றிருந்தான்.
நேரம் கடந்து கொண்டே இருந்தது… நல்ல நேரத்தில் எல்லோரும் கிளம்ப வேண்டுமே என… பெரியவர்கள் எல்லோருக்கும் பரபரப்பாக இருக்க.. இன்னும் தங்கை, அண்ணி, அன்னை.. தீபக் என எல்லோரிடமும் அழுது கொண்டிருந்தாள்.
பார்த்தான் லிங்கா, தங்கை இப்போது நிறுத்தமாட்டாள் என உணர்ந்தவன் மெல்ல தங்கையின் அருகில் சென்றான்.. சத்தமே இல்லாமல் “காவ்யா… பாரு… மேக்கப்… கலையுது. அரவிந்த் சொந்தகாரங்க எல்லோரும் கிளம்பிட்டாங்க… அப்புறம் அங்க… அவங்க ஊரில் உன்னை பார்த்து… ஐயோ… நம்ம அரவிந்த் தாலி கட்டின பொண்ணு இது இல்லைன்னு சண்டைக்கு வர போறாங்க.. நாங்க தான், உன் கூட வரோம்… என்னால சமாளிக்க முடியாது பார்த்துக்கோ…” என்றான் சிரியாமல்.
ஆனால், இது அரவிந்த் காதில் விழுந்தவுடன் அவன் சிரித்து விட்டான்.. அதில்தான் தன் அண்ணன் என்ன சொன்னான் என்பதே காவ்யாவிற்கு புரிய.. தன் இரண்டு கைகளாலும் லிங்காவை அடிக்க தொடங்கினாள்.. அங்கிருந்த எல்லோருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.. ஆனால், காவ்யாவின் சிரித்த முகம் மட்டும் தெரிந்தது.
எனவே காவ்யாவின் மாமனார் “கிளம்பலாமா ம்மா… மணியாச்சு..” என்றார் கொஞ்சம் இலகுவான குரலில்.
“சரி மாமா..” என்றாள் காவ்யா. கண்களை துடைத்துக் கொண்டாள். இனிமையாக எல்லோரிடமும் விடைபெற்றாள்.
தங்களின் பென்ஸில் தங்கையையும், மாப்பிள்ளையையும் ஏற்றிக் கொண்டு மனைவியுடன் ஈரோடு நோக்கி சென்றான் லிங்கா. அந்த பயணம் முழுதும் காவ்யாவை பற்றிய பேச்சுகளே அதிகமாக இருந்தது. அதை நிரம்ப அனுபவித்தான் அரவிந்த்.
முக்கியமான சொந்தங்களுடன் ஈரோடு சென்றனர் காவ்யாவின் வீட்டினர். அங்கு மாலையில் வரவேற்பு முடித்து.. இரவிலேயே கோவை வந்தனர் அனைவரும்.
லிங்கா தம்பதி மட்டும் அங்கு தங்கி, மறுநாள் காவ்யா அரவிந்தை மறுவீடு விருந்துக்கு கூட்டி வந்தனர். விருந்து முடித்து இரண்டு நாட்கள் மணமக்கள் இங்கே தங்கி சென்றனர்.
மூர்த்திக்கும் காமாட்சிக்கும் நிம்மதி பிள்ளைகள் எல்லாம் கரை சேர்ந்து அவர்களின் பொறுப்புகளை தொடர்வது அப்படி ஒரு நிம்மதி அவர்களுக்கு. வீடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஒரு வாரம் கடந்திருந்தது.. இளாவும் லிங்காவும் அலுவலகம் சென்றிருந்தனர்.
தீபக் அன்றுதான் பள்ளி சென்றான். சக்தி நாளை கிளம்ப வேண்டும்.
காலையிலேயே தாமு தன் மாப்பிளையை அழைத்து விட்டார்.. அவருக்கு தன் லிங்காவை தவிர வேறு.. யாரிடமும் யோசனை கேட்க முடியாது. என்ன செய்வது.. லிங்கா அவரை அப்படி அடிமையாக்கி இருந்தான்.
தாமுக்கு தன் மாப்பிளையின் யோசனையில் மிகுந்த நிம்மதி.. சாரங்கனின் கனவு நிறைவேறிவிடும் என உறுதியாக நம்பினார். திட்டங்கள் சரியாக வகுக்க தொடங்கியதால்.. மேலிடம் இவர்களை கவனிக்க தொடங்கி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் லிங்கா அல்லவா.. அதனால்.. எதற்கும் மாப்பிள்ளை என்பார். அதுதான் இப்போதும் அழைத்துவிட்டார் மாமனார்.
தாமுவின் அட்வகேட்… இந்த நடைமுறைகளில் ட்ரஸ்ட் என்பதை நிர்வகிக்க… நல்ல திறமையான, பொறுப்பான ஒருவரை கேட்டிருந்தனர்.
எனவே, அந்த ட்ரஸ்டை கவனித்துக் கொள்ள மட்டும் நம் சார்பாக பொறுப்பான ஒருவரை நியமிக்க வேண்டும் என தன் மாப்பிள்ளையிடம் கேட்டிருந்தார் தாமு. அதையும் யோசித்திருந்தான் லிங்கா. அதை குறித்து கேட்கவே இப்போது அழைத்தார் லிங்காவை. “நான் நாளைக்கு காலையில் சொல்லிடுறேன் மாமா” என்றான் லிங்கா.
இரவு தாமு விஷயமாக பேச வேண்டும் என காத்திருந்தான் லிங்கா, அப்படிதான் இளா உண்டு முடித்து ஹாலில் அமர்ந்திருக்க, லிங்கா அப்போதுதான் உண்டு வந்தான் “ண்ணா.. உன்கிட்ட ஒன்னும் சொல்லணும்” என்றான்.
இளாக்குதான் வேலை.. இந்த கல்யாண அலைச்சல் என்பார்களே அது இளா தம்பதிக்கு தான் சரியாக இருந்தது. பொறுப்புகளை தட்டாமல் அழகாக செய்திருந்தனர் இருவரும்.
எனவே அவர்களுக்கு ஓய்வு கொடுத்து, பேச வேண்டும் என லிங்கா நினைத்தபடியால் இந்த ஒரு வாரம் காத்திருந்தான்.
லிங்கா மெல்ல தாமு ஆரம்பிக்கும் ட்ரஸ்ட் பத்தி சொன்னான் அதில் நம் பங்கும் இருக்கிறது அண்ணா என்றான்.. அதற்கு லதா அண்ணிதான் மேற்பார்வை.. அதாவது டரஸ்டி… என்றான்.
இளாக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை பொறுப்பின் தன்மை தெரிந்ததால் அமைதியாக இருந்தான். லிங்கா இப்போது அண்ணியை பார்க்க லதாக்கும் என்ன சொல்லுவது என தெரியவில்லை.
மூர்த்தி “லதா, தைரியமா சரின்னு சொல்லும்மா… உன் கூட எங்க போகனும்னாலும் நான் வரேன்..” என்றார் திடமான குரலில்.
இளாக்கு அதன் பிறகுதான் மூச்சே வந்தது. தன் மனைவியிடம் தலையசைத்து சம்மதம் சொன்னான். லதாவும் “செய்யலாம் லிங்கா.. சொல்லி கொடுத்திங்கன்னா.. பிடிச்சுக்குவேன்” என்றாள் நம்பிக்கையான குரலில்.
லிங்கா “கிரேட் அண்ணி…” என்றான். லிங்காக்கு ஏனோ தன் அண்ணியின் பொறுமை மேல் நம்பிக்கை. அதுதானே எங்கும் சிதறாமல் சிந்திக்க செய்யும், அதுதானே தேவை இவர்களின் ட்ரஸ்ட்க்கு, அதான் காத்திருந்து.. அனுமதி வாங்கிவிட்டான்.
ஆக, எல்லா நடைமுறைகளையும் கட்டுக்குள் வைத்திருந்தான் லிங்கா. யாரையும் நேரே நின்று எதிர்க்கவில்லை. தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அரவணைத்து வளர்த்தான்.. அது அந்த மினிஸ்டர் உற்பட மற்றவர்களுக்கு எதிர்பதமாக அமைந்தால் அவன் என்ன செய்வான் பாவம்.
இங்கு பாதைகளும்.. சென்று சேர வேண்டிய இடமும்.. நம்முடைய விருப்பம்தான். நம்பியவர்களை ஏமாற்றி.. உடன் வருபவர்களிடம் விரோதம் கொண்டு பயணிப்பதை விட.. லிங்கா போல்.. கைகோர்த்து செல்வது நன்றாகத்தான் இருக்கும் போல…
[the_ad id=”6605″]
எனவே அவனின் பயணத்தில் லிங்காக்கு வெற்றிதான். என்ன, எங்கும் எதிலும்.. அவன் முன் நிற்கவில்லை.. தேவையான அளவு தூரமாக, பக்கமாக.. என நின்று, தன்னையும் மற்றவர்களையும் நிலைப்படுத்திக் கொண்டான் லிங்கா.
அப்படியே பேசி முடித்து உறங்க சென்றனர்…
இந்த வாரம் முழுவதும் சக்தி கணவனின் அருகில் வரவில்லை.. இருவருக்கும் பேச கூட நேரமில்லை.. வேலை.
இன்றுதான் லிங்கா இலகுவாக இருந்தான்.. சக்தி “நாளைக்கு நான் ஊருக்கு போகனும்.. நீங்க என்னை ட்ராப் செய்ய வருவீங்களா” என்றாள்.
அன்றே கணவனின் கோவம் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டதே… இத்தனைநாள் சக்திக்கு அது தெரியாதே.. லிங்கா “ம்… வேற எப்படி போவ” என்றான் கொஞ்சம் கிண்டலாக.
“அப்போ வரீங்க” என்றாள் ஆசையாக.
லிங்கா “அப்புறம் அழகான பொண்டாட்டிய எப்படி தனியா பார்க்கிறது.. அதனால கண்டிப்பா வருவேன்” என்றான் அவளின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்தபடி.
அன்று மனையாள் மிரட்டியவுடன் தன் தாடியை எடுத்திருந்தான்.. அதன் வழவழப்பை கைகள் உணர.. மனையாள் “ம்… நீங்க சொன்ன பேச்சு கேட்பீங்களா “ என கேட்டபடிய கணவனின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டாள்.
மனையாளின் வார்த்தையும் தீண்டலும்… கணவனை கைதாக்கி இருந்தது.. லிங்கா “ம்… என் ப்யார் என்ன சொன்னாலும் கேட்பேன்… “ என்றான் சின்ன சின்ன முத்தங்களால் அவளை அர்ச்சித்தபடி. அவர்களின் அழகான நேரம் தொடங்கியது நாமும் விடைபெறுவோம்.
சுபம்
“மஹா ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்…”