அத்தியாயம் – 12
நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணண் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம்
நாலும் வாழ்க..!
******
அன்றைய நாளுக்குப் பிறகு, புகழ் நீண்ட யோசனையில் தன் அடுத்த இரண்டு நாட்களைக் கழித்தான். பின் ஒரு முடிவோடு அரூபியின் தாத்தா பத்ரனிடம் பேசியதை தபேராவிடம் கூறிவிட்டு, தான் எடுத்திருந்த முடிவையும் அவரிடம் விவரித்தான்.
புகழின் பேச்சைக் கேட்ட அந்த வைத்தியருக்கு என்ன சொல்லுவதென்றுத் தான் தெரியவில்லை. அவர் ஒன்று நினைக்க, இவன் ஒன்று சொல்கிறான். சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தது அந்த இடம்.
புகழ் சொல்வது போல செய்தால் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவர் மகளாகவே நினைக்கும் அரூபியின் நிலை. அவளின் நிலை என்னவாகும். இப்போது அவள் புகழை வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தாலும், அதற்கு காரணம் இங்குள்ள சட்டத்திட்டங்களும், கட்டுப்பாடுகளும் தான்.
அதையெல்லாம் விட்டு, ஒரு நாள் அவனை ஏற்றுக் கொள்ளுவாள் என்று நம்பினார் அந்த வைத்தியர். அவன் சென்ற பிறகு தன் மனதை மாற்றி, புகழை மறந்து, தனக்கு ஒரு வாழக்கையை அமைத்துக் கொள்ளுவாள் என்றெல்லாம் தோன்றவில்லை.
அதனால் அவளிடம் பேசி புரியவைத்து புகழோடு அனுப்பி விடலாம் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் புகழின் பேச்சைக் கேட்டப்பிறகு அரூபி அப்படி ஒன்றும் தன் முடிவை மாற்றி, இந்த ஊர் மக்களை எதிர்த்து, தன் தாத்தாவை விட்டு, புகழை விரும்பி அவனோடு போவாலள் என்ற நம்பிக்கை சுத்தமாக போயிருந்தது அந்த வைத்தியனுக்கு.
அதனால் இப்போது புகழ் சொல்வதே எல்லா வகையிலும் சரியெனப்பட, அதோடு பத்ரன் இந்தளவு இறங்கி வந்ததே பெரிது. பெரியவருக்கும் இதில் விருப்பம் என்ற நிலையில், அவரது விருப்பத்திற்கும் மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலையில் புகழ் இருப்பதும் புரிய, அவனது செயலுக்கு ஒரேயொரு வேண்டுதலோடு சரியென்று சம்மதித்தார் தபேரா.
[the_ad id=”6605″]
அது அவரது அம்மாயியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு, அவளை வருத்தப் படுத்தாமல் கிளம்ப வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு புகழ் ஒத்துக் கொள்ள வேண்டுமே. அவன் கடைசி வரைக்கும் சம்மதிக்கவே இல்லை.
“வேண்டாம் ஐயா.. உங்க மேல எனக்கு பெரிய மரியாதையே இருக்கு. நீங்க ஒன்னு சொல்லி அதை என்னால செய்ய முடியாத ஒரு நிலைக்கு நீங்க என்னைக் கொண்டு வந்துடாதீங்க ப்ளீஸ்.
நீங்க சொல்றதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். என்னைப் பிடிச்சிருந்தும், கொஞ்சமும் யோசிக்காமல், என்னை அவ வேண்டாம் என்று ஒதுங்கிப் போனாளே. ஏன் எதற்காக என்று என்னிடம் கேட்கவுமில்லை, சொல்லவுமில்லை. கொஞ்சமும் என்னைப்பற்றி யோசிக்காமல் அவளாக ஒரு முடிவெடுத்திருக்க, அதனால் வரும் கஷ்டங்களையும் தெரிந்து கொள்வது தான் சரி. இவள் இப்படி ஒரு முடிவெடுப்பது இதுவேக் கடைசியாக இருக்க வேண்டும்.”
“யாரையும் யோசிக்காமல், சுயநலமாக ஒரு முடிவெடுத்துருக்கா, அதற்கான தண்டனையாக இது இருக்கட்டும், இது அவளுக்கு மட்டும் இல்ல, எனக்குமே தண்டனைதான். காதல் ஈசியா கிடைச்சா அதுக்கு மரியாதையே இருக்காது. கசந்து போயிடும். போரட்டம் இல்லாத காதலே இல்ல. போராடிதான் கிடைக்கணும். அப்போ தான் அந்தக் காதல் கடைசி வரையுமே நிலைக்கும்” என்றவன்,
“நான் வரும் வரை, நானாக சொல்லும் வரை ரூபியிடம் இதைப் பற்றி யாரும் சொல்லக் கூடாது” என்று முடிவாகத் தெரிவித்து விட்டான்.
புகழின் பேச்சைக் கேட்டவருக்கு வருத்தம் தான். ஆனால் அது அவனது உண்மையான காதலினால் உண்டாகும் கோபம், அதற்கு அவர் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியதால், அவனின் செயலுக்கு சரியென்றார்.
அடுத்து நடந்தது எல்லாம் புயல் வேகம் தான். அடுத்த நாளின் விடியலே அவர்களுக்கு தர்மபுரியில் தான் விடிந்தது. அங்கு சென்றதும் ஒரு ஹாஸ்பிடலில் சென்று செக்கப் செய்தவன், பயண செய்யலாம் என்று மருத்துவர் கூறிய பிறகே சற்று நிம்மதியானான்.
பிறகு தபேராவிற்கு தெரிந்தவர்கள் மூலம் தனது ஐ20 யை கிராமத்தில் இருந்து எடுத்து வரச் செய்தான். தர்மபுரியில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக் கொண்டான். தன் நண்பர்கள் சிலரிடம் பேசியவன், தன் திட்டங்கள் அனைத்தும் சரியாக வரும் என்று முடிவான பிறகு தான் சற்று ஆசுவாசாமானான்.
அதன் பிறகே வெற்றிக்கு அழைத்தான். படபடக்கும் இதயத்தோடு காத்திருந்தவனின் காதுகளில் அமுதென விழுந்தன வெற்றியின் வார்த்தைகள்.
“புகழ்… புகழ்.. நீதானேடா… நீ தானே.. எங்க இருக்கடா.. எப்படி இருக்க.. இத்தனை நாள் எங்க இருந்த..? ஏன் போன் செய்யவே இல்ல.. நீ நல்லாதானே இருக்க… உனக்கு ஒன்னுமில்லையே.. பேசுடா… டேய் பேசுடா.. எதாச்சும் பேசேன் டா..” என்றவனின் குரல் கரகரப்பில் குளித்திருந்தது.
வெற்றி அழுகிறான் என்று அவன் பேசுவதிலேயேப் புரிந்தது புகழுக்கு. இங்கே அவனுக்கும் கண்களில் நீர் பெருகியது. தற்போது அழுதால் பயந்து விடுவான் என்பது புரிய, அவனை மாற்றும் வழியாக,
“வெற்றி நீ பயப்படுற அளவுக்கு எனக்கு ஒன்னுமில்ல, பாதை தெரியாம நான் ஒரு காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டேன். இப்போதான் வெளிய வர முடிஞ்சது. வந்ததும் உனக்குத்தான் கால் பன்றேன். நீ பயந்து எல்லாரையும் பயப்படுத்தாத.” என்றான் நிதானமான வார்த்தைகளில்.
[the_ad id=”6605″]
பின் “வெற்றி வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க, அம்மா.. அம்மா எப்படி இருக்காங்க, என்னை ரொம்பத் தேடியிருப்பாங்க இல்ல, நான் கடைசி நிமிசத்துல அப்படி செஞ்சது அவங்களுக்கு என்மேல வெறுப்பு வந்திருக்கும் தான, ஆனா அன்னைக்கு வேர எதுவும் செஞ்சிருக்க முடியாது வெற்றி. உனக்குப் புரியுதா..? நான் எப்படி மங்கையை..? அவளும் மணியும் எனக்கு வேற வேற இல்லடா.. ஆனா அதை எப்படி சொல்லன்னு தெரியல, நான் சொல்லப் போகும் போது எல்லாம் அம்மா ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதைத் தட்டிக் கழிச்சாங்க.”
“அதோட மங்கை… மங்கை உன்னை… உங்கிட்ட சொன்னாளா..? அவளுக்கு உன்னை மட்டும் தான் பிடிச்சிருந்தது. அவ உன்னை மட்டும் தான் விரும்பினா.. உன் இடத்துல யாரையும் வைக்க முடியாதுன்னு எங்கிட்ட தெளிவா சொல்லிட்டா..? ஆனா உன் விருப்பம் தெரியாமல் என்ன செய்யன்னு தெரியல..” என்று ஒவ்வொரு வார்த்தையையும் தயங்கி தயங்கி பேச,
“போதும் புகழ், எனக்கு எல்லாம் தெரியும். வனி எல்லாம் சொல்லிட்டா எல்லாமே..” என்று அழுத்திச் சொன்னவன், “ஆச்சியும் இதுக்கு ஹெல்ப் செய்துருக்காங்க இல்லையா..? என் நல்லதுக்குத்தானே நீங்க செய்தீங்க.. நான் தப்பா நினைக்கல விடு… மத்ததெல்லாம் நேர்ல பேசலாம். நீ எங்க இருக்க..? எப்போ வர..” என்று பேச்சை மாற்றினான் அண்ணன்காரன்.
“வெற்றி எனக்கு நீ ஒரு ஹெல்ப் செய்யனும். நான் சொல்றதை நல்லாக் கவனி. எனக்கு ஒன்னும் இல்ல, நான் நல்லாதான் இருக்கேன். பட் என்னால செல்ஃப் ட்ரைவிங்க் பண்ண முடியாது. வீட்டுல யாருக்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம் என்னைப்பத்தி. நீ உடனேக் கிளம்பி தருமபுரி வந்துடு. இங்க வந்ததும் பேசிக்கலாம்.” என்றான் ஒரே மூச்சாய்.
வெற்றிக்கும் என்ன புரிந்ததோ, மறுத்து எதுவும் பேசாமல், அடுத்து செய்ய வேண்டியதை அங்குள்ளவர்களிடம் தெரிவித்தவன், தந்தைக்கு அழைத்து விபரம் சொன்னான்.
“என்ன வெற்றி பிரச்சினையில எதுவும் மாட்டிக்கிட்டானா..? ஏன் யாருக்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்றான். நீ தனியா போக வேண்டாம், நான் கூட வர்ரேன். அங்க நமக்கு தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க பார்த்துக்கலாம். நீ காரைக்குடியில இருந்து வர்ரதுக்குள்ள நான் கோவையில் இருந்து போயிடுவேன். நான் முன்னாடி போய் என்னன்னு பார்க்கட்டுமா..?” என படபடவென பேச,
“நீங்க எங்கையும் போக வேண்டாம், போகவும் கூடாது, என்னால முடியாதுன்னு உங்ககிட்ட நான் இதை சொல்லல, நாங்க செய்ற எந்த ஒரு செயலும், உங்களுக்கு தெரியாம இருக்கக் கூடாதுன்னு தான் சொல்றேன்.”
“நான் போயிட்டு வர வரைக்கும், நீங்க இங்க வந்து இருங்க. அங்க தான் திரு இருக்கானே பார்த்துப்பான். முக்கியமா யாருக்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க. அம்மாக்கிட்ட மூச்சு விடாதீங்க. இங்க வர சொல்றதுக்கு அதுவும் ஒரு ரீசன் தான். உங்க ஆக்டிவிடிஸ பார்த்தே அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க. அதுக்காகத்தான் இங்க வர சொல்றேன்.”
“ட்ரைவர் வச்சு வாங்க, நீங்க ஓட்டாதீங்க, நான் நேரா புகழை இங்க தான் அழைச்சிட்டு வருவேன். இங்க வந்த பிறகு மத்தவங்களை அழைச்சிக்கலாம், நான் தர்மபுரியில் போய் பார்த்துட்டு, புகழுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைன்னதும் சொல்றேன். நீங்க ஆச்சிக்கிட்ட சொல்லுங்க. அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாதீங்க..” என்றவன், “அப்பா.. நான் சொன்னது சரிதானே, ஒன்னும் நீங்க ஒன்னும் சொல்லாம இருக்கீங்க..” எனவும்,
“ஒன்னுமில்ல கண்ணா, நீ போயிட்டு வா… நான் சமாளிச்சுக்குவேண். ஆனா வெற்றி நீ புகழைப் பார்க்கத்தான் போறன்னு, வந்த பிறகு மங்கைக்குத் தெரிஞ்சது, உன்னை அவ என்ன செய்வாளோ தெரியாது. அவக்கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போயேன். உங்கம்மாவைக் கூட சமாளிச்சிடலாம், ஆனா மங்கையை சமாளிக்கிறது கஷ்டம்..” பெற்றவர் சொல்ல,
“இல்ல… அது சரிவராது, அவளும் கூடவே கிளம்புவா.. அங்க ஹேண்டில் பண்ண முடியாது. அங்க என்ன சிச்சுவேஷன் தெரியாம, மங்கையை இழுத்துட்டு அலைய முடியாது. பார்த்துக்கலாம் விடுங்க. நான் அவளை சமாளிச்சிடுவேன். நான் வீட்டுல சொல்லிட்டுக் கிளம்புறேன். அங்க ரீச்சானதும் இன்ஃபார்ம் பன்றேன்.” என்றவன் வைத்துவிட்டான்.
பாலனும் மனைவியிடம் முக்கியமான வேலை, வெற்றி வரச் சொன்னான் என்று சொல்லிவிட்டு காரைக்குடிக் கிளம்பி விட்டார். வெற்றி பெயரைச் சொன்னதும் வனிதா வேறெதுவும் கேட்கவுமில்லை, பேசவுமில்லை. மௌனமாக சம்மதித்து விட்டார்.
அங்கு வெற்றியோ மங்கையிடம் ப்ரண்ட்க்கு ஆக்ஸிடென்ட், கூட யாருமில்ல. நான் போயே ஆகணும் என்று சொல்ல, அவள் மறுக்க, இவன் கெஞ்ச, அவள் மிஞ்ச, இவன் கொஞ்ச, என அவள் ஒருவழியாக சமாதானமாகி அனுப்பி வைத்தாள். மங்கை ஒத்துக் கொண்ட பிறகு தான் வெற்றிக்கு மூச்சே வந்தது.
எத்தனை வேகத்தில் வந்தானோ, அடுத்த நான்கு மணி நேரத்தில் வெற்றி தர்மபுரியில் இருந்தான். அங்கு வந்த பிறகு புகழ் சொன்ன ஹோட்டலுக்குச் செல்ல, புகழ் அப்படி ஒரு கோலத்தில் இருப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை வெற்றி.
பத்து நாட்களாக வாரிடாத தலை, ஷேவ் செய்யாத முகம், கண்களிரண்டும் உள்ளே சென்று, கையில் சிறு அளவில் ஒரு கட்டு, கணுக்காலில் இருந்து முட்டிவரைக்குமான ஒரு கட்டு, உடல் மெலிந்து, அவன் அணிந்திருந்த ஆடைகளும் ஆங்காங்கே கசங்கியிருக்க என பார்க்கவே மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தான்.
உடன் பிறந்தவனை அப்படி ஒரு நிலையில் பார்த்ததும், வெற்றிக்கு விழிகளில் நீர் நிறைந்தது. “என்னடா ஒன்னும் இல்லன்னு சொன்ன, இப்படி இருக்க, என்னாச்சு..? ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகலாம் கிளம்பு..” என பரிதவிக்க,
“வெற்றி எனக்கு ஒன்னும் இல்ல, முதல்ல னான் சொலறதைக் கேளு.. நீ எப்போ கிலம்பின, நான் கால் ப்ண்ணியே நாலு மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ள எப்படி வந்த..? இவ்வளவு ஃபாஸ்டா ட்ரைவ் செய்தியா..? என்றான் அக்கறையாக.
[the_ad id=”6605″]
“எனக்குத் தெரியும், நீ வாயை மூடு.. என்ன பண்ணி வச்சிருக்க இடியட்.. என்ன நடந்தது ஃபர்ஸ்ட் அதைச் சொல்லு..” என்றுக் கோபமாக கத்தியபடியே அவனருகில் வந்து, தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.
தமையனின் செய்கையில் உள்ளம் கணிய, “கவலைப்படுற அளவுக்கு ஒன்னுமில்லடா.. ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் அவ்வளவுதான். இப்போ நல்லாதான் இருக்கேன்..” என்று சமாதானம் பேசினான் இளவல்.
“வாயை மூடுன்னு சொன்னேன். எதுக்கு இந்த வேண்டாத வேலை. நீயோ இல்லை வனியோ என்கிட்ட பேசியிருந்தா, இவ்வளவு பிரச்சினை வந்துருக்கவே வந்திருக்காது. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய வேண்டியது. இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாரு.”
“ஏதோ சின்ன அடிங்கிற்தால தப்பிச்சே, இதுவே பெருசா இருந்திருந்தா..? என் மகன் எங்க இருக்கானோ, எப்படி இருக்கானோ, எப்போ வருவானோன்னு புலம்பியே உடம்பைக் கெடுத்துக்குற உங்கம்மாக்கிட்டயோ, இல்ல புகழ் மாமாவுக்கு என்ன ஆச்சோ.. எங்க போனாரோ.. என் கூட பேசாம மாமா இருந்ததே இல்ல, எப்ப பேசுவாரோன்னு தினம் நூறுதடவை புலம்புற என் பொண்டாட்டிகிட்டயோ நான் என்ன பதில் சொல்லியிருக்க முடியும். இவங்களை எல்லாம் விடு.. முதல்ல நான் எப்படி இதைத் தாங்கியிருப்பேன்.. ஏன் யோசிக்கவே இல்ல.. ச்சே போடா..” என்றவன் கைகளில் தலையைத் தாங்கி அப்படியே அமர்ந்து விட்டான். அவனுக்குச் சிறிது நேரம் பிடித்தது அதிலிருந்து வெளியில் வர.