சரண் – 14
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கல்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்..
தர்மபுரியில் இருந்து கொட்லாங்காடு கிராமத்தை நோக்கி, வெற்றியின் பென்ஸ் பறந்துக் கொண்டிருந்தது. கைகள் தன் போக்கில் காரை இயக்கினாலும், அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்ற யோசனைகளும், திட்டங்களும் அவன் மனதில் உருவாகத் தொடங்கியிருந்தது.
அதன் விளைவாக பாலனுக்கு அழைத்து புகழின் தற்போதைய நிலையைத் தெரிவித்தவன், அடுத்து தான் செய்யப் போவதையும் சொல்லி, அவரிடம் வனிதாவை கிளம்பி காரைக்குடி வரச் சொல்லுமாறு சொன்னான். தொடர்ந்து தங்கள் ட்ரஸ்ட் மேனேஜரிடம் பேசியவன், ஒரு குழு அமைத்து அவர்களை தர்மபுரி வருவதற்கு ஏற்பாடு செய்தான்.
வெற்றியின் இந்த வேகத்தை பார்க்க, வைத்தியருக்கு பெருமையாக இருந்தது. அது கொடுத்த மகிழ்ச்சியில் “தம்புடு உங்களைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உங்க தம்பி சொன்னது உண்மையா பொய்யான்னு கூட யோசிக்காம என்னை நீங்க நம்புனீங்க… எப்படி..? அதை என்னால நம்பவே முடியல..” என்றார்.
“அய்யா உங்களுக்குத் தெரியுமா..? தெரியாதா..? எனக்குத் தெரியாது, அவன் எனக்காக தன் வாழ்க்கையவே தியாகம் செய்துருக்கான். தேவையே இல்லாம எல்லாருக்கிட்டயும் கெட்டப்பெயர் வாங்கிருக்கான். என் வாழ்க்கையை.. என் உயிரை எனக்காக விட்டுக் கொடுத்திருக்கான். அவனுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யலாம், இதெல்லாம் ஒன்னுமே இல்ல, அவன் நினைச்ச இந்த வாழ்க்கையை சந்தோசமாவும், நிம்மதியாவும் அவனுக்கு நான் அமைச்சுக் கொடுக்கனும், அதுதான் என்னோட ஒரே குறிக்கோள்..” என்று உணர்ச்சிப் பெருக்கில் பேச,
“பாசத்துல நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லைன்னு காட்டிட்டீங்க. உங்க ரெண்டு பேர் மனசுக்கு உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் அமோகமா இருக்கும். கடவுள் கைவிடமாட்டார்..” என்றவர்,
சட்டென்று “தம்புடு.. தம்புடு… வண்டியை நிறுத்துங்க… அங்க.. அங்க மலையோரத்துல, அந்த இடத்துல நிக்கிறது நம்ம அம்மாயிதான். எதுக்கு ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கா..? அப்படியெல்லாம் இந்த கிராமத்து மக்கள் வரக்கூடாதே.. என்னாச்சுன்னு தெரியலையே..” எனப் பதட்டமாகப் பேச, அவரின் பதட்டம் வெற்றிக்கும் தொற்றிக் கொள்ள, வண்டியை நிறுத்திவிட்டு, அவசரம் அவசரமாக அரூபி நின்றிருந்த அந்த சிறுமலையின் மீது ஏறினர் இருவரும்.
“அம்மாயி.. அம்மாயி.. ஒரே ஏட்டிகு இந்து ஒச்சுண்டாவுரா.. செப்புரா அம்மாயிம்மா..?” (எதுக்குடா இங்க வந்து நிக்குற, சொல்லுடா..) என்று பதறியபடியே வந்த தபேராவைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் தூரத்தை வெறித்தபடி, அமைதியாகவே நின்றிருந்தாள்..
[the_ad id=”6605″]
எத்தனைக் கேட்டும் அவளது வெறித்த பார்வையில் மாற்றமே இல்லை. தூரத்தில் தெரிந்த தொடுவானத்தை அளந்தாளா..? தொலைதூரத்தில் தொடங்கும் தார்ச்சாலைய வெறித்தாளா.. தெரியவில்லை. ஆனால் பார்வை மட்டும் அந்த திசையில் இருந்தது.
‘ரூபியின் நிலையைப் பார்த்து வெற்றிக்கு மிகவும் கஷ்டமாகப் போனது. தான் அழைத்தால், பேசினால், தன்னைப் பார்த்தால் உடனே அவள் சுயம் உணர வாய்ப்பிருக்கிறது. என் குரலும் புகழின் குரல் போலத்தானே இருக்கும். முயற்சிப்போம்’ என்று நினைத்தவன், அவளிடம் செல்ல நினைக்க, அப்போது புகழ் கூறிய ‘ரூபி போட்டோ வேணும், எடுத்துட்டு வாடா.’ என்ற வார்த்தைகள் நினைவு வர,
அவளை அழைக்கும் எண்ணத்தை விட்டு, தன் மொபைலில் இருந்து பல கோணங்களில் அரூபியை கிளிக் செய்தவன், அவளிடம் நகர்ந்தான். வெற்றியின் இத்தனை செய்கையிலும் அவன் நின்றிருந்த திசைப்பக்கம் கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
மனம் மிக வருந்த, அவளிடம் சென்றவன் “அம்மாயி..” என, ‘அந்தக் குரல்… அது.. அது.. என்னோட டவுன் சாரு… அவரது தானே..’ என நொடியில் எண்ணங்கள் வண்ணங்களாக, மலர்ந்த முகத்துடன் திரும்பியவள், தனக்கு எதிரே நின்ற புதியவனைப் பார்த்து, திகைத்துப் பின் கேள்வியாகப் புருவம் சுருக்கினாள்.
தபேராதான், “ஏண்டிம்மா நுவ்வு.. ஏமி சேஸ்தாவு இக்கட..” (என்னம்மா நீ.. இங்க என்ன பன்ற..) என பதட்டமாக கேட்க,
அப்போதும் ஒன்றும் சொல்லாமல் அவரை ஒரு பார்வை மட்டும் பார்த்தவள், மீண்டும் தனக்கு எதிரே இருந்தவனின் மேலே பார்வையைப் பதித்தாள். அதில் ‘நீ யார்..?’ என்ற கேள்வி இருக்க,
சட்டென்று பூத்த புன்னகையை அடக்கியவன், “நான் வெற்றி.. வெற்றி மாறன். புகழ்வாணனோட அண்ணன், அவனை இங்க இருந்து அழைச்சிட்டுப் போக வந்துருக்கேன்.” என்றதும்,
அவள் விழிகள் விரிந்து, பெரும் பரபரப்பைத் தொற்றிக் கொண்டது. வேகமாக தன் பக்கத்தில் இருந்த வைத்தியரைப் பார்க்க, அவரும் ‘ஆம்..’ என்பது போல் தலையாட்ட, விரிந்த விழிகள், சோகமாய் சுருங்கிக் கொண்டன.
“நீங்கதான் அவனைக் காப்பாத்தினதா அய்யா சொன்னார். அப்படியே போக மனசு இல்ல, அதுதான் நேரா பார்த்து நன்றி சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன். உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலமா, ரொம்ப ரொம்ப நன்றிம்மா.. உன்னோட உதவியை எங்க குடும்பம் எப்பவும் மறக்காது. உனக்கு என்ன உதவி எப்போ வேணும்னாலும் கேட்கலாம். கண்டிப்பா நாங்க செய்வோம்..” என்றவனிடம்,
“பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க சாரு.. மனுசனுக்கு மனுசன் உதவுறதுல என்ன இருக்கு. அடிபட்டு ஒருத்தர் உயிருக்குப் போராடிட்டு இருக்கும் போது பார்த்துட்டு எப்படி கண்டுக்காம போறது. எங்க வழக்கத்துல யாரும் அப்படி செய்ய மாட்டாங்க.”
“ஒரு உயிரைக் காப்பாத்துறது, ஒரு வம்சத்தையேக் காப்பாத்தினதுக்கு சமம். நானும் அதையே தான் செய்துருக்கேன்னு நினைக்கும் போது நிம்மதியா இருக்கு. அவர்.. உங்க தம்பி… அந்த சாரு எப்படி இருக்காரு. எங்க இருக்காரு..” என்றாள் சாதரணமாகக் கேட்பது போல.
ஆனால் என்ன முயன்றும் அவள் குரலில் வழிந்த சோகத்தைத் தடுக்க முடியவில்லை. அவள் மறைக்க முனைவது மற்ற இருவருக்கும் அது புரிய, அவள் மேல் இரக்கம் தான் சுரந்தது.
புகழ் விரும்பிய பெண், அவள் எப்படி இருந்தாலும் தம்பியின் விருப்பப்படி அந்தப் பெண்ணை அவனின் வாழ்க்கையில் கொண்டு வந்தே தீரவேண்டும் என்று உறுதியாக இருந்தவன், இப்போது அவளை நேரில் பார்த்ததும், அவளது சுயநலமில்லாத பேச்சைக் கேட்டதும் அந்த எண்ணத்தை மேலும் உறுதியாக்கினான்.
“நீ எங்களுக்கு செய்துருக்குற உதவிக்கு நாங்க ஏதாவது செய்யனும். சொல்லும்மா உனக்கு நான் என்ன செய்யனும். அய்யா சொன்னார் உன்னைப்பத்தி, உடனே உன்னைத்தேடி வந்துட்டேன். என்ன இவன் இதையே சொல்றான்னு நினைக்காதே, நீ செய்த உதவி அப்படி.. சொல்லும்மா, உனக்கு என்ன வேணும் சொல்லு..” என்றவனை நேராகப் பார்த்து,
“பதிலுக்கு நீங்க பெரிய பரிசு தருவீங்கன்னு எல்லாம் எதிர்பார்த்து இந்த உதவியை செய்யல சாரு. நான் இல்ல எங்க இனத்துல யாரும் அப்படி இல்ல. நீங்க எனக்கு உதவனும் நினைச்சா உங்க தம்பியை, அந்த சாரை மறுபடியும் இங்க வரவைக்காதீங்க, அவரை நல்லா பார்த்துக்கோங்க, அவருக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை முடிச்சு வைங்க போதும்..” என்றவள், அவர்களின் பதிலைக் கூட கேட்காமல், திரும்பியும் பார்க்காமல் காட்டுக்குள் நடந்து விட்டாள்.
அரூபியின் வார்த்தைகளில் இருந்த வேதனையும், வலியும் வெற்றிக்குப் புரியாமல் இல்லை. அவளது இந்த வேதனையைக் குறைக்க அவனால் ஆன ஒரு சிறு முயற்சியாவது செய்ய வேண்டும். அவளை இப்படியே இதே வேதனையில் விட்டுப்போனால் ஓய்ந்து போவாள். புகழ் திரும்பி வரும் நேரம் இவள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதற்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியவன், செல்லும் அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாறாக அவர்களூம் அவளுக்கு முன்னே அந்தக் கிராமத்தை சென்றடைந்தனர்.
[the_ad id=”6605″]
கிராமத்திற்கு சென்றவர்கள் நேராக பத்ரனைப் போய் பார்த்தார்கள். பத்ரன் ஓரளவுக்கு இதை எதிர்பார்த்தாரோ, அவரது பார்வையில் வியப்புடன் கூடிய ஒரு பாராட்டு தெரிந்தது. அவர்களோடு அமர்ந்தவர், “சொல்லுங்க தம்பி, உங்களுக்கு நான் என்ன செய்யனும்..” என எந்தவித முஸ்தீபுகளும் இல்லாமல் ஆரம்பித்தார்.
வெற்றியும் இதையே எதிர்பார்த்தானோ, அவனும் எந்த வித முகப்பூச்சும் இல்லாமல் “தாத்தா நீங்க நேரடியா விசயத்துக்கே வந்ததுனால, நானும் நேராவேப் பேசுறேன். எங்க குடும்பத்துல என் தம்பியோட விருப்பத்துக்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டாங்க. நாங்க வந்து பொண்ணு கேட்டு, நீங்க உங்க பேத்தியை எங்க வீட்டு மருமகளா கொடுத்தா எங்களுக்கு ரொம்ப சந்தோசம். உங்க பேத்தியை, எங்க வீட்டு மருமகளை ராணி மாதிரி வாழ வைக்க வேண்டியது எங்க பொறுப்பு.”
“ஆனா அது நடக்க எல்லாரும் நினைக்கிற மாதிரி உங்க இனமோ, மக்களோ சாஸ்திரமோ சம்பிரதாயமோ தடையில்லை. நீங்க தான் தடையா இருக்கீங்க. அது ஏன்..? உங்களுக்கு ஏன் என் தம்பியைப் பிடிக்கல.” எனக் காட்டமாகக் கேட்டான் வெற்றி.
வெற்றியின் இந்தப் பேச்சில் புருவம் உயர்த்தினார் பெரியவர். சரியாக நாடியைப் பிடித்து விட்டானே இந்தப் பொடியன் என்ற மெச்சுதலோடு, தன் கெடா மீசையை விரைப்பாய் முறுக்கிக் கொண்டவர், “உன் தம்பியை நான் பிடிக்கலன்னு சொல்லவே இல்லையேப்பா.. நீ என்ன புதுசா, ரகமா பேசுற..” என்றார் சற்றே கிண்டல் குரலில்.
இருவருக்கும் இடையில் இருந்த வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன பேசுகிறார்கள் இவர்கள். அப்படியென்றால் இந்த பத்ரன் சொன்னது எல்லாம் பொய்யா.. புகழை இங்கிருந்து அனுப்ப இப்படியொரு திட்டமா.. இது தெரியாமல், அவரின் சூழ்ச்சி தெரியாமல் அவன் போய்விட்டானா..? கடவுளே அப்படியென்றால் என் மகளின் வாழ்வு.. அவளுக்கு இதெல்லாம் தெரியுமா..?’ என மனதுக்குள் பெரும் யோசனையோடும் பயத்தோடும் பேசிக்கொண்டிருந்த இவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“பிடிக்கலன்னு நீங்க நேரடியா சொல்லல, பிடிச்சிருக்குன்னு சொல்லி, அதுக்கு சில நிபந்தனைகளை வச்சிருக்கீங்க. அந்த முட்டாளும் அதை நம்பி போயிருக்கான். நீங்க சொன்ன இந்த நிபந்தனைகள் எல்லாம் ஒரே ஒரு வாரத்துல என்னால செய்து தர முடியும். ஆனா அவசரப்படாம, நிதானமா யோசிச்சா நீங்க வேற ஏதோ சொல்ல வந்த மாதிரி இருக்கு. அதை என்னன்னு விளக்கமா சொல்லுங்க. அப்போதான் நான் உறுதியா செய்ய முடியும். எனக்கு என் தம்பியோட வாழ்க்கை ரொம்ப முக்கியம். அவனுக்காக நான் எந்த எல்லை வரைக்கும் போவேன். சொல்லுங்க தாத்தா, நீங்க எனக்கு சொல்லியே ஆகனும்..” என்றவனின் பேச்சில் பெரியவருக்கு சிரிப்பு வந்தது.
“தம்பி.. உங்க கூட பிறந்தவரை விட நீங்க விவரமானவரு, கொஞ்சம் விவகாரமானவரும் கூட, எப்படி நான் வேற ஒரு யோசனையை மனசுல வச்சிட்டு உங்க தம்பியைத் தூண்டி விட்டேன்னு சரியா கண்டுபிடிச்சீங்க..” என்றார் பெரியவர் சிலாகிப்பாய்.
பத்ரனின் பேச்சில் எரிச்சல் வந்தது வைத்தியருக்கு. ‘தன் பெண்ணின் வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கி விட்டானோ இந்தக் கிழவன், இவனை என்ன செய்யலாம்…’ என ஏகத்துக்கும் கருவிக் கொண்டிருந்தார் அவர்.
அம்மாயி மேல நீங்க உயிரையே வச்சுருக்கீங்கன்னு எனக்குப் புரிஞ்சது. அவளுக்காக மட்டும் தான் நீங்க இருக்கீங்கன்னும் புரிஞ்சது. அப்படி இருக்கும் போது கொஞ்ச நாளா அவ எப்பவும் புகழைப்பத்தியே உங்ககிட்ட பேசினது, உங்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியிருக்கும். அவளுக்கு புகழ் மேல விருப்பம் இருந்தது அவளுக்கு முன்னமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதை அவளை உணர விடாம, அங்க போகக் கூடாது புகழைப் பார்க்கக் கூடாதுன்னு தடுத்துருக்கீங்க.”
“ஆனா முடியல… நீங்க என்னதான் திட்டம் போட்டாலும் அது மட்டும் நடக்கல, மூலிகைக் குளியல் மருத்துவம் நடந்த அன்னைக்கு அவளாலயே அவ மனசை மறைக்க முடியல, ஆனா மறைச்சிருக்கா.. உங்களுக்காக… உங்க மரியாதை கெட்டுடக் கூடாதுன்னு.. உங்களுக்கு ஒரு கெட்டப்பெயர் வந்துடக்கூடாதுன்னு..”
“எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு யோசிக்கிறீங்களா.. புகழ் அந்த மூலிகைக் குளியல் முடிச்சு வர வரைக்கும் உயிரைக் கையில் பிடிச்சிட்டு பதட்டமா, பயமா வாய் மந்திரத்தையே சொல்லிட்டு இருந்ததா வைத்தியர் சொன்னார். அம்மாயி மனசு தெரிஞ்ச பிறகு தான், அவக்கிட்ட பேசியிருக்கார். அவ உங்களை மனசுல வச்சிட்டு ஒரேடியா வேண்டாம்ன்னு சொல்லிருக்கா.. அதைத்தான் புகழும் கேட்டுருக்கான்.”
[the_ad id=”6605″]
“அடுத்து என்னன்னு யோசிக்கும் போது தான் நீங்களே அவனுக்கு உதவுற மாதிரி எடுத்துக் கொடுத்து உங்க காரியத்தை சாதிச்சிருக்கீங்க.. உங்கப் பேச்சைக் கேட்டு அந்த முட்டாளும் கிளம்பியிருக்கான்.. இதெல்லாம் நானே யூகிச்சது.. யூகம் தான் உண்மை இல்லை. உண்மையா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும்..” என தன் நீண்ட பேச்சை நிறுத்திவிட்டு பெரியவரைப் பார்த்தான்.
நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. என்ற பொருள் அந்தப் பார்வையில் இருந்தது. பெரியவருக்கும் அது புரிந்தது. என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயத்தோடு பார்த்திருந்தார் வைத்தியர். அவர் பார்வையாளராகி வெகு நேரமாகியிருந்ததே. அவரால் வேறு என்ன செய்ய முடியும். பார்த்திருந்தார். கூடவே துணைக்கு தன் கடவுளையும் அழைத்திருந்தார், தன் அம்மாயின் வாழ்க்கை நலம் பெற..