சரண் – 15
இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே
பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே
ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்
கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா
கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்
வெற்றியை நேராகப் பார்த்த பத்ரன், “உன் தம்பிக்கு என் பேத்தியைக் கொடுக்க இஷ்டம் இல்லன்னு நான் சொல்ல வரல. ஆனா இது சாத்தியப்படாதுன்னு சொல்றேன். இங்கே இருக்குற வரைக்கும் தான் அந்த மயக்கம் எல்லாம். உங்க ஊருக்குப் போயிட்டா இந்த மயக்கம் விருப்பம் இதெல்லாம் ஒன்னுமே இருக்காது. அப்படி இருக்கும் போது பார்த்து வெறும் ஆறே நாள் ஆன ஒரு ஆளை எப்படி நம்ப முடியும். உங்க தம்பிக்கு நல்ல புத்தி சொல்லி அழைச்சிட்டு போங்க, அம்மாயியை எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும்..” என்றவரை வெற்றுப் பார்வைப் பார்த்தான் வெற்றி.
“என்ன சொல்ல வர்ரீங்க.. தெளிவா சொல்லுங்க…” என்றுக் காட்டமாகக் கேட்க,
“எனக்கு உங்க மேல நம்பிக்க இல்லத் தம்பி, உங்க மேலன்னா, உங்களை சொல்லல, உங்க டவுன் மக்களை.. அவங்க மேல எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. தன் காரியம் ஆகனும்னா காலையும் பிடிப்பாங்க, காரியம் ஆனதும் கழுத்தையும் பிடிப்பாங்க. மரம், மண்ணு, மனுஷன், மிருகம்னு எந்த உயிருக்கும் பச்சாதபம் பார்க்காத சுயநலவாதிக எல்லாம். என் அனுபவப் பாடம் இது. மேலப் பேச விருப்பம் இல்ல நீங்க கிளம்புங்க..” என்றார் முகத்தில் அடித்தார் போல.
“என்ன நினைச்சிட்டு நீங்க இப்படி பேசுறீங்க. அந்த முட்டாளுக்கு நம்பிக்கை கொடுக்கும் போது இதெல்லாம் தெரியலையா..? நீங்க சொல்றதை நானும் ஏத்துக்குறேன். இல்லன்னு சொல்ல வரல, ஆனா எல்லாரும் அப்படியில்லை. எங்க குடும்பத்தைப் பத்தி விசாரிச்சிட்டு சொல்லுங்க. என்ன நடந்தாலும் சரி உங்க பேத்தி இல்லாம இங்க இருந்து நான் போகப் போறது இல்ல. வரச்சொல்லுங்க உங்க பேத்தியை. அவளுக்கும் தெரியட்டும் உங்களைப்பத்தி. யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க… நீங்களா அனுப்பினா உங்க அனுமதியோட கூட்டிட்டுப் போவேன். இல்லையா உங்க முன்னாடியேத் தூக்கிட்டுப் போவேன்..” என்றான் கடுமையாக. அன்று புகழ் மனதில் நினைத்ததை இன்று வெற்றி வாய்வழியாக சொல்லியிருந்தான்.
வெற்றியின் இந்தப் பேச்சை பெரியவர்கள் இருவருமே ரசிக்கவில்லை என்பது அவர்கள் முகத்திலேத் தெரிந்தது. தபேரா ஏதோ சொல்ல வர, அதற்குள் பக்கத்தில் இருந்த மக்கள் சிலர் கூட்டம் கூடத் தொடங்கியிருந்தனர். அதைப் பார்த்த பத்ரன், வெற்றி இதைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து, அதைத் தடுக்கும் எண்ணத்தில் உடனேத் தன் பேச்சை மாற்றினார்.
[the_ad id=”6605″]
“அடடே… மக்க எப்போ வந்தீக, ஆட்டெல்லாம் பட்டில அடைச்சாச்சா.. உங்களையெல்லாம் பார்க்கனும் சொன்னாக, நீங்க வர நேரமெடுக்கும்ன்னு சொல்லிட்டு இருந்தே. நீங்களே வந்துட்டீக, இவுக நம்ம வைத்தியருக்கிட்ட ஒரு பையன் இருந்தாகல, அவுகளோட அண்ண. அந்த தம்பிக்கு குணமாகிட்டுல்ல, அதான் கூட்டிப்போக வந்துருக்காக…” என அவர்கள் முன் பேச,
வந்தவர்களில் பெரியவர் ஒருவர் “ஆமா அந்தப் பயலுக்கு சரியாப் போச்சா.. அதா இன்னைக்கு வைத்திய குடில்ல ஆளக் காணமா.. நல்லது. நம்ம மக்க காப்பாத்திக் கொண்டந்தது, குணமாகம எப்படி இருக்கும். நம்ம குலசாமி சங்கிலியப்பனோட அருமை அது.” என்றார்.
“நானும் அதேன் சொல்லிட்டு இருந்தே. நன்றி சொல்லிட்டு, நமக்கு கைமாறு செஞ்சே ஆகனும்ன்னு உக்காந்துருக்காக, வேணா சொன்னாலும் கேட்கல…” என்றவரைக் கூர்ந்து பார்த்தான் வெற்றி. பெரியவர் ஏதோ திட்டத்தோடு தான் பேச்சை மாற்றியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான்.
அவர் வழியிலேயே சென்று அவரை மடக்க வேண்டும் என்று தெரிந்தும் கொண்டான். அதனால் பெரியவரை விடுத்து, அங்கிருந்த மக்களிடம் திரும்பி “எல்லாருக்கும் வணக்கம். நான் வெற்றிமாறன். எனக்கு சொந்த ஊர் காரைக்குடி பக்கம். பேர் சொன்னா தெரிஞ்சிக்கிற அளவு ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான் எங்களோடது. ஒரு வாரத்துக்கு முன்ன அடிபட்டு நீங்க காப்பாத்தி வச்சிருந்தது என் கூட பொறந்த தம்பிங்க. நாங்க ரெண்டு பேரும் ரெட்டை பிள்ளைங்க.”
“ஒரு வேலையா மைசூர் வரைக்கும் வந்தவனுக்குத்தான், இங்க வச்சு விபத்து நடந்துருக்கு. நேத்து வரைக்கும் எங்களுக்கு எந்த விவரமும் தெரியலைங்க. எந்த தகவலும் இல்லாம வீட்டுல எல்லாரும் அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதட்டத்துல இருந்தோம். எங்களுக்குத் தொழில்முறையில நெறைய எதிரிங்க இருக்காங்கய்யா.. அப்படி யாரும் தம்பியை எதுவும் பண்ணிட்டாங்களா..? உயிரோடோதா இருக்கானா.. இல்லை பணத்துக்காக கடத்திட்டுப் போயிட்டாங்களோன்னு எல்லாம் பயந்துட்டு இருந்தோம்…”
“நேத்து நைட்டுதான் வைத்தியர் எங்களுக்கு கூப்பிட்டு தகவல் சொன்னார். விசயம் கேள்விப்பட்டதும், உடனேக் கிளம்பி வந்துட்டோம். இங்க தர்மபுரியில ஒரு ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு, உங்களைப் பார்த்தே ஆகனும்ன்னு இங்க வந்துட்டேன்.”
“இந்த ஒருவாரமா எங்களுக்கு இருந்தப் பயம், பதட்டம் எல்லாத்தையும் ஒன்னுமே இல்லாம செஞ்சு, நிம்மதியை கொடுத்துருக்கீங்க. உங்களுக்கு எல்லாம் இது சாதரண விசயமா இருக்கலாம். ஆனா எனக்கு, எங்க குடும்பத்துக்கு நிம்மதியை சந்தோசத்தை மொத்தமா நீங்கத் திருப்பி தந்துருக்கீங்க. அதனால பெரிய மனசு பண்ணி நாங்க செய்ற உதவியை மறுக்காம ஏத்துக்கனும்..” என உணர்ச்சிப் பெருக்கோடு, கண்களில் நீர் துளிக்க மிக நீளமாகப் பேசினான் வெற்றி..
ஆரம்பிக்கும் போது இத்தனை உணர்ச்சிவசப்படுவான் என்று அவனுக்கு தெரியாது. முடிக்கும்போது தன்னையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. புகழ் என்று வந்தால் வெற்றிக்கு தன்னிலை மறந்து போகும். இப்போதும் அதே நிலைதான்.
கூடியிருந்தவர்கள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, பத்ரனுக்கும் அதே நிலைதான். எங்கேத் தான் நினைத்தது நடக்காமல் போய்விடுமோ என்று வேறு பயந்தார். வைத்தியர் தான் வெற்றியின் தோலைத் தட்டி இயல்பிற்கு மீட்டினார். தன் குடிலின் முன் இருந்தக் கூட்டத்தைப் பார்த்து, தாத்தாவிற்குத்தான் ஏதோ என்று பயந்தபடியே, அரக்க பரக்க வந்தவள், அங்கு வெற்றியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவன் பேசியதைக் கேட்டபிறகு அண்ண்ன் தம்பி இருவருக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை எண்ணி நெக்குருகிப் போயிருந்தாள். அன்று தபேராவிடம் பேசிய பிறகு, புகழைச் சென்று பார்ப்பதை முற்றிலும் தவிர்த்திருந்தாள். ஆனால் ஆசை கொண்ட மனம் அவளது எந்த சமாதானங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், அவளுக்கு எதிராக சண்டித்தனம் செய்தது. ஒரு நாள் பொறுத்துப் பார்த்தவள், அடுத்த நாள் விடியலிலேயே அவனைச் சென்று பார்த்த பிறகு தான் அவள் மனம் சற்று ஆசுவாசப்பட்டது.
இதற்கு என்ன செய்வது என்று யோசித்தவள் அவன் விழித்திருக்கும் போது பார்த்தால் தானே பிரச்சினை. உறங்கும் போது அவனே அறியாமல் சென்று பார்த்தால், என்று நினைத்து, அதையே வழக்கமுமாக்கிக் கொண்டாள்.
தொடர்ந்து இரண்டு நாட்களாக புகழ் உறங்கும்போது அவனை சென்று பார்த்து வருபவள், இன்றும் வழக்கம்போல அந்த இருள் பிரியாத அதிகாலையில், வைத்தியக் குடிலுக்குக் கிளம்பிப் போனவளுக்கு அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. இருவரின் படுக்கைகளும் சுருட்டப்பட்டு ஒரு ஓரமாக கிடந்தது.
குடிலைச் சுற்றியும், வெளியேவும் தேடிப் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. எங்கே போனார்கள், அதுவும் இத்தனைக் காலை வேளையில். ஒரு வேளை அருவிக்கரைக்குப் போயிருப்பார்களோ.. என்று தோன்ற, முரண்டிய மனதை அடக்கி அங்கேயும் சென்றுப் பார்த்தாள், இருவரும் இல்லை.
மனதில் பயம் மூள, அடுத்து என்ன செய்வது என்று கூடத் தெரியாமல், அந்தப் பனி கொட்டும் அதிகாலையில் ஆற்றங்கரையோரத்தில் ரவிவர்மனின் கலைந்த ஓவியமாய் பித்துப் பிடித்தவளைப் போல் அமர்ந்திருந்தாள் புகழின் காட்டு ராணி.
விழித்ததும் அருகில் பேத்தியைக் காணோம் என்றுத் தேடிவந்த பத்ரன் தான் அவளின் நிலையறிந்து, இருவரும் விடியலுக்கு முன்னமே ஊருக்கு கிளம்பிவிட்டார்கள் என்ற செய்தியை சொன்னார்.
அவர் அதோடு நிறுத்தியிருந்தால் கூடப் பரவாயில்லை. ‘இந்த டவுனுக்காரர்கள் என்று ஆரம்பித்து, இன்றைய காலக்கட்டத்தில் நடக்கும், அவர் அறிந்த பல சம்பவங்களைக் கூறி அவள் மனதில் பயத்தை விதைக்க முற்பட்டார். ஆனால் மறந்தும் கூட புகழைப் பற்றி ஒரு வார்த்தை நல்லவிதமாகவோ, அல்லது தப்பாகவோ பேசவில்லை. அது அவள் மனதில் எவ்வாறு பதியும் என்றுத் தெரியாமல், மற்றதைப் பேச அவர் முயற்சிக்கவில்லை. எதிர்வினையாக எந்தப் பேச்சையும் கேட்க அவள் மனது இடம் கொடுக்காமல் போக, அவர் பேசாமல் இருந்ததே அரூபிக்கும் போதுமானதாக இருந்தது.
[the_ad id=”6605″]
அப்படியே இருக்காமல், அன்றைய நாளில் பத்ரனை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, ஆடுகளை விரட்டிக் கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பியிருந்தாள். என்ன முயன்றும் காதல் கொண்ட பெண்ணின் மனதை அவளால் சமாதனம் செய்ய முடியவில்லை. நேரம் செல்ல செல்ல, தன் மனதைத் திருடிச் சென்ற திருடனைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறித் தீப்போல் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
ஆனாலும் தன்னிடம் சொல்லாமல் போன புகழ் மேல் ஏகத்திற்கும் கோபம் வேறு பெண்ணுக்கு. ஏன் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. அத்தனைக்கு வேண்டாதவள் ஆகிவிட்டேனா.. என்னைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லையா..? ஏன் இப்படி செய்தான். உண்மை நேசம் என்றால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா.? தாத்தா சொன்னது போல, டவுனுக்காரர்கள் என்றால் அப்படித்தானா..? அவனுக்கு தன் மேல் விருப்பம் இல்லையோ.. என்று பலவாறாக யோசித்தவளின் கால்கள் தன்னைப்போல கிராமத்தின் எல்லை முடிவடையும் இடமான, அந்த சிறு குன்றின் அடிவாரமும், நகரத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஆரம்பமுமான தார்ச்சாலைக்கு வந்திருந்தாள்.
தன்னைத்தேடி அவன் வருவான் என்றது ஆசை மனம். ஆனால் மூளையோ வீட்டிற்கு என்றுக் கிளம்பியவன் எப்படி வருவான். அவனுக்கான உலகம் வேறு. அதில் நீ எங்கே இருக்கிறாய். அவனாக வந்தபோது விரட்டிவிட்டு, இப்போது வருவானா..? வருவானா.? என்றால் எப்படி வருவான். போய் ஆட்டை மேய்க்கும் வேலையைப் பார்..’ என ஏகத்திற்கும் சாட, மனம் முழுக்கத் தோன்றிய நிராசையோடு போக வர இருந்த ஒவ்வொரு வண்டிகளையும், பைத்தியக்காரியைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்
அப்படி தன்னிலை இல்லாமல் வெறித்தப் பார்வையோடு நின்றிருந்தவளைத்தான் வெற்றியும், தபேராவும் பார்த்தது. அவர்கள் வந்து பேசியது, அதிலும் வெற்றி பேசியதைக் கேட்டவளுக்கு, மனதில் இனம் புரியா நிம்மதி வந்து ஒட்டிக் கொண்டது. என்ன நடந்தாலும் புகழ் தன்னை விட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கைப் பிறந்தது.
ஆனாலும், தாத்தா, தன் மக்கள் எல்லாரும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள், நிச்சயம் வெளியிலிருந்து வரும் ஆட்களுக்கு மணம் முடித்துக் கொடுக்க மாட்டார்கள். அப்படியிருக்க இது என்ன முட்டாள்தனமான ஆசை. எனக்கு அவன் மேல் விருப்பம் இருப்பது தெரிந்தால் தானே பிரச்சினை. தெரியவிடக்கூடாது தெரியவே விடக்கூடாது, அவனாவது நிம்மதியாக இருக்கட்டும்.’ என்று நினைத்துத் தான் அப்படி அவர்களிடம் பேசிவிட்டு வந்தாள்.
இருவரும் கிராமத்திற்கு வந்து தன் மக்களிடம் பேசுவார்கள் என்று அவள் நினைக்கவில்லை. அதிலும் வெற்றி பேசியதைக் கேட்ட பிறகு. அவளுக்கு இருப்பேக் கொள்ளவில்லை. அவளால் கிராமத்தை தாண்டி வெளியில் போக முடியாது. புகழால் இங்கு வரமுடியாது என்ன செய்வது என்றும் புரியாமல் குழம்பிக் கொண்டே இருந்தாள்.
இப்படி அவள் தனக்குள்ளே பல யோசனைகளிலும், குழப்பங்களிலும் சுழன்றுக் கொண்டிருக்க, வெற்றி பேசியதைக் கேட்டதில் ஒரு வயதான பாட்டி, “ராசா நீங்க நல்லா இருக்கனும். உங்க நல்ல மனசை நான் மதிக்கேன். ஆனா இங்க கட்டுப்பாடுக சாஸ்தி.. வெளி உலகத்தைப் பார்த்துப் பயந்து போய் எங்களுக்குள்ளயே ஒரு வட்டம் போட்டு வாழறோம். அதை மாத்த வேணாவே. உங்களுக்கு உதவனும் தோனிச்சா நெறைய நல்ல காரியம் பண்ணுங்க போதும்..” என,
விரைந்து அவரிடம் சென்றவன், “பாட்டிம்மா… இன்னைக்கு உலகமே உள்ளங்கை அளவுக்கு சிறுசாகிடுச்சு. நீங்க எங்க இருக்கீங்க. உங்க நம்பிக்கைகளையும் கட்டுப்படுகளையும் நான் தப்பு சொல்லல, ஆனா மூட நம்பிக்கை வேணாம்ன்னு சொல்றேன். நீங்க நீங்களாவே இருங்க. உங்க இனத்தைக் காப்பாத்த தான் நான் முயற்சி எடுக்குறேன். அதைப் புரிஞ்சிக்கோங்க. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நாங்க செய்றதுல கொஞ்சமும் உங்க மனசுக்குப் பிடிக்கலன்னா சொல்லுங்க, உடனே நாங்க வந்த வேலைஅயை விட்டுட்டு கிளம்பிடுறோம். ஆனா வாய்ப்பேக் கொடுக்காம நல்லவன், கெட்டவன்னு முடிவு பண்ணக் கூடாது..” என்று மறுத்துப் பதில் பேச முடியாத அளவிற்குப் பேசிய வெற்றியைப் பார்த்து வாஞ்சையாக புன்னகைத்தார்.
அதில் ஒரு சோகம், ஒரு நிம்மதி, ஒரு சந்தோசம் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பக்கத்தில் நின்றிருந்த அரூபியை அழைத்து, “எங்க மக்க ஏற்கனவே ஒரு தடவை ஏமாந்து, துரோகத்துல இருந்து மீண்டு வந்துருக்காக. அதுல பழியான ஒரே ஆளு இவ அப்பன் தான். யாருக்கு என்ன உதவின்னாலும் கேட்காம செய்வான். அப்படி ஒருத்தனுக்கு செஞ்ச உதவி தான் இன்னைக்கு அவன் உயிரையே பறிச்சிடுச்சு. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்க. அவன் செஞ்சிட்டுப் போனதுல இருந்து எந்த டவுனுக்காரங்க வந்தாலும் எங்களுக்குப் பயமும் கோபமும் தான் வருது.”
“இதோ இங்க நிக்காலே இவ, அப்படியே அவ அப்பனைப் போல, உதவின்னு சொல்லக் கூட வேணாம் முகத்தைப் பார்த்தே செஞ்சிடுவா. இப்ப இவ செஞ்ச உதவியால தான் உங்க தம்பி பொழச்சிருக்கார். எங்களுக்காக இல்லாட்டினாலும், இவளுக்காகவாவது நாங்க ஒத்துக்குறோம். ஆனா உங்க குடும்ப பொம்பளைங்க இந்தக் காட்டுல வந்து, எங்க மக்க மனுசங்க கூட இருந்து செய்யனும். அப்படின்னா சொல்லுங்க.. நான் இவங்ககிட்ட பேசுறேன்..” என்று முடிக்க, வெற்றிக்கு கைத்தட்ட வேண்டும் போல் இருந்தது.
அவனும் ஏற்கனவே அப்படி ஒரு திட்டத்தில் தான் இருந்தான். அவனும் மங்கையும் இங்கு வந்து இருந்து வேலைகளை ஆரம்பிக்கலாம், அப்படியே இங்குள்ள மக்களின் மனதையும் மாற்றி, புகழ் – அரூபி திருமணத்தை முடித்து விடலாம் என்று. அது தானாகவே வந்தமைய, அப்படியேப் பிடித்துக் கொண்டான். பத்ரனுக்கு எல்லாம் தன் கையை மீறிப் போவதைப் போல் இருந்தது. ஆனாலும் அவர் நினைத்த ஒன்று நடக்கப் போவதில், அவருக்கும் மகிழ்ச்சி தான்.
[the_ad id=”6605″]
ஒருவாராக அனைவரிடமும் பேசி, புகழின் ஆபரேஷன் முடிந்ததும், தன் மனைவி மற்றும் குழு ஆட்களோடு வருவதாக கூறி விடைப் பெற்றான். கிளம்பும் போது பத்ரன் அவரை ஒரு பார்வைப் பார்க்க,, அதில் தெரிந்தது என்ன..? ஆனாலும் அதை ஒதுக்கிவிட்டு ரூபியிடம் வந்தவன், ‘நீ என்ன தான் உன் மனசை மறைச்சாலும், உன் கண்ணுல தெரியிற ஏக்கம் அதைக் காட்டிக் கொடுத்துடும். அப்படியெல்லாம் மனசை மறைச்சு, மத்தவங்களுக்காகப் பார்த்து உன் சந்தோசத்தை இழந்துடாத. நீ தான் புகழோட மனைவி. எந்த சூழ்நிலையிலையும் உன்னை விட்டுட மாட்டான். அவன் மாறவும் மாட்டான். சந்தோசமா நிம்மதியா இரு. சீக்கிரம் வந்து உன்னை கல்யாணம் செய்துக் கூட்டிட்டுப் போவான்..” என புன்னகை முகமாக பேசிவிட்டு பத்ரனிடம் வந்தான்.
“எங்களால ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு. அதுக்காக நீங்க எங்களைப் பயண்படுத்திக்கிறீங்கன்னு எனக்கு தோனுது. அப்படித்தானே.” என்றவனை மெச்சும் பார்வைப் பார்த்தவர், சிறு புன்னகையோடு அந்த கிடா மீசையை முறுக்கிக் கொண்டார். அந்தப் பார்வையும் சிரிப்பும் “ஆம்..” என்ற பதிலைக் கொடுத்திருந்தது வெற்றிக்கு.
இவர் என்ன செய்ய இருக்கிறார்.? புரியாத கேள்வியோடு தர்மபுரியை நோக்கி மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியிருந்தான்.