தேடியுனைச் சரணடைந்தேன் – 6
தித்திதது நெஞ்சம் சம் சம் தென்பட்டது
கொஞ்சம் சம்சம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நி
அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ
மறந்தாயோ..
விடியலை வரவேற்கும் வண்ணமாக குயில்களின் குரலோ, ஆதவனின் அலைக் கரங்களோ உள்ளே வந்து அணைக்காத வகையில், கனத்த திரைகளால் சூழப்பட்டிருந்த, விசாலமான ஏசி அறை. உறக்கத்திலும் வெற்றியின் கைகள் மனைவியை வளைத்திருக்க, அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவளாய், விடிந்ததும் தெரியாமல் நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் மனையாள்.
எப்போதும் உடலை முறுக்கிக்கொண்டு புரண்டு படுப்பவன், அன்றும் அதையே செய்ய மலர் கொத்தாய் அவன் மார்பில் அவள்..!
மனைவியின் உறக்கம் கலைந்து விடுமோ என்று பயத்தில் அசையாது அப்படியே இருந்துவிட்டான்.
பால் வண்ண டிசைனர் பட்டு, கசங்கிய பட்டாக கலைந்து, நேற்றைய இரவை நினைவுக் கூட்டியது. அதுவரை இருந்த மனக்கிலேசங்கள் அனைத்தும், துணிக் கொண்டு துடைத்தார் போல, சுத்தமாக காணாமல் போயிருந்தது.
எத்தனை மனக்கஷ்டங்கள், தவிப்புகள், அவள் கிடைக்க மாட்டாளோ என்ற துடிப்பு. தன் காதலியை தம்பியின் மனைவியாக பார்க்க நேரிடுமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரு சில மாதங்களாக அவனை ஒரு வழி செய்திருந்தது.
இப்போது அவன் பயந்த எதுவுமே இல்லை என்றதும், அதிலும் அவள் சொல்லாவிட்டாலும், தன்னை மட்டுமே விரும்புகிறாள் என்று மனைவியின் செய்கையில் புரிந்தும் விட, அந்த நேரம் அவனை விட யாரும் அதிர்ஷ்டசாலிகள் இல்லை என்றேத் தோன்றியது.
இரவு அவன் கரங்களில் கசங்கிய பூமாலையாக அவள் பட்ட இனிய அவஸ்தைகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, அவன் உதட்டில் மந்தகாசமாய் ஒரு புன்னகை.
உனக்கும் எனக்கும் இனியில்லை இடைவெளி என்பது போல், இருவரும் பிணைந்துக் கிடக்க, மார்பு ரோமங்களின் உரசலில், மெல்லக் கண்விழித்துப் பார்த்தவள், அவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாமல், நெருப்புக்கோழியாய் தன் முகத்தை கணவனின் கழுத்து வளைவில் மறைத்துக் கொண்டாள்.
அவளது செய்கையில் மீண்டும் மோகம் துளிர் விட, விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து, தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அந்த உணர்வுகளை மொத்தமாய் அடக்கி, மனைவியின் உச்சந்தலையில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான்.
[the_ad id=”6605″]
கணவனின் உணர்வுகளை மதித்தவள், தன்னைச் சுற்றியிருந்த கணவனின் கைகளை மென்மையாக அழுத்திக் கொடுக்க, அதில் அவனுக்கு கர்வமாக ஒரு புன்னகை பிறந்தது.
பின் அவளை இறுக்கிக் கொண்டு “வனி..” என்றவன் ஆழ ஒரு மூச்செடுத்துவிட்டு, “வனி எனக்கு உன்கிட்ட நெறைய பேசனும், அத விட கேட்கனும். என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தை திருப்பிக்கிட்டு போவ, உனக்கு என்னை பிடிக்கதோ நீயும் உன்னோட அத்தை மாதிரி என்னை நினைச்சிட்டியோன்னு மனசுக்குள்ள ஒரு பெரும் வலி. யார் என்ன நினைச்சாலும் எனக்கு என்னன்னு போயிட்டே இருக்குற ஆளு நான்.”.
” ஆனா நீ அப்படி நினைக்கறதை என்னால ஏத்துக்கவே முடியல. முதல்ல எனக்குமே இது காதல் தான்னு புரியல, எப்போ உனக்கும் புகழுக்கும் தான் திருமணம்ன்னு பேச ஆரம்பிச்சாங்களோ, அப்போ புரிஞ்சது. ஆனா என்ன செய்ய முடியும் என்னாலன்னு தோனுச்சு. உனக்கும் என்னைப் பிடிக்காதுன்னு மனதில் நினைச்சு வச்சிருந்தேன். நான் பார்க்கும் போதெல்லாம் புகழ் கூடவே இருக்க, உனக்கு ஒன்னுன்னா அவன் துடிக்கிறான். நான் வேற என்ன நினைப்பேன், உங்க ரெண்டு பேரோட விருப்பத்தோடதான் இந்த கல்யாணம் நடக்கப் போகுது போல, உன் அத்தைக்கும் ஆச்சிக்கும் இதனால ஏகப்பட்ட பிரச்சினை. ஆச்சிக்கு ஏற்கனவே வயது முதிர்ச்சி, பக்கவாதம் வேற இதனால மேலும் மேலும் எந்தப் பிரச்சினையும் வந்திடக்கூடாதுன்னு தான் கல்யாணம் நடந்துட்டு போகட்டும் விடுங்க. உங்க உடம்பைக் கெடுக்காதீங்க, கொஞ்ச நாள் கழிச்சு நீங்க யாரை சொன்னாலும் கட்டிக்குறேன்னு சொன்னேன். அதுல ஆச்சியும் சமாதானம் ஆகி, நான் யாரைச் சொன்னாலும் கட்டிப்பேன்னு சத்தியம் பண்ணு, அப்போதான் நம்புவேன்னு சொன்னாங்க.”
“எனக்கும் அவங்க உடல்நிலையும், மனநிலையும் தான் முக்கியம்னு நினைச்சு சரின்னு சத்தியம் பண்ணிட்டேன். திடிர்ன்னு கல்யாணத்துக்கு முதல் நாள் வந்து, நீதான் மங்கையைக் கட்டிக்கனும். நான் சொல்ற பொண்ணைத் தான் கட்டுவேன்னு சத்தியம் செய்திருக்க, மறந்திடாதேன்னு கார்னர் பண்ணாங்க. அப்போதான் எனக்குமே புகழ் போயிட்டான்னு தெரியும்.” எனச் சற்று மூச்சு விட, க்ளுக்கென்று சிரித்தாள் மங்கை.
சிரித்தவளின் இதழ்களைப் பிடித்தவன் ” என்னச் சிரிப்பு என்னோட கஷ்டமும், தவிப்பும், உனக்குச் சிரிப்பா இருக்கா? இந்த சிரித்த வாயை என்ன செய்யலாம்” என்றப்படியேக் கட்டை விரலால் வருட,
“ம்ம்ம்…. ம்ம்ம்ம்” என்று திமிறியவள், அவன் விட்ட பிறகு, “பின்னே சிரிக்காம.. காதலிச்சா மட்டும் போதாது, அதை சொல்லவும் செய்யனும், கல்யாணமும் செய்துக்கனும். காதலிக்க தெரியுது, அதை சொல்லத் தெரியல, எந்த முயற்சியுமே எடுக்காம தானா எல்லாமே வந்து மடியில விழுமா என்ன.? நீங்க தாலிக்கட்டலன்னா, இந்த கல்யாணம் நடந்திருக்கவே நடந்திருக்காது. எல்லா ப்ளானும் சொதப்பிருந்தாலும் ஏதோ ஒன்னை செஞ்சு இந்த மேரேஜை நிறுத்தியிருப்பேன். ஆனா நீங்க லவ் பண்ணிட்டு அதை என்கிட்ட சொல்லாம, இவ இப்படித்தான்னு ஒரு முடிவை எடுத்திட்டு, எங்கிருந்தாலும் வாழ்க ரேஞ்சுல, தேவதாஸ் மாதிரி சுத்திகிட்டு இருங்கீங்க. நானும் உங்ககிட்ட எத்தனையோ முறை பேச வந்திருக்கேன். நீங்க என்னைக் கண்டுகிட்டதே இல்லை..” என வரிசையாகக் குற்றப்பத்திரிகை வாசித்து, அவன் கண்ணத்தில் பற்கள் பதியக் கடிக்க,
“ஏய் விடுடி ராட்சஸி. வலிக்குதுடி.. ” என
“வலிக்கட்டுமே… நல்ல வலிக்கட்டும்.. அண்டா சைஸ்ல இல்ல, இல்ல அனகோண்டா சைஸ்ல உடம்பை வச்சிக்கிட்டு, நான் பக்கத்துல நின்னா அண்டாவும் செம்பும் போல இருப்போம். உடம்பை வளர்த்து வைங்கன்னா இப்படியா வளர்க்கிறது. நான் உங்க கலரைப் பார்த்து ஒதுங்க, இந்த அண்டாவைப் பார்த்து சாரி அனகோண்டாவைப் பார்த்து தான் பயந்தேன். இவன் என்னாடா இப்படி அகலமா இருக்கான் என்று தான் மனசுல பெரிய பயமே வந்திடுச்சு.” என சோககீதம் வாசிக்க, அவளது பேச்சில் அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.
” ஏய் உன்னைப் பார்த்து பாவப்பட்ட புள்ள, ஒன்னுமே தெரியாதுன்னு நினைச்சேன் டி, நீ எனக்கே பேரு வச்சிருக்க. அதுவும் அண்டான்னு அனகோன்டான்னு பேரு வச்சுருக்க” என மேலும் மேலும் சிரிக்க,
அவன் வாயை மூடியவள் “எதுக்கு இப்படி பேய் மாதிரி சிரிக்கிறிங்க, போதும் வாயை மூடுங்க” எனக் கடித்தவள்,
” விடுங்க மணி ஏழாச்சு… தாத்தாக்கிட்ட முதல்ல போனை வாங்கி, யார் யார் கால் பண்ணிருக்காங்கன்னு செக் பண்ணனும். எமர்ஜென்சி ஏதாவது இருக்கும். நீங்க புகழ் மாமாக்கு போன் செய்து கேளுங்களேன், எங்க இருக்காங்க.. எப்ப வருவாங்க.. ” என்றதும்,
“நைட் கால் பண்ணேன், நாட் ரீச்சபிள்ன்னு வந்தது, இப்ப மறுபடியும் பண்ணி பார்க்குறேன். நீ ஆச்சிக்கிட்டயும், உங்க அத்தைக்கிட்டையும் பேசிடு, எனக்காக எதையும் மாத்தக் கூடாது. நீ அவங்ககூட எப்பவும் இருக்கிற மாதிரி இருக்கனும்,” என அழுத்தமானக் குரலில் பேசியவனுக்கு,
உம்மென்ற முகத்துடன் ‘மாட்டேன் ம்ம்ம் சரி போ அதெல்லாம் முடியாது’ எனும் ரியாக்ஷனுடன் எல்லா விதமாகவும் தலையை, எல்லா பக்கமும் உருட்ட, அதில் சிரித்தப்படியே அவளின் தலையைப் பிடித்து ஆட்ட, அப்போது அவனின்போன் வைப்ரேஷன் ஆக, எடுத்து பார்த்தவன் ‘தங்கப்புள்ள’ என்று வர ஒரு புன்னகையுடன்’ எடுத்துக் காதில் வைத்தான்.
“மணிம்மா என்னடா இன்னேரமே போன் செய்துருக்க, அண்ணன் மேல பாசம் பொங்குதோ, பார்த்தும்மா பாசம் வழுக்கி விட்டுடப்போகுது,” எனக் கிண்டலில், வெற்றிக்கு முன்னே மங்கைப் பேச,
“ஏய் வாயை மூடிட்டு போடி.. அவளை வம்பு இழுக்கல்லன்னா உனக்கு தூக்கம் வராது.. போ போய்.. காபி எடுத்துட்டு வா.. ” என விரட்ட,
” தோடா.. பெரிய இவ உங்கத் தங்கச்சி… நாங்க வம்பிழுக்குறோம்.. இனிதான் இருக்கு அவளுக்கு, அண்ணி பவரைக் காட்டி அவளை எப்படியெல்லாம் கொடுமை செய்யப்போறேன் பாருங்க, ” எனக் கண்களை உருட்டி மிரட்ட,
அந்தப் பக்கம் மொழியோ போனை ஆச்சியும் தன் அப்பாவும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரில் போட்டிருந்தாள். பெரியவர்கள் இருவருக்கும் சிரிப்பு வர மொழியோ,” அண்ணா என் பாசமலரே.…! ஒரே நாள்ல இப்படி பொசுக்குன்னு பொண்டாட்டி தாசன் ஆகிட்டியே, உன்னை நம்பி நான் வேற இந்த ஆச்சிக்கிட்ட, பெட் எல்லாம் கட்டினேனே எண்னைச் சொல்லனும். நான் ஆச்சிக்குத் தரேன்னு சொன்ன பணத்தை, ஒழுங்கா உன் அக்கவுண்ட்ல இருந்து மாத்தி விடு, பச்சோந்தி பயலே.. ” என்றவள்,
” அண்ணியாரே.. நீங்களா இப்படி பேசுறது, நம்பமுடியவில்லை நம்பவே முடியலை.. என்ன மந்திரம் போட்டான் அந்த கடாரம் கொண்டான், உங்க வாயில இருக்குற அத்தனை பல்லும் வெளியில தெரியிற மாதிரி சிரிச்சிட்டு இருக்கிங்க. அப்புறம் அண்ணிக் கொடுமைப் பத்தி ஏதோ சொன்னீங்களே, நீங்க இங்க வாங்க நாத்தனார் கொடுமை எப்படி இருக்கும்ன்னு காட்டுறேன். வெயிட் அண்ட் வாட்ச்,” என வில்லி வடிவில் பேச,
” வாயைக் குறை வாயாடி.. எப்பப் பாரு எல்லாரையும் கிண்டல் செய்துட்டு. இனி மங்கைகிட்ட மரியாதையா தான் பேசனும்.” என பாலன் அதட்டுவது இவர்களுக்கும் கேட்க, இருவர் முகத்திலும் அகலமான புன்னகை.
அன்றைய நாள் முழுவதும் அந்த புன்னகை அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. அப்பபோ வெற்றி போனை பார்ப்பதும், நெற்றிச்சுருக்கி யோசிப்பதும் தவிர மற்ற எல்லாம் சாதரணமாக தான் போனது.
[the_ad id=”6605″]
வெற்றியை அங்கு புகழைப்போல யாருக்கும் அதிகம் தெரியாது. வெற்றி இங்கு அதிகம் வந்ததும் இல்லை. ஆனால் யாரும் அவனை குறைவாக மதிக்கவும் இல்லை. வனிதாவைத் தான் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் குறைச்சொல்லிக் கொண்டிருந்தனர். தாத்தாவின் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்று வெற்றிக்கு தோன்றியது.
சொந்தப்பந்தங்கள் என்று அனைவரும் வந்து விசாரித்து விட்டுப்போக மாலையில் இருவரையும் தங்கள் குலத்தெய்வமான வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு அனுப்பி வைத்தார் ராமசாமி.
சீனுசாமி வரேன் என்றதற்கு “நாங்களே போய்க் கொள்கிறோம்” என மங்கை சொல்லி விட,
மனைவியுடனா பயணத்தை ரசிக்க எண்ணியவனாக சுற்று வழிப்பாதையில் வந்து கொண்டிருந்தான் வெற்றி. புதுமாப்பிள்ளையாய் அவன் பென்ஸை ஒட்ட, சற்றும் புதுக்கருக்கு குறையாமல் அவனருகே மங்கை இருந்தாள். அமைதியாக சில நிமிடங்கள் கரைய, அவளின் கையைப் பிடிக்க வந்தவனிடம் “கோவிலுக்கு போகும் போது ஒன்னும் கிடையாது” என்று மிரட்டியவள், “மாமா மருதமலை போயிட்டுப் போகலாமா..” என,
“அவர் டபுள்ஸ் வச்சு மெயின்டைன் பண்றவர் ஆச்சே, உனக்கு பிராப்ளம் இல்லைன்னா எனக்கு ஒகே” எனக் குறும்பாய் கண் சிமிட்டி வம்பிழுக்க,
அதில் காண்டானவள் “அப்போ நேரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு போங்க” என்று வந்த எரிச்சலில் அவளும் கடுப்படிக்க, அவன் முகத்தில் அவள் பார்த்தே இராத ஒரு பளீர் புன்னகை.
மங்கை ஆசைப் பட்டதைப் போலவே மருதமலை அடிவாரத்தில் அவர்களது பென்ஸ் நிற்க, இறங்கியவள் அர்ச்சனை தட்டும் சம்மங்கி மாலையும் வாங்கிக் கொண்டாள்.
” அடிக்கடி உங்க அத்தைக் கூட இங்க வர பழக்கம் இருக்கோ, பூஜை விரதம் இந்த மாதிரி எதுவும் பழகி வச்சிருக்கியா…”
“ம்ம்ம் அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அத்தைக்கூட வர்ரத விட, தாத்தாக் கூடத்தான் அதிகம் வந்திருக்கேன். எனக்குத் தோனும் போது வருவேன். எவ்வளவு நேரம் கும்பிட்டாலும் தாத்தா வெயிட் பண்ணுவார். அத்தை விரட்டிட்டே இருப்பாங்க, அதனால் அவங்க கூட அதிகம் வெளியே வரமாட்டேன். தாத்தாவும் எனக்காக நான் கேட்காமலே கூப்பிட்டு வருவார். இன்னைக்கு உங்ககூட வரனும்ன்னு தோனுச்சு.”
“ம்ம்ம் உன் புகழ் மாமாவும் உன் கூட வர மாட்டானா…”
“ச்சை அந்த ஜென்மம் நான் கோவிலுக்குன்னு சொன்னாலே, ஊரை விட்டு ஒடிப்போயிடும். அது சரியான அராத்து..” என்றப்படியேக் கூடையையும் மாலையையும் ஐயரிடம் கொடுத்து நிற்க,
அர்ச்சகர் அடையாளம் கண்டு, நலம் விசாரித்து, அர்ச்சனை செய்து தர, அடுத்து வெளியே வந்தவர்கள், பத்ரகாளியம்மன் கோவிலை நோக்கி பயணித்தனர்.
” வனி கோவில்ல அப்படி என்ன விழுந்து விழுந்து வணங்கின, நீ சாமி கும்பிட்ட நேர்த்தியைப் பார்த்து கண்டிப்பா சாமியாரினி ஆகிடுவியோன்னு எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு..” என்றதும்,
“அடடே நக்கல் நய்யாண்டி எனக்கு சிரிப்பே வரல..” என்றவள், “அதென்ன வனி..” என ஒற்றை புருவம் ஏறி இறங்கக் கேட்க,
” ம்ம்ம்ம்.. நீயே கண்டுபிடியேன் பார்ப்போம்.. ” என அவனும் பதிலுக்கு புருவம் உயர்த்த,
” அதெல்லாம் வேண்டாம். நீங்களே சொல்லுங்க.. எனக்கு உங்க வாயாலக் கேட்கனும்.. ” என்றதும்.
[the_ad id=”6605″]
” ம்ம்ம்… உன்னோட முழு பெயர் என்ன.. வனமங்கை தானே.. மங்கை எல்லாருமே கூப்பிடறாங்க, மகின்னு உன் புகழ் மாமா கூப்பிடுறான். அப்போ இந்த புருஸ் மாமா என்னன்னு கூப்பிட, அதான் வனத்தை சுருக்கி வனின்னு கூப்பிடறேன்.. எப்படி.. ” எனக் காலரைத் தூக்கியவனிடம்,
“ஆஹான்.. பெரிய லவ் ஸ்டோரி இருக்கும் போலவே, இந்த அனகோன்டாக்கிட்ட,” என
அவனைக் கலாய்த்தவள்,
” நமக்கு கல்யாணம் ஆனதும் உங்களோட முதன்முதலா இங்கே வர்ரேன்னு வேண்டியிருந்தேன். அது நடத்திடுச்சில்ல அதனால கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருந்தேன்.” என்றவளின் மெட்டிச்சத்தமும், காலின் கொலுசுச்சத்தமும் தாளமிட, தோள்களில் வழிந்த மல்லிகையும் கைகளில் இருந்தக் கல்யாண வளையல்களுமாய் பக்கத்தில் அமர்ந்திருந்தவளையே அவன் பார்வை வட்டமிட்டது.
” ஹலோ சார்… என்னதிது கோவிலுக்கு போகும் போது முழுங்குற மாதிரி பார்த்துட்டு இருக்கிங்க.. என்ன இருந்தாலும் எல்லாமே வீட்டுக்கு போய் தான் என மிரட்டலாய் ஆரம்பித்து மெல்லியதாய் முணுமுணுக்க, அதற்கும் வெற்றியிடம் விரிந்த புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.
மேட்டுப்பாளையத்தை நோக்கி பறந்த காரில் அமைதி மட்டுமே. புகழைப் பற்றிய யோசனையில் வெற்றி வர மங்கைக்கோ வேறு ஒர் யோசனை. வெற்றி இதுவரை வனிதாவை அம்மா என்றொ தன் தாத்தாவை தாத்தா என்றோ அழைக்கவில்லை. வனிதாவை உங்கத்தை என்பவன், தாத்தாவை அவர் என்று கூறுவதோடு நிறுத்தியிருந்தார். வெற்றியின் மனம் எந்தளவில் காயம் பட்டிருந்தால் உறவு முறை சொல்லி அழைப்பதையே நிறுத்தியிருப்பான்.
தாத்தாவும் ஒரு தந்தையாக தன் மகளுக்கு புத்தி சொல்லிருக்கலாம். அத்தையின் பேச்சைக்கேட்டு எல்லாம் செய்து விட்டு, இப்போது வருத்தப்படுவது என்னுடைய கணவன்.
இனி யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்லட்டும் பிறகு இருக்கிறது. அவர்களை உண்டு இல்லை என்றாக்கிவிடும் கோபம் அவளுக்கு.
வெற்றிக்கோ உடன்பிறந்தவனின் தற்போதைய சூழல் என்னவாக இருக்கும். அவனது நம்பரும், வெற்றிக்காக வைக்கப்பட்டிருந்த தனிப்பட்ட நம்பரும் என இரண்டுமே ஆப் ஆகியிருக்க, வெற்றிக்குள் பதட்டம் ஏறியிருந்தது.
தானாக ஆப் செய்து விளையாடுபவன் இல்லை. என்ன இருந்தாலும் நேரடியாக செய்பவன். இப்படி எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறான் என்றால் ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டனோ என்ற பயம். இப்படி இருவரும் வெவ்வேறு எண்ணங்கள் சூழ மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
இவர்கள் இருவரையும் பார்த்த ஐயர் வாசல் வரைக்கும் வந்தே அழைத்து போனது ராமசாமியின் உபயம் என்றுத் தெரிந்தது.
[the_ad id=”6605″]
அம்மன் தரிசனம் முடிந்து இருவரும் பிரகாரத்தில் அமர மங்கை மட்டும் ஏதோ வாய்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
‘இங்கேயும் என்ன வேண்டுதல் வச்சாளோத் தெரியல இப்படி புலம்பிட்டு இருக்கா’ என நினைத்தாலும் மனைவியை நினைத்துப் பெருமையாகத்தான் இருந்தது.
“போகலாம் வனி எனக்கு ஒரு முக்கியமான கால் வரும்,” என்றவனிடம் சரியென்று விட, இருவரும் விரைவாகவே வீடு வந்திருந்தனர்.
மங்கையைத் தாத்தா பிடித்துக்கொள்ள, வெற்றிக்கு சில வேலைகள் இருக்க, அதையெல்லாம் போனில் பேசி செய்ய வைத்துக்கொண்டு இருந்தான். அதோடு புகழைப்பற்றியும் சொல்ல வேண்டும் யாரிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தவனை மனைவியின் கொலுசொலி நினைவுக்கு கொண்டு வந்தது..
தொடரும்….