அத்தியாயம் 9
“அப்பவும் இதெல்லாம் சும்மா”, என்று அவள் சொல்லுவாள் என்று அவன் மனம் எதிர் பார்க்க அவள் சரி என்று சொன்னது அடுத்த ஏமாற்றத்தை தந்து கோபத்தை அதிக படுத்தியது.
அதை உணர்ந்தவள் “இங்கே இருந்தா இன்னொரு அடி வாங்கணும்”, என்று நினைத்து கொண்டு வேறு உடை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து வந்த பின்னரும் அதே பொசிசனில் அமர்ந்திருந்தான் பார்த்திபன்.
“சொல்ல வரதை கேக்கணும். மூஞ்ச பாரு மங்கி. இப்படியே இரு. எத்தனை நாளைக்கு இருக்கன்னு பாப்போம்”, என்று நினைத்து கொண்டு வெளியே போனாள்.
அவள் கன்னம் சிவந்திருப்பதை பார்த்த நந்தினி “என்ன மித்து கன்னத்துல?”, என்று கேட்டாள்.
“அது தலையணைல என்னைக்கோ மாட்டிருந்த பின் அழுத்திருச்சு மா”, என்று சமாளித்தாள் மித்ரா.
ஆனால் உண்மை அறிந்த வள்ளி பாட்டி “வசமா கொடுத்துருக்கான் போல? எத்தனை விழுந்தது?”, என்று கேட்டு நக்கல் அடித்தாள்.
“ரெண்டு”, என்று பாவமாக சைகை காட்டினாள் மித்ரா.
“பரவால்ல என்னை விட அதிகமா தான் கொடுத்துருக்கான். ஆனா நான் இன்னும் நிறைய எதிர் பாத்தேன் மித்ரா”
“போ கிழவி. உன்னை விட அடி ஜாஸ்தி. பயங்கர வலி தெரியுமா?”
“இந்த செண்பக வள்ளி வம்சம்ன்னா சும்மா வா? இது நீயா வாங்கி கட்டி கிட்டது. இப்படி எல்லாம் வில்லங்கம் பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் உன் கன்னத்தை அடிச்சு வலிக்க வைக்காமல், முத்தம் கொடுத்து வலிக்க வச்சிருப்பான் என் பேரன்”
“நீ தான் உன் பேரனை மெச்சிக்கணும். போ கிழவி”
“ஆமா மித்ரா, நீ எதுக்கு இந்த பொய்யை சொன்ன?”
“அது ஒரு மொக்க தனமான காரணம் பாட்டி. ஆனா அது இவ்வளவு பெரிய ஆப்பா எனக்கே திரும்பும்னு நினைக்கவே இல்லை”
“என்ன காரணம்? அவனை உனக்கு பிடிச்சிருக்கு தான மித்ரா?”
“அதெல்லாம் பிடிக்கும். அதனால தான் உன் பேரனோட காதலை நல்ல அனுபவிச்சிட்டு வாழ்க்கையை தொடங்கணும்னு நினைச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே காதல் மேல ரொம்ப ஆசை பாட்டி. லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தேன். ஆனா அம்மா, அப்பா காதல் கதையை கேட்ட பிறகு, அவங்க கல்யாணத்தை முதலில் முடிக்கணும்னு நினைச்சேனா, அது என்னோட கல்யாணத்துல தான செய்ய முடியும்? அப்ப எனக்கு எங்க லவ் பண்ண டைம் இருக்கு? அதான் கல்யாணம் செஞ்சிகிட்டு கடமைக்கு மட்டும் வாழாம காதலோடு வாழணும்னு நினைச்சேன்”
….
“அத்தை கிட்ட அத்தான் பிறந்த நாள் என்னைக்குனு கேட்டேனா. அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்குனு சொல்லுச்சு. சரி அது வரைக்கும் காதலிப்போம்னு நினைச்சு விளையாட்டுக்கு இந்த பொய் சொன்னேன். முதலில் நான் வேற பையனை விரும்புறேன்னு தான் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா என்னால விளையாட்டுக்கு கூட பார்த்தியை தவிர வேற பையனை விரும்புறேன்னு சொல்ல முடில பாட்டி. அதான் இப்படி சொன்னேன். பெரிய தப்பு பண்ணிட்டேன்னு கஷ்டமா இருக்கு பாட்டி”
“அவன் என்ன தான் சொன்னான்?”
“என்னை பேசவே விடல பாட்டி. பேசிருந்தா காரணத்தை சொல்லிருப்பேன். இருந்தாலும் ரொம்ப குசும்பு தான் அவனுக்கு. அப்படியே கிழவியோட திமிரு பேரனுக்கும் இருக்கு”
“இங்க பாரு மித்ரா. இந்த உலகத்தில் எல்லாத்தை விட எதிர்பார்ப்பு தான் பயங்கரமான நோய். அந்த எதிர்பார்ப்பில் தான் எல்லா பிரச்சனையும் வருது. அவனோட எதிர்பார்ப்புகள் பொய்யா போனதுனால தான் அவனுக்கு கோபம். கொஞ்சம் பொறுமையா இரு. அவன் மனசு மாறிரும்”
“நடக்குமா பாட்டி?”
“நீ அவன் பிறந்த நாள் வரைக்கும் காதலிக்க மட்டும் தான செய்யணும்னு நினைச்ச? அதையே செய்யேன். அது வரைக்கும் பொறுமையா இரு. அவன் கோபம் கொஞ்சம் குறையும். அப்புறம் அவன் கிட்ட பேசு. எல்லாம் சரியா போகும் டா”
“ஹ்ம்ம் சரி பாட்டி”
“சரி சரி அவன் வாரான் பாரு. முகத்தை கொஞ்சம் சோகமா வச்சிக்கோ. அப்ப தான் அடிச்சிட்டோம்னு வருத்த படுவான்”
“போ பாட்டி நான் வருத்தப்பட்டா அத்தானுக்கும் வருத்தமா இருக்கும். நான் அப்படி செய்ய மாட்டேன்”
“உனக்கு போய் புத்தி சொல்ல வந்தேன் பாரு. நான் தான் சுவர்ல முட்டனும்”, என்று சொல்லி எழுந்து போனாள் பாட்டி.
அங்கு அமர்ந்திருந்த அவளை கண்டு கொள்ளாமல், டிவி யை போட்டு அதன் எதிரில் அமர்ந்தான் பார்த்திபன்.
“பாத்துட்டு பாக்காத மாதிரியா இருக்க?”, என்று நினைத்து கொண்டு வேன்டும் என்றே அவன் அருகில் இடித்தது போல அமர்ந்தாள் மித்ரா.
அவளை திட்ட வாயை திறக்கும் போது, அவன் எதிரே அமர்ந்தார் மகேந்திரன். அப்படியே கப் சிப் என்று வாயை மூடி கொண்டு அவளை முறைத்தான்.
“மாமா இங்க வாறாங்கன்னு பாத்துட்டு தான் இங்க வந்து உக்காந்தேன்”, என்று சொல்லி கண்ணடித்தாள் மித்ரா.
“தள்ளி உக்காரு டி”, என்று பல்லை கடித்தான்.
“ஏன் இப்படி உக்காந்தா உங்களுக்கு என்ன?”
“என்னவா? இருக்குற கோபத்தை தக்க வச்சிக்கணுமே”, என்று நினைத்து கொண்டு “உன்னை பாத்தாலே எரிச்சலா வருது”, என்று சொன்னான்.
“அப்ப எரிச்சலை தனிக்கணுமே?. அன்னைக்கு மாதிரி ஒரு முத்தம் கொடுக்கட்டா?”
“என்னது?”
“எதுக்கு பார்த்தி இவ்வளவு அதிர்ச்சி? அன்னைக்கு எல்லாம் ஆசையா கேட்டீங்க? இன்னைக்கு இப்படி முழிக்கிறீங்க?”
“அது.. அது… உன்னால ஏமாந்து இருக்கும் போது நடந்தது. இப்ப அப்படியா?”
“ஏமாத்துனேன் ஏமாத்துனேன்னு சொல்றீங்க? உங்களுக்கு கண்டு பிடிக்க தெரியலைன்னா நான் என்ன செய்ய சொல்லுங்க. என்னை பாத்தா அப்படியா இருக்கு. பொண்ணு எப்படி இருக்கணுமா அப்படி இருக்கிறேன். நீங்க கண்டு பிடிச்சிருக்க வேண்டி தான?”
“ஆமா டி. நான் பொண்ணுங்களை பத்தின ஆராச்சி தான் நடத்திட்டு இருக்கேன் பாரு? ஆனாலும் நினைச்சேன். இவ்வளவு பெருசா….”, என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போது அவன் வாயை மூடினாள் மித்ரா.
தற்செயலாக திரும்பி பார்த்த மகேந்திரன் “என்ன மா எதுக்கு அவன் வாயை பொத்திருக்க?”, என்று கேட்டார்.
“இல்லை மாமா. அது வந்து…”
“என்ன இழுக்குற? எங்க அப்பா கேக்குறார்ல சொல்லு…”, என்று சிரித்தான் பார்த்திபன்.
அவன் சிரிப்பதை பார்த்தவள் “உங்களை தான் மாமா, அத்தான் திட்டிட்டு இருந்தார். உங்களுக்கு கேக்க கூடாதுன்னு தான் நான் வாயை பொத்தினேன்”, என்று பாவமாக சொன்னாள்.
அதிர்ச்சியாக அவரை பார்த்தான் பார்த்திபன்.
அவர் அங்கே அய்யனார் போல முறைத்து கொண்டிருந்தார்.
“இவர் இப்ப தான் கொஞ்ச நாளா என்னை பாசமா பாச பார்வை பாத்துட்டு இருந்தாரு. நானும் பாச பறவையை பறக்க விட நினைச்சிட்டு இருந்தேன். இப்ப போய் மாட்டி விட்டுட்டாளே. ஏற்கனவே குடும்பமே இவளை தலைல தூக்கி வச்சி ஆடுது. நான் சொன்னா நம்புவாரா?”, என்று நினைத்து கொண்டு அவரை பாவமாக பார்த்தான்.
“என்ன மா திட்டுனான்? எதுக்கு பார்த்தி என்னை திட்டின?”, என்று கர்ச்சனையாய் கேட்டார் மகேந்திரன்.
“ஒரு முத்தம் கொடுக்குறேன்னு சொல்லுங்க அத்தான். மாமா கிட்ட இருந்து நான் உங்களை காப்பாத்துறேன்”, என்று அவன் காதை கடித்தாள் மித்ரா.
“போடி”, என்று சொல்லி அவளை முறைத்தான்.
“அப்ப சரி எனக்கென்ன?”, என்று அவனிடம் சொல்லி விட்டு “உங்களுக்கு மூளையே இல்லையாம் மாமா. கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையாம். அப்படின்னு அத்தான் சொன்னாங்க மாமா”, என்று போட்டு கொடுத்தாள்.
“ஐயோ, அப்படி எல்லாம் நான் சொல்லலை பா. அவ பொய் சொல்றா”, என்று அலறினான் பார்த்திபன்.
“படிச்ச பிள்ளைங்க பொய் சொல்லாது. நீ சொல்லு மா. எதுக்கு அப்படி சொன்னான்?”, என்று அவளிடம் கேட்டார் அவர்.
“இவர் படிப்பு ஆசைல இடி விழ”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான்.
“அதுவா நீங்க இவரை படிக்க வைக்கலையாம். இவர் படிப்புல புலியாம், சிங்கமாம். நீங்க தான் அவரை படிக்க விடாம கெடுத்துட்டீங்களாம். அதுக்கு தான் திட்டினார் மாமா”, என்று அவள் சொல்லி முடித்தவுடன் “ஐயையோ நான் இந்த விளையாட்டுக்கு வரலை”, என்று சொல்லி விட்டு அவள் அறைக்குள் ஓடியே போனான் பார்த்திபன்.
“ஏய் வாலு, எதுக்கு அவனை வச்சி வம்பு பண்ணிட்டு இருக்க?”, என்று கேட்டு கொண்டே அவள் காதை திருகினாள் பார்வதி.
“கண்டு பிடிச்சிடீங்களா அத்தை. நான் ரெண்டு பேரையும் வச்சி விளையாடிட்டு இருந்தேன்”
“நீ விளையாட நானும், என் பையனும் தான் உனக்கு கிடைச்சோமா மித்ரா?”, என்று கேட்டார் மகேந்திரன்.
“நேரம் போகணும்ல அதான்”, என்று சிரித்தாள் மித்ரா.
அன்று இரவு உள்ளே அறையில் இருக்கும் போது “ஊட்டி, கொடைக்கானல் போற பிளானை நிறுத்திரு மித்ரா”, என்று சொன்னான் பார்த்திபன்.
“ஏன்? எதுக்கு நிறுத்தனும்? லூசா பார்த்தி நீங்க?”, என்று கேட்டாள் மித்ரா.
“நான் லூசுணு நினைச்சு தான எல்லா பிளானும் செய்ற? எனக்கு அங்க போக பிடிக்கலை. அதனால வேண்டாம்”
“அது எப்படி, நான் அப்படி சொல்லி தான எல்லாரையும் கூட்டிட்டு வந்தேன். இப்ப எப்படி நிறுத்த?”
“ஆமா எல்லாரும் சின்ன பிள்ளைங்க பாரு? நினைச்சு ஏமாந்து போறதுக்கு?”
“சின்ன பிள்ளைங்களோ, பெரிய பிள்ளைங்களோ எல்லாருக்கும் ஆசை இருக்கும் பார்த்தி. பிளீஸ் போகலாமே”
“இல்லை முடியாது. நான் போக வேண்டாம்ணு சொல்ல போறேன்”
அவன் அருகில் சென்ற மித்ரா, அவனுக்கு நெருக்கமாக போய் நின்றாள்.
நகர பார்த்தவனின் கைகளை பற்றியவள் “எனக்காக அத்தான் பிளீஸ். நான் குடும்பமா சந்தோசமா இருந்ததே இல்லை. டூர் போறது சின்ன பிள்ளைங்களுக்கு தான் ஆவலா இருக்கும்னு சொல்லுவாங்க. நான் இப்படி ஆவலா ஏற்பாடு செஞ்சிருக்கேன்னா அதுக்கு இது தான் காரணம். விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து அப்பா மட்டும் தான் கூட இருந்தாங்க அத்தான். இப்ப தான் அத்தை, மாமா, அம்மா, பாட்டி நீங்கன்னு குடும்பமா இருக்கோம். இந்த சந்தோசம் எனக்கு பிடிச்சிருக்கு பார்த்தி. ப்ளீஸ் போகலாமே”, என்று கேட்டாள்.
இவ்வளவு கொஞ்சலுடன் அவள் கெஞ்சிய பின் அதை மறுக்க அவனால் எப்படி முடியும்?
“பேசியே மயக்குறா”, என்று நினைத்து கொண்டு “சரி சரி நீ ரொம்ப கெஞ்சிற. அதனால பொழைச்சு போன்னு விடுறேன்”, என்று கெத்தாய் பதில் சொன்னவனை விழி விரித்து பார்த்தவள் “சீனா போடுற?”, என்று நினைத்து கொண்டு எம்பி அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் செயல் இழந்து நின்றான் பார்த்திபன்.
அவனை விட்டு விலகி வெட்கத்துடன் சிரித்து கொண்டிருந்தவளை பார்த்தவுடன் தன்னுணர்வுக்கு வந்தவன் “இப்படி என்னோட உணர்வுகளோட விளையாடாத மித்ரா ப்ளீஸ். நீ தான் என்னை விரும்பலை. ஆனா நான் உன்னை விரும்புறேன். நீ இப்படி எல்லாம் செஞ்சா என்னால அதை மறக்க முடியாம ரொம்ப கஷ்ட படுவேன்”, என்றான்.
“போயா பேக்கு”, என்று திட்டி விட்டு சென்றாள் மித்ரா.
அடுத்து இரண்டு நாளில் அங்கு இருக்கும் பீச், வண்டலூர், மஹாபலிபுரம் சுற்றி பார்த்து விட்டு ஊட்டி, கொடைக்கானல் சென்றார்கள்.
குடும்பத்துக்கே சந்தோசமாக இருந்தது.
பார்த்திபன், மித்ரா, நந்தினி, மோகன் எல்லாரும் சுற்றி பார்க்க போக பார்வதி, மகேந்திரன், வள்ளி பாட்டி மூவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.
“மகேந்திரா, நந்தினி வாழ்க்கையில இப்படி ஒரு சந்தோசம் திரும்பி வரும்னு நான் நினைக்கவே இல்லை பா. எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இதெல்லாம் கனவு இல்லை தான?”, என்று கேட்டாள் வள்ளி பாட்டி.
“கனவு எல்லாம் இல்லை மா. இது உண்மையான சந்தோசம் தான். இத்தனை நாள் நமக்காக பேருக்கு சிரிச்சு, பேருக்கு சாப்பிட்டு வாழ்ந்துட்டு இருந்தா. ஆசையா ஒரே பொண்ணு இப்படி கல்யாணம் பண்ணிக்காம இருந்துட்டான்னு நினைச்சு அழுகையா வரும். பேசாம அவ இனி எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னப்பவே கட்டாய படுத்தி, கல்யாணம் செஞ்சி வச்சிருந்துருக்குமோன்னு கூட யோசிச்சிருக்கேன் மா”
“நாம அப்படி கட்டாய படுத்தி பண்ணி வச்சிருந்தா, அவ இப்படி சந்தோசமா இருந்துருக்க மாட்டா. அவளே சொன்ன மாதிரி உயிரையே விட்டுருப்பா. அம்மாடி பார்வதி”
“அத்தை?”
“நீ இந்த வீட்டுக்கு வந்த மகாலட்சுமி மா. அப்படி தான் கேக்குறவங்க எல்லார் கிட்டயும் சொல்லுவேன். நீ இருக்க போய் தான் இது குடும்பமா இருந்தது. இல்லைனா நானும், மகேந்திரனும் மனசளவில் நொறுங்கி போயிருப்போம். நந்தினிக்கு நல்ல தோழியா இருந்து அவளை பாத்து கிட்ட. அடுத்த ஜென்மத்தில் நீ என் வயித்தில் எனக்கு மகளா பிறக்கணும் கண்ணு”
“எதுக்கு அத்தை உங்களுக்கு இந்த கொலைவெறி?”
“என்ன மா?”
“பின்ன, உங்க பிள்ளை அடுத்த ஜென்மத்திலயும் உங்களுக்கு தான் மகனா பிறப்பார். நானும் உங்களுக்கு மகளா பிறந்தா அவருக்கு நான் எப்படி பொண்டாட்டியா ஆகுறது?”, என்று சிரித்தாள் பார்வதி.