“அடுத்த ஜென்மத்திலாவது அழகான பொண்ணா, அருமையான பொண்ணா, தேவதை மாதிரி இருக்குற பொண்ணா எனக்கு எங்க அம்மா கட்டி வைப்பாங்கன்னு கனவு கண்டுட்டு இருக்கேன். அதுல போய் இப்படி மண்ணை அள்ளி போடலாமா பாரு?”, என்று சிரித்து கொண்டே கேட்டார் மகேந்திரன்.
“அத்தை தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க”, என்று சொன்னாள் பார்வதி.
“எதுக்கு மா?”
“இப்ப உங்க பிள்ளையை அடிக்க போறேன். இப்ப நடக்குறதை வச்சு நான் அவரை அடிச்சு கொடுமை படுத்துறேன்னு நீங்க தப்பா நினைக்க கூடாதுல்ல அதான்”, என்று சொல்லி கொண்டே மகேந்திரனின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.
“இருந்தாலும் நீ இப்படி செய்ய கூடாது பார்வதி”, என்று சொன்னாள் வள்ளி பாட்டி.
“அப்படி சொல்லுங்க மா. எப்படி கொட்டுறா பாருங்க. நீங்க அவளை நாலு வார்த்தை நறுக்குன்னு கேளுங்க”, என்றார் மகேந்திரன்.
“கேக்க தான் போறேன் மகேந்திரா. பார்வதி நீ அடிக்க போறேன்னு சொன்ன உடனே இங்க ஒரு ரத்த ஆறே ஓடும்னு நினைச்சேன். ஆனா நீ ஒரு அடியோடு விட்டுட்டியே”, என்று சிரித்தாள் பாட்டி.
“ஓடும் மா ஓடும். அம்மாவா நீ? இப்படியா உன் மருமகளுக்கு சொல்லி கொடுக்குறது?”
“பின்ன நீ மட்டும் அப்படி சொல்லலாமா? இவளை பொண்ணு பாத்துட்டு வந்த அன்னைக்கு, சாப்பிட, தூங்க மறந்து கனவு கண்டுட்டு இருந்தது எல்லாம் மறந்து போச்சா டா?”
“சரி சரி விடுங்க. கட்டு சொத்தை சபைல அவுக்க கூடாது. அங்க பாருங்க அடுத்த தேவதை வருது”, என்று கை காட்டினார். அங்கே மித்ரா வந்து கொண்டிருந்தாள்.
“என்ன மா மித்ரா? அதுக்குள்ளே வந்துட்ட?”, என்று கேட்டாள் பார்வதி.
“அதுவா அத்தை. எனக்கு பசியா இருந்துச்சா? அதான் வந்துட்டேன். உங்க பிள்ளைக்கு பசிக்கலையாம். தனியா சுத்த போய்ட்டாரு”
மெதுவாக அவள் காதருகே குனிந்த பாட்டி “உண்மையை சொல்லு. அவன் கிட்ட வம்பு பண்ணிட்டு தான ஓடி வந்துருக்க?”, என்று கேட்டார்.
“எப்படி பாட்டி கண்டு பிடிச்ச?”
“உன்னை பத்தி தெரியாதா? சரி என்ன சண்டை ரெண்டு பேருக்கும்?”
“அஸ்க்கு புஸ்க்கு. இது எனக்கும், என் புருஷனுக்கும் இடைல இருக்குற ரகசியம். உன்கிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன். எதுக்கு தான் இப்படி அடுத்த வீட்டு ரகசியம் கேக்க அலையுறியோ?”
“அடி கழுதை. நான் அலையுறேனா? ஆமா அப்படியே ரெண்டு பேரும் பாசத்துல உருகி கரையுறீங்க. அந்த ரகசியத்தை நான் கேக்க வந்துட்டேன். நான் என் புருஷன் கூட பேசாத ரகசியமா?”
“பாரு டா. அப்ப தாத்தா கூட லவ்சோ லவ்ஸ் தான் என்ன? எப்படி பாட்டி முதல் தடவை தாத்தா கிட்ட உன் காதலை சொன்ன?”
“நான் எங்க சொன்னேன்?”
“அப்ப அவர் சொன்னாரா?”
“இல்லையே”
“அப்ப என்ன தான் ஆச்சு?”
“நாங்க நல்லா பேசிக்கிட்டதே நந்தினி பொறந்ததுக்கு அப்புறம் தான்”
“அட பாவிகளா. பேசாமலே ரெண்டு பிள்ளைங்களா? சரி சரி வெக்க படாத. அதை பாத்து மயங்க உன்னோட ஆள் இங்க இல்லை. மேல் உலகத்துல வேற பாட்டி கூட டூயட் பாடிகிட்டு இருப்பார்”
“அவர் பாடுறது இருக்கட்டும். உன் புருஷன் இப்பவே வேற யார் கூடவும் பாட ஆரம்பிச்சிராம கவனமா இருந்துக்கோ”
“போ பாட்டி. இப்ப அதுக்கு தான் சண்டையே வந்துச்சு”
“ஏன் என்ன ஆச்சு?”
“ரெண்டு பேரும் நடந்து போனோம் பாட்டி. எங்களுக்கு நேரா ஒரு ஜோடி வந்தாங்க. அதுவும் நெருக்கமா. அவன் அவள் தோளில் கை போட்ருந்தான். அவ அவனோட இடுப்பில் கை போட்டிருந்தா”
“என்ன நீயும், அவன் கிட்ட நாம இந்த மாதிரி நடப்போமான்னு கேட்டுட்டியா?”
“எப்படி பாட்டி கண்டு பிடிச்ச?”
“இது தெரிஞ்சிக்க ஜோசியமா பாக்கணும். சரி நீ நினைச்சது நடந்துச்சா? இல்லையா?”
“எங்க? அந்த பொண்ணு கல்யாண வயசில் இருக்கா. அதனால அவளை காதலிக்கிறவன் கூட அப்படி நடந்து வாரா. ஆனா நீ தான் வயசுக்கே வராத பாப்பாவாச்சே. உன் கூட அப்படி நடந்து வந்தா எல்லாரும் என்னை பாத்து சிரிச்சிருவாங்கன்னு பல்ப் கொடுத்துட்டார்”
“ஹா ஹா நீ விட்ட அம்பு உனக்கே திரும்புது போல? அதான் நீ கோப பட்டு வந்துட்டியா?”
“இதுக்கெல்லாம் கோப படலாமா பாட்டி. அத்தான் அப்படி சொன்ன உடனே என்ன தெரியுமா செஞ்சேன். நடந்து போன அவங்க ரெண்டு பரையும் கூப்பிட்டு, இவர் இந்த பொண்ணை அழகா இருக்கான்னு சொன்னாருன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன். அங்க என்ன பஞ்சாயத்து நடக்குதோ?”
“அட பாவி. பாவம் பார்த்தி”
“உன் பேரனுக்கு பாவம் பாக்காத கிழவி. உலகத்தையே வித்துருவான். அங்க வாரான் பாரு. முழுசா தான் வாரான். சேதாரம் ஒன்னும் ஆகலை”
“அடியே புருஷனை அவன் இவன்னு சொல்ற? கொழுப்பா உனக்கு?”, என்று பாட்டி கேட்கும் போதே மித்ரா அருகில் வந்து அமர்ந்த பார்த்திபன் அவளை கொலை வெறியோடு முறைத்தான்.
“என் புருஷனை நான் எப்படி வேணும்னாலும் கொஞ்சுவேன். அப்படி தான அத்தான்?”, என்று அவன் தோள்களில் சாய்ந்தாள்.
“ஒழுங்கா தள்ளி உக்காரு டி”, என்று அடி குரலில் சீறினான் பார்த்திபன்.
“இன்னும் தள்ளி உக்காந்தா உங்க மடில உக்காரனும். பாரு பாட்டி அத்தானை. இவ்வளவு பேர் முன்னாடி அவர் மடில உக்கார சொல்றாரு”. என்று சிரித்தாள்.
வந்த கோபத்தில் கையை அவளை அணைப்பது போல கொண்டு வந்த பார்த்திபன் அவள் இடுப்பில் கிள்ளி விட்டான்.
“ஆ”, என்று அலறி விட்டாள் மித்ரா.
“என்ன மா என்ன ஆச்சு?”, என்று கேட்டாள் பார்வதி.
“இந்த கம்பு குத்திருச்சு அத்தை”, என்று சமாளித்து விட்டு அவனை பார்த்தவள் திகைத்தாள். அவன் பேய் அறைந்தது போல அமர்ந்திருந்தான்.
“என்ன இப்படி இருக்கான்?”, என்று யோசித்தவளுக்கு மின்னல் வெட்டியது. இடுப்பில் விழ வேண்டிய கிள்ளல் சற்று மேலே இடம் பெயர்ந்த உண்மை விளங்கியது.
கை தொட்ட இடத்தின் மென்மையை உணர்ந்தவனுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. “சே வலிச்சிருக்குமோ?”, என்று பயந்தே போனான்.
அதிர்ச்சியாக அவளை பார்த்து கொண்டிருந்தவனிடம் “ஏன் அத்தான் இப்படியா எல்லாரும் இருக்கும் போது கிள்ளி வைப்பீங்க?”, என்று கேட்டு அவனை பார்த்து கண்ணடித்தாள்.
“அப்ப தனியா இருக்கும் போது கிள்ளலாமா?”, என்று யோசித்தவனுக்கு தன் மூளை தனக்கு எதிராக செயல் படுவதை உணர்ந்து “கேவலமா யோசிக்காத டா பார்த்தி”, என்று தனக்குள் சொல்லி விட்டு அவளிடம் இருந்து முகத்தை திருப்பி கொண்டான்.
“சீக்கிரம் உன்னை சரி பண்ணிருவேன்”, என்று தனக்குள் சொல்லி கொண்டு மற்றவர்களிடம் கதை பேச ஆரம்பித்தாள்.
அடுத்து டூர் முடிந்து வீட்டுக்கு வந்து தேவையான பொருள் மட்டும் எடுத்து கொண்டு கீதாவிடம் சொல்லி விட்டு ஊருக்கு சென்றார்கள்.
ஊருக்கு வந்த அடுத்த நாளே சாப்பிடும் போது “அத்தான் நாளைக்கு உங்களுக்கு என்ன வேலை இருக்கு?”, என்று கேட்டாள்.
“அதை உனக்கு எதுக்கு சொல்லணும்?”, என்று கேட்க வந்தவன் மற்றவர்கள் இருப்பதால் “ஒரு வேலையும் இல்லை”, என்று முணுமுணுத்தான்.
“உங்க கூட இருக்க வெட்டி கூட்டமும் வெட்டியா தான இருக்கும்?”
பல்லை கடித்தவன் “ம்ம்”, என்று சொன்னான்.
“நீங்க என்ன செய்றீங்கன்னா, நாளைக்கு அந்த வீணா போன கூட்டத்தை கூட்டிட்டு போய் கடை வைக்க லைஸன்ஸ்க்கு அப்பளை பண்ணிட்டு, அப்புறம் கலெக்டர் ஆபிஸ்க்கு போய் நம்ம ஊருக்கு பஸ் ரோடு போடணும்னு மனு கொடுக்கணும். ஓகே வா?”
“நல்ல ஐடியா”, என்று பாராட்ட தோன்றிய மனதை அடக்கியவன் “ம்ம்”, என்று சொன்னான்.
“என்ன மித்ரா திடிர்னு ரோடு எல்லாம்?”, என்று கேட்டார் மகேந்திரன்.
“இல்லை மாமா. இங்கயும் நிறைய மக்கள் இருக்காங்க. பஸ் இல்லைன்னா கூட நம்ம கிட்ட இருக்குற வண்டி போகணும்னா கூட ரோடு சரி இல்லை. நீங்களும், அப்பாவும் வேற கடைக்கு போகணும். வண்டில போறது கஷ்டம். ஒரு கார் வாங்கலாம்னு நினைச்சேன். அப்ப தான் ரோடே சரி இல்லைனு தோணுச்சு. அதான்”
“அது உடனே நடந்துருமா மித்ரா? நாள் ஆக்குவாங்களே. நிறைய தடவை இழுத்தடிப்பாங்களே”, என்று கேட்டாள் நந்தினி.
“அதுக்கு தான் மா நான் உங்க மருமகன் கிட்ட பொறுப்பை கொடுத்திருக்கேன். வெட்டியா ஊரு சுத்திட்டு தான இருக்கானுங்க. எல்லாரும் சேந்து இதையாவது கிழிக்கிறாங்களான்னு பாப்போம்”, என்று சொல்லி அவனை உசுப்பேத்தி விட்டாள்.
அதில் வீரத்துடன் எழுந்தவன் “ரோட்டோட வரேன்”, என்று சொல்லி எழுந்தான்.
“டேய் பார்த்தி கையை கழுவிட்டு ரோடு வாங்க போ டா”, என்று சொல்லி சிரித்தாள் வள்ளி பாட்டி.
“ரோடு வந்த பிறகு, உன்னை தான் அதுல விட்டு உருட்ட போறேன் கிழவி”, என்று சொல்லி விட்டு மித்ராவை முறைத்து விட்டு சென்றான் பார்த்திபன்.
அடுத்து பார்த்திபன் தன் நண்பர்களை அழைத்து கொண்டு மனு கொடுக்க சென்றான்.
அங்கே ஒழுங்காக ரெஸ்பாண்ட் பண்ணாததால், என்ன செய்ய என்று விழித்து கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த பெரியவர் “இப்படி தான் தம்பி பண்ணுவாங்க. நம்மள மதிக்கவே மாட்டானுங்க. இப்படி செஞ்சா எல்லாம் வேலைக்கு ஆகாது. நான் சொல்ற படி செய்ங்க. உங்க ஊருல இருக்குறவங்க எல்லார் கிட்டயும் கை எழுத்து வாங்கிட்டு வந்து முறையா கொடுங்க. அப்பவும் இப்படி தான் இருப்பாங்க. ஆனா அதுக்கு அடுத்த நாள் இப்படி ஆறு பேர் வந்துருக்குற நீங்க ஒரு அறுபது பேர் வந்தா, கூட்டத்தை பாத்து பயந்துருவாங்க. அடுத்த நாளே ஆக்சன் எடுப்பாங்க பாரு. நாம ஒன்னு செந்தா என்ன வேணா சாதிக்கலாம் தம்பி. ஆனா சேருறது தான் கஷ்டம். அதனால தான் நமக்கு இந்த அதிகாரிகளாலும், அரசியல் வாதிகளாலும் இவ்வளவு கஷ்டம். முயற்சி செஞ்சு பாருங்க”, என்று சொல்லி விட்டு சென்றார்.
அவர் சொல் படியே நடந்தது. அறுபது பேரோடு கலெக்டர் ஆபிஸ் முன்பு போய் அமர்ந்தான் பார்த்திபன்.
கூட்டத்தை பார்த்து பத்திரிக்கை அதை பெரிய அளவில் பரப்ப, அடுத்த மாதமே ரோடு போடும் பணி ஆரம்பித்தது.
“என்ன டி? பெரிய இவ மாதிரி அன்னைக்கு சீண்டுன? இப்ப என்ன சொல்ற?”, என்று கெத்தாய் கேட்டான் மித்ராவிடம்.
“என்னோட புருஷனால முடியும்னு தெரிஞ்சு தான நான் அப்படி சொன்னேன். உங்களால முடியும்னு எனக்கு தெரியும் அத்தான்”, என்று சொன்ன மித்ராவின் குரலில் அமைதியாய் சென்றவனின் மனது “யாருமே என் மேல நம்பிக்கை வைக்கலை. ஆனா இவ என்னை முழுசா நம்புறா. இவ என்கூட இருந்தா நான் என்ன வேணா சாதிப்பேன். ஆனா இருப்பாளா?”, என்று யோசித்து நிம்மதியை தொலைத்தது.
மனம் முழுக்க காதலை சுமந்து கொண்டிருப்பவனுக்கு, அவள் மேல் நம்பிக்கை வைக்க பயமாக இருந்தது.
அவள் அவனை நெருங்கி செய்யும் சீண்டல்களை கூட அவன் மனது ஏற்க மறுத்தது. மறுபடி அவள் மேல் முழு காதலையும் கொட்டி அதன் பின் வரும் சிறு ஏமாற்றதை நினைத்து பயந்தான் பார்த்திபன்.
நாள்கள் ஓடுவதையும் அவன் விலகி ஓடுவதையும் பார்த்து பயந்து போனாள் மித்ரா. “எத்தனை தடவை தான் வெக்கத்தை விட்டு நானே அவனை நெருங்க முடியும்?”, நெருங்கினாலும் அவன் தன்னை விலக்கி விட்டு செல்வது அவளுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது.
அவள் ஆசையாக எதிர் பார்த்த அவனுடைய பிறந்தநாளுக்கு அதிக நாள் இல்லை.
அது வரை என்ன என்ன செய்யணும் என்று நினைத்து கட்டி வைத்த கற்பனை கோட்டை சிதைந்தது மட்டும் இல்லாமல், அவன் அப்படி அவளிடம் ஒட்டாமல் இருப்பது பயங்கர வருத்தத்தை தந்தது. சரி பேசலாம் என்று அருகில் போனாலும் “என்ன பொய்யை இப்ப சொல்ல போற?”, என்று கேட்பவனை என்ன சொல்லி பேச்சை கேட்க வைப்பது என்று தெரியாமல் சோகமாக அமர்ந்திருந்தாள் மித்ரா.
“என்ன மித்ரா? துறு துறுன்னு சுத்திகிட்டு இருப்ப? இப்ப நீயே கன்னத்தில் கை வச்சிட்டு உக்காந்துட்ட?”, என்று கேட்ட படியே அவள் அருகில் வந்து அமர்ந்தாள் வள்ளி பாட்டி.