அத்தியாயம் 1
தன்னுடைய உடைகளை எல்லாம் இரண்டு பேகில், அடைத்து கொண்டிருந்தாள் மித்ரா.
அப்போது “மித்ரா”, என்ற படியே உள்ளே வந்தார் மோகன், அவளுடைய அப்பா.
பின்னால் தலையை மட்டும் திருப்பி பார்த்து விட்டு, அவரை பார்த்து உதட்டை சுளித்து விட்டு, மறுபடியும் குனிந்து உடைகளை வைக்க ஆரம்பித்திருந்தாள்.
“இப்ப நான் சொல்றதை கேக்க போறியா இல்லையா மித்ரா?”, என்று கோபத்தில் கத்தினார் மோகன்.
“ஹி ஹி”, என்று பின்னால் திரும்பி சிரித்த மித்ரா, “எனக்கு நீ கத்துறதுல பயமே வரலை பா. வேற எதாவது புதுசா ட்ரை பண்ணு”, என்றாள்.
அவளிடம் பல்ப் வாங்கியவர் அவளை முறைத்து விட்டு அவள் அருகில் சென்றார்.
“இங்க கடை வேலை இருக்கு மித்ரா. இப்ப அங்க போக முடியாது. நான் உன் கூட அங்க வந்துட்டா, கடையை யார் பாத்துப்பா சொல்லு?”, என்று கேட்டார் மோகன்.
“என்னது நீ வர போறியா? உன்னை எவன் கூப்பிட்டான்? நான் மட்டும் தான் போறேன்”
“என்னது நீ மட்டும் தனியாவா? வயசு பொண்ணை தனியா, எப்படி அனுப்ப முடியும். அதெல்லாம் போக வேண்டாம்”
“உனக்கு இது ஓவரா தெரியலையாப்பா? என்னை பாத்தா பயந்த பொண்ணு மாதிரியா இருக்கு? இந்த உலகத்துல எந்த மூளைக்கு தனியா போனாலும், என்னால சமாளிக்க முடியும். அப்படி தான என்னை நீ வளத்துருக்க? அப்பறம் என்ன பயம்?”
“ஏண்டா இப்படி ஆம்பளை பிள்ளை மாதிரி, வளத்தோம்னு இப்ப கவலை படுறேன் மித்ரா”
“இப்ப கவலை பட்டு என்ன செய்ய? விடு, விடு போய் வேலைய பாரு”
“அப்ப நீ நிஜமாவே, அந்த ஊருக்கு போக தான் போறியா?”
“ஹ்ம்ம் ஆமா ஆமா”
குளித்து முடித்து காய்வதற்காக தலையை விரித்து போட்டிருந்தாள் மித்ரா. அதில் இருந்து ஈரம் வடிந்து கொண்டிருந்தது.
“இப்ப தான் குளிச்சியா மித்து, தலைல இருந்து தண்ணீ வடியுது”, என்று பாசமாய் பேசினார் மோகன்.
அவரை ஒரு பார்வை பார்த்தவள் “இல்லைப்பா, பங்குனி மாசம் குளிரும், மழையுமா இருக்கு. அந்த மழைல தான் நனைஞ்சிட்டேன். அதான் தண்ணீ வடியுது”
“பங்குனி மாசம் மழையும் குளிருமா? வேர்த்து ஊத்துது இங்க. நீ நக்கல் அடிக்கிறதை எப்ப தான் விட போறியா மித்ரா? அப்பா சொல்றதை கேளு டா”
“நீ எப்படி பேசுனாலும், நான் மயங்க மாட்டேன் பா. பேசாம போய் என்னோட சேலையை, அயன் பண்ற வழிய பாரு. ஒன்பது மணிக்கு எனக்கு பஸ்”, என்று சொன்னாள்.
“டிக்கட்டே புக் பண்ணிட்டாளா?”, என்று நினைத்து கொண்டு, “என்னோட கதையை உன்கிட்ட தெரியாம சொல்லிட்டேன் பாப்பா. தயவு செஞ்சு அதை எல்லாம் மறந்துறேன்”, என்றார்.
“என்னது மறக்குறதா? நீ உன்னோட கதையை சொன்னதே ரொம்ப லேட். எனக்கு விவரம் தெரிஞ்ச உடனேயே சொல்லிருக்கணும். அப்பவே ஒரு வழி பண்ணிருப்பேன். சரி இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. எல்லாம் சரி பண்ணிருவேன். மித்ரா முடிவு பண்ணி மூணு நாள் ஆகிட்டு. செஞ்சே தீருவா”
“அப்பா அடிப்பேன் மித்து. முடிவை மாத்திக்கோ. நீ எங்கயும் போக வேண்டாம்”
“இந்த உலகத்தில் இருக்குற மன்னிக்க முடியாத தப்பை, நான் செஞ்சிட்டு வந்தா கூட, நீ என்கிட்ட கோப படமாட்டேன்னும், என்னை அடிக்க மாட்டேன்னும் எனக்கு தெரியும் பா. சும்மா சும்மா கோப படுற மாதிரி காமெடி பண்ணாத”
“நான் மிரட்டுறது உனக்கு காமெடியா இருக்கா? நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகனும் மா. உன்னோட பேசண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணுவாங்க தான?”, என்று அவளை கார்னர் செய்ய முனைந்தார்.
“வேலை வேண்டாம்னு, மூணு நாள் முன்னாடியே எழுதி கொடுத்துட்டேன் பா”, என்று சிரித்தாள் மித்ரா.
“என்னது வேலையை விட்டுட்டியா? என்கிட்ட சொல்லவே இல்லை”
“சொன்னா, நீ அட்வைஸ் அப்படிங்குற பேர்ல, ஒரு மணி நேரம் ரம்பம் போடுவ. அது தேவையா? அதான் சொல்லலை. ஆமா நீ எதுக்கு இவ்வளவு சாக் கொடுக்குற? இது என்ன கவர்ன்மென்ட் வேலையா? இது இல்லைன்னா இன்னொன்னு. விடுப்பா”
“மித்து பாப்பா, இங்க பாரேன். அப்பாக்கு காச்சல் அடிக்குது. வயிறு, நெஞ்சு எல்லாம் வலிக்குது. என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயேன்”, என்று அடுத்த அஸ்திரத்தை ஏவினார் மோகன்.
“எதுக்கு பா, இப்படி சிரிப்பு சிரிப்பா காட்டுற?”
“எனக்கு உடம்பு சரி இல்லாதது, உனக்கு சிரிப்பா மித்ரா?”
“ஆமா என்கிட்ட நல்ல வாயடிச்சிகிட்டு, இப்படி புளுகுனா என்ன செய்ய சொல்லு? முன்ன பின்ன நடிச்சா தான பா, இப்பவும் நடிக்க முடியும்? உனக்கு தான் வரலைல்ல விடு”
“இதெல்லாம் நல்லா கண்டு பிடி. வேணும்னா அப்பாவும் உன்கூட வரட்டுமா டா மித்து குட்டி?”
“நீ வந்தா, காரியமே கெட்டுரும். அப்புறம் என் பிளான் என்ன ஆவது?”, என்று நினைத்து கொண்டு “அதெல்லாம் முடியாது. நீ நான் சொல்றப்ப வந்தா போதும்”, என்று சொன்னாள்.
“அவங்க உன்னை மதிக்க மாட்டாங்க மித்ரா”
“அவங்க என்ன என்னை மதிக்கிறது? நான் அவங்களை பாத்துக்குறேன். நீ கவலை படாம இரு. அப்புறம் நான் போறதுல, உன் மனசுக்குள்ளயும் கொஞ்சம் சந்தோச பல்ப் எரிய தான் செய்யும்னு எனக்கு தெரியும். அதனால, என்னை தடுக்குற டிராமாவை விட்டுட்டு, எனக்கு கிளம்புறதுக்கு ஹெல்ப் பண்ணு”
“இல்லை மித்ரா அப்பா சொல்றதை கேளேன். நீ அங்க போய் நல்லது நடந்தா சந்தோசம் தான். ஆனா, உன்னை கஷ்ட படுத்துனா, அப்பாக்கு எப்படி தாங்கும் சொல்லு?”
“அப்பா, எனக்கு ஒரு டவுட்”
“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். உனக்கு என்ன டவுட்?”
“இல்லை, அங்க முறைப்பையன் யாரும் இருக்காங்களோ? ஒரு வேளை அவன் என்னை இழுத்துட்டு ஓடிருவான்னு பயந்து போய் தான், என்னை போக விடாம தடுக்கியா?”
“கிளிஞ்சது போ. அப்படி எவனாவது இருந்தா, அவன் உன்னை இழுத்துட்டு ஓட மாட்டான். நீ தான் இழுத்துட்டு ஓடுவ. ஆனா, அங்க அப்படி ஒருத்தன் இருக்கானான்னு எனக்கு தெரியலை”
“ஒரு அப்பா மாதிரியா பேசுற? நான் ஓடி போறதை பத்தி பேசுறேன். நீ ஓடி போய் கரண்டியை காய வச்சு, எனக்கு சூடு போட்டுருக்க வேண்டாமா? என்ன அப்பா நீ? வேஸ்ட் பா”
“அது செய்ய முடியாதுன்னு தான, இப்படி கெஞ்சிட்டு இருக்கேன். சரி அங்க போறதுக்கு எதுக்கு இவ்வளவு துணியை கொண்டு போற? ஒரு வாரம் இருந்துட்டு வந்துரு டா பாப்பா”
“ஒரு வாரத்தில் எப்படி நினைச்ச வேலை முடியும்? லூசாப்பா நீ?”
“லூசே தான் மித்ரா. அந்த ஊருக்கு பஸ் வசதி கூட கிடையாது பாப்பா. ரொம்ப தூரம் நடக்கணும்”
“அதெல்லாம் நடந்துறலாம்ப்பா”
“ப்ளீஸ் மித்ரா”
அவரின் கெஞ்சலை கண்டு கொள்ளாமல் “உனக்கு காச்சல் வந்தா, வயிறு வலி வந்தா, எல்லாத்துக்கும் தனி தனியா மாத்திரை எடுத்து வச்சிருக்கேன். என் பிரண்ட் ஹேமா வந்து தினமும் உன்னை பாத்துட்டு போவா. பக்கத்து வீட்டு கீதா அத்தை, சாப்பாடு செஞ்சு கொடுத்துருவாங்க. அதனால நீ நல்ல தின்னுட்டு, தூங்கிட்டு, ரெஸ்ட் எடு போதும்”, என்று சொன்னாள்
“அவங்க சாப்பாடு எல்லாம் எனக்கு செட் ஆகாது. நானே சமைச்சுக்குவேன். ஆனா நீ அப்பாவை விட்டுட்டு போறல்ல? போ உன் கூட சண்டை”, என்று முகத்தை தூக்கி கொண்டு அமர்ந்திருந்தார் மோகன்.
“என்ன மோகன் நீ? சின்ன பிள்ளை மாதிரி பண்ற? சீக்கிரம் எல்லாம் சரியாகிரும் பா. நீயும் நானும் மட்டும் இருந்து, வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குது பா. கொஞ்சம் சுவாரசியமா மாத்தணும். அதுக்கு தான் போறேன்”
“என் மேல இருக்குற கோபத்துல, உனக்கு சாப்பாடு கூட கொடுக்க மாட்டாங்க மித்ரா”
“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது பா. நீ கவலை படாத. நான் பாத்துக்குறேன்”
“என்ன பாத்துக்குவ? இத்தனை வருஷம் நம்ம ரெண்டு பேர் தான இருந்தோம்? உங்க அம்மா போய் சேர்ந்த பிறகு, எனக்கு நீ, உனக்கு நான் அவ்வளவு தான். இனியும் அப்படியே இருப்போம் மித்ரா”
“கொஞ்சநாளாவது, உன்னோட கேவலமான சாப்பாட்ல இருந்து விடுதலை கொடேன் பா. ப்ளீஸ்”, என்று மித்ரா சொன்னதில் சிரித்து விட்டார் மோகன்.
“நல்லா இருக்கு, நல்லா இருக்குன்னு நான் செஞ்சு வச்சதை காலி பண்ணும் போது மட்டும், வேற வாய் கடன் வாங்கிருவியா பாப்பா”, என்று சொல்லி அவள் காதை திருகினார்.
“அது உன்னோட சந்தோஷத்துக்காக சொல்ற பொய் பா. அதை எல்லாம் பெருசா எடுக்க கூடாது”, என்று சிரித்தாள் மித்ரா.
அழகே உருவாக இருக்கும் தன் மகளுக்கு, கையை வைத்து திருஷ்டி கழித்தார் மோகன்.
அவரை பார்த்து சிரித்த மித்ரா “சந்தோசமா என்னை அனுப்பி வை பா. ப்ளீஸ் பா”, என்றாள்.
“சரி நீ முடிவு பண்ணுனா கேக்கவா போற? குடும்பத்துல எல்லாருக்கும் இருக்குற வீராப்பு, உனக்கு மட்டும் இல்லாமலா போகும்? சரி வா நானும், உனக்கு எடுத்து வைக்கிறதுல உதவுறேன்”, என்று எழுந்தார்.
“அப்பான்னா அப்பா தான்”, என்று சிரித்தாள் மித்ரா.
ஒரு வழியாக கிளம்பி முடித்து விட்டாள் மித்ரா.
வீட்டை விட்டு வெளியேறும் முன், மோகனை கட்டி பிடித்து கொண்டு அழுது விட்டாள் மித்ரா.
பிறந்ததில் இருந்து உடன் இருந்தவரை முதல் முறை பிரியும் வலி.
அவருக்கும் கண்கள் கலங்கியது. தன்னை சமாளித்து கொண்டவர், “என்ன பாப்பா இது? இதுக்கு தான் போக வேண்டாம்னு சொல்றேன்”, என்று அவளை சமாதான படுத்தினார்.
தன் உணர்வுக்கு வந்தவள் “சரி சரி மறுபடி ஆரம்பிச்சிறாத. நான் சும்மா அழுது பாத்தேன். வா வா கிளம்பலாம்”, என்று சொல்லி கொண்டே ஒரு பையை எடுத்து கொண்டாள். மற்றொரு பையை எடுத்து கொண்டவர், பக்கத்து வீட்டு கீதாவிடம் பேசி கொண்டிருந்த மித்ரா அருகில் வந்தார்.
“அப்பாவை நல்லா பாத்துக்கோங்க அத்தை”, என்று சொல்லி கொண்டிருந்தாள் மித்ரா.
“நான் பாத்துக்குறேன் மா. வாரத்துல ரெண்டு நாள் மாவு கூட அரைச்சு கொடுத்துறேன். மித்த நேரமும் எங்க வீட்டுலயே சாப்பிட சொல்லுவேன். ஆனா அண்ணன் தான், வேண்டாம்னு சொல்லுவாங்க. நீ எதுக்கும் கலங்காம நினைச்சதை சாதிச்சிட்டு வா”, என்று சொன்னாள் கீதா.
தன் வண்டியில் அவளை பஸ் ஸ்டாண்டில் கொண்டு வந்து விட்டார் மோகன்.
“மறுபடியும் யோசனை பண்ணு பாப்பா. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகலை. இப்படியே வீட்டுக்கு போவோம்”, என்று மறுபடியும் ஆரம்பித்தார் மோகன்.
“சும்மா அரைச்ச மாவையே அறைக்காத பா. போர் அடிக்குது”
“சரியான வாலு. சரி பணம் எடுத்து வச்சிட்டியா? நேத்து கார்ட்ல இருந்து எடுத்துட்டு வந்தேன்ல. பத்திரமா எடுத்து வச்சிகிட்டியா?”
“இல்லைப்பா. அந்த பணம் நீ வச்சிக்கோ”
“அப்ப உனக்கு பணம்?”
“நான் உன் கார்ட் எடுத்துக்கிட்டேன்”
“அட பாவி, சரி பாத்து செலவு பண்ணு. இந்தா இதையும் அவசர செலவுக்கு வச்சிக்கோ”, என்று அய்யாயிரத்தை கொடுத்தார்.
“சும்மா செலவுக்கு நீ நேத்து எடுத்துட்டு வந்ததுல இருந்து, இருபதாயிரம் எடுத்து வச்சிட்டேன் பா”
“என்னது, அவ்வளவு பணமும் எடுத்து கார்டும் எடுத்து வச்சிருக்கியா? அப்ப நான் செலவுக்கு என்ன செய்ய?”
“உனக்கு கடைல இருந்து வரும். பத்தலைன்னா பேங்க்ல போய் எடுத்துக்கோ”
“உனக்கு ரொம்ப கொழுப்பு மித்ரா”
“ஆமா நீ சமைச்ச சாப்பாடுனால, வந்த கொழுப்பு தான்”
“அப்புறம் கேக்கணும்னு நினைச்சேன். அது பட்டிக்காடு மித்ரா. அந்த ஊருக்கு போகும் போது சேலைல போகலாம்ல? இப்படி குர்தாவும் ஜீன்சுமா போற?”
“சேலைல போனா, அவங்களுக்கு நான் பிள்ளை பூச்சு மாதிரி தெரியுவேன் பா. இப்படி போனா தான், ரவுடி லுக் இருக்கும்”, என்று சிரித்தாள் மித்ரா.
“இப்படி ஏட்டிக்கு போட்டி அங்க போய் பேசாத பாப்பா. எல்லாரும் தப்பா நினைப்பாங்க. அங்க யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது சரியா?”, என்றார் மோகன்.
“பாரு டா. இவ்வளவு நேரம் போகாத, போகாதன்னு சொல்லிட்டு, இப்ப அப்படியே கட்சி மாறிட்ட. போ பா. சரி சரி பஸ் கிளம்ப போகுது. நீ உடம்பை பாத்துக்கோ. நான் போன் பண்றேன். டாட்டா”, என்று சொல்லி கொண்டே உள்ளே ஏறினாள் மித்ரா.
பஸ் கிளம்பும் வரை இருந்து வழி அனுப்பி விட்டு, சென்றார் மோகன்.
மித்ரா போகும் பஸ் சென்னையை கடந்து சென்றது.