” அண்ணனும் தங்கச்சியும் என்கிட்ட விளையாடுறீங்களா , என் கூட தான் படிக்க வருவேன்னு சொன்னவ ,ஏன் வரலனு கேட்கக் கூட முடியல … யாருகிட்ட கேட்கனுக் கூடத் தெரியல… ஆனா மொத்தத்துல ரெண்டு பேருமே என்கிட்ட பேசல….” என்றுக் கோபமாகப் பேச ஆரம்பித்தவள் … வருத்தத்தோடு ,
“அவளுக்கு பேச்சுப் போச்சுனு ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லிருக்கலாமே … எங்க பேசினா தங்கச்சியப் பத்தி சொல்லிருவோமோனு நினைச்சு நீங்களும் , யாருக்கும் எதுவும்… தெரிய வேண்டாம்னு…. அதுவும் ‘யாரோல ‘என்னையும் சேர்த்து அவளும் ஃபோன தவிர்த்துட்டா அப்படித் தான…. மொத்தத்துல அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் என் மேல அவ்வளவு நம்பிக்கை …..” அனு தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டியதும் , அவள் மனம் இலகுவாக உணர கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துக் கொண்டாள்.
ஆனால் தக்ஷன் மனதிலோ பல குழப்பங்களும் கேள்விகளும் சூழவும் அனுவிடம் மேலும் எதுவும் பேச்சுக் கொடுக்காது அமைதியாக வண்டியை எடுத்தவன் வீடு வந்து தான் நிறுத்தினான்.
‘ வெளியில் சாப்பிட்டுக் கொள்வோம் ‘என்று செல்லம்மாளிடம் சொல்லி விட்டு வந்தவன் , சாப்பிடாமலே அழைத்து வரவும் , உணவு தயார் செய்ய அவரிடம் சொல்லிவிட்டு அனு அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு கீழே இறங்க முற்பட , அருகில் இருந்த, அமிர்தா உபயோகித்துக் கொண்டிருந்த அறை திறந்திருக்கவும் அங்கு சென்றாள்.
தக்ஷன் , அழகான , யாரையும் கவர்ந்திழுக்கும் , மலர்ந்த கள்ளமில்லா சிரிப்புடன் , சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தங்கையின் பெரிதுப் படுத்தப்பட்ட புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான் .
அவனுக்குத் தெரிந்து இந்தப் புகைப்படம் எடுத்த நாளுக்குப் பின் நேற்று ஆதியோடு இருந்த போது தான் அந்தப் புன்னகை மீண்டிருந்ததைக் கண்டான் .அதையே யோசனையோடுப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்னத் தோன்றியதோ , அனு அவனருகில் வந்து நின்றதைக் கூட கவனியாது தங்கையின் பூட்டப்படாத மர அலமாரிகளை ஆராய ஆரம்பித்தான்.
அனு ‘ஏன்’ என்று கேட்க கேட்க பதிலளிக்காது எல்லாவற்றையும் இழுத்துப் போட்டவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை .ஒன்றிற்கு மட்டும் திறக்க இயலாது பூட்டுப் போடப்பட்டிருக்கவும் ,அறையை விட்டு வெளியேறியவன் வேறொரு சாவிக் கொண்டு திறக்கலாம் என்று முடிவெடுத்து பின் திறக்காது அமிர்தாவின் ஆடைக் குவியல்களுக்கிடையே சோர்ந்து அமர்ந்து விட்டான்.
அவனது செயல்களை எல்லாம் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்த அனு அவனெதிரிலயே அமர்ந்து, அறைக் கலைந்துக் கிடப்பதை கண்களால் காட்டி வினவ , ஏதோ சொல்ல வந்தவன் பின் பேசாது,
மனைவியின் மடியில் தலைவைத்து … விழிகளை மூடிக்கொண்டான். அனுவும், அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் , மடியில் தலை வைத்திருந்தவனது சிகைக்குள் தன் விரல்களை நுழைத்துக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
தக்ஷன் காதல் சொன்ன முறையிலேயே அவன் மீது காதலில் விழுந்தவள் அனு , அவனோடு அருகில் இருந்து பழகிய ஒரு மாதமும் அவன் பார்வை ,பேச்சு எல்லாமே கண்ணியமாக தான் இருக்கும் …. ஊருக்கு கிளம்பும்போது கண்ணீரோடு நின்றவளின் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பியதுதான்… அதன் பிறகு இப்போது மனைவி என்ற உரிமையில் தான் அவனது சிறு சிறு தொடுகைகள் இருக்கின்றன. இப்போது அவன் படுத்ததும் உடல் கூசி சிலிர்த்தாலும் ஓர் நிம்மதி உண்டாயிற்று.
மெளனம் …மெளனம்… இருவருமே என்ன ஏதென்றுக் கேட்டுக்கொள்ளவில்லை … அவன் தன் மடி சாய்ந்ததில் அனுவின் மனதின் அலைப்புறுதல்கள் முடிவுக்கு வந்தது போல் இருந்ததென்றால் …. தக்ஷனுக்கு சொல்லவே வேண்டாம் … எதற்கோ விடைக் கிடைத்த நிம்மதி … அவன் விழி திறந்துப் பார்க்க , அனுவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இள நகையோடு எழுந்தவன் , ” கேண்டி …. ஒரு உண்மையச் சொல்லட்டா … ஊர்ல உன்கிட்ட பேசிட்டு … உனக்கு ..” என்றவன் இப்போதும் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு ,
” கொடுத்துட்டு வந்ததோட சரி …. நான் உனக்கு ஃபோன் பேசாதது மட்டுமில்ல … ஒரு மெசேஜ் கூடப் பண்ணல …. ஏன்னா அந்த ஃபோனும் அந்த நம்பரும் நான் யுஸ் பண்ணல… அந்தக் கோபம் தான் உனக்கு இருக்கும்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்…. ” என்றதும் , அதிர்ச்சியில் ”என்ன … ” என கண்களை அகல விரித்தவள் ,
“அப்படினா … நான் நீங்க அவளுக்கு பேச முடியாத விஷயத்தை தான் என்கிட்ட சொல்லலனு நினைச்சுட்டு இருக்கேன் …. ஆனா நீங்க என்னைய நினைக்கவே இல்லயா…..அப்ப அந்த மெசேஜ் யார் …யார் அனுப்பினா…..” எனத் தொண்டை கரகரக்க கேட்டவளின் அருகில் நெருங்கி அமர்ந்தவன் , ஏதோ சொல்ல வருவதற்குள் அவனது கைப்பேசி அழைக்க , தந்தையின் அழைப்பு என்றதும் காதில் வைத்தவனிடம் ,
“தக்ஷ் …சாரிப்பா இங்க எமர்ஜென்ஸி கேஸ் … நீ இருந்தா தான் நல்லதுங்கிறது போல இருக்கு … இதை மட்டும் பார்த்துட்டுப் போறீயா….”
எழுந்துக் கொண்டே , “ஏன்ப்பா சாரி லாம் சொல்லிட்டு , வான்னு சொன்னா வரப்போறேன்… இதோ கிளம்பிட்டேன்…” என்றவன் மொபைலை சட்டையினுள் போட்டுக் கொண்டே , மனைவியையும் கைப் பிடித்து எழுப்பியவன் ,
“நான் உன்கிட்ட ஃபோன்ல பேசினதும் இல்ல , மெசேஜ் அனுப்பவும் இல்ல தான் …. ஆனா பார்க்காம இருந்தேன்னு சொன்னேனா …. ஒவ்வொரு வருஷமும் உன் பிறந்த நாளன்னைக்கு ரூபாலி பிறந்த நாளும் ,காதலர் தினத்தன்னைக்கு அவ கல்யாண நாளும் வரும் … அப்போலாம் உங்களுக்கு ட்ரீட்ங்கிற பேர்ல உனக்கு ஸ்பெஷல் கிஃப்ட் வரும்…. அது எப்படினு …..யோசி …” எனக் கண் சிமிட்ட ,
இப்போதும் அனு கண்களை விரித்தாள் தான் … ஆனால் ஆனந்தமாக …
” ரூபா … மேம்”.. அவளது இடுப்பில் கைப்போட்டு இறுக்கமாக மனைவியை அணைத்துக் கொண்டவன் … புன்னகையோடு ,
“எஸ்… மேம்தான்…என்னோட பி.ஜி. பண்ணின ரூபாலி சின்ஹா… யோசி …யோசி…. ” என்றவன் ,
“ஆனா ஒன்னு என் தங்கச்சி வாய் பேசினா மட்டும் நம்மள சேர்த்து வைப்பானு இல்ல … வாய் பேச முடியாதப்பவும் அவதான் நம்மள சேர்த்து வச்சிருக்கா …. நான் அவள குழந்தையா நினைச்சுட்டு இருக்கேன் …. ஆனா அவ… எனக்கு அம்மாவா இருந்து எல்லாம் பண்ணியிருக்கா… எனக்கு என்ன பிடிக்கும் … என் சந்தோஷம் என்னனு எல்லாம் தெரிஞ்சு வச்சு பார்த்து பார்த்து செய்துருக்கா… அது மட்டுமில்ல … அவ முகத்துல பழைய சந்தோஷம் திரும்ப வந்திருக்கு …. அதுக்கான காரணம்…… ம் … ” என யோசித்தவன் , மனைவி தன்னையே பார்ப்பதைப் பார்த்தவன் ,
“ஆமா கேண்டி … அது எப்படி என்னனு நாம அப்புறம் பேசலாம் … இப்போ கிளம்புறேன் .. ஹாஸ்பிட்டல்ல என் தேவை இப்போ ரொம்ப அவசியம்னு தோணினதால மட்டும் தான் அப்பா என்னைய வரச் சொல்றாங்க… வந்து பேசுவோம்” என்றவாறு அறையை விட்டு வெளியேற முயன்றவன் கையைப் பிடித்தவள் ,
“சாப்பிடலயே நீங்க…” என்றவாறே நெற்றியில் முத்தமிட்ட போது அவன் உதட்டில் ஒட்டிக் கொண்ட குங்குமத்தை துடைத்தவளிடம் ,
” என் வொய்ஃப்ங்கிறது அப்புறம்…. நாம டாக்டர்ஸ் அப்படிங்கிறதுதான் முதல்ல… சோ சாப்பாடு … தூக்கம்லாம் பின்னால போயிரணும் … அப்புறம் உதட்டால பட்டத உதட்டால தான் துடைக்கணும் கேண்டி….”
” அத்…. தான் … ” எனச் சிணுங்கிய மனைவியைப் பார்த்து ,
[the_ad id=”6605″]
” அடிப்பாவி … இப்படிச் சிணுங்கினா நான் எப்படி ஹாஸ்பிட்டல் போறது … வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் … ” என்றவாறு அவள் கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு தான் கிளம்பினான் தக்ஷன்.
முத்தம் பெற்ற கன்னம் ரோஜா வண்ணம் கொள்ள … மனமும் சிறகடிக்க ,சிறிது நேரம் நின்றிருந்தவளுக்கு , தக்ஷன் சொன்னது போல யோசிக்க யோசிக்க ஆனந்த மழை பொழிவது போல் தான் இருந்தது .
அண்ணன் தங்கை இருவருமே இத்தனை வருடங்களாக அவளிடம் நேரிலோ ஃபோனிலோ பேசவில்லையே தவிர இருவருமே நட்பையும் காதலையும் பல மடங்கு தனக்கு உணர்த்திய விதம் அனுவிற்கு பெரும் நிம்மதியைத் தர …. தோழியிடம் பேசும் ஆவல் அதிகமாக எழுந்தது.
அவர்களது அறைக்கு அவளது அலைபேசியை எடுக்கச் செல்லலாம் என நினைத்தவள் காலில் தக்ஷன் இழுத்துப் போட்டுச் சென்ற அமிர்தாவின் உடைகளும் , உடமைகளும் தட்டுப்பட, புன்னகையோடு இடுப்பில் கை வைத்து அறையை நோட்டமிட்டவள், அவற்றை ஒழுங்குப் படுத்தி விட்டுச் செல்லலாம் என நினைத்து ஒவ்வொன்றாக ஒதுக்கினாள்.
அந்த அறையில் அமிர்தா கைவண்ணத்தில் உருவான ஓவியங்களையும் , அவள் ஒரு கட்டிடக்கலை நிபுணர் என அனைவருக்கும் பறைசாற்றும் வகையிலான , அங்கிருந்த நிறைய மினியேச்சர்களையும் ரசித்த வண்ணம் சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
அமிர்தாவின் திறமைகளைப் பற்றி நன்கு அறிந்தவளாதலால் அவற்றையெல்லாம் இளமுறுவலோடு பார்த்து ரசித்து மர அலமாரியை ஒதுக்கியும் முடித்தவள் , தக்ஷன் சாவிப் போட்டு திறக்க முயன்று அப்படியே விட்டுச் சென்ற அந்த அலமாரியில் கை வைக்கவும் அது திறந்து கொண்டது.
மூடி விடலாம் என்று பூட்டப் போனவளின் கண்களில் பட்ட அங்கிருந்த பொருட்கள் ஆச்சரியத்தை அளித்தது … சொல்லப் போனால் அவற்றில் சில குப்பைக்கு செல்ல வேண்டியவை தான் , அவற்றோடு அன்று தக்ஷன் உபயோகித்த பழைய மாடல் ஐபோனும் இருந்தது.
“பாச மலரே அண்ணனுக்காக நிறைய வேலைப் பார்த்துருக்க… ”
தோழியின் அன்பில் நெகிழ்ந்து மெல்லியப் புன்னகையோடு கதவைப் பூட்டப் போனவள், அங்கு அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த ஆடையைக் கண்டு வியந்து நின்று விட்டாள்.
ஏனெனில் அது விளையாட்டுப் போட்டியின் போது அணியும் டீ ஷர்ட் மற்றும் பெண்கள் அணியும் லாங் ஸ்கர்ட்… குழப்பத்தோடு அதனைக் கையிலெடுத்தவள்,
[the_ad id=”6605″]
“ஏன்டி உனக்கு இதைவிட காஸ்ட்லியான பொருளெல்லாம் தந்துருக்கேன் இதைப் போய் வச்சுட்டு இருக்க … “பின் அந்த டீ ஷர்டை விரித்துப் பார்த்தவள்,
” இது … இது எப்படி உங்கிட்ட … ” அது அமிர்தாவின் தந்தையினதோ… தக்ஷனோடதோ அல்ல….. அது அனுவின் அண்ணனுடையது , சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் முதுகு புறத்தில் ஆதியின் பெயர் அச்சடிக்கப்பட்ட… திருவிழா நேரத்தில் போட்டியில் பங்கேற்க அணியும் உடை. இவை இரண்டையும் அமிர்தா பாதுகாப்பதற்கான காரணம்…
இப்போது அங்கு குப்பையாக தெரிந்த அனைத்தும் அமிர்தாவின் மனதை அனுவிற்கு உணர்த்துவதாக இருந்தது. உணர்ந்த விஷயம் ,
“எங்கண்ணன் கிடைக்க நீ கொடுத்து வைக்கலடி …. நீ கிடைக்க எங்கண்ணன் தான் கொடுத்து வச்சுருக்கணும்… எப்படி டீ எப்படி … இவ்வளவும் வாயால சொல்லக் கூட முடியாம …” புன்னகையும் கண்ணீருமாக தோழியுடன் மனதினுள் உரையாடினாள் அனு. அவளும் அறிந்த ஒன்று தான் …. அது ,
“சொல்லைக் கடந்த … பெண்ணின்
மெளனக் கூட்டுக்குள்
பல கோடி கோடி… பொருள்
குடி இருக்கும்….” என்பது தான்.
அழகாக தூவும்…