மழைத்துளி 16
வரு வீட்டிற்குள் நுழையும் போதே அரவிந்த் சொன்னது போலவே அம்மாவும் மகனும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கவும் , வந்தவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
வரு அமைதியாக மாடியேறி தன்னறைக்குச் சென்று ஜன்னலருகே சென்று சாலையைப் பார்க்க ஆரம்பித்தாள். விக்ரம் அந்த சாலையைக் கடந்து தான் ஊருக்குச் செல்வான் என்பதால் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள்.
மகளின் வாடிய முகம் பார்த்த விஸ்வனாதன் , அறைக்கு வர ,அறை விளக்கைக் கூடப் போடாமல் ஜன்னலில் சாய்ந்திருந்த மகளின் தோற்றம் மனதை வருத்த ,
“அம்மு … ” என்றவாறு கட்டிலில் அமர்ந்தவரின் அருகில் அமர்ந்த வருவிடம் ,
“என்னடா இங்க வந்ததிலருந்து நீ சந்தோஷமா இருக்கிறதப் பார்த்து … இது போல அடிக்கடி உன்னை இங்க அனுப்பிருக்கலாமோனு நான் நினைச்சுட்டு இருக்கேன். இப்ப ஏன் மா லைட் கூட போடாம நின்னுட்டு இருக்க ,அப்போ பாட்டியும் நானும் சத்தமா பேசினதப் பார்த்து பயந்துட்டியா…”
யாராக இருந்தாலும் ‘ஏன் இந்த சோகம்’ என்ற கேள்வி கேட்க்கப்படும் போதே கண்ணீர் வந்து விடும். இங்கு கேட்டதோ தந்தை , வருவும் விதிவிலக்கல்லவே. அவர் மடியில் சாய்ந்துக் கொண்டவள் கண்ணீர் விட்டு அழுக ஆரம்பித்து விட்டாள். ஆனால் விக்ரம் போகிறான் அதனால் அழுகிறேன் என தகப்பனிடம் சொல்ல முடியாதே … கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் ,
“மா… கி. யாத்….. அம்மா அம்மா நியாபகம் வந்துருச்சுப்பா…” மகளின் அழுகையில் மனம் கலங்கியவர் ,
“உங்கம்மா இங்க உன்னை சுத்தி தானேடா நின்னுட்டு இருக்கா…. நான் முன்னவே உனக்கு சொன்னது தான் … உன் மேல யாரெல்லாம் அன்பு பாசம் அக்கறை எல்லாம் காட்டுறாங்களோ அவங்க உருவத்துல உங்கம்மாதான்டா இருப்பா. அம்மா கடைசியா உன் கைப்பிடிச்சிட்டு என்ன சொன்னாங்க ஞாபகம் இருக்கா ….”
“அது எப்படிப் பா மறக்கும்….அம்மா சொன்னது உண்மைப்பா நான் அவங்கள கூப்பிடும் போதெல்லாம் வந்துடுறாங்க ….” என்றவளுக்கு விக்ரமின் நினைவில் முகத்தில் புன்னகைத் தோன்ற , மகளின் புன்னகையில் மனம் அவருக்கும் இலகுவாக ,
“ஓ…. யார் மூலமா வந்தாங்க… என் பிரின்ஸஸ் முகம் இந்த இருட்டுலயும் பிரைட் ஆகுது….”
“அதுப்பா …வி… ” என ஆரம்பித்தவள் ,
” வி.. வித்யாப்பா எனக்கு ஃபிரண்ட் மட்டுமில்ல … அம்மா எனக்கு என்ன சொல்வாங்களோ என்ன செய்வாங்களோ அப்படியே என்னை கவனிச்சுக்கிறா …. என்னைய உரிமையா திட்டுறா , கொஞ்சுறா … அம்மா போலவே என்கிட்ட நடந்துக்கிறா…. நீங்களே பார்தீங்களே , பாட்டிக்கூட நீங்க வந்தப் பிறகு தான் அப்படி செய் … இப்படி செய்ன சொல்றாங்க …. ஆனா நான் வந்த நாள்லருந்து வித்யா மட்டும் தான் ….. (மனதில் விக்ரமையும் நினைத்துக் கொண்டவள் )உரிமையா பேச பழக ….. ஐ லைக் ஹெர் பா… வோ பஹுத் சுந்தர்….. ஷ் பாட்டி ஹிந்தில பேசக் கூடாது சொல்லிருக்காங்க இல்ல …. அவ ரொம்ப அழகு மட்டுமில்ல … ரொம்ப நல்ல பொண்ணுப்பா ….. ”
“ஓ…. செல்வா மச்சான் பொண்ணா … ஃபோட்டோ அனுப்பினல… இன்னும் நான் நேர்ல பார்க்கல… சரி மா நீ தூங்கு… ”
“ப்பா… நான் ஒன்னு கேட்கலாமா… பாட்டிக்கு நீங்க காதலிச்சது பிடிக்கலயா … இல்ல அம்மாவ காதலிச்சது பிடிக்கலயா….”
சிரித்தவர் , ” நான் உங்கம்மாவ காதலிச்சதுதான் பிடிக்கல … காரணம் நம்ம ஊர்கள்ல ஊறிப்போன என் இனம், என் மதம் என் கலாச்சாரம் , கட்டுப்பாடு இப்படினு நிறைய… யாருக்கும் மனசுனு ஒன்னு இருக்குனு தெரியல … “மனைவியின் ஞாபகத்தில் மெளனமாக அமர்ந்திருந்தவரிடம் ,
“ப்பா… அம்மாவ நீங்க பார்த்ததும் லவ் பண்ணிட்டீங்களா ….”
“பார்த்த உடனேனு சொல்ல முடியாது… ஆனா ஏதோ ஈர்ப்பு எங்களுக்குள்ள இருந்தது உண்மை….. லேட்டா தான் நாங்க லவ் பண்றோம்னே எங்களுக்கு தெரிஞ்சது…..”
“ஓ…. அம்மா முதல்ல லவ் சொன்னாங்களா .… நீங்க சொன்னீங்களா … ”
திரும்பவும் வாய் விட்டு சிரித்தவர் , “என்னையப் பார்க்கும் போதெல்லாம் அவ கண்ல காதல் வழியும்…. என் கிட்ட சொல்ல தவிக்கிறானும் புரியும் …. ஆனா நம்ம நாட்டுல தானா ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்ட காதல சொன்னா … அந்தப் பொண்ண பார்க்குற பார்வையே வேற ஆச்சே…. சோ முதல்ல நான் தான் சொன்னேன்…” மனைவியின் நினைவில் புன்னகைத்துக் கொண்டே பேசியவர் மகள் முகத்தைப் பார்த்து ,
” ஏன்டா…. இப்ப இந்த ஆராய்ச்சி … யாரும் உன்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னாங்களா … இருக்காதே அப்படி இருந்தா என் பொண்ணு என்கிட்ட சொல்லி இருப்பாளே …” என யோசிப்பது போல் பாவனை செய்ய,
“ப்பா…. ” என்று செல்லம் கொஞ்சிய மகளிடம் ,
“ரெஸ்ட் எடு மா எதையும் யோசிக்காத … ” என எழுந்து அவர் கதவருகில் செல்ல … சரியாக அரவிந்தும் அப்பாவைத் தேடி அங்கு வர , வருவின் கேள்வியில் உள் நுழையாமல் மறைவாக நின்று விட்டான்.
“அப்பா காதல் எப்படி இருக்கும் … “எனக் கேட்க , மகளின் கேள்வியில் வாய் விட்டு சிரித்த விஸ்வனாதன் ,
“அம் …. மு….என் கிட்ட ஹ்யூமன் பிஸியாலஜி கேட்டா பட் பட் னு பதில் தருவேன். நீ ஹ்யூமன் சைக்காலஜி பத்திக் கேட்கிறியே டா… காதல் …… அது சொல்ல முடியாத உணர்வுடா…. சிம்பிளா சொல்றேன்…
நீ ஜூனியர் காலேஜ்ல படிக்கிறப்போ அர்மான் வந்து ஐ லவ் யூ சொன்னான்னு சொன்னது போல … எங்கிட்டக் கூட சொல்லத் தோணாம, ஒருத்தர நினைச்சதும் மனசு முழுதும் சந்தோஷம் பரவினா அங்க காதல் இருக்குனு அர்த்தம் , காதல் காயப்படுத்த வைக்காது , காதல் சந்தோஷத்த மட்டுமே தரும் ….” என விஸ்வனாதன் மனைவியின் நினைவில் சொல்லிக் கொண்டேப் போக ,
வெளியில் நின்றிருந்த அரவிந்த் ஊருக்கு கிளம்புவதாக சொல்ல வந்தவன் அவரது வார்த்தைகளில் வித்யாவின் வாடிய முகம் ஞாபகம் வர ,அறைக்குத் திரும்பி விட்டான்.
வருவோ , “அப்ப நான் லவ் பண்றேனா ….அந்த பிடித்தத்துக்கும் , ஈர்ப்புக்கும் பேர் காதலா … ” முகம் சிவக்க … ஒரு வித பரவச நிலையில் இருந்தவள். விஸ்வனாதன் அதற்கு மேல் சொன்னது எதுவும் காதில் விழாது நிற்க ,
“என்னடா …ஸ்கூல் ஃபேர்வெல் பார்டில அர்மான் ப்ரபோஸ் பண்ணது போல இங்க யாரும் பண்ணினாங்களா ….”
“அ….ப்பா…. சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்….
புன்னகைத்தவர் ,
“ஓகே டா … இப்ப படிக்கிற நேரம் முதல்ல அதைப் பார்க்கணும் … அப்படியே யாரையும் உன் மனசுக்கு பிடிச்சதுனா … சரியான நேரத்துல , எல்லாம் சரியானுப் பார்த்து அப்பாவே உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்….. நான் எப்பவும் உனக்கு நண்பன் தான் ….சரிடா ரெஸ்ட் எடு….” என்றவர் அறையை விட்டு வெளியேறினார்.
விக்ரம் அவன் பைகளை எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வர , அவன் தாத்தா ,
“பேரா… என் தங்கச்சி குடும்பம், என் மக புள்ள தான் …. ஆனாலும் அவங்க சொக்காரங்க ( பங்காளிகள்) பொண்ணுக்கு அண்ணன் எதுலயும் முன்ன நிக்கலனு சொல்லிக் கூடாது இல்லயா… எல்லாருக்கும் என்ன காரணம்னு தெரியும்தான்… இருந்தாலும் நீயும் நேர்ல போய் சொல்லிட்டு கிளம்புயா…”
“அவ்வளவுதானே தாத்தா … கிளம்பும்போது நானும் திலீபன பார்த்துட்டுத்தான் போகணும் .… நான் அப்ப சொல்லிக்கிறேன்…”
வீட்டிற்கு வந்த நேரத்திலிருந்து அரவிந்தையே நினைத்து வருந்திக் கொண்டிருந்த வித்யா, விக்ரமின் பேச்சில் தானும் அரவிந்தை நேரில் சென்று சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க பரணியிடம் சென்றவள் ,
“சித்தி வரு ஃபோன் என் கைல இருக்கு … அவங்கப்பா வந்திருக்கிறதால இங்க வாறாளோ என்னவோ …. கனி ஆச்சி ஏதோ சொல்லிட்டாங்கனு ரொம்ப ஃபீல் பண்ணிட்டே இருந்தா …. நாம போய் அவள இங்க கூட்டிட்டு வருவோமா…” அவர் ‘சரி’ சொல்ல வேண்டுமே என பரணியின் முகத்தை ஆவலாகப் பார்க்க ,
“ஆமாம்மா பெரியண்ணன் கூட போன் பண்ணாங்க … அம்மாவ கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லுனு… வா நாம போவோம்….” என்றவர் விக்ரம் அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்புகையில் வித்யாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
பரணிக்கு தாய் வீடு என்பதால் அவர் அடிக்கடி செல்வது வழமையே … அப்படிச் செல்லும் போது வித்யாவையும் அழைத்துச் செல்வதால் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
திலீபன் வீட்டு முன் காரை நிற்பாட்டியவன் , அந்த பெரிய வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த உறவினர்களைப் பார்த்து வியந்தது என்னவோ உண்மை. அனைவரும் திலீபனின் தாத்தா வழி உறவினர்களே , அந்த குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையின் முதல் ஆண் மகன் திருமணம் … அதனாலயே இருபத்து ஐந்து வயதிலயே திலீபன் திருமணத்தை முடிவு செய்தார்கள்.