காரிலிருந்து இறங்கிய பரணி வித்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயலுகையில் அங்கு அமர்ந்திருந்த விஸ்வனாதன் பரணியை அழைக்க , அருகில் வரவும் , வித்யா மரியாதை நிமித்தமாக கரம் கூப்பி ,
“வணக்கம் மாமா” என ,
“தாமரை … இது செல்வா மச்சான் பொண்ணா , அம்மு உன்னைத்தான் மா எப்பவும் சொல்லுவா…”பரணி வித்யாவிடம் உள்ளே செல்லுமாறு சைகை செய்து விட்டு ,
“அண்ணே … அம்மா ரொம்ப பேசிட்டாங்கனு கேள்விப்பட்டேன் … எதுனாலும் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுரு … ஒரே பொண்ணுணா எனக்கு … ரெண்டு தாய்மாமனும் சபைல இருந்து அவள சந்தோஷமா புருஷன் வீட்டுக்கு அனுப்பனும்னு ஆசைப்படுறேன்…. கோவிச்சுட்டு கிளம்பிறாதே… நான் உள்ள போய் அம்மாட்ட பேசிட்டு வாறேன் …” என்று உள்ளே சென்று விட்டார்.
முன்பே வீட்டினுள் நுழைந்த வித்யா வருவைத் தேட , அவள் கூடத்தில் இருந்த பெண்கள் கூட்டத்தில் இல்லை என்றதும் , மாடியறைக்குச் செல்லும் படிக்கட்டில் கால் வைத்தவள் அரவிந்த் வெளியில் இல்லாததை கவனித்து விட்டுத்தான் வந்தாள் , எனவே அவனறையில் தான் இருக்கக் கூடும் என்ற உறுதியில் அவனை எப்படிக் காண்பது என்ற யோசனையில் படியேற ஆரம்பிக்க….அச்சத்தில் மேலே ஏற இறங்க என்றிருந்தாள்.
முன்வைத்த காலை பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா…
இலைகள் அசையும் ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா…..
அதற்குள் திலீபன் விக்ரம் வந்திருக்கும் தகவலை அரவிந்துக்கு சொல்லியிருக்க, சட்டையை கையில் எடுத்துக் கொண்டே கதவைத் திறந்தவன் , வித்யா தயங்கி தயங்கி மாடியேறுவதைப் பார்த்து விட்டான்.
‘கங்கையைத் தேடி காவிரி நடந்து
கலக்க வருகின்றதோ….’
மகிழ்ச்சியில் இதயம் படபடவென அடிக்க, புன்னகையோடு அவளைப் பார்க்க , அவளோ அவனைக் கவனிக்காது சுத்தி முத்திப் பார்க்கவுமே அவனுக்குப் புரிந்து விட்டது .தங்கையைப் பார்க்க வந்திருந்தால் இந்த தயக்கம் அவளுக்கு இருக்காதே , அவள் தன்னைத்தான் தேடுகிறாள் என்றதும் உள்ளம் துள்ள மறைவாக நின்றுக் கொண்டான் .
மாடியேறியவள் அவன் அறைப் பக்கம் கால் வைத்தது தான் தெரியும் வித்யாவிற்கு , எப்படி அறைக்குள் வந்தாள் , கதவில் சாய்ந்து நின்றவளை எப்படி தொடாமலே சிறைப்பிடித்தான் என்றே தெரியவில்லை வித்யாவிற்கு.
விழிகளில் நீர் சூழ உதடுகள் துடிக்க நின்றவள் , எதிரில் கன்னத்தில் குழி விழ அழகாக புன்னகைத்தவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
‘நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்கத் துடிக்கின்றதோ
காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
பெண்மை சிலிர்க்கின்றதோ
பேசத் தவிக்கின்றதோ….’
கதவில் சாய்ந்தபடியே கீழே அமர்ந்து முழங்காலில் முகத்தை வைத்து சத்தம் வராது அழ ஆரம்பித்து விட்டாள். அவள் மனநிலையைப் புரிந்துக் கொண்டவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து ,
” கேண்டி ” என , சட்டென தலையை நிமிர்த்தியவள் அவன் பனியனைப் பிடித்துக் கொண்டு ,
“ஏன்…. ஏன் வந்தீங்க … ஏன் என்னைப் பார்த்தீங்க … அப்படி இப்படினு பேசி உங்களப் பார்த்த நாள்லருந்து உங்களையே நினைக்க வச்சுட்டு … இப்போ நான் போறேன்னு சொல்றீங்க….. ” எனத் தேம்பியவள் ,
“அம்மா என்னனா அண்ணனயே அப்படி நம்புறாங்க … அப்போ நான் செய்றது தப்போனு வேற கில்ட்டி ஃபீலிங்.… இதுல நீங்க நான் வரலனு உடனே ஊருக்கு கிளம்புறீங்க ….என் மனசு உங்களுக்குப் புரியலயா….” என அழுதவள் தாடையைப் பற்றியவன், ஜன்னலியிருந்து வந்த ஒளியில் தேவதையாக தெரிந்தவளின் கன்னங்களையும் , வியர்வையால் பளபளத்த அவள் நெற்றியையும் தன் சட்டைக் கொண்டு ஒற்றிக் கொண்டே ,
” பத்து நாள் பிரிஞ்சு இருக்கிறதுக்கே இப்படி அழுதா ….இன்னும் அஞ்சு வருஷம் எப்படி இருக்கப் போறோம்….ம் .. அதுவும் இவ்வளவு காதல சுமந்துகிட்டு….”
” என்ன… அஞ்சு வருஷமா…” என்ற வித்யாவின் விழிகளில் தன் விழிகளைக் கலந்துக் கொண்டே ,
“படிக்க வேண்டாமா … இல்ல திலீப் கல்யாணத் தோட நாமளும் கல்யாணம் பண்ணிப்போமா… ம் … ” எனப் புருவம் உயர்த்திக் கேட்க ,
“ம் … ம்ஹூம்…..” எனத் தலையசைக்க , சிரித்தவன் ,
” கேண்டி ….கேண்டி… நமக்கு காலம் இருக்கு …. நான் இப்ப தான் மேற்படிப்பு முடிச்சுட்டு வந்துருக்கேன் …நீ இப்பதான் ஸ்கூலே முடிச்சிருக்க … சோ இப்ப நான் அப்பாக்கூட பராக்டிஸ் பண்றதுலயும் … நீ படிக்க இருக்கிறதுலயும் கவனம் வைக்கலாம்…. சொல்லு என்ன படிக்கலாம்னு இருக்க …. இருக்கிற எல்லா என்ட்ரன்ஸ் எக்ஸாமும் நீயும் பாப்பாவும் எழுதியிருக்கீங்க…”
“அப்பா … சித்தப்பா அண்ணா எல்லாரும் என்ஜீனியர்ஸ் … வரு மெடிக்கல்னு சொன்னா … ஒன்னா சீட் கிடைச்சா அவக் கூடப் படிக்கலாம்னு பிளான் … ” என வித்யா பேச,
“ம் … டாக்டர் வொஃய்ப் டாக்டரா இருந்தா தானே எல்லா விதத்திலும் வசதி … அப்ப படிக்க அஞ்சு வருஷம் தேவைப்படுமே” எனக் கண்ணடிக்க ,
“ஓ…. ” என அவள் யோசிக்கும் போதே கட்டிலில் இருந்த மொபைல் ஒலித்தது. இருவரும் அங்குப் பார்க்க , அப்போதுதான் சட்டையில்லாமல் ,திரண்ட தோள்கள் மட்டுமே தெரிந்த அரவிந்தின் பனியனை பிடித்துப் பேசிக் கொண்டிருப்பதையும், இருளில் தனியாக அவனோடு இருப்பதையும் உணர்ந்தவள், நாணம் மேலிட கையை வேகமாக எடுத்து விட்டு எழ ,அவனும் எழுந்தவன் அவள் வலக்கையைப் பிடித்துக் கொண்டே மொபைலை எடுத்து , வதனம் சிவக்க தலை குனிந்து நின்றவளைப் பார்த்துக் கொண்டே ,
“தீலிப் … மச்சான் கிட்ட நான் உன் கல்யாணம் வரை இந்த ஊரை விட்டு நகரப் போறதில்லனு சொல்லிரு… நான் இதோ வந்துட்டேன்….” என்றவன் ,
“பாப்பா தினமும் பிள்ளையாருக்கு மாலைப் போட ஆற்றங்கரை போறா ….இனி நானும் வருவேன்…. ” என்றவன் கையை விட , வேகமாக அறையைத் திறந்துக் கொண்டுச் சென்று விட்டாள்.
பரணியும் வித்யாவும் வீட்டினுள் சென்ற அதே நேரம் , திலீபன் வந்து அழைத்துக் கொள்ள , அங்கிருந்தவர்களிடம் எல்லாம் விடை பெற்றுக்கொள்ள, திலீபனின் உறவில் சித்தப்பா முறையுடைய ஒருவர் விக்ரமிடம் ,
“மருமகனே .. வெளிநாட்டு கம்பெனிக் கூட கூட்டு வச்சு பெரிய பெரிய பில்டிங்லாம் கட்டித்தாறீகனு கேள்விப்பட்டேன்…. கல்யாணம் எப்ப பண்ணிக்கிறதா இருக்கீக… ”
ஒரு நொடி திலீபனைப் பார்க்க , அவன் வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டே ,
“சித்தப்பா … கேட்குறாங்கல்ல … சொல்றா மச்சான் எப்ப கல்யாணம் ….”
“அது மாமா … இன்னும் நாலஞ்சு வருஷம் ஆகட்டும் … ” என அவரிடம் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர்கள் , வருவின் அறைக்கு நேர் கீழே இருந்த செடிகளுக்கிடையே வந்து நின்றுப் பேச ஆரம்பித்தார்கள்.
தந்தைச் சென்றதிலிருந்து விக்ரம் நினைவாகவே இருந்தவளுக்கு அவன் குரல் கேட்கவும் , ஜன்னலருகே சென்று நின்றுக் கீழேப் பார்க்க , திலீபனும் அவனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் .என்னவோ கீழே இருந்த அத்தனை ஆண்களிலும் அவனே தனித்து தெரிவதாக ஒரு எண்ணம் வருவுக்கு .
உண்மையில் அவனைத் தவிர வேறு யாரும் அவள் கண்ணில் படவில்லை அது தான் காரணம். அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்போதுதான் அவர்களது பேச்சை கவனித்தாள்.
“என்னடா இவர் இப்படி என்கொயரி பண்றாரு … அவருகிட்ட இருந்து தப்பிக்க விடுவனுப் பார்த்தா , நீயும் கூடச் சேர்ந்துட்டு பதில் சொல்லுனு சொல்ற ….”
“டேய் எங்க சித்தப்பா சும்மாவா கேப்பாரு… கிரானைட் கம்பெனி வச்சிருக்காரு டா… மகள சும்மா ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுக்க முடியுமா… மாப்ள எப்படி, என்ன வேலை செய்றான்… இதெல்லாம் பார்த்து தான பொண்ணு கொடுக்க முடியும் …. ”
“டேய் என்னடா சொல்ற…”
“ஆமா மச்சான் அவர் எந்தங்ச்சிக்கு உன்னைய மாப்பிள்ளையாக்க தான் விசாரணை பண்றார். ”
“இப்பல்லாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது … வித்யா படிப்ப முடிச்சு அவ கல்யாணத்துக்கு அப்புறம் தான் … அதுவரை என்னோட ஒரே குறிக்கோள் … அப்பா பிஸ்னஸ இன்டர்நேஷனல் லெவல்ல கொண்டுப் போறதுதான் ….”
” அது சரி … விடு பேச்சு வந்தா பாட்டி சொல்லிக்கப் போறாங்க … சரி பேச்சு எல்லாம் சாமியார் மாதிரி இருந்தாலும் நீ பயங்கரமான ஆசாமினுத் தெரியும் … எப்படி பொண்ணு வேணும்னு சொல்லு , எனக்கு ரெண்டாவது பிள்ளைப் பொறக்கும் போது உன் கல்யாணத்த நடத்திருவோம்…”
“ஆசை தான் டா உனக்கு … முதல் பிள்ளையே அப்பதான் பெத்துக்கப் போற ….” என விக்ரம் சிரித்தாலும் ,
“டேய்…. எங்கம்மாவ தெரியுமில்லயா, தூத்துக்குடிலயே பெரிய தொழிலதிபர் பொண்ணு , அவங்க படிப்பு உனக்கேத் தெரியும் பி.ஹெச்டி பட்டம் வாங்கினவங்க , ஆனா எப்பவுமே எங்க வீட்ல அதைக் காட்டிக்கிட்டது இல்ல. ஒரு ஸ்கூலையும் நிர்வாகம் பண்ணிட்டு எங்க வீட்டையும் சமாளிக்கிறதுல …. எங்க பாட்டித் தாத்தா கிட்ட பேசும் போது பயப்படுற மாதிரி இருக்கும் , ஆனா அது அவங்களுக்குத் தார மரியாதை…. ஆனா வெளியில அத்தனை போல்டா ஹேண்டில் பண்ணுவாங்க …. ஏன் அத்தையையும் தான் சொல்றேன் . ” என ராணியையும் சேர்த்துச் சொல்ல ,
“ஏன்டா உனக்கு பொண்ணு எப்படிப் பார்க்கணும்னு கேட்டா…. அம்மா பெருமை…அத்தை பெருமைனு பேசுற ….”
“அதுதான்டா சொல்ல வாரேன்….எங்கம்மா போல பொண்ணு வேணும் …. சோ எங்கம்மா சொல்ற பொண்ணுதான் வேணும் .. ”
” எங்கம்மா சொல்ற எந்தப் பொண்னையும் கட்டிக்குவேன் டா …ஏன்னா அவங்களுக்கு தெரியும் எனக்கு வாழ்க்கைத் துணை எப்படி அமைஞ்சா நான் நல்லாருப்பேன்னு….ஒன்னு மட்டும் தான் நான் அம்மா கிட்ட சொல்லி வச்சுருக்கேன் அது… என் பிஸ்னஸ்க்கு ஹெல்ப்பா இருக்கிறது போல படிப்பு மட்டும் பாருங்கனு .மற்றபடி நான் எதிர்பார்க்கிறது , நான் நானா இருக்கணும்னு நினைக்கிறது போல அவ அவளா இருக்கணும்… எனக்காக எந்த காம்ப்ரமைஸும் பண்ணக் கூடாது….
கேட்டுக் கொண்டிருந்த வரு , ” விக்கி ….. ஐ லவ் யூ … ” என சத்தம் வராமல் வாயசைத்துக் கொண்டாள்.
“டேய் மச்சான் நீ காதலிக்கல அதுனால இப்படிப் பேசுற… காதலிச்சாதான் உனக்கு அது எல்லாம் புரியும் …. ” இப்படியே அவர்கள் பேச்சுப் போக ,
” திலீபண்ணா சொல்றது நிஜம் விக்கி … எப்ப உன் மேல காதல் வந்ததுனு தெரியல … ஆனா அப்பயிருந்து நான் நானாவே இல்ல…. உனக்காக நிறைய என்னை மாத்திக்கத் தோணுது….. ” என நாணத்தோடு நினைத்து புன்னகத்துக் கொள்ள ,
கதவைத் தட்டிக் கொண்டு “வரு ” என்றழைப்புடன் வித்யா உள்ளே வந்தாள்.
தோழியைப் பார்த்ததும் அவளுடன் பேசிக் கொண்டே கீழே வர , அங்கு விக்ரம் கனிப் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு மதுரைக்கு கிளம்ப காரில் ஏறினான்.
வித்யா விக்ரம் காரில் ஏறுகின்ற வரையிலும் அவன் கைப் பிடித்துக் கொண்டே பேசினாள் என்றால் , வருவும் மனதோடு விக்ரமிடம் தான் பேசிக் கொண்டு வந்தாள். அரவிந்த் அருகில் நிற்க , மலர்ந்த விழிகளால் அவனிடம் விடை பெற்று வித்யா கிளம்ப , விழிநீர் தேங்க விக்ரமின் கார் கண் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அமிர்தவர்ஷினியின் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் அனுவித்யா.
தூவும்…..