மழைத்துளி 24
வரவேற்பறையில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ செய்துக்கொண்டிருந்த விக்ரம் , வாசலில் ஒரு கண்ணும் , லேப்டாப்பில் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான்.
அவனது தாத்தா பாட்டி வெளியே சென்றிருக்க லதா மட்டும் வேலையாட்களோடு பொங்கல் சீர்வரிசைப் பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
மணி பார்த்தவன் , ” ம்மா எங்கம்மா உங்க மருமக … இன்னும் காணோம் … ” என சலித்துக் கொண்டே கேட்க ,
” என் மருமக அவ அண்ணனயும் , உன் சித்தி அவங்க அண்ணனையும் பார்க்கப் போயிருக்காங்கப்பா … ”
“அதாவது என் மச்சானும் , என் மாமனாரும்னு சொல்லுங்க ….”
“அடடா என் பிள்ளைக்கு இப்ப உறவு முறை எல்லாம் சரியா தெரியுதே… ”
“ம்மா….. ” என செல்லம் கொஞ்சியவன் அருகில் இருந்த பொருட்களைக் காட்டி ,
“சரி இதென்ன இதுல ஒன்னுமே யுஸ் பண்ணப் போறது இல்ல … அப்புறம் எதுக்கு இது … அதுவும் நாலு செட் எதுக்கு மா….. ” என அங்கிருந்த பித்தளை , வெண்கல பாத்திரங்களைக் காட்டிக் கேட்க ,
“சின்ன பாப்பாவுக்கு தல பொங்கல் அதுனால கொஞ்சம் அதிகம் , இது பிரியா குட்டிக்கு, இது உங்க அத்தைக்கு , இது உன் கனி ஆச்சிக்கு தாத்தா கொடுக்கிறார் …. ”
” என்ன எல்லோருக்குமா விதுவுக்கு மட்டும் போதாதா … அவளுக்கு தானம்மா ஃபர்ஸ்ட் பொங்கல் …. ” என வியந்தவனிடம் ,
“தாய் வீட்டு பொங்கல் சீர் கிடைக்க கொடுத்து வைக்கணும் ராஜா….. எனக்கு கோடியா கோடியா சொத்து இருந்து என்ன பண்ண , எங்கப்பா அம்மா இருக்கிற வரை வந்துச்சு … இப்ப …..” எனப் பெருமூச்செறிந்தவர்,
“கூடப் பிறந்தவங்களும் இல்ல , இருந்திருந்தா இப்படி மாமா அந்த பெரியம்மாவுக்கு தர மாதிரி எனக்கும் வரும்…. ராஜா நீயெல்லாம் பெரியவளுக்கும் சின்னவளுக்கும் காலத்துக்கும் செய்துடு….அதேப்போல என்னைப் போல ஒத்தப் பிள்ளையா இல்லாம குறைஞ்சது மூணு பிள்ளையாவது பெத்து என் கைல கொடு… ”
சரியாக அந்நேரம் உள்ளே வந்த வரு அவர்களது உரையாடல்களைக் கேட்டவள் , புன்னகைத்துக் கொண்டே லதா அருகில் அமர்ந்து அவருக்கு உதவ ,
” ராஜா ரெடியாகு , இதெல்லாம் போய் கொடுக்கணும் , நாம முதல்ல கொடுத்துட்டு வந்துடுவோம் … இப்ப தானே அண்ணன் வந்துருக்காங்க .. அப்புறம் அவங்க வர சரியா இருக்கும் … ”
அதற்குள் மொபைலில் ஏதோ டைப் செய்துக்கொண்டே அறைக்குள் வந்தவளை, கட்டிப்பிடித்துக் கொண்டவன் ,
“எவ்வளவு நேரம் தேடுறது … எழுந்ததும் நீ பக்கத்துல இல்லாதது என்னவோ போல இருக்கு …. ”
அவள் அமைதியாக நிற்கவும் ,”என்னாச்சு … ” என அவளை நிறுத்திப் பார்க்க ,
எப்படிச் சொல்வாள், மருத்துவர்களாக வருவின் உடல்நிலை அறிந்தவர்கள் , உன்னால் பேச முடியும் முயற்சி செய் என்ற போதெல்லாம் வாயே திறக்காமல் … சைகையாலு
ம் , எழுதிக் காண்பித்தும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவள், சத்தம் அதிகம் இல்லையென்றாலும் இப்போது பேசுகின்றாள். எப்படி இப்படி நான்கு வருட மெளனம் சாத்தியம் என்றுக் கேட்கிறார்கள். கண்டிப்பாக முயற்சி செய்யாமல் இப்படி பேச இயலாது. ஆனால் தங்களிடம் பேசவே இல்லையே… என்ற ஆதங்கத்தை இப்போது வெளிப்படுத்தினார்கள் என்பதை எப்படிச் சொல்வாள்.
பதிலேச் சொல்லாமல் நின்றவளை உலுக்கியவன்,
“ரிது என்னாச்சு … ”
“அ…ப்பா…. அண்ணா….” என்றவள், இப்போது அவள் அவனைக் கட்டிக் கொண்டாள். பிறந்த வீட்டினரைக் கண்டதால் இப்படி இருக்கிறாள் என நினைத்தவன் அவளை சமாதானம் செய்து கிளம்பினான். ஒரு லாரி முழுவதும் சீர்பொருட்கள் நிரம்ப , பணம் ,நகை, துணிமணிகளை கைகளில் ஏந்திக் கொண்டு திலீபன் வீட்டிற்குச் சென்றனர்.
ஊராரும் உறவுகளும் வியந்துப் போகும் வண்ணம் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு சீர் செய்தனர். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்ததும் கனிப் பாட்டி தங்கள் வீட்டுப் பெண்களுக்கு கொடுத்து விட ,சிவனாதன் பரணி கையில் ஒரு தட்டும் , திலீபனும் அரவிந்தும் இணைந்து அமிர்தா கையில் ஒரு தட்டுத் தர , ஓரமாக நின்றிருந்த லதாவை அழைத்த விஸ்வனாதன் , அவர் கையில் ஒன்றைத் தந்து ,
“மா… திடீர்னு வாங்க முடிஞ்சது இதுதான் மா…” என , அவர் காலில் விழுந்து கையில் வாங்கிக் கொண்ட லதாவிற்கு, வார்த்தைகள் வரவில்லை , பார்த்திருந்த அத்தனைப் பேருக்கும் நெகிழ்ச்சியாக இருக்க , விக்ரம் தன்னவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குத் தெரியும் இதற்கு காரணம் அவளாகத்தான் இருக்கும் என்பது. மறு நாள் காலையிலயே புதுமண தம்பதியர்கள் தங்கள் வீடுகளின் முற்றத்தில் புத்தாடைகள் அணிந்து புதுப் பாத்திரங்களில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
அறைக்குள் வந்த விக்ரம் , ” எப்படித் தான் இந்த வேட்டிய கட்டிட்டு இருக்காங்களோ ” என்றவாறே ஷார்ட்ஸ் டீ சர்ட்க்கு மாறியவன் ,
“ரிது சொல்லு எப்போ கிளம்பலாம் , நாளைக்கு மருமகனுக்கு பெயர் வச்சதும் கிம்புவோமா… இங்கயிருந்தே கன்ட்ரோல் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ….”திருதிருவென விழித்தவள்,
“அத்தைக் கிட்ட கேளுங்க…” என்று விட்டாள் .காரணம் அவனோடு குமரிக்கு அனுப்ப முடிவெடுக்கவில்லை. விக்ரம் சென்று , “அம்மா இன்னும் ரெண்டு மாசம் தான் கம்ப்ளீட் ஆக … நாங்க நாளைக்கு குழந்தைக்கு பெயர் வச்சதும் கிளம்புறோம் … ”
” என்ன நாங்க கிளம்புறோமா…. நீ மட்டும் தான் கிளம்புற …. சென்னைல கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணனும் , பாரு பத்து நாள் தொடர்ந்து ஸ்பீச் தெரபி கொடுத்து நல்லா பேசுறா … இன்னும் பழகினா நார்மலா பேசிருவானு அண்ணன் சொன்னாங்க…சோ என் ராஜா ல நீ வேலை எல்லாம் முடிச்சிட்டு சென்னை வா. அதுவரை அவ உடம்ப தேத்தணும்னு எங்க அத்த ஆர்டர் போட்டாச்சு ….”
மனைவியை பார்க்க , அவள் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாக செய்கையில் காட்ட , அதற்குள் விஸ்வனாதனும் சிவனாதனும் கனியை அங்கு அழைத்து வந்திருந்தனர்.
கனி தன் அண்ணனைப் பார்த்து , “அண்ணே நாளைக்கு எல்லாரும் குடும்பத்தோட கொள்ளுபேரன் பெயர் சூட்டலுக்கு வந்துரணும்… அதோட என் பேத்தி கல்யாணம் திடீர்னு நடந்துப் பேச்சு , ஊருக்குள்ள என்ன ஏதுனு ஒரே கேள்வி … அதான் அப்படியே அவுகளையும் மனையில நிப்பாட்டி வரவேற்பு கொடுத்து ஊரு வாய அடைச்சிடலாம்னு பார்க்கிறேன். நீங்க என்ன சொல்லுதீக… ” என தன் அண்ணனைக் கேட்க ,
சங்கரியோ ” எல்லாம் முடிவு பண்ணிட்டு கேள்வியப் பாரு….” என முனுமுனுப்புடன் கணவரைப் பார்க்க , அவர் ஒப்புதலாக தலையசைக்க ,
“அது தானே தங்கச்சி சொன்னா மறுப்பேச்சேது….நான் என் பேரனுக்கு மெட்ராஸ்ல பெரியவிருந்தா கொடுக்கப் போறேன் ஆமா…” எனத் தோளில் முகத்தை இடித்துக் கொண்டார்.
விக்ரமோ “திடீர்னு கல்யாணம் பண்ணி வைங்க , திடீர்னு வரவேற்பு வைங்க , ஆனா பொண்டாட்டிய மட்டும் கூட இருக்க விடாதீங்க.… என்னவோ போடா ஆதி ” என சலித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான்.
அவர்கள் சென்று சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் தங்கைகள் ,கணவன், குழந்தை சகிதமாக வர , அவர்களோடு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர்.
சங்கீதா வருவிடம் , ” ஏன் வரு பெரியவங்களுக்குள்ள பிரச்சினைனா நாங்க என்ன பண்ணினோம்…. ஒரு வார்த்தைக்கூட நீங்க யாரும் உனக்கு இப்படி ஆனத சொல்லலியே … அப்படியே நாங்க ஃபோன் பண்ணினாலும் தவிர்த்துட்டீங்க … நீ வீடியோ கால்ல பேசி என்னை சமாதானப்படுத்தினாலும் உன்னைய நேர்ல பார்த்து திட்ட தான் முடிவு பண்ணியிருந்தேன். அப்படியும் என்னைய யாரோ போல நினைச்சதானே … அந்த வகைல உன் மேல எனக்கு ரொம்பவே கோபம்தான்.அம்மா சொன்னப்போ எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா , ஆமா நீ எனக்கு கொடுத்த கிஃப்ட் பார்சல நீயே எடுத்துட்டு போயிட்டியாம்…. ஏன் …அத்தை சொன்னாங்க , அண்ணி கைல கொடுத்து பிரிக்கப் போறேன்னு எடுத்துட்டு போனதை , பிரச்சினைல மயங்கி கீழ விழுந்தப்பவும் அந்தப் பார்சல நீ கெட்டிய பிடிச்சுக்கிட்டியாம் … அப்படி என்ன கிஃப்ட் வரு அது …..”
கேட்டிருந்த விக்ரம் , “என்ன கிஃப்ட் பாக்ஸா….” அவன் மேலும் பேசுவதற்குள் மருமகனை அவன் கையில் கொடுத்தவள்,
“அது… அது… ஒரு ஸ்கேல் மாடல் அண்ணி… அத விடுங்க எனக்கு மெகந்தி போட்டு விடுங்க ப்ளீஸ்….” எனக் கண்ணைச் சுருக்க ,
“இதுக்கு எதுக்கு ப்ளீஸ்…. வா அவங்க மாமா குட்டிய பார்த்துக்குவார்… ” என எழுந்து செல்ல முயல ,
வருவின் ப்ளீஸ் … என்ற வார்த்தையில் அவளிடம் ,
“ஆமாமா இதுக்கெல்லாம் ப்ளீஸ் போடலாமா … நீங்க போங்கம்மா நான் என் மருமகனப் பார்த்துக்கிறேன் …ஒரு நிமிஷம்… ரிது ப்ளீஸ் … ” என வாய்க்குள் புன்னகையை அடக்கிக் கொண்டே விக்ரம் கேட்க , திடுக்கிட்ட வரு அவன் முகம் பார்க்க , கண் சிமிட்டி ,
“தண்ணிக் கொண்டு வா ப்ளீஸ் …..” எனச் சிரிக்க , அவனை முறைத்து விட்டுத்தான் நகர்ந்தாள்.
இரவில் அனைவரும் அவரவர் வீடு போக , கையிரண்டிலும் மருதாணி இட்டுக் கொண்டு அறைக்குச் செல்ல இருந்தவளிடம்,
“அமிர்தா மா , நீ கையில மருதாணி போட்டுருக்கனு பால் எடுத்துட்டு ரூமுக்கு போனேன் …ஆதி மொட்டை மாடில நடக்கப் போறேன் , அப்புறம் வந்துக் குடிச்சிக்கிறேன்னு சொல்லிட்டான்… குளிர் காத்து ரொம்ப அடிக்குது , சீக்கிரம் வந்துப் படுத்தாதான் நாளைக்கு சபைல நிற்க முடியும் … ” என்று விட்டுச் செல்ல ,
கையிரண்டையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றவளுக்கு , பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடியது. மென்னகையோடு ஓரமாக நின்று அவ்வூரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவன் அருகில் சென்றாள். குற்றாலம் அருகில் இருப்பதாலோ என்னவோ , குற்றாலச்சாரல் அங்கும் இருப்பதாக தோன்றியது வருவுக்கு .