கல்யாணி, கண்ணில் நீர் வழிந்தபடியே… அந்த போனை ஆசையாக பார்த்தபடி அமர்ந்திருந்தார். ஏதோ தன் பையன் நேரில் வந்ததது போல் ஒரு எண்ணம்.
“நான் வருகிறேன்” என சொன்னதே போதுமானதாக இருந்தது அந்த தாய்க்கு. தன் கணவனிடம் “என்னங்க… சீக்கிரம் வாங்க கன்யா வீட்டுக்கு போலாம்…. இத சொல்லணுமில்ல… வாங்க” என பரபரப்பானார்…
சண்முகம் “அம்மா… என்ன அவசரம்… இரு, முதல்ல அண்ணன் என்ன சொல்றான் கேட்கலாம்… அவசரபடாத கொஞ்சம் பொறுமையா இரு” என அதட்டினான்.
சண்முகம் இப்போது தன் தந்தையை பின்பற்றி… LICயில் பணியில் உள்ளான். கொஞ்சம் யோசிக்கும் பக்குவம் பெற்றவன்.
எனவே, தன் அன்னையை சற்று அதட்டினான் பின் “இப்படி அவசர பட்டுதான்… அண்ணனையும் கஷ்ட்டபடுத்தி, ஒருபாவமும் தெரியாத அண்ணியையும் கஷ்ட்டபடுத்தி வைச்சிருக்கீங்க…
பொறுமையா இருங்க… பார்க்கலாம்” என்றவன். தன் அண்ணனிற்கு இன்னொரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினான். பதறாதவனாக.
சதா, அந்த மெசேஜ்சை பார்க்கவே மறுநாள் ஆனது… எனவே சண்முகமும் வெயிட் செய்ய சொன்னதால் அமைதியாக அமர்ந்தனர் வெங்கட் தம்பதி.
இப்போது சண்முகத்திடம் போன் இருப்பதால்… பொறுமையாக தனது கேள்விகளை கேட்டு தன் அண்ணனிடமிருந்து எல்லா விவரங்களையும் பெற்றான்.
வீட்டில் வந்து “ப்பா, அண்ணன் வர கல்யாணம் கழிச்சி ஒரு வாரம் ஆகும். ஆனா, இந்த தரம் கண்டிப்பா வந்திடுவான். டெல்லி போயிட்டு, அங்கே இவன் வருவதால் ஒரு சின்ன பங்க்ஷன். அதனால் அதை முடித்துதான் வருவான்.
பிறகு அங்கிருக்கும் டாக்டர்களுடன் இரண்டுநாள்… மீட்டிங். பிறகுதான் இங்கே வரான். அதனால ஒரு வாரம் ஆகும்.
வெங்கட் “கண்டிப்பா சொன்னனா… வந்திடுவான்ல்ல…” என்றார் என்ன குரல் அது. உடைந்த குரலில் நம்பிக்கை இல்லாமால் வந்த குரல் அது.
சண்முகம் இருந்த இடத்தில் அமர்ந்தபடியே “கண்டிப்பா… இனி இங்கதான் இருப்பான்… நாம பேசிக்கலாம்… இப்போ அண்ணி வீட்டில் என்ன சொல்லுவது” என்றான்.
ஏனோ இப்போதும் கைபிசைந்து கொண்டு நிற்கும்படி வைத்த மகனின் மீது அந்த தாய்க்கு கோவமே வரவில்லை… “கிளம்புங்க கிளம்புங்க… என் மருமக கிட்ட சொல்லணும்….“ என அவசரபடுத்தினார் கல்யாணி.
வெங்கட், பெருமூச்சு விட்டபடி எழுந்து கிளம்பினார்… அங்கே க ன்யாவின் வீட்டிற்கு சென்றனர், மாலையில்.
கார்த்தி, கன்யா என இருவரும் வேளையில் இருந்து வந்திருந்தனர். மொதுவாக, வெங்கட் எல்லாவற்றையும் சொன்னார் மைதிலியிடமும் கார்த்தியிடமும்.. கன்யா எல்லாவற்றையும் கேட்டபடி தன் அறையில் அமர்ந்திருந்தாள் வெளியே வரவில்லை…
கார்த்தி “எனக்கு தெரியும் அவன் வரமாட்டான்னு… இன்னும் எத்தனை தரம் நாங்கள் ஏமாறுவது… இதே உங்க பொண்ண இப்படி செய்தா சும்மா இருப்பீங்களா…” என்றான் அமைதியான குரலில்.
மைதிலி “கார்த்தி.. அமைதியா இருப்பா… எல்லாம் பொறுத்தாச்சு… கடைசி நேரத்தில் வார்த்தையை விடாதப்பா” என்றார்.
கார்த்தி கையை உதறிக் கொண்டு… மேலே சென்றுவிட்டான். மைதிலி “என்ன அண்ணா சொல்ல… அவன் கோவம் நியமானது தானே… மனசுல எதுவும் எடுக்காதீங்க ண்ணா… பார்த்துக்கலாம்” என்றார் குரலில் சின்னதாக கவலை இருந்ததோ…
என்ன இருந்தாலும் நாளை மகள் போய் வாழ போகின்ற வீடு… அதனால் அன்னையாக சற்று பொறுத்துதானே செல்ல வேண்டும்… மேலும் இன்று வருவான் நாளை வருவான் என்ற நிலை மாறி இப்போதுதான் வர போகிறான்…
எனவே இத்தனை வருடம் அமைதி தெரியாது.. ஆனால் ஏதேனும் இப்போது சொல்லி அந்த வார்த்தையே அவர்கள் மனதில் நின்றுவிட்டால் நாளை, கன்யாவிற்குதானே பிரச்சனை… எனவேதான் மைதிலி, அவ்வாறு சொல்லியது.
தன் மருமகளை பார்க்க… உள்ளே சென்றார் கல்யாணி, அங்கே கன்யா ஏதோ போன் பார்த்துக் கொண்டிருந்தாள்… “என்னம்மா… இப்போவாது ஏதாவது சொல்லேன்…” என்றார் ஆற்றாமையாக.
ஏதேதோ கனவுடன்தான் வந்தார் கல்யாணி… தன் மருமகள் பூரித்து போவாள்… அதை பார்க்க வேண்டும் என எண்ணிதான் வந்தார். ஆனால் கன்யாவின் முகம் காட்டியது என்ன…
எப்போதும் அருகில் வரும் அவள் இன்று, தன்னிடம் சரியாக பேச கூட இல்லை என்பதை இப்போதுதான் அவளின் முகத்தை பார்த்து உணர தொடங்கினார்.
கன்யா இன்னும் தெளிவில்லாமல் சிரிக்க… மைதிலி “சரியாகிடும்மா… சதா சரி செயவான்ம்மா” என்றார். நம்பிக்கையாக.
கன்யாவிற்கு லேசாக சிரிப்பு வந்தது அந்த வார்த்தையில்… ‘இவர்களுக்கு எப்போதும் அவன் நல்லவன்தான்… இருக்கட்டும் அப்படியே இருக்கட்டும்.. ஆனால்.. எனக்கு, வந்த பின்தானே தெரியும், என்ன செய்ய போறானோ…’ என உள்ளுக்குள் ஓட தொடங்கியது.
இருந்தும் “சரித்த…” என்றாள். சமாதானமாக இருந்தது அந்த சிரிப்பு… கல்யாணிக்கு வலிக்கத்தான் செய்தது அதை பார்த்து. ஆனால் இந்த நிமிடத்தை அப்படியே கடந்தனர் இருவரும்.
அப்படியே பேசியபடி டிபன் முடித்து இருவரும் கிளம்பினர். கார்த்தி அதுவரை கீழே வரவில்லை. அவனிற்கு இப்போதும், ஐய்யோ! என்றானது… ஏதோ சொல்ல முடியாத நிலை… நான் அவசரப்பட்டு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேனோ என தோன்றியது.
அன்று இரவு உணவு முடிந்து… கன்யா மேலே மொட்டை மாடிக்கு சென்றாள்… கார்த்தி அவளை பார்த்தபடியே உண்டு முடித்து தானும் சென்றான். மைதிளிக்குதான் பயம்… ஐயோ புதுசா என்ன பிளான் பண்ண போறாங்களோ என பதைக்க தொடங்கியது
இப்போதெல்லாம் அண்ணனும் தங்கையும் முகம் பார்த்து பேசிக் கொள்ளும் நேரங்கள் சற்று குறைந்தே போயின எனதான் சொல்ல வேண்டும்…
அதுவும் இந்த நிச்சையம் முடிந்தது முதல் இன்னும் குறைந்தது… தங்களின் தந்தையை இழந்த சமயம்… இருவரிடமும் அப்படி ஒரு பாசம் இருக்கும்.
அனுஷா திருமணம் முடித்த நிலையில் எப்போதும் கார்த்திதான் கன்யாவிற்கு. ஆனால், இப்போது அவன் சற்று தூரத்தில் இருப்பது போல் தோன்ற தொடங்கியிருந்தது.
எனவே, மேலே வந்த அவனை நிமிர்ந்தும் பார்க்காமல்… கீழே ஓர் மூலையில் அமர்ந்து காலை நீட்டி வானத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்… ஏதோ ஆராய்ச்சி பாவம் முகத்தில்..
கார்த்தி அவளை பார்த்த படி அருகில் வந்து அமர்ந்து கொண்டான். “என்னா டா… எதுவும் பேசாம வந்திட்ட… “ என்றான் அமைதியாக.
கன்யாவிடம் அமைதிதான் பேசவில்லை அவள், இப்போது கார்த்தி அவளை பேசவைக்கும் எண்ணத்துடன் “என்ன… உன் புருஷன் வரானாமா… எப்போ டிரீட்” என்றான்.
கன்யா “இதேதாண்டா நாளைக்கு யெஸ்வந்தும் கேட்பான்… எப்படிடா, இப்படி இருக்கீங்க நீங்கல்லாம்” என்றாள்
கார்த்தி போர்ம்க்கு வந்துவிட்டாள் என எண்ணி.. “என்ன செய்ய உன்ன மாதிரி சோக கீதம் வாசிக்க முடியுமா… போ.. போ
அன்னிக்கு என்ன மேக்கப் போடலாம்ன்னு யோசிப்பியா… இப்படி உட்கார்ந்திருக்க… “ என்றான்.
கன்யா “ண்ணா… எப்படிண்ணா அவன் கூட வாழ முடியும், திரும்பி கூட பார்க்காமல் போனவன் ண்ணா…” என்றாள் தன் அண்ணனின் தோள் சாய்ந்தபடி..
என்ன சொல்லுவான் அண்ணன், அவனிற்குமே இது பெரிய கேள்விதான். ஆனால், ஏன் என தெரியாத பொறுமை… எப்படி இத்தனை ஆண்டுங்கள் ஓடியது என அவனிற்குமே புரியாத நிலையில் அமைதியாகத்தான் இருக்க முடிந்தது அவனால்.
கன்யா “ண்ணா வேண்டாம்ண்ணா அவன் எனக்கு வேண்டாம் ண்ணா… நா… எனக்கு பயமா இருக்குண்ணா..” என்றாள் குரலில் கரகரப்பு.. இருந்தாலும் கண்ணில் உறுதிதான் இருந்தது.
கார்த்திக்கு திடுக்கிட்டு போனது… இத்தனை வருடங்கள் இப்படி கன்யா பேசியதே இல்லை… ஏன் சதா என்ற பெயர் கூட வாயில் வந்ததில்லை… அப்படியிருக்க இப்படி பயம் என பிதற்றுவது அவனிடம் ஒரு அச்சத்தை உண்டு பண்ணியது
எனவே கார்த்தி “ஹேய்… என்னாச்சு… ஏன் பயம்… இப்போதான் புதுசா உனக்கு கல்யாணம் பன்றோம்ன்னு நினைச்சிக்கோ… நீ சொல்ற மாதிரி எல்லாம் சரியாகிடும்” என்றான் அவளின் முகம் நிமிர்த்தி.
கன்யா தன் அண்ணன் கண்களை தவிர்த்து, திரும்பவும் வானத்தை வெறிக்க தொடங்கினாள். கார்த்திக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை “அப்புறம் ட்ரீட் மறந்திடாதே..” என்றவன்
“வா கீழ போலாம்… அம்மா இந்நேரம் என்ன குண்டு வர போகுதோன்னு பயந்து போயி இருப்பாங்க.” என்றான் சிரித்தபடி.
கார்த்திக்கு, தான் ஏதேனும் சொல்ல போயி அவளின் இத்தனை வருட பொறுமை, காத்திருப்பு எல்லாம் வீணாகி போகிவிடுமோ என்ற எண்ணம் வந்தது.
மேலும், இந்த எண்ணம் வளர்ந்து அந்த கண்ணோட்டத்துடன் சதாவை பார்ப்பது நல்லது அல்லவே எனவே பேச்சை கத்தரித்து கீழே அழைத்து சென்றான்.
அதனை தொடந்து வந்த நாட்களில் மிகவும் கவனமாகவே கன்யாவை கையாண்டனர் அவளின் அம்மாவும் அண்ணனும்…
எப்போதும் அவளை பார்க்கும் போதெல்லாம்… “இன்னும் கொஞ்ச நாள்தான் அப்புறம் கனி பிஸியாகிடுவா” என்பான்.
“ம்மா அவளுக்கு நல்லா.. சாப்பாடு செய்ய சொல்லிக் கொடு” என்பான். கன்யா நன்றாகவே சமைப்பாள் என்றாலும் கார்த்தி வாய் பேசினான்.
இப்படி அவளை குளிர்வித்து, சீண்டி, தயாராக்கி என பலவகையில் கார்த்தி, அவளிடம் சிரிப்பை பார்க்க விழைந்தான். ஆனால், அவளிடமிருந்து சங்கடமான புன்னகைதான் பதிலாக கிடைத்தது அவனிற்கு.
கன்யா, இப்போதெல்லாம் சற்று ரெஸ்ட்லெஸ்சாக இருந்தாள். வீடு அவளிற்கு இப்படிதான் அந்நியமானது, அதில் நீ அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கட்டளை இருந்ததோ… புரியவில்லை அவளிற்கு, எனவே எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க கற்றுக் கொண்டாள்.. நாட்கள் நகர்ந்தது.
கார்த்தி கீர்த்தனா திருமணம் இனிதாக முடிந்தது சத்யமங்களத்தில்… இவளை கேட்காதவர்கள் பாக்கி கிடையாது… ஊர் உறவு நட்பு என எல்லோரும் கேட்டாகி விட்டது “எப்போ சதா வரான்” எனதான்.
ஆனால் கன்யா தயங்காமல் பதில் சொன்னாள்… அது அவளுக்கு பழக்கம் தானே ”இன்னும் ஒரு வாரத்தில்” என சொன்னாள். எல்லோரும் கிண்டல் செய்தனர். பெருமை பேசினர்.
“எப்படியோ பெரிய டாக்டர்க்கு வாழ்க்க பட்டுட்ட… இனி உனக்கு என்ன…” என்ற பெருமூச்சு..
“உன் அப்பன் சரியாதான் செய்திருக்கான் ” என்று சிலர் குறி சொல்லினர்
“இனிதான் கவனமா இருக்கணும்” என இப்படி பல பல முகங்கள்…
கன்யாவின் முகத்தில் அதே இழுத்து வைத்த சிரிப்பு… எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், யாரின் பேச்சையும் காதில் வாங்கமல் தன்போல் வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.
பெண் மாப்பிள்ளை மறுவீடு முடிந்து அடுத்த வாரம்… கறிவிருந்து என்றனர்.. எனவே அதில் பிசி உறவுகள் அனைத்தும்,.
திருமணத்தை விட இந்த கறி விருந்துதான் கலைகட்டும் உறவுகளிடம்.. ஒரு சண்டேயில் வைப்பார்கள் அனைவரும் வருவது போல…
எல்லா உறவுகளும் ஊரில் எனவே, அங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்றனர்… கீர்த்தி வீட்டினர். எனவே அங்குதான்… சத்யமங்களத்தில்… கார்த்தியின் பூர்வீக வீட்டில்… விருந்து.
தோட்டத்தில் அட்டானஸ் போட்டு சமையல், தயாராகி கொண்டிருந்தது. உறவுகள் சூழ… வீடே பேச்சு சத்தத்துடன் கறி குழம்பின் மணமும் சேர்ந்து அந்த இடமே அமளி துமளி பட்டுக் கொண்ட்டிருந்தது…
மைதிலிக்குதான் மனமே இல்லை “என் மகன் இன்றுதான் வரேன்னு சொல்லியிருக்கான், இந்த வாரம் இல்லாட்டி… என்ன, அடுத்த வாரம் இதை வைத்து கொள்ள கூடாதா…” என ஒரு எண்ணம்… எனவே எப்போதும் தன் மருமகளை சுற்றும் மாமியார் இன்று அமைதியாக அமர்ந்திருந்தார்.
கார்த்தி இங்கும் அங்கும் நடந்தபடி ஏதோ பரபரப்பாக இருந்தான்… சண்முகம் எங்கே என கூட தெரியவில்லை.. கன்யா எதற்கோ கார்த்தியை தேட கார்த்தியும் பரபரப்பாக போன் பேசியபடி இருந்தான்.
கன்யா “கார்த்தி” என்றாள் ஆராயும் பார்வை பார்த்தபடி
கார்த்தி “என்ன “ என்க
“என்ன ஒரே பரபரப்பா… இருக்க” என்றாள்
கார்த்தி அவசரமாக “ஒண்ணுமில்லயே..” என்றான்.
கன்யா இன்னும் அதிசயமாக அவனை பார்த்தபடி நின்றாள் “இவ வேற நேரம் காலம் தெரியாமல்” என்றபடி விரைந்து சென்றுவிட்டான்.
சதாவை நேரே இங்கே வர சொல்லியிருந்தான் சண்முகம். நேற்றே சென்னை வந்து விட்டான் சதா… வீட்டிற்கு செல்ல முடியவில்லை இவர்கள் இங்கு இருப்பதால், எனவே ஹோட்டலில் தங்கினான்.
இந்த தகவல் கார்த்திக்கு, மட்டும் சொல்லப்பட்டது சண்முகத்தால். எனவே இருவரும் சேர்ந்து சதாவை இங்கு வர செய்து கொண்டிருந்தனர்.
சதா, முதலில் முடியாது என்றான். பிறகு சண்முகம்தான் உறவுகள், எல்லாம் இங்கு இருக்கிறது எனவே வந்து சென்றால் நல்லது. நீ, கல்யாணத்திற்கு வராததே.. பெரிய இஸ்ஸு, அதனால் வா… என பொறுப்பான தம்பியாக… உறவுகளிடம் தன் குடும்பம்.. பேச்சு வாங்கியதை பார்த்தவனாக, தன் அண்ணனை கரைத்து வர செய்திருந்தான்.. இங்கு.
சதாவிற்கும், அதுவும் நல்லதாக பட இதோ இப்போது கோவையில் இறங்கிவிட்டான். அவனை அழைத்து வர சண்முகம் சென்றிருந்தான். இதோ இப்போது சதாவை பிக்கப் செய்துவிட்டேன் என்ற தகவலைத்தான் கார்த்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
இங்கு யாருக்கும் சொல்லவில்லை ஒரு சர்ப்ரைஸ்… என்பதுபோல் நினைத்தான்… வேலைகள் நடந்தது… பந்தி பரிமாறப்பட்டது.
முக்கிய உறவுகள் முதலில் அமர்ந்து உண்ண… கீர்த்தி, கன்யா, அனுஷா, யசோதா என எல்லோரும் பரிமாறிக் கொண்டிருந்தனர்…
அவ்வளவு நேரம் கட்டியிருந்த புடவையை மாற்றி… எல்லோரும் சுடி போட்டு பரிமாறினார்… சென்ட் பக்டரிக்கு, பயம் புடவையில் ஏதேனும் வாடை வருமென… அதான்…
சின்ன சின்ன ஏவல்கள்.. அதற்கு தக்க கிண்டல்கள், இளம் வயது மக்கள் பரிமாற, பெருசுகள் பேசியபடி உண்ண… பேச்சும் சிரிப்புமாக… கிண்டலும் கேலியுமாக கலைகட்ட தொடங்கியது பந்தி…
கொஞ்சம் கொஞ்சம் கூட்டம் கலைய தொடங்கியது… நெருங்கிய உறவுகள், அத்தை மாமா இவர்கலெல்லாம் உண்டு, அங்காங்கே அமர்ந்து பேச தொடங்க… இன்னும் இருவீட்டார் மட்டும் உண்ணாமல் அமர்ந்திருந்தனர்… ஷன்முகத்திற்காக…
சண்முகத்தின் கார் உள்ளே வந்தது. அதிலிருந்து இறங்கினான் சதா… முதலில் பாவம் கல்யாணிக்கு அடையாளமே தெரியவில்லை… முற்றிலும் வேறாய்… நின்றான் சதா.
சண்முகம்தான் “ம்மா… சதா தான் ம்மா” என்றான்.
அந்த க்ஷன நேரம்தான் அமைதி, கல்யாணியிடம். அதன்பின் சத்தம்தான்.. “வ வா… தம்பி, வாப்பா… உள்ள வா…
சண்முகத்தை பார்த்து “டேய்… சேர் எடுடா.. நீ வா…” என
தன் மகனை கையில் பிடித்தபடியே “கன்யா.. மா… கன்யா… வாடாம்மா…” என கண்கள் தேடியது, தாய் தேடும் கன்றாய்… தன் மருமகளைதான் முதலில் தேடியது கல்யாணியின் கண்கள்.
அதற்குள் “அண்ணி, புள்ளைய கூப்பிடுங்க…” என மைதிலியிடம் சொன்னார்.
சதாவிடம் “என்ன பா குடிக்கிற… காபி குடிக்கிறியா… இல்ல.. சாப்பிடு சம்மு..” என திக்கு.. முக்கு.. தெரியாத சந்தோசம்…
சதா, அவரையே பார்த்தபடி நின்றிருந்தான்… எல்லோரும்தான். சதா அன்னையின் அருகில் வந்து “ம்மா” என தன் உயரத்தை குறுக்கி அவரை அணைத்தான்..
அவன் பிறந்தபோது… தான், அவனை இப்படிதான் அனைத்திருப்பேனோ என எண்ணியபடியே அவனின் கட்டுக்குள் அடங்கி, கண்கள் உடைப்பெடுக்க ஆசுவாசம் ஆனார் கல்யாணி.