வரம் வாங்கி வந்தவள் நான்
கிணி கிணி கிணி என மணி சத்தம் ஒலிக்க…. “காளி, கருப்பா, பாண்டி முனி, ஐயனாரையா.. முத்தாளாம்மா, முத்து கருப்பா, செல்லாத்தா, கண்ணாத்தா, கோட்டை மாரியாத்தா… என்னைப்பெத்த அப்பு, ஆத்தா எல்லாரும் சேர்ந்து எம்புள்ள வர்ற அந்த பறக்கிற பொட்டிய பத்தரமா தரையிறக்கனும்..!!!” அங்கு மாட்டப்பட்டிருந்த சாமிகளுக்கும் தன் தாய் தகப்பனுக்கும் சூடத்தை காட்டியவர் அதை அப்படியே தன் குடும்பத்தினருக்கு காட்ட அங்கு ஒரு பெரிய கூட்டமே இருந்தது..
சின்ன மகள் சுந்தரி மட்டும் வாயில் கைவைத்து சிரித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் பயபக்தியுடன் நின்றிருந்தனர்.. மகளின் முதுகில் ஒரு அடி வைத்த தாய் தெய்வானை,
“ஏட்டி கோட்டி பய மகமாதிரி இப்புடி கெக்க பிக்கன்னு சிரிக்க..??”
“ஹாஹாஹா ஆத்தா இப்ப யார கோட்டின்னு சொன்னிக.. அப்புவையா… இந்தா அவுகக்கிட்ட சொல்லுதேன்..”
“அடியே வாய குறை… ஊருக்குள்ள எல்லாரும் புள்ளை வளர்த்துருக்காலாம் புள்ளைன்னு என்னையவுள்ள வைவாக..??”
மூத்தமகள் வள்ளி, “ஆத்தா இவளுக்கு வரவர வாய் காததூரம் நீளுது.. இவள காலேசுக்கெல்லாம் அனுப்பாதிக… அண்ணே வரவும் எவனையாச்சும் பார்த்து கட்டிவைச்சிடுதிக சொல்லிட்டேன்..??”
[the_ad id=”6605″]
காலை தரையில் உதைந்தவள், “யக்கோவ்… பத்தியா.. வரவுமே என்றக்கிட்டயே உன் வேலைய காட்டுற…!! நீ மட்டுமா வந்திருக்க.. மச்சானும், உன்ற மாமியா, மாமனாரும்தானே வந்திருக்காக.. ஏதாச்சும் இப்பிடியே பேசுனியாக்கும் அப்புறம் நம்ம தோட்டது செந்தட்டிய எடுத்து உன் புருசனுக்கும் மாமியாவுக்கும் தடவிருவேன் பாத்துக்க..”
“அடியே அடியே என்ர.. வாயில நல்லா வந்திரும் பார்த்துக்க.. ஆத்தா வள்ளி இவக்கிட்ட எந்த வம்பு தும்பும் வைச்சுக்காதத்தா.. உன்ற புருசன் சும்மாவே சாமியாடுவாரு.. இவ இதுமாதிரி ஏதாச்சும் பண்ணுனா அப்புறம் இங்கிட்டு வரக்கூட மாட்டாரு.. இவளுக்கு ஒரு திமிர ஆண்டவன் கொடுத்திருக்கானே வரட்டும் என்ர மவன்… இவ செட்டைய ஒடிக்கச் சொல்றேன்…?”
வாயை வக்கலம் காட்டியவள், “வரட்டும் அண்ணே.. அப்புறம் நானே பேசிக்கிறேன்..”
ராமையா..அனைவருக்கும் சூடத்தை கண்ணில் ஒற்றிக் கொள்ள காட்டியவர் சின்ன மகளை பார்த்து, “என்னத்தா சாமிய கும்பிடாத பேசிட்டு இருக்க..?”
“அப்பு.. அண்ணே வர்றாகளே அதுக்கு பேரு பறக்குர பொட்டியில்ல பிளைட்..”
“எந்த பிளேட்டோ நான் என்னத்தா கண்டேன்… நம்ம தலைமுறையிலே அண்ணே தான் அதுல பறந்து போயிருக்கான்.. அண்ணன அந்த கருப்பன்தான் பத்திர கூட்டி வரணும்.. சாமி கும்பிட்டுட்டு எல்லாரும் சாப்பிட்டா அண்ணன கூப்பிட கிளம்பிரலாம்…”
அந்த பெரிய குடும்பத்தின் தலைவர் ராமையா..வெள்ளந்தியான கிராமத்து மனிதர்.. மழைக்குகூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்.. அவருக்கு ஐந்து பிள்ளைகள்.. ஒரு பையன் … அவன்தான் மூத்தவன்.. இன்றுதான் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறான்.. அவனுக்கு அடுத்து நான்கும் பெண்பிள்ளைகள்..
நம்நாட்டில் இருக்கும் விவசாயிகளின் நிலைதான் இவர்கள் குடும்பத்திற்கும்.. வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தார்கள்.. விவசாயம் செய்பவன் இப்படி வறுமையில் இருப்பது ஒன்றும் புதிதில்லையே.. ஆனால் மகன் அப்படியில்லை.. இன்றைய சூழ்நிலை உணர்ந்து நன்கு படித்து ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறான்… இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தன் மகன் சம்பாத்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த ஐந்து ஆண்டுகளில் மகன் அனுப்பிய பணத்திலிருந்து மூன்று பெண்களுக்கு மணம் முடித்திருக்க தங்கைகளின் திருமணத்திற்கு கூட வராதவன் இன்றுதான் தாய்நாடு திரும்புகிறான்..
தங்கள் அண்ணனை பார்க்க மூன்று மகள்களும் தங்கள் கணவன், மாமனார் மாமியாரோடும் அவர்கள் வீட்டில் இருக்கும் நாத்தனார், கொழுந்தனார் என எல்லா நண்டு சிண்டுகளோடும் வந்திருக்க அனைவரும் அவர்களின் மகன் சோம சுந்தரம் என்ற சுந்தரை கூப்பிட வேனில் ஏர்போர்ட்டிற்கு கிளம்புகிறார்கள்..
மூத்த மகள் வள்ளி மட்டும் மூன்று வயது ஆண்குழந்தையோடு இருக்க அவர்கள் குடும்பம் விவசாயத்தோடு வட்டிக்கு விடும் தொழிலும் செய்கிறார்கள்.. மூன்று சம்பந்தத்திலேயே சற்று வசதியானவர்கள்..
அடுத்தவள் சௌந்தரம் ஏழுமாத கர்ப்பிணி.. கணவர் பக்கத்து கிராமத்தில் சிறிய மளிகை கடை வைத்திருக்கிறார்..
மூன்றாவது மகள் நாயகி.. திருமணம் நடந்து ஐந்து மாதங்கள்தான் ஆகிறது பால் வியாபாரம் செய்கிறார்கள்..
கடைசியில் சுந்தரி இந்த வருடம்தான் பதினோறாம் வகுப்பு படிக்கிறாள்…சற்று சுட்டி.. இவர்கள் குலதெய்வமான சோமசுந்தரர், சௌந்தரநாயகி அம்மன் பெயரையே பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பார்கள்..
அங்கு சுந்தர் பிளைட்டில் ஏறியிருந்தவன் சீட்பெல்ட் போட்டு பின்னால் சாய்ந்து அமர மனம் சிறகில்லாமல் வானில் பறந்தது..
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா…”
பிளைட்டில் கண்ணை மூடியிருந்த சுந்தருக்கு என்ன அடக்கியும் தாய் நாட்டிற்கு வரும் சந்தோசத்தை அவன் முகம் அப்படியே காட்டிக் கொடுத்தது.. 25 வயதில் வெளிநாட்டிற்கு சென்றவன் 5 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புகிறான்.. தன் தாய் நாட்டை , குடும்பத்தை பார்க்க போகும் பூரிப்பு அவன் முகத்தில்..!!
சுந்தர் கருத்தநிறம், ஆறடி உயரம் ,அதற்கேற்ற உடல்கட்டு, களையான முகம் கருப்பாய் இருந்தவன் வெளிநாட்டுவாசம் சற்று கலரை கொடுத்திருந்தது.. அனாவசியமாய் பத்து ரூபாய்கூட செலவழிக்காத குடும்ப சூழ்நிலை அறிந்தவன்.. தங்கைகளின் பொறுப்பை விரைவிலேயே தன் கையில் எடுத்துக் கொண்டு எந்த ஆடம்பத்திற்கும் ஆசைப்படாமல் இந்த ஐந்து வருடங்களில் தன் சக்திக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளைகளை பார்த்து மூன்று தங்கைகளுக்கும் மணம் முடித்திருந்தான்.. திருமணத்திற்கு வந்து போனால்கூட செலவு அதிகம் வரும் என்று நினைத்து அங்கிருந்து பணத்தை மட்டும் அனுப்பியிருந்தான்..
மனதின் பாதி சுமை குறைந்தாற் போல இருக்க சுந்தரிக்கு இப்போதுதான் 16 வயது நடப்பதால் இன்னும் நான்கு வருடங்கள் போகட்டும்.. அவள் ஆசைப்பட்டபடி கல்லூரியில் படிக்க வைக்க முடிவு செய்திருந்தான்.. தான் படித்து பெரிய வேலைக்கு போனால் மட்டும்தான் தன் குடும்பம் முன்னேறும் என்பதை உணர்ந்து 12ம் வகுப்பில் அதிகமார்க் எடுத்து கஷ்டப்பட்டு அரசு பொறியில் கல்லூரியில் படித்திருக்க தங்கைகள் அனைவரும் 12ம் வகுப்போடு நிறுத்திவிட்டு பஞ்சு மில்லுக்கும், கார்மென்ஸ்க்கும், கூலி வேலைக்கும் சென்றுதான் சுந்தரை படிக்க வைத்தனர்..
[the_ad id=”6605″]
சென்னையில் கொஞ்சநாட்கள் வேலைப்பார்த்தான்.. அதில் வந்த வருமானம் அனைவரும் நன்றாக சாப்பிடவும் நல்ல துணியுடுத்தவும் உதவியதே தவிர அதிகம் சேமிக்க முடியவில்லை.. இந்த ஆஸ்திரேலியா பயணம் அவன் நண்பன் வெற்றிக்கு கிடைத்து கடைசி நேரத்தில் அவன் வரமுடியாமல் இவன் செல்லும் நிலை வந்ததில் கடவுள் தனக்கு இந்த சந்தர்ப்பத்தை அளித்ததாகவே நினைத்தவன் அதையும் சரியாகவே பயன்படுத்திக் கொண்டான்..
விமானம் புறப்பட போவதாக அறிவுப்பு வர அதுவரை தன்னருகில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் தன் உலகிற்குள் மூழ்கியிருந்தவன் லேசாக திரும்பி பார்க்க அப்படியே அவன் மனது படபடவென அடித்தது.. பக்கத்தில் வெள்ள பிகரா.. ரிச்சு கேர்ளா ஒரு பெண் அமர்ந்திருக்க அது அவனுக்கு பிரச்சனை இல்லை..
அவள் போட்டிருந்த உடை..!!! அதுதான்.. நல்ல கருப்பு நிறத்தில் முழங்காலுக்கு மேலே தொடைவரை ஒரு உடை தோள் எல்லாம் நன்றாக தெரிய சிறிய கயிறு போல இருபுறமும் அந்த உடை விழாமல் காத்து அவள் உடம்பை கச்சிதமாக இறுக்கியிருந்தது.. தலைமுடியை விரித்துவிட்டிருக்க கழுத்து காதில் ஏதோ வைரம் போல பளிச்சிட்டது… கைகளில் வளையல் ஏதும் அணியாமல் நீள வாழைத்தண்டு போல இருக்க, அவள் நிறத்திற்கு அந்த உடை அப்படியே பளிச்சென தெரிய அவளை பார்த்துக்கொண்டே எச்சிலை விழுங்கினான்..
அவன் வேலைப்பார்த்த இடத்தில் இது போலதான் உடை அணிவார்கள்.. முழங்காலுக்கு கீழ் தெரிவது இங்கெல்லாம் சகஜம்தான்.. ஆனால் இவ்வளவு நெருக்கத்தில் சத்தியமாய் அவனால் பார்வையை வேறுபுறம் திருப்ப முடியவில்லை.. அதுவும் தோள்பட்டையின் உள்புறம் மார்புக்கு சற்று மேலே அந்த டாட்டூ….. அவள் நிறத்திற்கு இன்னும் எடுப்பாக இருக்க அவன் மனமோ.. ‘நாலு தங்கச்சிகளோட பிறந்துட்டு இப்படி ஒரு பொண்ணப் போய் வெறிச்சு பார்க்கிறியே’ அவன் தவறை சுட்டிக் காட்ட அப்படியே நேராக திரும்பினான்..
[the_ad id=”6605″]
ஒரு நிமிடம்தான் அப்படி இருந்திருப்பான்.. பிளைட்ல இருக்கிற வரைக்கும்தானே.. கீழ இறங்கிட்டா அந்த பொண்ணு யாரோ.. நாம யாரோ அதுவரைக்கும் பார்த்தா ஒன்னும் தப்பில்ல.. அவன் மனம் சப்பை கட்டுகட்டி முரண்டுபிடிக்க கண்களில் கூலர்ஸை மாட்டியவன் கேஸூவலாக திரும்புவது போல பார்வையை திருப்பினான்.. அந்த பெண்ணும் நேராகத்தான் திரும்பி அமர்ந்திருந்தாள்..
வெயிலே பார்க்காதவள் போல அவள் நிறம்.. பாலும் நெய்யும் தின்று வளர்ந்திருப்பாள் போல.. உதடுகளில் நல்ல ரோஸ் நிற லிப்ஸ்டிக், ஐலைனர், மஸ்கரா என எல்லாம் அவள் முகத்தில் கன்னம் அப்படியே பளிங்கு போல மின்னியது… அப்படியே தேவதை போல ஜொலித்தாலும் முகத்தில் ஏதோ ஒரு குறை இருப்பது போல தெரிய, நன்றாக உற்று பார்த்தவனுக்கு அந்த பெண் முகத்தில் மருந்துக்கு கூட மலர்ச்சி இல்லை.. சிரிப்பு மிஸ்ஸிங்.. இந்த பொண்ணு சோகமா இருக்கோ.. இந்த பொண்ணுக்கு என்ன சோகம் இருக்கும்..?? நெத்தியில பொட்டில்ல ஒரு வேளை வேதகார பிள்ளையா இருக்குமோ..
அதுவரை தன் கையில் இருந்த மேகசினில் பார்வையை பதித்திருந்த அந்த பெண் நிமிர்ந்து அவனை பார்க்க சட்டென பார்வையை நேராக்கினான்.. ஒரு நிமிடம் பார்த்தவள் அவனை சட்டை பண்ணாமல் மீண்டும் புத்தகத்தில் பார்வையை செலுத்தவும் உள்ளிழுத்திருந்த மூச்சை மெதுவாக வெளியிட்டவன்,
‘நாம நம்ம ஊருக்கு போறோம்னு ரொம்பத்தான் பண்றமோ.. தேவையில்லாம இத்தனை வருசமா இல்லாம பொம்பளபிள்ளைய சைட் அடிச்சிக்கிட்டு.. இது தேவையா உனக்கு.. என்னமோ பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தாற் போல..!!’ தன் மனதை அடக்கி தன் தாயை நினைவுக்கு கொண்டு வர அப்படியே தன் தங்கைகளை நினைத்து பார்த்தவன் கண்ணயர்ந்திருந்தான்..
…………..
“என்னடா உன் சித்தப்பன் வீட்டு வாசல்ல வேன் ஒன்னு நிக்குது என்ன விசயமா இருக்கும்…??” ராமையாவின் அண்ணன் சுப்பையா கேட்க,
“ம்ம் உன் தொம்பி மவன் ஊருலயிருந்து வர்றான் போல..அதான் குடும்பத்தோட கூப்பிட போகுதுக.. அவன் கொண்டு வர்றத அள்ளிக்கிட்டு வரவா இருக்கும் அந்த வேனு… பிச்சைக்கார பய..??” அவர் மூத்த மகன் வேலு பதில் சொல்ல..
[the_ad id=”6605″]
“டேய் அந்த பயல மட்டும் சாதாரணமா நினைக்காத.. பொல்லா நெஞ்சொரம் பிடிச்ச பயடா… ஒத்த வார்த்தை அவன் குடும்பத்தை பத்தி சொல்ல விடமாட்டான்.. பாத்தியா 5 வருசத்தில மூனு தங்கச்சிக்கும் கல்யாணத்தை முடிச்சுப்புட்டான்…”
அவரை முறைத்த இரண்டாவது மகன் கந்தப்பன், “என்ன உன்ர.. தம்பி மவனோட பகுமானம் பெருசா இருக்கு.. நாம ஒன்னும் அவுகளோட கூட்டு நாட்டு இல்ல.. புரிஞ்சு நடந்துக்க..??” தன் தந்தையை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் தாயை தேடி உள்ளே சென்றான்..
தன் தம்பியின் நினைவு வர அஞ்சு வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி என்பது இவர்கள் விசயத்தில் சரியாக இருந்தது.. இவருக்கு திருமணம் முடியவுமே தன் தாய்க்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்து தனிக்குடித்தனம் வந்திருக்க, தாய் தந்தையோடு ராமையாதான் இருந்தான்.. அவனுக்கு வந்த மனைவி குணவதியாக இருக்க தாய் தந்தை இருவருமே சின்ன மகனுடனேயே இருந்து கொண்டனர்..
மனைவியின் நமுப்பு தாங்காமல் அப்போதே கப்பலில் அந்தமானுக்கு சென்று சுப்பையா சம்பாரிக்க, ராமையாவும் அவர் தகப்பனும் விவசாயம் மட்டுமே பார்த்தனர்.. நாட்கள் வருடங்களாக உருண்டோட பிள்ளைகள் எல்லாம் பிறந்து இரண்டு, மூன்று வருடங்கள் தொடர்ந்து விவசாயம் நன்றாக இல்லாமல் பஞ்சம் தலைவிரித்து ஆட அப்போதுதான் சுப்பையா அந்தமானில் இருந்து வந்திருந்தார்…
நன்கு சம்பாரித்து வந்திருக்க வந்தவர், போனவர் என அனைவருக்கும் துணிமணிகளை வாறியிறைத்துக் கொண்டிருக்க சுப்பையாவின் தாய்க்கு மனம் கிடந்து அடித்துக் கொண்டது .. சின்ன மருமகள் மாற்றுச் சேலைக்குகூட வழியில்லாமல் எல்லாம் கிழிந்து ஒரு சேலையையே துவைத்து துவைத்து காயவைத்து கட்டிக் கொள்ள இங்கு விவசாயம் இல்லாமல் பக்கத்து காட்டில் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்..
பெரிய மருமகளின் குணம் தெரியும்தான் இருந்தாலும் மனது கேட்காமல் பெரிய மகனிடம் ஒரு சேலை மட்டும் கேட்கலாம் என போனவரோடு அப்போது எட்டு வயதாய் இருந்த சுந்தரும் சென்றிருக்க… அப்போது அவர் மனைவி ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை.. அந்த அளவுக்கு மாமியாரை பேசி.. தன் கணவரை மயக்குவதாக தெய்வானையின் ஒழுக்கத்தையும் தவறாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூற்ற அவர்கள் தன் தாயை பேசிய பேச்சு பசுமரத்தாணி போல அந்த பிஞ்சு நெஞ்சில் அப்படியே பதிந்தது..
[the_ad id=”6605″]
ஒன்றுமே பேசாமல் கண்ணீர் உகுத்தபடி தன் பேரனை கையில் பிடித்துக்கொணன்டு போனவழி திரும்பியவர் அங்கிருந்த கருப்பர் கோவிலில் அமர்ந்து அழ ஆரம்பிக்க சிறுவயதாய் இருந்தாலும் சூழ்நிலை உணர்ந்து அப்பத்தாவை ஆறுதல் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான்… அன்றிலிருந்து பத்தாவது நாள் தன் தாய்க்கு ஒரு சேலையோடு வர மாமியாருக்கும் மருமகளுக்கும் சந்தோசம் பிடிபடவில்லை..
அப்பத்தா,” ஏன் சாமி ஏதுப்பு சேலை..??”
“ எங்க ரெண்டு வாத்தியார் குடும்பம் இங்க தங்கியிருக்காங்கதானே அப்பத்தா.. பத்துநாளா அவுகளுக்கு தண்ணி தூக்கி குடுத்தேன்.. கடைக்கு போயிட்டு வந்தேன் மாவரைச்சு கொடுத்தேன் தினம் ரெண்டு ரெண்டு ரூபாயா கொடுத்தாக… அதான் நாப்பது ரூபா வரவும் நம்ம செட்டியார்ட்ட சொல்லி இந்த சேலைய வாங்கியாந்தேன்…
ஆத்தா நான் பெரியாளா ஆனா நல்லா சம்பாரிச்சு நிறைய சேலை வாங்கித்தாறேன்… அப்பத்தா உனக்கும் வாங்கியாரேன்.. நீ இதுக்காண்டியெல்லாம் யார்கிட்டயும் திட்டுவாங்காத..??” அவர் மடியில் அமர்ந்து கதை சொல்ல,
தன் சுருங்கிய கைகளால் தன் பேரனின் கன்னத்தை வருடியர் கண்களில் கண்ணீர் நிற்கவேயில்லை.. தன் பெரிய மகன் நினைத்திருந்தால் மனைவிக்கு தெரியாமல்கூட ஏதோ ஒரு சிறிய உதவியை தம்பி குடும்பத்திற்கு செய்திருக்கலாம்..
இங்கு தம்பி பிள்ளைகள் பசியும் பட்டிணியாய் இருக்க அங்கோ ஊருக்கே கிடாய் வெட்டி விருந்து வைத்தனர்.. தன் மனைவி, பிள்ளைகள் என மட்டும் அவர் சுயநலமாய் இருக்க அதன் பிறகு பெரிய மகனை சுத்தமாக வெறுத்தவர்.. செத்தாலும் கொள்ளி போடவேண்டாம் என்ற வைராக்கியத்தோடு இருந்து அதே போலவே இறந்தும் போனார்..
[the_ad id=”6605″]
சுந்தரால்தான் அப்பத்தாவின் இழப்பை சட்டென ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. அர்ஜூனனுக்கு ஒரு தேரோட்டி போல அவனுக்கு எல்லாமுமாக இருந்தார்.. அவர் அவனுக்கு கூறிய அறிவுரைகள் எல்லாம் இன்னும் அவன் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ..
விமானம் தரையிறங்க பயணிகள் அனைவரும் வெளியில் வரத்துவங்கியிருந்தனர்.. சுந்தர் குடும்பமே ஆவலாக தூரத்தில் வெளிவரும் பயணிகளின் முகத்தை பார்க்க துவங்க சுந்தர் வெளியில் வரவும்…
“ஐயோ வள்ளி அக்கா உன்கனவும் உன்குடும்பதோட கனவும் மண்ணாப்போச்சே..??”
“ஏட்டி விளங்காதவளே அச்சாணியமா பேசாத… வாயில ரெண்டு போடப்போறேன் பாரு..??”
“அப்புறம் என்ன உன் கோணவாய் நாத்தனாவுக்குத்தான் அண்ணன கட்டி வைக்கனும் குடும்பத்தோட கனவு கண்டுட்டு இருக்கிங்கள்ல… அங்கன பாரு அண்ணே அங்கேயே ஒரு பொண்ணக்கட்டி கூட்டி வருது.” அதுவரை மகன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவும் அக்கா வள்ளியும் அப்போதுதான் அருகில் வந்து கொண்டிருந்த அந்த பெண்ணை ஆஆஆ வென பார்க்க,
தன் கையில் இருந்த தண்ணீரை அன்னையின் முகத்தில் தெளித்தவள் ,”ஆத்தா மருமக அழகுல மயங்கிட்டியா… என்ன ஒன்னு உன்ற மருமக குளிச்சிட்டு இருந்ததோட வந்திருச்சு போல பாரு உள்பாவாடையை மட்டும் கட்டியிருக்கு..”
அதற்குள் அடுத்தடுத்து நிறைய பேர் வர ஆரம்பிக்க சுந்தர் தன் குடும்பத்தை பார்த்து கையசைத்து வேகமாக முன்னேறி தன் லக்கேஜை எடுக்கச் சென்றான்..
[the_ad id=”6605″]
“ஏட்டி எங்கிட்டு போச்சு அந்த பொண்ணு.. தூரத்தில இருந்ததால எனக்கு ஒன்னுமே தெரியல.. ஏதோ கருப்பு உடைப்போட்டு ஒரு உருவம் வர்றாப்புல இருந்திச்சு??” வாயில் கைவைத்து சின்ன மகளிடம் கேட்க,
“ஹாஹாஹா ஆத்தா இது உனக்கே ஓவரா தெரியல.. அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கா… இத்தனை வருசம் கழிச்சு வர்ற அண்ணன பார்ப்பியா.. அதைவிட்டுட்டு மருமகன்னு சொன்னவுடன பே…ன்னு அங்கன பார்த்துட்டு இருக்க..”
அதற்குள் தங்களை நெருங்கியிருந்த மகனை அனைவரும் சூழ்ந்து கொள்ள தெய்வானைக்கு கண்கள் கலங்கியது.. தங்கைகள் நால்வரையும் அணைக்க பாசத்தில் அவர்களுக்கும் அழுகை பொங்கியது.. அவனும் தன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டான்.. அவர்கள் நால்வருக்கும் நன்கு தெரியும் அண்ணன் சிறுவயதிலிருந்து இந்த குடும்பத்திற்காக மாடாய் உழைப்பது, எல்லாரும் ஒரு மாதிரி சோகத்தில் இருக்கவும் சட்டென தன் அண்ணனின் தோளைப்பிடித்து தொங்கியவள்,
சுந்தரி தன் அண்ணனை பார்த்து பாட அனைவருக்கும் சிரிப்பு… தங்கையின் தோளோடு சேர்த்து அணைத்தவன்… “சேட்டையெல்லாம் ரொம்ப அதிகமாயிருச்சு போலத்தா…?”
“அண்ணே இப்பத்தான் ஊருல கால வைக்கிற.. அதுக்குள்ள ஆத்தா போட்டுக் குடுத்திருச்சா..??”
“போ அரட்டை..” எட்டி தங்கை மகனை வாங்கியவன் ஆசைதீர முத்தமிட்டு ஏற்கனவே வீடியோ காலில் பேசியிருந்த மச்சான்களின் நலனை விசாரித்தான்.. குடும்பமே சற்று வியந்துதான் சுந்தரை பார்த்திருந்தார்கள்.. கிராமத்துகாரனை போல் இல்லாமல் கோர்ட் போட்டு படித்த களை அவன் முகத்தில் தெரிய கம்பீரமாக ஒரு மாவீரனை போல இருந்தான்.. தங்கைகளின் மாமனார் மாமியார்.. நண்டு சிண்டு என அனைவரையும் நலம் விசாரித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டவன், கடைசியில் கண்ணீர் வழிய வழிய தன்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் தாய் தந்தை இருவரையும் சேர்த்தாற் போல அணைத்து குனிந்தவாக்கில் அவர்கள் இருவரின் காலையும் தொட்டுக் கும்பிட்டான்..
அவன் தலையில் ஆசிர்வாதம் செய்தவர்களுக்கு பேச்சே வரவில்லை… அவர்களையே பார்த்தவனுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் தாய் தந்தை இருவரும் மேலும் தளர்ந்து போய் தெரிய இனி செய்ய வேண்டிதெல்லாம் மனதிற்குள் பட்டியலிட்டவன் தாயை அணைத்தபடி.. தந்தையை பார்த்து ,
”போவோமாப்பு..?”
அனைவரும் கிளம்பி சலசலவென பேசியபடியே சற்று தூரம் நடக்க ஆரம்பித்தவர்கள் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்க்க சற்று வயதான ஒரு பெண்மணியும் விமானத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணும் நின்றிருந்தனர்..