வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 22
இந்த முறை அந்த உருவம் பஞ்சாப் சிங் போல வேடமிட்டு தலையில் தலைப்பாகை, நீண்ட தாடி, முகத்தை பாதி மறைத்தபடி பெரிய கண்ணாடி முகத்தில் மூக்கும், சிறு நெற்றியும் மட்டும்தான் தெரிய வரப்போகும் வாய்ப்புக்காக காத்திருந்தது.. அங்கு வந்த அந்த கேன்டீன் ஊழியருக்கு கண்ணைக்காட்டி 2000 ரூபாய் தாள் ஒன்றை கையில் திணிக்க மற்றவர்கள் கேட்டதை எல்லாம் முதலில் கொடுத்தவன் அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கவும் கடைசியில்தான் தர்ஷினி கேட்ட மாதுளை ஜூஸை கொண்டுவந்தான்.. அவள் பின்னால் வந்தவன் டேபிளில் வைப்பது போல அப்படியே கைநழுவ விட அது அவன் இலக்கு தப்பாமல் அவள் போட்டிருந்த வெள்ளைச்சுடிதாரில் கொட்டியது…
அனைவரும் பதற அவனும் பதறி “அச்சோ ஸாரி மேம் ஸாரி.. கைதவறிருச்சு.. மன்னிச்சிருங்க..!!”
“ஏப்பா கண்ண எங்க பொறடியிலையா வைச்சிருக்க.. ஆளையும் மண்டையும் பாரு… பிள்ளவுட்டு சுடிதாரே போச்சு..?” சௌந்தரம் சத்தமிட.. தர்ஷினி கைகளால் அதை தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.. அது சுடிதாரின் கலரையே மாற்றியது..
“விடுங்கண்ணி ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க போல..”
“ஸாரி மேடம் வாங்க ரெஸ்ட்ரூம் காட்டுறேன்.. அங்க கிளீன் பண்ணிக்கோங்க..” தர்ஷினி எழ வள்ளியும் கூடவே எழுந்திருந்தாள்..
“வாங்க அத்தாச்சி நானும் கூட வர்றேன் வாங்க..”
சாப்பாட்டை சாப்பிடாமல் பாதியில் எழுந்து வர, “அச்சோ அண்ணி.. நீங்க சாப்பிடுங்க.. நான் பை மினிட்ஸ்ல வந்திருவேன்.. நீங்க உட்காருங்க..” அவள் கையை பிடித்து அமர வைத்தவள் அந்த பையன் காட்டிய திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.. ஆண், பெண் இருவரின் பாத்ரூமும் எதிர் எதிரே இருக்க ஏற்கனவே அவன் அங்கு தயாராக இருந்தவன் கையில் மயக்க மருந்து கலந்த கர்சீப்.. அவன் நல்லநேரமோ என்னவோ யாரையும் காணவில்லை..
அவள் பாத்ரூமை நோக்கி வர தர்ஷினியின் ஹீல்ஸ் சத்தம் நன்றாக கேட்டது .. கொஞ்சம் கொஞ்சமாக அருகில் நெருங்கி வர இன்னும் இரண்டு மூன்று அடிதான் அவன் மெதுவாக பாத்ரூமின் வாசலில் காலை வைக்க,
“தர்ஷினி..!!” என்ற கோப குரலும், “அத்தாச்சி..” என்ற பதறிய குரலும கேட்க அப்படியே நின்று திரும்பி பார்த்தாள்..
சுந்தர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வேக நடையுடன் வர சுந்தரி அண்ணனோடு நடக்க முடியாமல் ஓடிவந்தாள்.. மனைவியை உறுத்து விழித்தவன் “உன்கிட்ட என்ன சொன்னேன்..??” பல்லை கடித்தபடி உரும..
அவனது கோபக்குரலில் உள்ளுக்குள் நடுங்கியவளுக்கு கண்கலங்கி என்ன சொன்னாங்க..? ஏன் இந்த கோபம்.? “இ.. இல்.. இல்ல மாமா..??” வார்த்தைகள் தந்தியடிக்க ஆரம்பித்தது..
“என்ன.. என்ன மாமா..? அறிவு கெட்ட முட்டாள்.. ஒருதரம் சொன்னா புரிஞ்சுக்க மாட்டியே.. எப்ப பார்த்தாலும் நான் சொல்றத கேட்கக்கூடாதுன்னு ஒரு முடிவோடவே இருப்பியா..? அப்படியே அறைஞ்சேன்னா பாரு..!!” கையை ஓங்க, தர்ஷினியோ உள்ளுக்குள் வெலவெலத்து போனாள்..
[the_ad id=”6605″]
இருவருக்கும் இடையில் வந்த சுந்தரி “அத்தாச்சி வாங்க நான் வர்றேன்.. உங்கள தனியா விட்டதுக்கு அண்ணே எல்லாரையும் பயங்கரமா திட்டுது.. வாங்க..” ஓடிச் சென்று அவள் கையை பிடித்தவள் பாத்ரூமிற்குள் அழைத்துச் செல்ல அவன் பாத்ரூம் கதவருகில் சுவற்றில் ஒரு காலை வைத்து அதில் சாய்ந்து நின்று கோபத்துடன் மனைவிக்காக காத்திருந்தான்..
ஆண்கள் பாத்ரூமில் இருந்த உருவமோ ஒரு நொடியில் தன் கையை விட்டு நழுவிய வாய்ப்பை தட்டி பறித்த சுந்தர் மேல் வெறியானவன் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் வெளியிலும் போக முடியாமல் மறைந்து நின்று பார்க்க சுந்தர் அசையாமல் பாத்ரூம் வாசலிலேயே தவம் கிடக்கவும் அவன் மேல் கோபம் தாங்கமாட்டாமல் அங்கேயிங்கே நடை பயின்றவன் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அதில் காறித்துப்பி கண்ணாடியை ஓங்கி ஒரு குத்துவிட்டான். கண்ணாடி உடைந்து அதன் சில்லெல்லாம் அவன் கைகளில் குத்தி ரத்தம் சொட்டு சொட்டாக தரையை நனைக்கத்துவங்கியது..
தர்ஷினியும் சுந்தரியும் வெளியில் வந்தவர்கள் சலீர் என கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் நிற்க.. “அண்ணே உள்ள என்னமோ சத்தம் கேட்குது..??”
“எனக்கும் காது கேட்குது..?”
“உள்ளே போய் பாருண்ணே..”
மனைவியின் கையை இறுக்கி பிடித்தவன்.. அவளை விடமனதில்லாமல் “எங்க என்ன நடக்குதுன்னு பார்க்கிறதுதான் நம்ம வேலையா..?? வாங்க..!!” அவளை தரதரவென இழுத்துக் கொண்டு செல்ல,
இருவருக்கும் சுந்தருக்கு ஏன் இந்த கோபம் என்று புரியவில்லை.. தர்ஷினியோ இதென்ன காட்டுமிராண்டித்தனம்.. ரொம்பத்தான் ஓவராப்பண்றாங்க..
சாப்பிடுமிடம் அழைத்துச் சென்றவன் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க தாயையும் தந்தையும் தங்கைக்கு துணைக்கு வைத்துவிட்டு மற்றவர்களோடு காருக்கு அருகில் சென்றிருந்தான்..அதுவரை தன் மனைவியின் கையை விடவேயில்லை..
“அண்ணே அத்தாச்சி எதுவும் சாப்பிடவேயில்ல..?” மீண்டும் உள்ளே சென்று வெளியில் வரும்போது ப்ரஷ் ஜூஸ் பாக்கெட்.. அவள் கையில் திணித்தபடி ..
“ம்ம் காருல ஏறு..?”
சௌந்தரத்தின் கையை பிடித்தவள் “அண்ணி நீங்க முன்னாடி உட்கார்ந்துக்கோங்க ப்ளிஸ்.. எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு..” அவள் கன்னத்தை பிடித்து கெஞ்சி பின்னால் ஏறிக் கொள்ள முறைத்துப்பார்த்த சுந்தர் ஒன்றும் சொல்லாமல் காரை கிளப்பியிருந்தான்..
அவன் ஹாஸ்பிட்டலில் இருக்கும்போதுதான் அவனுக்கு போன் வந்தது அந்த கிரிமினல் அங்குதான் அவர்களையே சுற்றிக் கொண்டிருப்பதாக சொன்ன அந்த கிரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் தர்ஷினியை கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்ல, இங்கா… அதிர்ந்தவன் மச்சானை தனியே விட்டு போகமுடியாமல் ஒருநிமிடம் தயங்க நாயகியும் அவள் கணவரும் உள்ளே வரவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வேகமாக வெளியில் வந்திருந்தான்..
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க தர்ஷினியை மட்டும் காணாமல் பதறியவன் தங்கைகளை திட்டி தீர்த்துவிட்டான்.. இத்தனை பேர் இருக்கும்போது யாராச்சும் ஒருத்தராவது துணைக்கு போகக்கூடாதா என்று… சுந்தரின் கோபத்தில் அனைவரும் நடுங்கித்தான் போனார்கள்..
ராமையா மகனின் முகத்தை பார்த்து நிலைமையை உணர்ந்தவர் “புள்ள இப்பதான்யா போகுது.. சுந்தரி ஓடு அத்தாச்சிக்கு துணைக்கு போ..??” சுந்தரி செல்லும்முன் பாத்ரூமை நோக்கி இவன் விரைந்திருக்க பார்த்திருந்த குடும்பத்தாருக்குத்தான் ஏதோ வித்தியாசமாக தெரிந்தது..
மனைவியை முழுதாக பார்க்கவும்தான் இவனுக்கு நிம்மதி.. தான் இத்தனை முறை கவனம் கவனமென சொல்லியும் தர்ஷினி தனியாக போனது இவனுக்கு கோபம்தான்.. எதையாவது நாம சொன்னா கேட்கிறாளா.. அவன் சாதாரணமானவன் இல்லன்னு படிச்சு படிச்சு சொல்றேன் அறிவு கெட்டவ.. நாம ஹாஸ்பிட்டல் வர்றது நமக்கே தெரியாது அப்படியிருந்தும் அவன் வந்திருக்கான்னா நாம எங்க அவன மிஸ் பண்றோம்.. நம்ம பின்னாடியே ரொம்ப குளோஸ்ஸா வாட்ச் பண்றானா..??
காரை புயல் வேகத்தில் ஓட்டி வந்தவன் அனைவரையும் வீட்டில் இறக்கி விட தர்ஷினி முதல் ஆளாக வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.. காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் செல்லாமல் தள்ளி நின்று சில போன்கால்களை பேசியவன்” ஸார் அங்க அவன் பேரை சொல்லி அவன் இருக்கானா கொஞ்சம் நோட் பண்ணிச் சொல்லுங்க..??”
பத்து நிமிடத்தில் மீண்டும் போன் வந்திருக்க” ம்ம் இருக்கானா.. ஓகே ஸார் தேங்க்ஸ்… நான் பார்த்துக்கிறேன்..”
அடுத்து வக்கீலுக்கு போன் செய்து “ஸார் நாம இப்ப அவன என்னமாவது செஞ்சே ஆகனும் .. இவன் இங்கதான் சுத்திட்டு இருக்கான்..பேசாம நாம அவங்க மேல கேஸ் போட்டிருவோமா..?? சொத்தவிட தர்ஷினி பேம்லிக்கு நடந்த அக்கிரமத்துக்கு நமக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.. இப்பதான் நமக்கிருந்த குழப்பம் எல்லாம் தீர்ந்திருச்சே.. நமக்கு இருக்கிற ஆதாரத்தை வைச்சு கேஸ போடுவோம்.. அந்த இன்ஸ்பெக்டரும் தேவையான ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காரு..
அவன் நம்மள நெருங்குறதுக்குள்ள நாம நெருங்கிரலாம்.. தர்ஷினிக்கு வேண்டிய பாதுகாப்பு நான் கொடுத்திருறேன்.. ம்ம்ம் ஓகே ஸார்.. அவங்க சொத்து எல்லாத்துக்கும் தர்ஷன்தான் வாரிசுன்னு அவங்க எழுதி கொடுத்த டாக்குமென்ட்ட இப்ப நாம கோர்ட்டுல ஆதாரமா கொடுத்திரலாம்.. தர்ஷன் இல்லைனா தர்ஷினிக்கு போகலாம்னு அவங்களே எல்லாம் பக்காவா எழுதியிருக்காங்க நாம தைரியமா இப்ப காரியத்தில இறங்கலாம்.. வாரிசுன்னு வாயால சொன்னா போதுமா.. ஆதாரம் நம்ம பக்கம்தான் இருக்கு.. ஓகே ஸார் தேங்க்யூ தேங்க்யூ எல்லாம் ரெடியானதும் சொல்லுங்க நான் தர்ஷினியோட அங்க வந்திருறேன் எங்கங்க சைன் போடனுமோ அந்த பேப்பர்ஸ் மட்டும் உங்க ஜூனியர் யார்கிட்டயாவது கொடுத்து விடுங்க… ஓகே ஸார் நோ பிராபளம்..”
இந்த நான்கைந்து நாட்களாக தர்ஷினி சுந்தரிடம் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை.. அவள் முகத்தை திருப்பிக் கொண்டு திரிய சுந்தருக்கு அது புரியவில்லை.. அவன் கவனம் முழுதும் தர்ஷினியின் பாதுகாப்பை பற்றி மட்டுமே இதில் மனைவியின் சுணக்கத்தை அவன் அறியவில்லை.. மில்லுக்கு ஒரு முறை மட்டும் செல்பவன் தங்கை கணவருக்கும் அவர் குடும்பத்திற்கும் வீட்டிலிருந்துதான் சாப்பாடு எடுத்துச் சென்றான்.. காலையிலேயே இரு நேர சாப்பாட்டை கொடுத்துவிட்டு அவரை பார்த்துவிட்டு வருவான்..
மீதி நேரம் எல்லாம் வீட்டில்தான்.. இவன் வெளியில் செல்லும்போது தந்தையும் அதுபோக இவன் இரண்டு ஆட்களை ஏற்பாடு செய்திருந்தான்.. தன் வீட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் போல அமைத்திருக்க அந்த வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை வருவதால் அது முடிந்து வக்கீல் நோட்டிஸ் அனுப்பி வைப்பதாக வக்கீல் சொல்லியிருந்தார்..
[the_ad id=”6605″]
அது இவனுக்கு சற்று தொய்வுதான்.. என்ன செய்வது தெரியாமல் பொறுத்திருந்தான்.. தெய்வானை தங்கைக்கு துணையாக ஹாஸ்பிட்டலிலேயே இருக்க வீட்டில் தங்கைகள்தான் அனைத்து வேலைகளையும் பார்த்தனர்.. தர்ஷினி தனக்கு தெரிந்த வகையில் உதவிக் கொண்டிருந்தாள்..
சுந்தரி வீட்டிலிருந்ததால் தர்ஷினியின் நேரம் எல்லாம் அவளோடும் சௌந்தரத்தின் மகனோடும்தான்.. இரவும் அவள் சீக்கிரமாகவே தூங்கச் சென்றிருக்க இவன் தன் முழு நேரத்தை போனிலும் அவனை எப்படி கையும் களவுமாக பிடிப்பது என்ற சிந்தனையிலும் கழித்தான்..
அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க தர்ஷினி மட்டும் இல்லை.. ராமையாவும் தெய்வானையும் ஹாஸ்பிட்டலில் தங்கியிருந்தார்கள்..
“சுந்தரி அத்தாச்சி சாப்பிடல…?”
அவளோ நொடித்துக் கொண்டவள் “ம்க்கும்.. ரெண்டுமூனு நாளா அவங்க நல்லாவே சாப்பிடல.. ஏன்ணே அவங்கள இப்படி கடுகடுன்னு திட்ற.. போ போ பாவம் அவங்க.. உனக்கு போய் அவங்கள கட்டினாங்க பாரு.. அதான் பெரிய தப்பு.. தமன்னா மாதிரி இருக்கவங்களுக்கு இந்த கருப்பசாமி கிடைச்சா திமிரு அதிகம்தான் அதான் அவங்கள இப்படி திட்ற.. நான் மட்டும் அவங்க வீட்டு சொந்தமா இருந்திருந்தா ஜெயம்ரவி மாதிரி ஒரு சாக்லேட் பாய மாப்பிள்ளையா பார்த்திருப்பேன்..”
சாப்பாட்டை வாய்க்கு கொண்டு போனவன் கை அப்படியே அந்தரத்தில் நின்றது.. அடிப்பாவி எப்படி பேசுறா.. இவதானே அன்னைக்கு உனக்கு இந்த பொண்ணு ஏத்தவளா.. இன்னும் என்னன்னமோ கேட்டா.. “ஏய் குட்டிப்பிசாசே எனக்கென்னடி குறைச்சல்.. ஜெயம்ரவி மாதிரி மாப்பிள்ள பார்ப்பியா.. உன்னை..!!” அவள் காதை திருகவர,
அவனை விட்டு தள்ளி நின்றவள்.. “ம்ம் ஆடத்தெரியாதவ வாசல் கோணல்ன்னு சொன்னாலாம் அது மாதிரியில்ல இருக்கு.. தேவதை கணக்கா ஒரு பொண்ணு கிடச்சிருக்கு அத சந்தோசமா வைச்சுக்குவியா.. அதப்போய் திட்ற.. அத்தாச்சி வாயில்லாத பூச்சியா வந்திருக்கு.. ஏதோ பத்து பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணி வந்தவளெல்லாம் புருசன உட்காருன்னா உட்காரவைக்கிறா.. எழுந்திறின்னா எழுந்திருக்க வைக்கிறா..ஆனா இவுகளுக்கு அந்த அளவுக்கு கூறு இல்ல.. அவுக நீ என்ன சொன்னாலும் கேட்கிராகள்ள அதான் அவுகள திட்ற..??”
“ஏட்டி வந்தேன்னா பார்த்துக்கோ..??”
“ம்ம் எங்கேயோ போன மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு திரியாமா.. போய் பொண்டாட்டி சாப்பிடலேயே அது என்னன்னு பாரு..!!” அவள் எழுந்து ஓட,
சௌந்தரத்தை பார்த்தவன் “இவ என்னத்தா இப்படி வாய்பேசுறா.. பாவம் இவள கட்டிக்க போறவன்..!!”
“இல்லண்ணே அவ சொன்ன மொறை வேணா தப்பாயிருக்கலாம்.. அவ பேசினது எல்லாம் உண்மைதான்.. அத்தாச்சி பச்சபுள்ள மாதிரிதான் இருக்கு நீ கோபமா திட்டினியோ, முறைச்சியோ தெரியல.. பாவம் அவுக ரெண்டுநாளா நல்லா சாப்பிடல. யாருக்கிட்டயும் நல்லா பேசல.. சோகமாவே உட்கார்ந்திருக்காக.. பாவம்ணே ஆத்தா அப்பு இல்லாதவுக நீதான நல்லா பார்த்துக்கனும்.. அவுக இருக்க இடத்தில வேற ஒருத்தவுக இருந்திருந்தா இந்த வீட்ல மொதல்ல கால வைச்சிருப்பாகளா.. இல்ல அக்கா தங்கச்சிகன்னு உன்னை ஏதாச்சும் முறைதான் எங்களுக்கு பண்ண விட்டிருப்பாகளா.. இப்படியெல்லாம் நான் வந்து இத்தனை மாசம் இங்கன இருக்க முடியுமா..
இம்புட்டு பணம் காசு இருக்கு வேற யாராவதா இருந்தா இது வம்புடியா நடந்த கல்யாணம் தானே அப்பவே அத்துவிட்டுட்டு அவுக நாட்டுக்கு போக தெரியாதா.. நான் பார்த்தவரைக்கும் அவுக பாசத்துக்குத்தான் ஏங்குறாகளே தவிர பணம் காச பெரியா நினைக்கலேண்ணே..
[the_ad id=”6605″]
நீ நாலெடத்துக்கு போற ஆயிரம் பிரச்சனைகள சந்திக்கிற.. ஆனா எங்கள மாதிரி பொம்பளைகளுக்கு வீடுதான் உலகம்.. யார் மேலயோ உள்ள கோபத்தை அவங்ககிட்ட காட்டாத.. எடுத்துச் சொல்லு இல்லையா கொஞ்சநேரம் அமைதியா போயிரு.. நீ பார்க்கிறியோ இல்லையோ நான் அவுகளத்தான் ரெண்டுநாளா பார்த்துட்டே இருக்கேன்.. நீ ஏதாவது நல்லா பேசிரமாட்டியான்னு உன் முகத்தைதான் பார்த்துட்டு இருக்காக.. உனக்குன்னு நாங்க இத்தனை பேர் இருக்கோம் அவுகளுக்கு நீ மட்டும்தான்ணே.. நான் உன்னைவிட சின்னப்புள்ளதான் தெரியாம ஏதாவது பேசியிருந்தா என்னை மன்னிச்சிரு.. இந்த குடும்பத்தோட ஆணிவேரே நீயும் அத்தாச்சியும்தான்.. நீங்க சந்தோசமா இருக்கனும்ணே..” தன் மகனை தூக்கிக் கொண்டு செல்ல சுந்தர் அப்படியே அமர்ந்திருந்தான்..