வரம் வாங்கி வந்தவள் நான்
இறுதி அத்தியாயம் – 25
சுந்தரும் தர்ஷினியும் வண்டியில் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நீண்ட நாளுக்கு பிறகு இவர்கள் மட்டும் தனியாய் இந்த பயணம்.. சற்று தள்ளி அமர்ந்திருந்த மனைவியின் கையை பிடித்து முன்னால் இழுத்தவன், “ஏய் கிட்ட வாடி பச்சைமொளகா..??”
அவனை இன்னும் நெருங்கியவள் அவன் வயிற்றில் தன் கையை பதித்து “என்ன மாமா இவ்ளோ ஸ்லோவா போறிங்க.. இந்த ஸ்பீட்ல போனா நாம மதியம்தானே அங்க போக முடியும்..”
தன் தலையால் அவள் தலையை முட்டியவன் “ஏய் வயித்துல பாப்பாவா இருந்தா அதுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்ல..!!”
அவன் பின் தோளில் ஒரு செல்ல கடிவைத்தவள் “ரொம்ப பண்ணாம பாஸ்டா போங்க..” மனைவியின் செல்லகடி அவனுள் ஜிவ்வென இறங்க ஊரை தாண்டியதை உணர்ந்து அந்த ஆளில்லா இடத்தில் வண்டியை நிறுத்தியவன் மனைவியின் கன்னத்தில் தன் முத்தத்தை அழுத்தமாக பதித்து அந்த அரைமணி நேர பயணத்திற்குள் இரு இடத்தில் நிறுத்தி இளநீரும், ஜூஸும் வாங்கி கொடுத்தே அழைத்து வந்தான்..
அனைவரும் ஹாஸ்பிட்டல் வளாகத்தில் இருக்க வள்ளி கணவருக்கு துணையாக இருந்தாள்.. இவர்கள் உள்ளே சென்று வள்ளி கணவரின் நலன் விசாரிக்க அவர் தர்ஷினியைதான் முதலில் விசாரித்தார்..
“அண்ணா எனக்கு ஒன்னும் ப்ராபளம் இல்லனா.. மாமா டைம்க்கு வந்திட்டாங்க..”
“சரித்தா எங்களுக்குத்தான் உன்னை காப்பாத்த முடியலைன்னு ரொம்ப கஷ்டமாயிருந்திச்சு..!”
அவன் அடிபட்ட கையை பிடித்தவள் “ரொம்ப வலிக்கிதாண்ணா.. என்னாலதான..?? இப்பத்தான் உங்களுக்கு கொஞ்சம் சரியாச்சு.. அதுக்குள்ள மறுபடி..!!” அவள் கண்கள் கலங்க,
“அட விடுத்தா இதெல்லாம் ஒரு காயமா..?? இன்னும் ரெண்டுநாள்ல வீட்டுக்கு வந்திருவேன்.. ஏன் மாப்பிள்ள புதுவீட்டுக்கு நிலை இன்னைக்கு வைக்க வேண்டாம்னு சொல்லிட்டியாமே..!!”
அவரின் மறுபுறம் அமர்ந்தவன் “நீங்க வீட்டுக்கு வாங்க மச்சான்..உங்க கை முதல்ல சரியாகட்டும்.. அப்புறமா பார்த்துக்கலாம்..” அவர்களோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தர்ஷினியை டாக்டரிடம் அழைத்துச் செல்ல ரிசல்ட் பாஸிட்டிவ்.. இருவருக்கும் சந்தோசம் தாங்கவில்லை..
“கொஞ்சம் வீக்கா இருக்காங்க பார்த்துக்கோங்க இன்னும் ஒன்வீக் கழிச்சு ஒரு ஸ்கேன் எடுத்துரலாம்..” அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எழுதிகொடுக்க சுந்தர் தன் மனைவியின் கையை விடவே இல்லை.. அவனின் கையழுத்தமே சொன்னது அவனின் மகிழ்ச்சியை.. விசயமறிந்து குடும்பத்தார் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.. அதற்குள் அவனுக்கு இரண்டு மூன்று போன் வந்திருக்க,
[the_ad id=”6605″]
“வாழ்த்துக்கள் மாப்பிள்ள.. என் மவனுக்கு ஒரு மருவமவள பெத்துக் குடுத்திருங்க..”
சௌந்தரத்தின் மகனை வாங்கி கொஞ்சியவன் “போங்க மச்சான் இந்த கருப்பனுக்கு எல்லாம் என் மகள செய்ய முடியுமா.. டேய் செல்லக்குட்டி என்னடா சொல்ற.. நீ கருப்பன் தான..!!”
அந்த மாயக்கண்ணனோ தன் புன்னகையால் அவன் மாமனை மயக்கியவன் அவன் கன்னத்தில் தன் கைகளால் கோலமிட்டு கொண்டிருந்தான்..
அவரோ.. “அதுசரி அப்ப உன்னை எப்படி என் தங்கச்சி கட்டிக்க ஒத்துக்கிச்சு..?? என் மவன் கருப்பனா..!! நீங்க பொண்ணு தரலைன்னா நாங்க கடத்தி கொண்டு வந்திரமாட்டோம்.. என்னடா மவனே என்ன சொல்ற..??” தந்தையை பார்க்கவும் மகனுக்கு சிரிப்பு தாங்கவில்லை..
வள்ளியோ “மச்சான் அப்ப என் மவன் யார கட்டிக்குவான்.. என் மவனுக்குத்தான் என் அண்ணே பொண்ணு..”
“ஆஹா அதுக்குள்ள என் மகளுக்கு போட்டியா.. நாயகி நீ ஏன்தா சும்மா இருக்கிற.. நீயும் வா.. நீங்க எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. எனக்கு கொஞ்சம் வெளியில வேலை இருக்கு அத முடிச்சிட்டு வர்றேன்.. மச்சான் மதியம் எல்லாரையும் பக்கத்து ஓட்டலுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி கொடுத்திருங்க..” பணத்தை அவர் பையில் திணிக்க..
“டேய் டேய்.. என்கிட்ட பணம் இருக்கு அது கூட நான் வாங்கி தரமாட்டேனா..??”
“மச்சான் நான் அப்பாவாக போறதுக்கு இன்னைக்கு என்னோட டிரீட்.. நான் முடிஞ்ச அளவு சீக்கிரமா வரப்பார்க்கிறேன்..தன் தாயை அழைத்து ஆத்தா நாயகிக்கும் இங்க டோக்கன் போட்டிருக்கேன்.. அவளையும் இங்க காட்டிருங்க.. எனக்கு முக்கியமான வேலையிருக்கு.. இல்லனா நானே பார்த்துக்குவேன்.. அவரிடமும் பணத்தை கொடுத்தவன் ஸ்கேன் எடுக்கச் சொன்னா எடுத்துருங்கத்தா..” கண்களால் மனைவியை தேட அவள் யாருடனோ போனில் மூழ்கியிருந்தாள்..
“என்ன தர்ஷூ யார் போன்ல.. பேஸ் ஏன் டல்லாயிருக்கு..?”
“கிரான்மாதான் போன் பண்ணினாங்க.. பாலாக்குத்தான் தலையில ரொம்ப காயமாம்.. கோமா ஸ்டேஜ்க்கு போக அதிக வாய்ப்பிருக்கிறதா டாக்டர்ஸ் சொல்றாங்களாம்..”
அவன் இன்னும் சாகலையா மனதிற்குள் நினைத்தவன்.. “விடு.. தப்பு செஞ்சா தண்டனை கண்டிப்பா உண்டு.. அதுக்கு ஏன் நீ வொர்ரி பண்ணிக்கிற.. எனக்கு போலிஸ் ஸ்டேசன்ல கொஞ்சம் வேலையிருக்கு.. நீ ரொம்ப அலையாம ஒரு இடத்தில இரு.. இல்லனா டிரைவர கொண்டுபோய் வீட்ல விடச் சொல்லவா..??”
“இல்ல மாமா இப்பதான வந்தோம்.. நீங்க போங்க அண்ணிங்க எல்லாரும் போகும்போது நான் வீட்டுக்கு போறேன்..” அவள் கன்னத்தை தட்டியவன்
“வரவா…”
……………………….
ஒரு நான்கைந்து மாதம் கழித்து……
தன் போனில் ஒலித்த அலாரத்தை நிறுத்தியவன் கண்களை கசக்கிவிட்டு மணியை பார்க்க அது நான்கை காட்டியது.. ஒரு கையை வயிற்றின் மேல் வைத்து தன் மார்பில் முகம் புதைத்திருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன் அந்த விடிவிளக்கில் அவளை ரசிக்க இந்த நான்கைந்து மாதங்களில் இன்னும் அழகு கூடியது போலவே இருந்தது ..சற்று சதை போட்டு தாய்மை பூரிப்பில் மிளிர்ந்தாள்.. இத்தனை மாதங்களில் இருமுறை இவர்கள் ஆஸ்திரேலியா சென்று வந்திருக்க சுந்தர் அங்கிருந்த சொத்துக்களை ஒழுங்கு படுத்தியிருந்தான்.. தர்ஷினி அதெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை.. தன் கணவனிடம் முழுபொறுப்பை ஒப்படைத்தவள் கையெழுத்து கேட்டால் மட்டும் போட்டுக் கொடுப்பாள்..
“ஏய் இதெல்லாம் எதுக்குன்னு கேளுடி..?”
“கேட்டு..”
“நீ தெரிஞ்சிக்க வேண்டாமா..??”
[the_ad id=”6605″]
“தெரிஞ்சு நான் என்ன மாமா பண்ண போறேன்.. அதெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க.. மாமா இங்க பாருங்களேன் உங்க பசங்க அங்கயிங்க நகர்றாங்க..” அவன் கையை பிடித்து தன் வயிற்றில் வைக்க அவ்வளவுதான் அவனையும் அவளுக்குள் இழுத்துக் கொள்வாள்.. டாக்டர்கள் அவளுக்கு டுவின்ஸ் என சொல்லியிருக்க இந்த நான்கைந்து மாதங்களுக்கே வயிறு பெரிதாக இருந்தது.. உட்கார, எழ என மிகவும் சிரமப்பட்டாள்.. அதற்கு மேல் அவளை தொல்லை செய்யவும் மாட்டான்..
அதிலும் இரண்டாவதுமுறை ஆஸ்திரேலியா கிளம்பும்போது வீட்டில் அப்பத்தாவும் தெய்வானையும் அவனை மட்டும்தான் சென்றுவரச் சொன்னார்கள்.. “அப்பு புள்ளய இந்த நேரத்தில இழுத்துக்கிட்டு திரியாத.. புள்ளக பொறக்கவும் பார்த்துக்கலாம்..”
“இல்லத்தா இப்ப முக்கியமா அவ வந்தே ஆகனும்..”
அன்று இரவு.. “ஆமா மாமா நான் வரலை ஒன்வீக்தான நான் இங்கேயே இருந்துக்கிறேன்.. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க..”
பாரு நானே எவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிப்போக சம்மதம் வாங்கியிருக்கேன்.. இந்த லூசு வரலையாம்.. “ஏய் அங்க நிறைய வெள்ளக்காரிக இருப்பாங்கடி..??”
“அதுக்கு..!!”
“அதுக்குத்தான் அவள் கன்னத்தை தன் மீசை முடிகளால் கூச செய்தவன் நீ கூட வந்தா என் கண்ணு அங்க இங்க போகாதுல..”
“ஓஓஓஓஓ அப்படியெல்லாம் வேற இந்த பட்டிகாட்டானுக்கு ஆசை இருக்கா அப்படியெல்லாம் போனா இந்த கண்ண…!!”அதை குத்த வருவதுபோல கொண்டு போனவள் அவன் கன்னத்தை நறுக்கென கடிக்க,
அவளின் பொறாமையை ரசித்தவன் “நாம குழந்தை பிறக்கிறத கொஞ்சநாள் தள்ளி போட்டு இத நம்ம ஹனிமூன் டிரிப்பா மாத்தியிருக்கலாம்.. ம்ம்ம நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் போல.. இப்ப பாரு நீ என்கூட வர இவ்வளவு யோசிக்கிற..?”
அவன் வாயிலே ஒரு அடி போட்டவள் “போய்யா போ இப்படியெல்லாம் பேசாத எனக்கு பாப்பாதான் முக்கியம் …ஹனிமூன் முக்கியமில்ல..” அவள் முறுக்கி கொள்ள..
“சரிடி பச்ச மொளகா.. இப்போ மாமாக்கு சும்மா துணைக்கு மட்டும் வா.. உனக்கும் அங்க கொஞ்சம் வேலையிருக்கு..”
ஏதேதோ நினைவில் மனம் பரவசமாக தன் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு அவள் கன்னத்தை வருடி, “லட்டுமா.. பேபி..!!” மெதுவாக எழுப்ப..
தூக்க கலக்கத்தில் லேசாக கண்விழித்தவள் “என்ன மாமா..??”
“எழுந்து குளிச்சு ரெடியாகுடா ஐயர் அஞ்சுமணிக்கு வந்திடுவாரு..??” இன்று அவர்கள் புதுவீட்டிற்கு பால் காய்ச்சும் நாள்..
அவளை எழுப்பிவிட்டு வெளியில் வர தங்கைகள் அனைவரும் தயாராகி கொண்டிருந்தார்கள்.. தந்தையும் தாயும் அங்கே சமையற்கட்டில் சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்தபடி இருந்தனர்.. இவன் அடுப்படிக்கு சென்று காப்பி தயாரித்து எல்லாருக்கும் கொடுத்தவன் பெண்கள் தங்கள் அலங்காரங்களில் மூழ்கியிருக்கவும் அவர்களின் மகன்களை வைத்துக் கொண்டான்.. இருவரையும் தூக்கிவைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க, ஒவ்வொருவராக கிளம்பி வந்தனர்..
இவன் அறைக்குள் வர அந்த புது பட்டுசேலையின் மடிப்பை சரிசெய்ய மனைவி திணறிக் கொண்டிருப்பதை சற்று ரசித்தவன் அவள் காலருகே அமர்ந்து அதன் மடிப்புகளை நீவிவிட்டான்.. அவன் அலைஅலையான கேசத்தை கலைத்தவள் எப்போதும் போல அவன் அக்கறையில் மகிழ்ந்தாள்.. அவளுக்கு நகைகள் போட உதவியவன் குளிப்பதற்காக பாத்ரூமில் நுழைந்திருந்தான்..
சுந்தரி கதவை தட்டியவள் “அத்தாச்சி இந்த தலையை சீவி விடுறிகளா..??”
“வா சுந்தரி..” பட்டுபாவாடையில் ஜொலித்தவளை அவள் உடைக்கு ஏற்ப தலைசீவி மேக்கப் போட்டுவிட அவளுக்கு குஷி தாங்கவில்லை.. நூறுதரம் கண்ணாடி பார்த்து நல்லாயிருக்கா நல்லாயிருக்கா என ஆராய்ச்சியில் இறங்க.. வள்ளி இருவருக்கும் பூ கொண்டு வந்தவள் அண்ணன் மனைவிக்கு தலைநிறைய வைத்துவிட்டாள்..
“இந்த சேலை உங்களுக்கு ரொம்ப நல்லாயிருக்கு அத்தாச்சி..??”
“நீங்க கட்டியிருக்கிறதும் அழகா இருக்கு அண்ணி.. இங்க வாங்க.. இந்த சேலைக்கு இந்த நெக்லஸ் நல்லாயிருக்கும் இதப்போட்டுக்கோங்க..” அவள் போட்டிருந்ததை மாற்றி அவள் புடவைக்கு ஏற்ப கல்வைத்த நெக்லஸை மாற்றிவிட்டாள்..
தர்ஷினி தன் சொத்துக்கள் கைக்கு வந்தபோது நாத்தனார்கள் மூவருக்கும் ஒரு அமௌண்ட்டை பேங்கில் போட்டவள் அவர்களுக்கு கொஞ்சம் நகைகளும் கொடுத்திருந்தாள்.. சுந்தரும் ராமையாவும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.. சுந்தரிக்கு அவள் திருமணத்தின் போது செய்து கொள்ளலாம் என்று நினைத்தவள் விசேசங்களுக்கு போடுவது போல சில சிம்பிள் நகைகளை மட்டும் போட்டுவிட்டாள்..
சுந்தர் பட்டுவேட்டி சட்டையில் கிளம்பிவர ஐயரும் வந்திருந்தார்.. மகனையும் மருமகளையும் கணபதி ஹோமத்தில் அமரச் சொல்ல மறுத்தவன் தன் தாய் தந்தையையே முன்னிறுத்தினான்.. ஊரையே அழைத்திருக்க அப்பத்தாதான் தர்ஷினிக்கு பிறந்தவீட்டு முறைகளை செய்திருந்தார்.. அவள் சின்ன மாமா குடும்பமாக வந்திருக்க பெரிய மாமா வீட்டில் கோதண்டம் மட்டும் வந்திருந்தார்.. பாலா இன்னும் கோமா ஸ்டேஜிலேயே இருக்க அவன் மனைவி அவனை விட்டு விலகியவள் வேறு திருமணம் செய்திருந்தாள்.. பார்வதி தன் மகனை நினைத்து நினைத்தே வேதனையில் உழன்டு கொண்டிருந்தார்..
கந்தப்பன் தன் மனைவி ,மற்றும் தந்தையோடு வந்திருக்க வேலுவும் படுத்த படுக்கைதான்.. கத்திகுத்து எசகுபிசகாய் இறங்கியிருக்க ஒரு காலும் கையும் விளங்காமல் போய் எல்லாம் படுக்கையில்தான்.. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் கிடந்தான்.. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை.. சுப்பையா மட்டும் மனது கேட்காமல் அவ்வப்போது போய் மகனை பார்த்துவருவார்.. கந்தப்பன் அவன் முகத்திலேயே விழிக்க விரும்பவில்லை..
தாய் எவ்வளவோ சொல்லியும் அங்கு செல்லவில்லை.. ரைஸ் மில்லில் வேலைப்பார்த்துக் கொண்டே சுந்தரோடு சேர்ந்து இப்போது இயற்கை விவசாயத்தில் இறங்கி இருவரும் விவசாயத்தில் சில புரட்சிகளை செய்து கொண்டிருந்தனர்..
ராம் எவ்வளவோ முயன்றும் ஜெய்யை அவனால் ஜாமீனில் எடுக்க முடியவில்லை.. தர்ஷினியை மிரட்டிக்கூட பார்த்தான்.. கேஸை வாபஸ் வாங்கும்படி.. சுந்தர் எல்லாவற்றையும் பக்காவாக செய்து ஜெய்யை வரமுடியாதபடி செய்தவன் அவர்கள் கொள்ளையடித்த பணத்தையும் மீட்டிருந்தான்.. அதோடு தர்ஷினிக்கோ இல்லை அவளது கணவர் குடும்பத்துக்கோ எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு ராம் குடும்பம்தான் முழுபொறுப்பு என கமிஷ்னர் ஆபிஸில் எழுதி கொடுத்திருக்க இத்தனை கொலைகளை செய்த ஜெய்க்கு கோர்ட் மரண தண்டனை வழங்கியிருந்தது..
சுந்தருக்கு சற்று வருத்தம்தான் ராம்க்கு எந்த தண்டனையும் கொடுக்க முடியவில்லையே என.. ஆனால் ஜெய்க்கு தண்டனை கிடைத்த மூன்று மாதத்திலேயே அவன் நினைத்தது நடக்காததில் அதிக மனஉளைச்சல் தாங்காமல் அவன் போட்டிருந்த அந்த வைர மோதிரத்தை பொடி செய்து விழுங்கி தற்கொலை செய்து இறந்திருந்தான்.. தர்ஷினி குடும்பத்தில் இருந்த ராசியான அந்த வைரக்கல் தர்ஷினி குடும்பத்திற்கு நல்லதே செய்தது.. தம்பி இறந்தது இவன் எதிர்பார்க்கவே இல்லை.. தர்ஷினியை எதுவும் செய்ய முடியாமல், சொத்தும் கிடைக்காமல், தம்பியையும் காப்பாற்ற முடியாமல் இவனும் கொஞ்சம் கொஞ்சமாக மனநோயாளியாக மாறிக் கொண்டிருந்தான்.. தப்புக்கு தண்டனை கண்டிப்பாக உண்டு.. இவனுக்கும் அது கிடைக்கும்..
[the_ad id=”6605″]
இங்கு கிரகப்பிரவேசம் மகிழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்க வந்தவர்கள் அனைவரும் வீட்டை பார்த்து அசந்துதான் போயிருந்தனர்.. பெரிய போர்டிக்கோ, அதை அடுத்து பெரிய ஹால் இருபுறமும் மூன்று மூன்று அறைகள் பெரிய கிச்சன் டைனிங்ஹால் அமைத்திருந்தவன் ஹாலில் இருந்தபடியே மாடிக்கு செல்ல படியமைத்து மேல் தளம் முழுவதும் சுந்தருக்காக அமைத்திருந்தான்.. பெரிய ஹாலும் பெரிய மாஸ்டர் பெட்ரூம் மட்டும்தான் ஒரு பால்கனி அமைத்து அதில் ஊஞ்சல் லவ் பேர்ட்ஸ் என மனைவிக்காக பார்த்து பார்த்து கட்டியிருந்தான்..
தங்கைகள் நால்வருக்கும் தனிதனி அறை அதுபோக அப்பத்தா, தாய்தந்தைக்கு தனி அறை கட்டியிருக்க பழைய வீட்டை அப்படியே கோவில் வீடாக மாற்றியிருந்தான்.. எப்படியிருந்தாலும் அங்குதான் தன் அப்பத்தாவின் நினைவுகள் அதிகம் இருக்குமிடம்.. அந்த வீட்டை இடிக்க மனதுவரவில்லை.. வீடு கட்ட தர்ஷினியின் பணத்தில் ஒருபைசாக்கூட எடுக்காதவன், தன் சம்பாத்தியத்திலேயே முழுவீட்டையும் கட்டி முடித்திருந்தான்..
வந்தவர்கள் அனைவருக்கும் சுந்தர் தர்ஷினியின் ஜோடி பொருத்தத்தின் மேல்தான் கண்.. பொறாமை என்று கூட சொல்லலாம்.. இருவரும் அவ்வளவு பொருத்தமாக அவள் அழகில் தேவதையாக இருந்தால் என்றால் சுந்தரோ ஆண்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தான்.. எப்படி சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்த குடும்பம் இன்னைக்கு இவ்வளவு வசதியா..!!! சுந்தரின் அயராத உழைப்பும், அவன் மனைவியின் அனைவரிடமும் பாசம் காட்டும் குணமுமே அவனை இந்த அளவிற்கு உயர்த்தியிருந்தது.. அதோடு அவர்கள் குடும்ப ஒற்றுமை மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்கள்..