”வேதாளப் பட்டன்? யு மீன் வேதாளம்?”
தேவி வியப்பும் குழப்பமும் கலந்து கேட்டாள்.
“ஆமா… அவனேதான்!”
செழியன் இலேசான சிரிப்புடன் சொன்னார்.
“அதான… விக்ரமாதித்யர்னா அடுத்து வேதாளம்தான! இவ்ளோ நாளா நமக்கு அது தட்டுப்படவே இல்ல பாரேன்!”
அருண் சற்று வியந்தபடியே சொன்னான்.
செழியன் அவனை முறைத்துப் பார்த்தார்.
“வேதாளம்னா… அது பேயா? பிசாசா? பூதமா?”
தேவி கேள்விகளை அடுக்கினாள்.
“இவங்க பேசிக்குறதைப் பார்த்தா வேதாளமும் மனுஷன் மாதிரிதான்னு தோனுதே?”
அருண் வினா-விடையாகக் கேட்டான்.
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! விக்ரமாதித்யர்தான் எங்கயோ போய் அவனைப் பிடிச்சிட்டு வந்தாரு! ஆனா, பார்க்க மனுஷன் மாதிரித்தான் இருப்பான்!”
செழியன் எள்ளலாகச் சொன்னார்.
தேவியும் அருணும் விக்ரமைக் கேள்வியுடன் பார்க்க, அவன் ‘எனக்கென்ன தெரியும்?’ என்பதைப் போலத் தோள்களைக் குலுக்கினான்!
“சரி, இப்ப வேதாளத்தை எங்கனு போய் தேடுறது?”
விக்ரம் வராகமிகிரரைப் பார்த்துக் கேட்டான்.
“தக்ஷிணமேரு அமையும் தலத்திற்கு அருகில் வேதாளப் பட்டன் இருப்பான் என்று காளிதாசர் கணித்து வைத்துள்ளார்”
வராகமிகிரர் சொன்னபடியே ஒரு பட்டுத்துணிச் சுருளை எடுத்து செழியனிடம் கொடுத்தார். அவர் அதைப் பிரித்துப் படித்துப் பார்த்து ‘ஆம்’ என்பதைப் போலத் தலையசைத்தார்.
“நான் ப்ரஸன்னம் பார்த்ததிலும் அதே விடைதான் வந்தது!”
செழியன் அந்தப் பட்டுத் துணியை மீண்டும் சுருட்டி அவரிடம் பணிவோடு நீட்ட வராகமிகிரர் அதை வாங்கி மறுபடி தனது மடியில் சொருகிக்கொண்டார்.
”ம்ம்ம்… இப்ப நாம தக்ஷிணமேருவத் தேடனுமா?”
தேவி அலுப்புடன் கேட்டாள்.
“தேவையில்ல! தஞ்சாவூர் பெரிய கோயில்தான் தட்சிணமேரு!”
[the_ad id=”6605″]
செழியன் புன்னகையுடன் சொன்னார்.
“ஓ… அப்ப வேலை சுலபம்… வாங்க உடனே கிளம்பலாம்!”
தேவி பரபரப்பானாள்.
”விஷாலி…?”
அருண் தயக்கத்துடன் கேட்டான்.
”அவளுக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொன்னோமே! கவலைப்படாம கிளம்பு, வேதாளப் பட்டனைக் கண்டு பிடிச்ச கையோட விஷாலியைக் கண்டுபிடிச்சிடலாம்…”
செழியன் ஆறுதலாகச் சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்டு விக்ரமின் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்தது.
”ஆனா, தஞ்சாவூர்ல போய் வேதாளப் பட்டனை எப்படிக் கண்டுபிடிக்குறது? அவன் எப்படி இருப்பான்னு உங்களுக்குத் தெரியுமா?”
விக்ரம் குழப்பமும் சந்தேகமும் கலந்து செழியனைப் பார்த்துக் கேட்டான்.
செழியன் பதில் சொல்லுமுன் வராகமிகிரர் சொன்னார்,
”அந்தக் கவலை உனக்கு வேண்டாம் விக்ரமா… வேதாளப் பட்டன் உனது ஏவலன்… அது எப்போதும் மாறாது… நீ தஞ்சை மண்ணில் காலை வைத்ததும் நீ அவனையும் அவன் உன்னையும் தானாக உணர்ந்துகொள்வீர்கள்… உஜ்ஜைனி மாகாளி துணையிருப்பாள், கலக்கமின்றிப் போய் வாருங்கள்…”
வராகமிகிரர் வலது கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
விக்ரம் அவரை வணங்கினான். தேவியும் அருணும் கிளம்பத் தயாராக எத்தனித்தனர்.
“இன்னொரு விஷயம்…”
வராகமிகிரர் அவர்கள் கவனத்தைத் தன்பால் மீண்டும் இழுத்தார்.
அவர்கள் அனைவரும் ’என்ன’ என்று ஆர்வத்துடன் அவரைப் பார்த்தனர்.
“போகும் வழியில் ஒரு பழைய சிவன் கோயில் இருக்கிறது, அங்கு சென்றுவிட்டுப் போங்கள்… இங்கிருந்து சுமார் இரண்டு காத தூரத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்திருக்கும் ஒரு அரசமரம் இருக்கும், அதனையொட்டி வலதுபுறமாகச் செல்லும் வழியில் சென்றால் அக்கோயிலை அடைவீர்கள்… ஜெய விஜயீ பவ!”
அவர் மீண்டும் ஆசீர்வதித்துவிட்டு அவர்கள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து சென்றார்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினர்.
“சரி, சட்டுனு கிளம்புவோம்… ஏற்கனவே இருட்ட ஆரம்பிச்சுடுச்சு, பாதிராத்திரில கோயிலுக்குப் போனா நல்லா இருக்காது!”
என்று தேவி அவர்களைத் துரிதப்படுத்தினாள்.
அவர்களுக்குப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவும் இருக்கவில்லை. அருணும் ஆய்வாளர் தேவராசும் தங்கள் துணிமணிகளை எடுத்துக்கொண்டதும் கிளம்பினர்.
‘ஒரு காதம்’ எவ்வளவு தொலைவு என்பதில் தேவிக்கும் செழியனுக்கும் வாக்குவாதம் நடந்தது. அதுவும் இருட்டும் சேர்ந்து அவர்கள் முதல்முறை கடந்து போகும்போது அந்த அரசமரத்தைக் கவனிக்காமல் தவறவிட்டு, பின் மீண்டும் முன்னும் பின்னும் சில கிலோமீட்டர்கள் சுற்றி ஒருவழியாகக் கண்டுபிடித்தனர்.
வராகமிகிரர் குறிப்பிட்ட அந்த அரசமரத்தை ஒட்டிச் சென்ற சாலை ஒரு சிறிய கிராமத்தைச் சென்று அடைந்தது. அவர்கள் அங்குச் சென்றபோது ஊரே அடங்கியிருந்தது. சில இளசுகளும் பெரிசுகளும் மட்டும் ஆங்காங்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.
இவர்களின் பெரிய மகிழுந்து வருவதைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் கேள்விகள் எழுந்தன. சில இளைஞர்கள் எழுந்து வண்டிக்கு அருகில் வந்தார்கள்.
“ஏமி காவாலி சார்?”
ஓரக்கண்ணால் தேவியை ‘சைட்’ அடித்தபடியே முன்னால் சென்ற ஆய்வாளர் சத்தீசிடம் கேட்டான் ஒருவன்.
“ஈவூர்லோ ஷிவா டெம்பிள் எக்கட உந்தி?”
சத்தீசு தனக்குத் தெரிந்த அரைகுறை தெலுங்கில் கேட்டார்.
அந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
”இக்கட ஷிவாகுடி லேது சாரு!”
ஒருவன் முந்திக்கொண்டு சொன்னான்.
“என்னவாம்?”
தேவி கேட்டபடி சத்தீசின் அருகில் வந்தாள்.
அவள் வந்த தோரணையையும் ஆஜானுபாகுவான சத்தீசிடம் அவள் அதட்டலாகப் பேசியதையும் பார்த்து அதுவரை அவளை ‘சைட்’ அடித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் பின்வாங்கினர்.
”இந்த ஊர்ல சிவன் கோயில்லாம் இல்லைனு சொல்றாங்க மேடம்!”
[the_ad id=”6605″]
சத்தீசு பணிவுடன் சொன்னார். அதற்குள் ஊர் பெருசுகள் அங்கு வந்தனர்.
தேவியும் சத்தீசும் அவர்களுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்தனர்.
“இந்த ஊர்ல அம்மன் கோயில்தான் இருக்காம், சிவன் கோயிலே இல்லைனு சொல்றாங்க, இங்கேர்ந்து ஒரு அறுபது கிலோமீட்டர் தள்ளிதான் ஒரு சிவன் கோயில் இருக்காம்! எனக்கென்னவோ நம்ம ‘காதம்’ கணக்கு தப்புனு தோனுது!”
தேவி சற்றே சலிப்புடன் சொன்னாள்.
”இல்ல… நம்ம வந்த இடம் சரிதான், வராகமிகிரர் சொன்ன சிவன் கோயில் இங்கதான் இருக்கு…”
செழியன் ஆழ்ந்த சிந்தனையுடன் அழுத்தமாகச் சொன்னார்.
“ஆமா, எனக்கும் அப்படித்தான் தோனுது!”
அருண் அனிச்சையாகச் சொன்னான்.
தேவியும் விக்ரமும் அவனை வியப்புடன் பார்த்தனர்.
செழியன் புன்னகைத்தார்.
“வராகமிகிரர் நம்மள இங்க எதுக்காக வரச் சொன்னார்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு… அருண் நீ முன்னால் போ, உனக்குத்தான் அந்தச் சிவன் கோயில் தெரியும்!”
செழியன் சொன்னது அனைவருக்கும் புதிராக இருந்தது.
“அருணுக்கா?”
விக்ரம் வியப்போடு கேட்டான்.
“அதான, இவன் விக்ரமாதித்யர் கதைலயே கிடையாது! அந்த மோதிரம் இவனை ஒன்னுமே பண்ணதில்லையே!”
தேவி சற்றே கிண்டலாகச் சொன்னாள். அருண் அவளை போலியாய் முறைத்தான்.
“அதையும்தான் பார்ப்போமே… நட அருண்… உனக்குத் தன்னால தெரியும்!”
செழியன் துரிதப்படுத்த அருண் முன்னால் சென்றான்.
முதலில் எங்குச் செல்வது என்று தெரியாமல் தயக்கத்துடன் நேராக நடந்தவன் சட்டென தீர்மானமாக நடக்கத் தொடங்கினான்.
அந்த ஊரின் பிரதான சாலை வழியாக சென்றான் அருண்.
“ஏமி சார்ர்ர்?”
ஒரு இளைஞன் குறுக்கே வர, சத்தீசும் தேவராசும் அவனை ஓரங்கட்டித் தாங்கள் காவல்துறை என்று காட்டிக்கொண்டார்கள். பெரிதாய் ஏதும் இல்லை, சின்ன விஷயம்தான், யாரும் தங்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று பதமாகச் சொல்லி அந்த இளைஞர்களையும் பெரிசுகளையும் கழட்டிவிட்டனர்.
அருண் விறுவிறுவென முன்னால் நடக்க இவர்கள் அவனை ஓட்டமும் நடையுமாய்த் தொடர்ந்தனர்.
அவ்வூரின் நான்கைந்து முக்கிய தெருக்களையும் ஐம்பது அறுபது வீடுகளையும் தாண்டிப் பின்னால் ஆங்காங்கு வயலும் பெரும்பான்மையும் பொட்டல் காடாகவும் இருந்த இடத்தை அடைந்தனர்.
“அதோ!”
அருண் கை நீட்டிக் காட்டிவிட்டு இன்னும் விரைவாக நடந்தான்.
அவன் காட்டிய திசையில் இருட்டும் அந்த இருட்டில் நிழலாய் சில பனை மரங்களும் மட்டுமே தெரிந்தன.
”உனக்குத் தெரியுதா விக்ரம்?”
தேவி கேட்க விக்ரம் ’இல்லை’ என்று தோளைக் குலுக்கினான்.
தேவி ஆயாசத்துடன் கண்களை உருட்டிவிட்டு அருணைத் தொடர்ந்தாள்.
அருண் சில நூறு அடிகள் முன்னால் சென்றிருந்தான். ஒன்றுமில்லாத இருட்டில் சற்று அண்ணாந்து எதையோ உற்றுப் பார்த்தபடி நின்றான்.
’என்னடா இது!’ என்று சலிப்போடு தேவியும் அவனுக்கு அருகில் போய் நின்றாள். மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.
”கோயில் தெரியுதா அருண்?”
தேவி கேட்டபடி அருணின் தோளில் கைவைக்கச் சட்டென அந்தக் கோயில் அவள் கண்முன் விரிந்தது.
கண்கட்டு வித்தை போல இருட்டோடு இருட்டாய் அந்தக் கோயில் சட்டென அங்கே தோன்றியிருந்தது.
பெரும்பான்மையும் இடிந்துவிழுந்த மதிற்சுவரும், சுமார் இருபடி உயர கோபுரமும், உள்ளே ஒரு நூறடித் தொலைவில் முன்மண்டபமும், அழகிய விமானமும் கொண்ட கருவறையும் இருந்தன. முன்மண்டபம் சற்று இடிபாடுகளுடன் இருந்தது. பக்கவாட்டில் இருந்த அர்த்த மண்டபம் முழுதாக இடிந்து சில தூண்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தன. கருவறையும் விமானமும் அதிக சேதம் இன்றி இருந்தன. எங்கும் சிற்ப வேலைப்பாடுகள் இருப்பது வெளிக்கோடாய்த் தெரிந்தது. இருட்டில் தெளிவாய் இல்லை.
தேவி திகைப்பில் சில நொடிகள் அசையாமல் நின்றாள்.
மற்றவர்களுக்கும் அதே திகைப்பு இருந்தது சத்தீசும் தேவராசும் ‘ஆ’ என்று மூச்சைப் பிடித்துக்கொண்டதிலிருந்து தெரிந்தது.
“வராகமிகிரர் சொன்ன கோயில் இதுதான்!”
செழியன் வெற்றிப் புன்னகையோடு சொன்னார்.
”இங்க எதுக்கு வரச் சொன்னார்?”
விக்ரம் கோயிலையே பார்த்தபடி கேட்டான்.
“உள்ளப் போனா தன்னால தெரிஞ்சுப்பீங்க அண்ணா!”
[the_ad id=”6605″]
செழியன் பணிவுடன் பதில் சொன்னார்.
”வெளிச்சம் இல்லையே! சத்தீஷ் சார் டார்ச் இருக்கு?”
தேவி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அருண் மெள்ள நடந்து உள்ளே சென்றான்.
அவன் உள்ளே சென்ற நொடி கோயிலில் ஆங்காங்கு சில விளக்குகள் எரியத் தொடங்கின. அவற்றின் மஞ்சள் வெளிச்சம் மெல்லப் பரவியது.
“வாவ்! எப்படி இது?”
தேவி வியப்பில் கண்கள் விரியக் கேட்டாள்.
“இது அருண் கட்டின கோயில்தான்! அவன் கடைசியா மறைஞ்சு போனதும் இங்கதான்!”
செழியன் புன்னகையுடன் பதில் சொன்னார்.
”ஓ… அப்ப அருணும் ஆட்டத்துல சேர்த்தியா? அருண் யார் சார்?”
தேவி உற்சாகமாய்க் கேட்டாள். பேசியபடியே அவர்களும் கோயிலுக்குள் சென்றனர். விளக்குகளின் ஒளியில் கோயிலின் சிற்பங்கள் ஓரளவு தெளிவாய்த் தெரிந்தன.
பல சிற்பங்கள் போர்க் காட்சிகளாகவே இருந்தன.
தேவர்களும், அசுரர்களும், இயட்சர்களும், கர்ந்தருவர்களும், நாகர்களும், பூதங்களும் என்று பலவித உருவத்தினர் பலப்பல வகையில் போரிடும் காட்சிகளே அதிகம் இருந்தன. இது கோயிலா அல்லது போர்க்கலை அருங்காட்சியகமா என்று எண்ணத் தோன்றியது!
தேவியும் பிறரும் அந்தச் சிற்பங்களை ரசித்தபடியே வந்தனர்.
“திரிபுராந்தகேசுவரர் கோயில்!”
முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே அடியெடுத்து வைத்ததும் விக்ரம் அனிச்சையாகச் சொன்னான்.
“அதேதான் விக்ரம்!”
செழியன் மகிழ்வோடு சொன்னார்.
“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்ல! அருண் யாரு?”
தேவி செழியனைக் கேட்டாள்.
“பேரரசர் விக்ரமாதித்யரின் நவரத்னங்களில் ஒருவர்… அவரது சேனாதிபதி… சிம்மத்துவஜன்… அமரசிம்மர்!”
செழியன் பெருமிதத்தோடு சொன்னார்.
அதற்குள் அவர்கள் கருவறையை நெருங்கிவிட்டிருந்தனர்.
அங்கே அருண் உள்ளே இருக்கும் இலிங்கத்தையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனுக்கு இரண்டடி பின்னால் விக்ரமும் அவ்வாறே நின்றிருந்தான்.
தேவியும் அவர்கள் அருகில் சென்று உள்ளே பார்த்தாள்.
கருவறையில் இருந்த சிவலிங்கம் சாதாரணமாகத்தான் இருந்தது. சிலந்திவலையும் தூசியும் மண்டிக்கிடந்தது. ஆனால், இலிங்கத்திற்குப் பின்னால் சுவர் முழுவதும் வியாபித்திருந்த புடைப்புச் சிற்பம் அவளது கவனத்தைக் கவர்ந்தது!
அந்த மெல்லிய வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிந்த அந்தச் சிற்பத்தை முதலில் இராமரின் சிற்பம் என்று நினைத்தாள். இடது கையில் தன்னுயர வில்லும், வலது கையில் அம்பும் பிடித்தபடி, ஒய்யாரமாக வளைந்து நின்ற அந்தச் சிற்பத்தின் முகத்தில் தவழ்ந்த புன்னகை அந்த மங்கிய ஒளியின் ஜாலத்தில் தேவியின் மனத்தைக் கவர்ந்திழுத்தது.
[the_ad id=”6605″]
‘சிவன் கோயிலில் ஏன் இராமர் சிலை இருக்கிறது?’ என்று எண்ணியவள் அதைக் கேட்க எண்ணி பேசத் தொடங்கினாள்,
“இது ராம-”
“திரிபுராந்தகர்!”
அவள் முடிக்குமுன் அருண் இடைவெட்டினான். அவனது குரல் உணர்ச்சியற்று இருந்தது.
(படம்: ‘திரிபுராந்தகர்’ = திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்! அசுரர்களின் பறக்கும் கோட்டைகளான மூன்று கோட்டைகளைத் தன் புன்னகையால் எரித்த சிவபெருமான்! நல்லப் படமாகப் போடத்தான் ஆசை, அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை, இப்போதைக்கு இதுதான் கிடைத்தது எனது மடிக்கணினியில்! இது சிவகங்கை மாவட்டத்தில்லுள்ள ஒரு கோயிலில் எடுத்த புகைப்படம்! அட்ஜஸ்ட் மாடி! 🙂 )
தேவி மீண்டும் அந்தச் சிலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.
அருன் சட்டெனக் கருவறைக்குள் நுழைந்தான்.
அவன் மீண்டும் வெளியில் வந்தபோது அவன் கையில் ஒரு வாள் இருந்தது.
அதன் உறை தூசி படிந்து மிக மிகப் பழையதாய்க் காணப்பட்டது.
வெளியில் வந்து அந்த வாளை இலிங்கத்திற்கு நேரே கீழே வைத்து வணங்கியவன், எழுந்து நின்று வாளை உருவினான்.
அருணின் முகம் சற்று மாறியிருப்பதைப் போலத் தோன்றியது தேவிக்கு.
கோவமாய் இருப்பவனைப் போலக் காணப்பட்டான்.
உருவிய வாளை இருகைகளாலும் பிடித்தபடி விக்ரம் முன் மண்டியிட்டான்.
”சிம்மத்துவஜன் அமரசிம்மனின் வந்தனங்கள் மகாராஜா!”
”ஜெய விஜயீ பவ! எழுந்திரு அமரசிம்மா!”
விக்ரம் கையை உயர்த்தி அவனை ஆசீர்வதித்தான். தேவி அவர்கள் இருவரையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். செழியன் புன்னகைத்தபடி நின்றார்.
அருண் எழுந்து நிற்க விக்ரம் அவனது தோளில் கை வைத்தான்.
“மாகாளி இட்ட பணிகள் நம்முன் இருக்கின்றன…”
விக்ரம் உறுதியான குரலில் சொன்னான்.
“விஷீஈஈஈ…”
அருண் பதில் சொல்வதற்குள் தேவி சட்டென அலறிவிட்டு மயங்கி விழுந்தாள்!
தொடரும்…