மன்யாக்னியின் ஒளிக்கீற்று அந்தச் சகர் படையை ஒன்றும் செய்யாமல் தாண்டிச் சென்றதைப் பார்த்து அனைவருமே ஒரு கணம் திகைத்தனர்.
இவர்களை ஒவ்வொருவராக வெட்டித்தான் வீழ்த்த வேண்டும் என்று உணர்ந்து, முதல் ஆளாக தேவி அவர்கள் மீது பாய்ந்தாள்.
விஷாலியின் வலியையும் துன்பத்தையும் அறிந்திருந்த அவள் அந்த கோவத்தை இவர்கள் மீது காட்டுபவளைப் போல கையிலிருந்த வாளைச் சுழற்றிக்கொண்டு அவர்கள் மீது பாய்ந்தாள்.
விக்ரம் அருகில் வந்த சகர்களை வெட்டி வீழ்த்தியபடியே சத்தீசை நெருங்கினான்.
வாசல்வரை வந்துவிட்டிருந்த அருணும் செழியனும் சில நொடிகள் நின்று அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.
“பட்டி, நீங்க அவுட்போஸ்டுக்குப் போக வேண்டாம், நேரா கார்ல போய் வெயிட் பண்ணுங்க, நாங்க உடனே வரோம்… நாங்க வரும்போது காரை ஸ்டார்ட் பண்ணி ரெடியா வெச்சுக்கோங்க…”
என்று அருண் ஆணையிடாதக் குறையாகச் சொல்லிவிட்டு நடுக்கூடத்தை நோக்கி ஓடினான்.
தேவராசு சத்தீசு கையில் குத்திய நெஞ்சில் குத்தியிருந்த அந்தச் சிறிய கட்டாரியை மெதுவாக உருவி வெளியே எடுத்தார், கொப்பளித்த குருதியை நிறுத்த தன் கைக்குட்டையைப் புண்ணில் வைத்து அழுத்திப் பிடித்திருந்தார்.
“நல்ல வேள, சின்ன கத்திதான் ரொம்ப ஆழமா இறங்கல, எலும்புல பட்டு நின்னுடுச்சு, வலது பக்க நெஞ்சுலதான் குத்திருக்கு, அதனால் இதயத்துக்குப் பாதிப்பில்ல… ஆனா ரத்தப் போக்கை உடனே நிறுத்தனும்…”
அருகில் வந்த விக்ரமிடம் தேவராசு கடகடவெனச் சொல்லவும், அருண் அங்கே வந்து சேரவும் சரியாக இருந்தன.
”அருண், நீயும் தேவராசும் சாத்தீஷை காருக்கு எடுத்துட்டுப் போங்க, நான் இவங்களைப் பார்த்துக்குறேன்…”
விக்ரம் சொன்னபடியே சகர்களோடு போரிட்டுக் கொண்டிருந்த தேவியுடன் இணைந்தான்.
சத்தீசின் நெஞ்சுப் புண்ணை அழுத்திப் பிடித்தபடியே தேவராசு அவரைத் தூக்கிக்கொள்ள, அருண் அவரது கால்களைப் பிடித்துத் தூக்க, இருவரும் வாசல் நோக்கி ஏறக்குறைய ஓடினர்.
சக வீரர்கள் அவர்களை நெருங்காதபடித் தடுத்துக்கொண்டே போர் செய்த விக்ரமும் தேவியும் கூட அவர்களோடு வாசல்வரை வந்தனர்.
போரிட்டபடியே வாசலைத் தாண்டிய விக்ரமும் தேவியும் அந்தச் சகர்கள் வாசலைத் தாண்டி வராமல் அங்கேயே நின்றுவிட்டதைக் கண்டு ஒன்றும் புரியாதவர்களாய் விட்டால் போதும் என்று ஓடிவந்து இவர்களோடு மகிழுந்தில் ஏறிக்கொண்டனர்.
மகிழுந்தைக் கிளப்பித் தயாராக வைத்திருந்த செழியன் இவர்கள் அனைவருமே வந்ததும் சட்டெனக் கிளம்பி முதன்மைச் சாலையை நோக்கி வண்டியை விரட்டினார்.
ஏழு பேர் வசதியாக அமர்ந்து செல்லக் கூடிய அந்த மகிழுந்தில் சத்தீசைப் படுக்க வைத்துக்கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் சற்றே நெரிசலாக இருந்தனர்.
தேவியும் தேவராசும் தாங்கள் பெற்றிருந்த முதலுதவிப் பயிற்சியினால் வண்டியில் இருந்த முதலுதவிப் பொருள்களை வைத்து சத்தீசிற்கு அவசர சிகிச்சை அளித்தனர்.
“வேகமாப் போங்க செழியன், சிக்னலைலாம் பார்க்காதீங்க, இவரை உடனே ஒரு ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போகனும்…”
தேவி படபடப்பாய்ச் சொன்னாள்.
செழியனுக்குச் சரியாக வழி தெரிந்திருக்கவில்லை, குத்துமதிப்பாக ஒரு அனுமானமானத் திசையை மனத்தில் வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார்.
‘சரியாக வழி தெரியவில்லை’ என்று அவர் கூற முனைந்த போது சாலைக்குக் குறுக்கே நின்றவரைப் பார்த்துச் சட்டென வண்டியை நிறுத்தினார்.
ஒரு பெரிய குலுக்கலுடன் நின்ற வண்டியில் அனைவரும் குழப்பமும் கோவமும் கலந்து செழியனைப் பார்க்க, அவரது பார்வை முன் கண்ணாடிக்கு வெளியே இருப்பதைப் பார்த்து அங்கே பார்த்தனர்.
வராகமிகிரர் புன்னகைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.
அந்த மங்கிக் கொண்டிருந்த மாலை வெளிச்சத்தில் அவர் மட்டும் தனி ஒளியுடன் தோன்றினார்.
தேவி முதல் ஆளாக வண்டியைவிட்டு இறங்கி அவரிடம் ஓடினாள்.
“சார், சத்தீஷ் கத்தி குத்துப் பட்டிருக்காரு, உங்களால அவரைக் காப்பாத்த முடியும்… சீக்கிரம் வாங்க…”
“நிச்சயம் செய்கிறேன், தேவி! நான் இப்போது வந்த காரணத்தில் அதுவும் ஒன்றுதான்…”
என்றபடி அவர் வண்டியை நோக்கி நடந்தார்.
அதற்குள் விக்ரம், அருண், செழியன் ஆகியோரும் வண்டியைவிட்டு இறங்கியிருந்தனர். தேவராசு சத்தீசின் நெஞ்சைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தார்.
வண்டியின் பின்பக்கக் கதவைத் திறந்துவிட்டிருந்தார்.
அருகில் வந்த வராகமிகிரருக்கு விக்ரமும் அருணும் செழியனும் வணக்கம் சொல்ல, அவரும் அவர்களை ஆசீர்வதிப்பவரைப் போலக் கையை உயர்த்திவிட்டு சத்தீசின் அருகில் சென்றார்.
தேவராசை வெளியில் வரும்படிச் செய்கை செய்துவிட்டு அவர் சத்தீசின் காயத்தை ஆராய்ந்தார்.
செழியனை அருகில் அழைத்து ஏதோ சொல்ல, செழியன் விரைந்து சத்தீசின் சட்டையை கழட்டிவிட்டு, காயத்தையும் சுற்றியிருந்த இரத்தத் திட்டுக்களையும் தண்ணீரால் நன்றாகக் கழுவிவிட்டார்.
வராகமிகிரர் தன் முகத்தில் இருந்த புன்னகை மாறாமல் தன் இடுப்பிலிருந்து ஏதோ ஒரு மூலிகையை எடுத்துக் கையில் கசக்கி சத்தீசின் காயத்தின் மீது பூசினார்.
அவர் மீண்டும் செழியனுக்குச் செய்கை செய்ய, செழியன் தேவராசிடம் காயத்தைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிடும்படி சொன்னார்.
தேவராசும் அவ்வாறே முதலுதவிப் பெட்டியிலிருந்த கட்டுத்துணியையும் பஞ்சையும் கொண்டு காயத்தின் மீது கட்டுப்போட்டார்.
“பெரிய ஆபத்தெதுவுமில்லை… சற்று நேரம் ஓய்வெடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் ஆறிவிடும். நல்ல சத்தான உணவை உட்கொண்டால் இழந்த குருதியினை சில நாழிகையில் மீட்டுக்கொண்டுவிடுவார்…”
என்று வராகமிகிரர் தேவியைப் பார்த்துத் தன் மந்தகாசம் மாறாமல் கூறினார்.
”ரொம்ப தேங்க்ஸ், சார்!”
என்று தேவி கூறிய பின் அங்கே சில நொடிகள் ஒரு அடர்ந்த மௌனம் நிலவியது. வராகமிகிரரே அம்மௌனத்தைக் கலைத்தார்,
“உங்கள் மனத்தை அரிக்கும் கேள்விகளை நான் அறிவேன்… இப்போதைக்கு என்னிடம் முழுதாக அவற்றுக்கு விடையில்லை… விரைவில் விடைகளோடு உங்களைச் சந்திக்கிறேன்… அதற்காகத்தான்…”
என்றபடி அவர் செழியனை நோக்கினார்.
“பட்டியை என்னோடு அழைத்துப் போக வந்தேன்… அவனது உதவி எனக்குத் தேவைப்படுகிறது!”
எல்லோரையும் ஒரு முறை மெள்ளப் பார்த்தபடியே சொன்னவர் விக்ரமின் மீது தன் பார்வையை நிறுத்தினார்.
“சுவாமி-”
விக்ரம் ஏதோ சொல்லுமும் அவர் இடைவெட்டினார்,
“விக்ரமா, திக்ரசூதனின் தந்திரங்கள் நான் எண்ணியதைவிடவும் சிக்கலானவையாக இருக்கின்றன, இன்று உன் மன்யாக்னியின் திய்வரேகை சகர்களை அழிக்காதது ஒரு சின்ன விஷயந்தான் என்று நீங்கள் சீக்கிரம் உணர்வீர்கள்… அந்த நிலைமை வருவதற்குள் நாம் அதற்குத் தயாராய் இருக்க வேண்டும்…”
அவர் மீண்டும் அனைவரையும் பார்த்தபடியே பேசினார்.
“இப்போதைக்கு நீங்கள் உங்கள் இல்லத்திற்குச் சென்று சிறிது ஓய்வெடுங்கள்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தஷிணமேருவை அடைந்து வேதாள பட்டனைக் கண்டுபிடியுங்கள்… நமக்கு அவன் தேவை! ஜெயவிஜயீ பவ!”
என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தவர், செழியனைத் தன்னைப் பின் தொடருமாறு செய்கை செய்துவிட்டுக் கடகடவென சாலைக்கு புறம்பாய் இருந்த அடர்ந்த தோப்பிற்குள் சென்று மறைந்தார்.
“வராகமிகிரர் சொன்னா அதுல ஏதோ காரணம் இருக்கும், அண்ணா… அவர் சொன்னபடி செய்ங்க… பத்திரமா இருங்க… விஷாலியைப் பார்த்துக்கோங்க, வரேன்!”
என்றுவிட்டு, தேவியையும் அருணையும் நோக்கித் தலையசைத்துவிட்டுச் செழியனும் வராகமிகிரரைப் பின் தொடர்ந்தார்.
சில நொடிகள் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் மூவரும் வண்டிக்குள் ஏறிக்கொண்டனர்.
அருண் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து மகிழுந்தைக் கிளப்பினான்.
தன் கைப்பேசியைப் பார்த்துத் திசையை முடிவு செய்துகொண்டவன் வண்டியைக் கிளப்பி வேகமெடுத்தான்.
விக்ரமும் தேவியும் பின்னால் இருந்த சத்தீசையும் தேவராசையும் பார்த்தனர்.
“ப்ளீடிங் சுத்தமா நின்னுடுச்சு, மேடம்… பல்ஸ் நார்மலாயிடுச்சு… ஹீ இஸ் ஆல்ரைட்!”
என்று குரலில் மகிழ்ச்சியும் வியப்பும் பொங்க அவர்களுக்குப் பதிலளித்தார் தேவராசு.
விக்ரமின் பார்வை விஷாலியின் மீது சென்றது.
அவர் மிகுந்த அயர்ச்சியில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
தேவி அவள் அருகில் அமர்ந்து தலையை மெள்ளத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஜஸ்ட் டய்ர்ட்தான் விக்ரம், விஷிக்கு ஒன்னுமில்ல, இவளும் ஆல்ரைட்!”
என்று தேவி விக்ரமை நோக்கி மெல்லிதாய்ப் புன்னகைத்தாள்.
விக்ரம் ‘சரி’ என்பதைப் போலத் தோளை ஒருமுறை குலுக்கிவிட்டுத் தன் பார்வையை முன்னால் செலுத்தினான்.
சென்னையை நோக்கிய அவர்களது பயணம் மௌனமாகக் கழிந்தது.
வண்டி சென்னையை நெருங்கியபோது சத்தீசை எந்த மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லலாம் என்ற பேச்சு வந்தது.
ஆனால், அதற்குத் தேவையே இல்லை என்பதைப் போல அவர் நன்றாக எழுந்து அமர்ந்திருந்தார்.
தேவராசின் எதிர்ப்பை மீறி சத்தீசு தனது காயத்தின் மீதிருந்த கட்டைத் தானே பிரித்தார். அங்கே காயம் எதுமின்றி, இலேசாய் இரத்தங்கட்டியதைப் போலச் சின்ன கறுப்பு வட்டம் மட்டும் இருந்தது.
தேவராசைத் தவிர மற்ற யாரும் பெரிதாக வியப்படையவில்லை.
இந்த மாய மந்தமெல்லாம் எதோ வழக்கமாகத் தம் வாழ்வில் நடப்பவைதான் என்பதைப் போல அவர்களது பேச்சு விஷாலியின் பக்கம் திரும்பியது, அவளும் இப்போது நன்றாகத் தெம்புடன் காணப்பட்டாள். (இடையில் ஒரு சுமாரான சாலையோர உணவகத்தில் அவர்கள் நன்றாக உண்டிருந்ததும் ஒரு காரணம்!)
“எப்படி நான் இருக்குற இடத்தைக் கண்டு பிடிச்சீங்க?”
விஷாலி அருணைப் பார்த்துக் கேட்டாள்.
“நாங்க எங்க கண்டு பிடிச்சோம், தேவிதான் ஏதோ ’விஷன்’ மாதிரி வந்து ’விஷீ’னு கத்தினா, அப்படிப் போங்க, இப்படிப் போங்கனு வழி சொன்னா, வந்து பார்த்தா ஒரே புகையா இருந்துச்சு, ஒரு மாதிரி நாத்தம் வேற… அஹ், விஷாலி இங்கதான் இருக்கா, சகர் படையே சமைச்சே கொல்லத் திட்டம் போட்டிருக்கா’னு நெனச்சோம்…”
அருண் சிரிப்பை அடக்கிக்கொண்டு சாலையைப் பார்த்தபடியே சொன்னான்.
”உன்னை அப்புறம் கவனிச்சுக்குறேண்டா…”
என்று அருணின் முதுகைக் கிள்ளியவள், தேவியின் பக்கம் திரும்பினாள்,
”தேவ்ஸ்… என் செல்ல்ல்லம்ம்ம், நீதான் என்னைக் கண்டு பிடிச்சியா? எப்படி மா பண்ண?”
என்று அவள் தோளில் கைபோட்டுக்கொண்டு கேட்டாள்.
“பாம்பின் கால் பாம்பறியும்னு சொல்றா மாதிரி உன்னோட கேவலமான சமையல் வாசனை அவளுக்கும் தெரிஞ்சிருக்கு…”
தேவிக்கு முன்பாக அருண் பதில் சொன்னான்.
“டேய்! நீ வண்டி ஓட்டுறியேன்னு உன்னைச் சும்மா விடுறேன், ஒழுங்க ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு… அங்க வந்த புகை ஒன்னும் சமையல் புகை இல்ல…”
விஷாலி கோவம் கொப்பளிக்கச் சொன்னாள்.
“ஆமா விஷி, நான் கூட பார்த்தேன், எதோ யாகம் மாதிரி…”
தேவி சொல்லவும் விஷாலி மீண்டும் அவள் பக்கம் திரும்பினாள்,
“அய்யோ, அந்தக் கருமத்த ஏன் கேக்குற… எதோ யாஸ்னாவாம், லூசுப் பசங்க ஒரு முழுக் குதிரையக் கொண்டு வந்து வெட்டி அதுக்குள்ள போட்டாங்க தேவ்ஸ்… உவ்வ்வேக்க்க்….”
என்று விஷாலி போலியாக வாந்தி எடுத்தாள்.
“ச்சீ! உண்மையாவா?”
தேவியும் அவளோடு சேர்ந்துகொண்டாள், இருவர் முகத்திலும் அருவருப்பு படர்ந்தது.
“ஓ, குதிரை தண்டூரியா? டேஸ்ட் பண்ணாம வந்துட்டோமே! ஸ்ஸ்ஸாஆ… ஏய்!”
அருண் சொல்லிக்கொண்டிருக்கும் போதே விஷாலி தன் நகத்தால் அவன் கழுத்தில் இலேசாய்க் கீறினாள்.
“அடுத்து என்னைத்தான் அதுல பலி கொடுக்கப் போறேன்னு சொல்லித் தள்ளிவிட்டான்…”
விஷாலி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.
”வாட்? நெருப்புக்குள்ள தள்ளிவிட்டானா? ஆனா…”
விக்ரம் முடிக்கும் முன் விஷாலி பதில் சொன்னாள்,
“ஆமா விக்ரம், அவன் என்னை அந்த பெரிய நெருப்புக்குள்ள புடிச்சுத் தள்ளிவிட்டான்… நான் நெருப்புக்குள்ள விழுந்தேன், எனக்கு இப்பகூட ஞாபகம் இருக்கு… ஆனா…”
அவளும் குழப்பத்தோடு இழுத்தாள்,
”உன் உடம்புல எதும் காயமோ அடியோ இல்லையே விஷி? பயத்துனாலயும் டயர்ட்னாலயும் நீயா அப்படிக் கற்பனை பண்ணிக்கிட்டிருந்திருப்ப…”
தேவி விஷாலியின் உடலைச் சோதனை செய்தவாறே சொன்னாள்.
“இல்ல தேவ்ஸ், எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அந்த டூப் பட்டி என்னை ‘ரத்னாங்கி’னு கூப்பிட்டான், என்னைப் பிடிச்சு அந்த நெருப்புக்குள்ள தள்ளிவிட்டான்…”
என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளது பார்வை சிந்தனையில் ஆழ்ந்தது.
“ஆங்… ரத்னாங்கி யார் தெரியுமா? அது-”
“விக்ரமாதித்யரின் சிம்மாசனத்துல இருந்த முப்பத்திரண்டு பதுமைகள்ல ஒன்னு, முப்பத்திரண்டாவது படில கைல பூர்ண கும்பத்தோட நிற்கும் தலைமைப் பதுமை…”
விக்ரம் சாலையை வெறித்தபடியே சொன்னான்.
“கரெக்ட், விக்ரம்! உனக்கு எப்படித் தெரியும்? ஓ, நீதான விக்ரமாதித்யரே!”
என்று கூறி கலகலவென்று நகைத்தாள் விஷாலி.
“அங்க இருக்கும்போது நான் அந்த ரத்னாங்கிப் பதுமையா இருக்குற மாதிரி தோனிச்சு… அது கனவும் இல்லை, ஆனா, நிஜமும் இல்லை… ஒரு மாதிரி… விக்ரம்தான் விக்ரமாதித்யரா இருந்தான்…. கரெகட், எனக்கு இப்பதான் ஃபுல்லா ஞாபகம் வருது…”
விஷாலி தனக்குத்தானே சொல்லிக்கொள்பவளைப் போலச் சொல்லிக்கொண்டு போனாள்.
“ம்ம்… அப்ப அவன் உன்னை நெருப்புல தள்ளிவிட்டதும் கற்பனைதான், கவலைய விடு!”
தேவி விஷாலியின் தொடையை மெள்ளத் தட்டியபடி சொன்னாள்.
“இல்ல… இல்ல தேவி… அது கற்பனை இல்ல… கனவும் இல்ல… அவன் நிஜமாவே என்னைத் தள்ளிவிட்டான்… என்னை அழிக்குறதுதான் அவன் நோக்கம்னு சொன்னான்…”
விஷாலியின் குரல் தீவிரமாகியது.
மேற்கொண்டு இந்தப் பேச்சைத் தொடர வேண்டாம் என்று தோன்ற, தேவி அவளை ஆமோதித்தாள்,
“ஓக்கே… ஓக்கே… அது கற்பனை இல்ல…”
“நீ நம்பலல? எதோ இந்தப் பேச்சை முடிக்கனும்னு சும்மா சரினு சொல்ற…”
விஷாலி குற்றம் சாட்டுபவளைப் போலச் சொன்னாள்.
“இல்ல, நம்புறேன்… நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு…”
“நம்பனும்… நம்பித்தான் ஆகனும்…”
விஷாலி வெறித்துப் பார்த்தபடிச் சொன்னாள்.
”ஓக்கே, விஷி… இப்ப நீ ரெஸ்-”
“நம்பனும்… ரத்னாங்கி அழிஞ்சுட்டா… இனி அவ வரமாட்டா!”
விஷாலி ஆத்திரமாய்க் கத்தியபடி இரும்புப் பிடியாய் தேவியின் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள்.
தொடரும்…