”சிம்மாசனமா?”
தேவி கண்கள் விரியக் கேட்டாள்.
”ரூம்க்குப் போய் நிதானமா பேசுலாம்!”
வேதாளப் பட்டன் பதிலளிக்கும் முன் விக்ரம் இடைமறித்தான்.
தேவி வேண்டா வெறுப்பாய்த் தலையசைத்துவிட்டு முன்னால் செல்ல, மற்றவர்கள் அவளைப் பின் தொடர்ந்து சென்றனர்.
”அருண் எல்லாருக்கும் ஏதாச்சு ஸ்னேக்ஸும் ட்ரிங்க்கும் ஆர்டர் பண்ணு…”
என்றுபடி விக்ரம் அமர்ந்துகொண்டான். அது இரண்டு பெரிய பகுதிகளைக் கொண்ட விசாலமான ’ஸ்வீட்’ அறை. ஒன்று வரவேற்பறை போலவும்
மற்றது படுக்கையறையாகவும் இருந்தது.
அறைக்குள் வந்ததும் விஷாலி அறையோடு இருந்த குளியலறைக்குள் சென்று புத்துணர்வு பெற்று உடைமாற்றிக்கொண்டு, ‘எனக்குச் சோர்வா
இருக்கு’ என்றுவிட்டுப் படுக்கையறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.
அவளது நடவடிக்கைகளை மௌனமாகப் பார்த்தபடி அருண் விடுதியின் வரவேற்பிற்கு அழைத்து அவர்களுக்கு திண்பண்டங்களும் குடிப்பதற்கான
பானங்களையும் கொண்டு வரச் சொன்னான்.
அனைவரும் அமரும்வரை தேவி பொறுமையின்றிக் காத்திருந்தாள்.
“இப்ப சொல்லுப்பா உன் கதைய…”
என்றாள் பட்டனைப் பார்த்து ஆயாசத்துடன். விக்ரம் இலேசாய்ப் புன்னகைத்தபடித் தலையை ஆட்டிக்கொண்டான்.
“ம்கும்!” என்று தொண்டையைச் செருமிக்கொண்டு தொடங்கினான் வேதாளப் பட்டன்,
“மகாராஜா விக்ரமாதித்யரோட புகழ்பெற்ற சிம்மாசனமேதான்! அதைப் பாதுகாக்குறதுதான் என் வேலை, விக்ரமாதித்யரே திரும்பி வர வரைக்கும்…
இதத்தான் வராகமிகிரர் என்கிட்ட சொன்னார்…”
”விக்ரமாதித்யரோட சிம்மாசனம்னா, இந்த முப்பத்திரண்டு படிகட்டு வெச்சு, படிக்கொரு பதுமையோடு இருக்கும்னு கதைலலாம் வருமே, அந்த
சிம்மாசனமா?”
தேவி வியப்போடு கேட்டாள். ஏனோ மற்ற யாருமே இவர்களின் உரையாடலில் பங்கேற்கவில்லை. தேவியே முந்திக்கொண்டு கேள்விகளைக்
கேட்டுவிடுகிறாள் என்பதாலோ என்னவோ!
“அதேதான்… ஆனா, அதுல இப்ப பதுமைகள் இல்ல, வெறும் முப்பத்திரண்டு படிக்கட்டுகள் மட்டுந்தான்!”
“உண்மையாவா? என்னாச்சு அந்தப் பதுமைகளுக்குலாம்?”
பதுமைகளைப் பற்றிய பேச்சு வந்ததும் விக்ரமின் கண்கள் அனிச்சையாக விஷாலி படுத்திருந்த படுக்கையறையை நோக்கிச் சென்றன. வேதாளப்
பட்டனும் விக்ரமைத் தொடர்ந்து அங்கே பார்த்துவிட்டு இலேசாய்ப் புன்னகைத்துக் கொண்டு தொடர்ந்தான்,
“சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி விக்ரமாதித்யரோட சிம்மாசனம் போஜ ராஜாக்குக் கிடைச்சுதாம், அவர் அதுல உக்காந்து ஆட்சி பண்ண
ஆசப்பட்டப்ப அந்தப் பதுமைகள் அவரை உக்கார விடாம விக்ரமாதித்யரோட பெருமையலாம் சொல்லி ‘இந்த மாதிரி பெருமைலாம் இல்லாத நீ
இதுல உக்கார தகுதி உள்ள ஆளானு யோசி’னு சொல்லி அவரைக் கலாய்ச்சிருக்குதுங்க… அவரும் விடாம தெனமும் வந்து வந்து அதுங்களோட
கதைகளைக் கேட்டுக் கேட்டு ஒவ்வொரு படியா முன்னேறியிருக்காரு… கடைசியா முப்பத்திரண்டு படியையும் அவர் ஏறினதும் அந்த முப்பத்திரண்டு
பதுமைகளும் நீங்க இதுல இருக்குறதுக்குத் தகுதியான ஆளுதான்னு சொல்லிட்டு, எஸ்கேப் ஆயிடுச்சுங்க…”
”யோவ், வேதாளம்… நீ கதை சொல்றியா? உண்மையைச் சொல்றியா? ஒழுங்காச் சொல்லுய்யா!”
என்று அவனைப் போலியாய் முறைத்தாள் தேவி.
[the_ad id=”6605″]
“யெக்கா, கதையா உண்மையானுலாம் எனக்குத் தெரியாது… வராகமிகிரர் என்கிட்ட சொன்னது இதுதான்… இப்ப அந்த சிம்மாசனத்துல பதுமைகள்
இல்ல… ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி போஜ ராஜா அதக் கண்டு பிடிச்சு அதுல உக்கார்ந்த போது அதுங்க காணாமப் போயிடுச்சாம்…
விக்ரமாதித்யர் மீண்டும் வரும்போது அந்தப் பதுமைகளும் வருமாம்… அதுவரைக்கும் அந்த சிம்மாசனத்தை நான் பத்திரமா பாத்துக்கனும், அது
இருக்குற இடத்துலேர்ந்து அம்பது யோசனை தூரத்துக்குள்ளதான் என்னால சுத்த முடியும், அதைத் தாண்டி போக முடியாதுனும் சொன்னாரு…”
”அதென்ன அம்பது யோசனை? யு மீன் ஃபிஃப்டி ஐடியா? புரியலயே!”
தேவி குழப்பத்துடன் கேட்டாள்.
“ஹா ஹா… யோசனைனா ஐடியா இல்ல, அது ஒரு லென்த் மெஷர்மெண்ட்… தொலைவை அல்லது நீளத்தை அளக்கும் ஒரு அலகு!”
என்று பட்டன் கிண்டலாகச் சொன்னான்.
“ச்ச… இந்த வராகமிகிரருக்கு செண்டிமீட்டர் கிலோமீட்டர் இதெல்லாம் தெரியாத… இப்படித்தான் மஞ்சூரியல்லேர்ந்து கிளம்புறப்ப காதம் கீதம்னு
வழி சொல்லி எங்களைக் குழப்பிவிட்டாரு மனுஷன்…”
“விடுங்கக்கா, பாவம் அவரு, என்னை மாதிரி சிவில் இஞ்ஜினீயரிங்லாம் படிக்கல… ரெண்டாயிரம் வருஷமா இமயமலைல ஏதோ கொகைல
உக்காந்து தவம் பண்ணிருக்காரு…”
பட்டன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே விடுதியின் அறைச் சேவையாளர் அவர்கள் கேட்டிருந்த திண்பண்டங்களையும் பானங்களையும்
கொண்டு வந்தார். அவரவர் அவருக்கான பானத்தைக் கையில் எடுத்துக்கொண்டனர்.
விக்ரம் அங்கிருந்தே விஷாலியை அழைத்தான், அவளிடமிருந்து பதிலில்லை, தூங்கிவிட்டாள் தொந்திரவு செய்ய வேண்டாமென இவர்கள் பேச்சைத்
தொடர்ந்தனர்.
“வராகமிகிரர் இமயமலைல தவம் பண்ணாரா? ஃபார் டூ தவுசன் இயர்ஸ்?”
என்று தேவி பக்கோடாவை உள்ளேயும் விழிகளை வெளியேயும் தள்ளியபடிக் கேட்டாள்!
“ஆமா… இப்ப உங்களுக்கு சிம்மாசனத்தோட கதை வேணுமா? இல்ல வராகமிகிரர் கதையா?”
என்று பட்டன் அலுப்போடு கேட்பவனைப் போலக் கேட்டான்.
“தோ டா… ரொம்ப அலட்டிக்காத, சிம்மாசனத்தப் பத்தியே சொல்லு, வராக்ஸ் பத்தி அப்புறமா கேட்டுக்குறேன்!”
அவள் மிச்சமிருந்த பக்கோடாவை எடுக்கக் கையை நீட்ட, பட்டன் தட்டைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டு தொடர்ந்தான்,
“ஸோ, விக்ரமாதித்யரோட சிம்மாசனம் இங்கதான் இருக்கு, நான் அதைப் பாதுகாத்துட்டு வரேன், ஆனா, நான் இதுவரைக்கும் பெருசா ஒன்னும்
பண்ணல அதைப் பாதுக்காக்க… அது பாட்டுக்கு அது இருக்கு, நான் பாட்டுக்கு நான் இருக்கேன்… பெரிய கோயிலோட ஆகர்ஷண சக்தில
சிம்மாசனத்தோட சக்தி வெளில தெரியாது… அதனாலத்தான் ரொம க்ளெவரா அதை கோயிலுக்கு அடில மறைச்சு வெச்சிருக்காங்க… சூப்பர்ல?”
என்று உற்சாகமாய் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டபடி தட்டில் இருந்த பக்கோடாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.
“வாவ்! அப்ப சிம்மாசனம் பெரிய கோயிலுக்கு அடிலதான் இருக்கா? நாளைக்கே போய் அதைப் பார்க்குறோம்…”
என்று தேவியும் அதே உற்சாகத்துடன் பதில் சொன்னாள்.
அனைவரின் கவனமும் பட்டன் மீது தீவிரமாகப் பதிந்தது.
”ஹா ஹா ஹா… பாக்குறோமா? ஹலோ, அத நானே இதுவரை நேர்ல பார்த்ததில்ல… கோயிலுக்கு அடில இருக்குனு சொன்னேனே கவனிக்கலையா
நீங்க?!”
பட்டன் தேவியை ஏளனமாகப் பார்த்தான்.
“யோவ்… என்னையா சொல்ற?”
[the_ad id=”6605″]
“மேடம்! விக்ரமாதித்யரோட சிம்மாசனம் பெரிய கோயிலோட ஃபவுண்டேஷனுக்கு அடில இருக்கு… அதை அடில வெச்சுட்டு அதுக்கு மேலதான்
கோயிலையே கட்டியிருக்காரு ராஜேந்திர சோழர்… சிம்மாசனத்தை வெளில எடுக்கனும்னா-”
“கோயிலையே தூக்கனுமா?”
என்று தேவி ஆயாசமாகக் கேட்டாள். பட்டன் ‘ஆம்’ என்பது போல மெள்ளத் தலையசைத்தான்.
“ஆமா…”
என்று யோசனையுடன் அவர்களை இடைவெட்டினான் அருண்.
“ஓ நீங்களாம் இங்கதான் இருக்கீங்களா? சொல்லுங்க சேனாதிபதியாரே…”
என்றான் பட்டன் நக்கலாக.
“ரொம்ப நக்கல் வேணாம், தம்பி! என்கிட்ட ஒரு வாள் இருக்கு, ஞாபகம் வெச்சுக்க…”
என்று அருண் சற்றே கோவத்துடன் சொன்னான்.
“ப்ச்… கமான் அருண்… அவன் டீஸ் பண்றதைலாம் சீரியஸா எடுத்துக்காத, ஸேவ் யுவர் ஆங்கர் ஃபார் தி சகர்ஸ்! நீ கேட்க வந்ததைக் கேளு…”
என்றாள் தேவி, அருணை இடைமறித்து.
“ஆல்ரைட்!” என்றுவிட்டு பட்டனை நோக்கினான் அருண்,
“சிம்மாசனத்தை அடில வெச்சு அதுக்கு மேல பெரிய கோயிலைக் கட்டினது யாருனு சொன்ன?”
“ராஜேந்திர சோழர்!”
என்றான் பட்டன் தோள்களைக் குலுக்கியபடி.
“ஓ மை காட்!”
என்றாள் தேவி, சட்டென ஏதோ புரிந்தவளாக,
“அப்ப, நீ சொல்ற பெரிய கோயில்…?”
பட்டன் புன்னகையுடன் மெள்ள ‘ஆம்’ என்று தலையசைத்தபடி சொன்னான்,
“கங்கைகொண்ட சோழபுரத்துல இருக்குற பெரிய கோயில்தான்… இங்க இருக்குறது இல்ல!”
என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனது கைப்பேசி சிணுங்கியது,
“தில்லைநாயகம் மாமாதான் கால் பண்றார்…” என்றபடி கைப்பேசி அழைப்பிற்கு பதிலளிக்கப் போனான், அவர்கள் முழிப்பதைப் பார்த்தவுடன்
“சாய்ங்காலம் சன்னிதில பூஜ பண்ணாரே, சிவாச்சாரியார்!” என்று மெல்லிய குரலில் சொன்னபடி கைப்பேசியை காதருகே வைத்தான்,
“ஷொல்லுங்கோ மாமா?”
…
“அச்சோ… நெசமாவா? ஈஸ்வரா… நீங்க இப்ப எங்க இருக்கேள்? உங்களுக்கு ஒன்னுமில்லயோனோ?”
…
“ம்ம்ம்…”
…
“ம்ம்ம்…”
…
“சரி மாமா, பயப்படாதேள்… நேக்கு தெரிஞ்ச ஒரு பெரிய போலீஸ் ஆபிசர் இருக்கா, ஷாயரக்ஷ பூஜைக்கு வந்திருந்தாளே… ஆங்… அவாளேதான்… நீங்க
ஒன்னும் பயப்படாம ஆத்துலயே இருங்கோ… நான் அவாளைக் கூட்டிண்டு ஷெத்த ஞாழில வரேன்…”
என்று கைப்பேசியை அணைத்துவிட்டு தேவியைப் பார்த்தான்,
“அன்பிலீவபிள்!”
“என்ன டா? என்ன ஆச்சு?”
“சொன்னா நம்ப மாட்டீங்க, நாம் பேசிண்டிருந்த அதே நேரத்துல கோயில்ல சடசடனு நூறு நூத்தம்பது கொள்ளக்காரங்க நுழைஞ்சாங்களாம்…
வழக்கமா சாயங்காலத்துல சன்னதில கூட்டம் பெருசா இருக்காது… இன்னிக்கு பிரகாரத்துலயும் பெருசா கூட்டமில்லையாம், இருட்ட வேற
தொடங்கிடுச்சு, மாமா அர்த்த மண்டபத்துல காத்தாட உக்காந்துட்டு இருந்தப்ப சடசடனு அந்தக் கொள்ளக்காரங்க வந்தாங்களாம்… எங்கேர்ந்து
வந்தாங்கனே தெரியாம எல்லாப் பக்கத்துலேர்ந்தும் வந்திருக்காங்க… ஃபுல்லா கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு, மூஞ்சில முகமுடி போட்டுக்கிட்டு-”
“சகர்கள்!”
என்று அவனை இடைமறித்தாள் தேவி. சொல்லும்போதே அவள் விருட்டென்று எழுந்துகொண்டாள்.
அருணும் விக்ரமும் அவளோடு சேர்ந்து அதே போல அவசரமாக எழுந்தனர்.
பட்டனும் யோசனையோடு மெள்ள எழுந்தான்,
“ஓ… சகர்கள்… கரெக்ட்… அவங்கதான் சிம்மாசனத்தைக் கொள்ளையடிக்க வருவாங்கனு வராகமிகிரர் சொன்னார்… இவ்ளோ வருஷமா வரல்… இப்ப
வந்துட்டாங்க பாருங்களேன்…”
என்று அவன் சிரித்தான்.
“டேய், கிளம்புடா… நாம உடனே கோயிலுக்குப் போகனும்… ஆயிரம் வருஷ கோயில், ஏதாச்சு பண்ணித் தொலைக்கப் போறானுங்க அந்த சகர்
லூசுங்க…”
என்று அவனை விரட்டினாள் தேவி.
“வெயிட்… வெயிட்… நான் சொல்ல வந்ததை நீங்க முழுசா கேக்கவே இல்லையே?”
“என்ன? எதாயிருந்தாலும் போயிட்டே பேசலாம் வா… நான் சத்தீஷையும் தேவராஜையும் அலர்ட் பண்றேன், அருண் நீ விஷாலி கூட இருக்கியா?”
என்று தேவி பரபரப்பாகத் தன் கைப்பேசியை உசுப்பிய வண்ணமே சொல்லிக்கொண்டு அறையின் வாசலை நோக்கி நகர்ந்தாள்.
[the_ad id=”6605″]
“அதுக்குலாம் தேவையே இல்ல… வந்தவனுங்கலாம் வந்த வேகத்துலயே காணாமப் போயிட்டாங்களாம்… தில்லை மாமாதான் கொஞ்சம்
பயந்துண்டுட்டார்… பாவம் மனுஷன் ஷுகர் பேஷண்ட், தல கிறுகிறுனு வந்துடுத்தாம்…”
என்று பரிவோடும் கிண்டலோடும் சொன்னான்.
“பட், நான் உங்களைக் கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கேன், நீங்க பெரிய போலிஸ் ஆபிசர், நீங்க ஒரு தடவ வந்து அவரைப் பார்த்து
பயப்படாதீங்கோனு சொல்லிடுங்க, அப்பதான் அவர் நிம்மதியா இருப்பார்…”
என்றான் தேவியைப் பார்த்து.
”ம்ம்ம்…”
என்று யோசனையோடு தலையாட்டினாள் தேவி.
“வெரி ஃபன்னில? இவ்ளோ வருஷம் வராத அந்த சகர்கள் இப்ப எப்படி வந்தாங்க? நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்களா?”
என்று தன் நகைச்சுவைக்குத் தான் மட்டுமே சிரித்தபடி அவர்களைப் பார்த்தான் பட்டன்.
தேவி அவனை முறைத்துவிட்டு விக்ரமைப் பார்த்தாள், விக்ரம் அருண் இருவரின் பார்வையும் விஷாலி இருந்த படுக்கயறையின் மீதே இருந்தன.
தேவிக்குச் சட்டென ஏதோ பொறிதட்டியது,
“ஓ… மை காட்!”
என்றாள் தலையில் கைவைத்தபடி. பட்டனின் முகத்தில் இருந்த சிரிப்பு கலவரமாக மாறியது,
“சிம்மாசனத்துக்கு ஆபத்து!”
என்று அலறினான்.
“கமான்… நாம உடனே ஜி.கே.சி. போனும்!”
“ஜி.கே.சி?”
“யோவ், கங்கை கொண்ட சோழபுரம்யா… பேசிட்டு இருக்க இப்ப நேரம் இல்ல… இங்க மறைஞ்ச அந்த சகர்கள் இப்ப அங்க வந்திருப்பானுங்க… பெரிய
கோயில்னு நீ சொன்னது அந்தப் பெரிய கோயில்னு அவங்களுக்கும் இப்ப தெரிஞ்சிருக்கும்…”
தேவி நிலைகொள்ளாமல் சொன்னாள். பேசும்போது அவள் கண்கள் அடிக்கடி விஷாலி இருந்த அறையின் பக்கம் சென்று மீண்டன.
“பட், இங்கேர்ந்து ஜி.கே.சி. கிட்டத்தட்ட எழுபது கிலோமீட்டர்… நைட் டைம் வேற, எவ்ளோ சீக்கிரமா போனாலும் இரெண்டு மணி நேரம் ஆகுமே?
அதுக்குள்ள அவங்க கோயிலை உடைச்சு சிம்மாசனத்தை எடுத்துட்டே போயிடுவாங்க…”
என்று அருண் கவலையோடு சொன்னான்.
“நோ! நான் அரியலூர் போலிசை அலர்ட் பண்றேன், கோயிலக் கொள்ளையடிக்கப் போறாங்கனாலே போதும், அதுவே பெரிய ஹைஸ்ட்தான்… (heist)
அந்தக் கோயில் யுனெஸ்கோ ஹெர்டேஜ் சைட்!”
என்று தேவி பரபரப்பாகத் தன் கைப்பேசியை உசுப்பினாள்.
அதற்குள் சத்தீசும் தேவராசும் அவர்கள் அறைக்குள் வந்திருந்தனர். அவர்கள் கையில் ஆயுதப் பொட்டலங்கள் இருந்தன.
தேவி அவர்களுக்குக் கட்டளைகள் கொடுக்கப் பேசத் தொடங்கினாள், பட்டன் இடைமறித்தான்,
“வெயிட்… என்னால அங்க உடனே போக முடியும்… ஆனா உங்களைலாம்…”
என்று பட்டன் ஏதோ சொல்லத் தயங்கி இழுத்தான்.
“வாட்? என்னய்யா சொல்ற நீ?”
“எப்படி சொல்றது… வராகமிகிரர் எனக்குக் கத்துக்கொடுத்தார், ஆனா, எனக்கு இது முன்னாடியே தெரியும்னு வேற சொன்னார்… ஆகாய கமனம்…”
என்று அவன் தயங்கித் தயங்கிச் சொன்னான்.
“ஆகாய… வாட்?”
தேவி அவனைக் குழப்பத்தோடு பார்த்தபடி கேட்டாள்.
“ஆகாய கமனம்! வானத்துல பறக்குறது!”
என்று விக்ரம் பதில் சொன்னான்.
தொடரும்…