”வாட்?” தேவி அதிர்ச்சியும் குழப்பமும் கலந்த தொனியில் கேட்டாள்.
“ஆமா… சகர்களின் கடவுளும் நம்ம மாகாளியும் ஒரே கடவுள்தான்… பேருதான் வேற வேற, அது நாம நம்ம மொழில வெச்சுக்கிட்டது!” என்று வேதாளப் பட்டன் இலேசான அலுப்போடு சொன்னான்.
“எனக்கு ஒன்னுமே புரியல! விக்ரமையும் நம்மையும் இந்தச் சிக்கல்லலாம் மாட்டிவிட்டதே மாகாளிதான், நம்ம எதிரிக்கு வரம் கொடுத்தததும் அதே மாகாளியா? என்ன விளையாடுறாங்களா அவங்க?”
மாகாளி மீது எழுந்த கோவத்தை வேதாளப் பட்டன் மீது காட்டுபவளைப் போல தேவி அவனை முறைத்தாள்.
“ஹலோ ஹலோ… என்ன ஏங்க முறைக்குறீங்க? எனக்குத் தெரிஞ்சத நான் சொன்னேன், அவ்ளோதான்!”
என்று அவனும் விறைத்துக்கொண்டு பதில் சொன்னான்.
”அமைதி அமைதி… தேவி பராசக்தியின் காரண காரியங்களை அலச நம் போன்ற மனிதர்களால் இயலாது!”
என்று வராகமிகிரர் இடையில் புகுந்து தேவியைச் சமாதானப்படுத்த முயன்றார்.
“சுவாமி, இது அநியாயம்… உங்க பராசக்தி நம்மள பொம்மைங்க மாதிரி வெச்சு விளையாடுறா!”
என்று தேவி சமாதானம் ஆகாமல் அவர் மீதும் பாய்ந்தாள்.
“ஹா ஹா ஹா… உண்மை மகளே, அவள் விளையாடுகிறாள்! நாமெல்லாம் பொம்மைகள்!”
என்று வராகமிகிரர் சற்றும் அசராமல் புன்னகைத்தார்.
“ப்ச்… இப்ப அடுத்து என்ன பண்ணனும், உங்க மாகாளியத் திருப்திபடுத்த? சொல்லித் தொலைங்க!”
என்று தேவி அலுப்புடன் கேட்டாள்.
“மகளே, நாம் நம் பணியைச் செய்வோம், அதனால் ஏற்படும் நன்மை தீமை அனைத்திற்கும் தேவி பராசக்தியே பொறுப்பு…”
என்று வராகமிகிரர் தொடங்க, தேவி கண்களை ஆயாசத்துடன் உருட்டினாள். விக்ரம் அவள் தோளில் கைவைத்து ‘அமைதி’ என்று சைகை காட்டினான். வேதாளப் பட்டன் ஒரு நமுட்டுச் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றான். வராகமிகிரர் அவர்களை எல்லாம் கவனிக்காதவரைப் போல தொடர்ந்தார்,
“நமக்கு அவள் இட்ட பணி அந்தச் சகர்களை அழித்தல்! அவர்கள் விக்ரமாதித்யனின் சிம்மாசனத்தைக் கைப்பற்றித் தெய்வபூமியான இந்த பாரத தேசத்தைத் தம் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வராமல் தடுத்தல், நாம் அதற்கான வேலையைப் பார்ப்போம்…”
என்றுவிட்டு அவர் விக்ரமை தீர்க்கமாகப் பார்த்தார்.
விக்ரமும் ‘சரி’ என்பதைப் போலத் தலையசைத்துவிட்டு ஏதோ கேட்க முனைய வராகமிகிரர் அவனைக் கைக்காட்டித் தடுத்துச் செழியனுக்குச் சைகை செய்ய, செழியன் தொடர்ந்தார்,
”முதல்ல நான் மன்யாக்னி விஷயத்தத் தெளிவுபடுத்திடுறேன்… மன்யாக்னி மதனமாலையின் தியாகத்தால விக்ரமாதித்யருக்குக் கிடைச்சுது… மாந்திரீகத்துக்கு எப்பவுமே ஒரு பலி தேவை, விக்ரமருக்காக மதனமாலை தானே முன்வந்து தன்னை மாகாளிக்குப் பலிகொடுத்துக்கிட்டா… அதே மாதிரிதான் சகனும் தன்னைத் தானே பலிகொடுத்து ஃபர்வாஷியின் அருளைப் பெற்றான்…”
செழியன் சற்று நிறுத்தி அவர்களை நோட்டம் விட்டார். அவர்கள் அனைவரும் அவர் சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர், தேவி மட்டும் வேண்டா வெறுப்பாகக் கேட்பவளைப் போல காணப்பட்டாள்.
“விக்ரமரைவிட சகன் திக்ரசூதனின் தியாகம் உயர்ந்தது, ஆனா அதைவிட மதனமாலையின் தியாகம் உயர்ந்தது… அதனாலத்தான் விக்ரமன் கைல இருந்த மன்யாக்னி திக்ரசூதனை ஒன்னும் பண்ணல, ஆனா அவனோட வாள் விக்ரமை வெட்டிச்சு, அதே மாதிரிதான் தேவி கைல மன்யாக்னி இருந்தப்ப அவளால திக்ரசூதனை வெட்ட முடிஞ்சுது!”
“அப்ப தேவியே மன்யாக்னிய வெச்சுக்கிட்டு திக்ரசூதனைத் தீர்த்துக்கட்டட்டும்!”
என்று அருண் சொன்னான்.
“ஆனா விக்ரமாதித்யன் கையால சகன் அழிக்கப்படனும்குறதுதான் மாகாளியின் உத்தரவு!”
என்று செழியன் யோசனையுடன் சொன்னார்.
“சகன் அழியனும், அவன் யார் கையால அழிஞ்சா என்ன?”
என்று அருண் கேட்க, செழியன் பதில் சொல்லும்முன் வேதாளப் பட்டன் குறுக்கிட்டான்,
“ஆமா, தேவி பராசக்தி தன் திட்டம் கொஞ்சமா மாறினா கோச்சுக்க மாட்டா… சொல்லப்போனா-”
“நாம இப்ப முதல்ல அந்தச் சகனோட அடுத்த திட்டம் என்னவா இருக்கும்னு யோசிக்கனும்…”
என்று விக்ரம் இடைவெட்டிச் சொல்லவும் அவர்கள் அமோதிப்பதைப் போலத் தலையாட்டினார்கள். பட்டன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.
“சகனோட குறி சிம்மாசனந்தான்னா அது இப்போதைக்குப் பத்திரமாத்தானே இருக்கு? நாம கவலைப்பட தேவையே இல்லை!”
என்று தேவி யோசனையுடன் சொன்னாள்.
“அப்படி முழுசா நிம்மதியா இருந்துறக்கூடாது! சகர்கள் ஏற்கனவே ஒரு தடவ கோயிலைப் பிரிச்சுச் சிம்மாசனத்தை எடுக்க முயற்சி பண்ணிட்டாங்க, விக்ரம் கைல மன்யாக்னி தன்னைத் தாக்காதுனு திக்ரசூதனுக்குத் தெரிஞ்சிருந்திருக்கு, அதனாலத்தான் அவன் தைரியமா நம்மோட மோத வந்தான், ஆனா, தேவி கைல மன்யாக்னி தன்னைத் தாக்கும்னு அவன் எதிர்பார்க்கல, அந்த அதிர்ச்சில இப்போதைக்குப் பின்வாங்கியிருக்கான்…”
செழியன் சிந்தனையோடு சொன்னார்.
“எனக்கென்னவோ தேவி வெட்டுன வெட்டுல அவன் இன்னேரம் கொஞ்சம் கொஞ்சமா செத்திருப்பான்னு தோனுது!”
என்று வேதாளப் பட்டன் பெரிய சிரிப்புடன் சொன்னான்.
“எதிரியைக் குறைத்து மதிப்பிடுவது சரியான தந்திரமல்ல, பட்டா!”
என்று வராகமிகிரர் இலேசான அதட்டலுடன் சொன்னார்.
“ஆமா… எனக்கும் திக்ரசூதன் இறந்து போயிருப்பானு நினைக்கத் தோனல, மிஞ்சிப் போனா காயத்தோட தீவிரத்துல அவன் கொஞ்சம் சோர்ந்து போயிருக்கலாம்… ஆனா மறுபடி கண்டிப்பா வருவான்!”
என்று செழியன் விஷாலியைப் பார்த்தபடியே சொன்னார். அவள் குளிருக்கு ஒடுங்கிய கோழிக்குஞ்சைப் போல முழங்காலைக் கைகளால் கட்டிக்கொண்டு சுருண்டு அமர்ந்திருந்தாள்.
சட்டென அனைவரின் பார்வையும் விஷாலி மீது சென்றன.
“விஷாலி எப்படி அங்க வந்தா?”
தேவி சட்டென நினைவிற்கு வந்தவளாய் கேட்டாள்.
“அது…” என்று செழியன் தயங்கியபடி வராகமிகிரரைப் பார்த்தார்.
“பெரிதாய் ஒன்றுமில்லை, சகர்கள் இவளை வசியப்படுத்தி அழைத்து வந்துவிட்டார்கள்!”
என்று வராகமிகிரர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்.
அவர்கள் யாரையோ பற்றிப் பேசுகிறார்கள் என்பதைப் போல விஷாலி கண்டுகொள்ளாமல் தன் பாட்டிற்கு அமர்ந்திருந்தாள்.
“சரி, விக்ரம் சொன்னா மாதிரி நாம அடுத்து என்ன பண்ணனும்னு யோசிப்போம்…”
என்றான் அருண்.
“நாம் செய்ய வேண்டியது தெளிவாக இருக்கிறது…”
என்று வராகமிகிரர் செழியனைப் பார்க்க, செழியன் பேசத் தொடங்கினார்,
“அண்ணா, தேவி பராசக்தி நம்மள இங்க அனுப்பினது சகனைத் தடுக்க மட்டுமில்ல, கலியுகத்துல இந்த பாரத மண்ணின் புண்ணியத் தன்மையையும் கீர்த்தியையும் காக்கவுந்தான்… பாரதம் முழுதும் உங்க ஆட்சிக்குக் கீழ வரனும்குறதும் தேவி மாகாளியின் ஆணைதான்… நாம அடுத்து அதுக்கான வேலையப் பார்க்கனும்…”
“வாட்? விக்ரம் இந்தியாவோட ஆட்சிய வேற பிடிக்கனுமா? போச்சுடா!”
தேவி அலுப்பாகச் சொன்னாள். செழியனும் வராகமிகிரரும் புன்னகையுடன் அவளைப் பார்த்தனர்.
“ஆட்சினா நீ நினைக்குறா மாதிரி அரசியல் ஆட்சி இல்ல… இது ஒரு சிம்பாளிக் ஆட்சிதான்! பாரத தேசம் விக்ரமோட அதிகாரத்துக்குக் கட்டுப்படும், விக்ரம் அதை ஆளனும்னு அவசியம் இல்ல, ஆனா, விக்ரமாதித்யர் ஆட்சிக்கு உட்பட்டதும் கலியுகத்தின் தீமைகள் இந்த பாரத மண்ணைவிட்டு நீங்கும்… அதான் முக்கியம்! சகர்களாலயும் இந்த நாட்டு எல்லைக்குள்ள வர முடியாது!”
என்று செழியன் விளக்கினார்.
“என்னவோ, எனக்கு ஒன்னும் புரியல… சரி, அதுக்கு என்ன பண்ணனும்? அதச் சொல்லுங்க… போய் வேலையப் பார்ப்போம்!”
”பெரிசா ஒன்னுமில்ல, வாரங்கல் கோட்டைல வாள் எடுக்கப் போயிருந்தப்ப நாலு திசைலயும் நாலு தோரண வாயில்களப் பார்த்தோம், ஞாபகம் இருக்கா?”
“ஆமா, சகர் படைகூட அதைத் தாண்டி உள்ள வராம வெளிலயே நின்னுடுச்சே? நாம் விக்ரமோட உள்ள போனப்ப அந்த இடமே ஒரு தங்க நகரம் போல மாறிச்சே?”
தேவி ஆர்வத்தோடு கேட்டாள்,
“அதேதான்… அந்தத் தோரண வாயில்கள் விக்ரமாதித்யரோட திக்விஜய சின்னங்கள்… நான்கு திசையிலும் அவரது ஆட்சியின் எல்லையைக் குறிக்கத்தான் அந்த நாலு தோரண வாயில்களையும் விக்ரமாதித்யர் உருவாக்கி நிறுவினார், அந்த நான்கு தோரண வாயில்களுக்கு உட்பட்ட பகுதி விக்ரமரோட ஆட்சிக்குட்பட்ட பகுதி!”
என்று செழியன் புன்னகையோடு சொல்லி நிறுத்தினார்.
“ஓ… அப்ப அந்த நாலு தோரண வாயிலையும் இந்தியாவோட நாலு மூலைலயும் கொண்டு போய் வெக்கனுமா?”
தேவி வியப்போடு கேட்டாள். செழியன் ‘ஆம்’ என்று தலையாட்டினார்.
“என்னங்க, இவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ ஈசியா சொல்றீங்க?”
என்று தேவி அவரை முறைத்தபடி கேட்டாள்.
“ஆம், இது சற்று கடினமான பணிதான்… சகர்களின் குறுக்கீடு இருக்கும்-”
தேவி வராகமிகிரரை இடைவெட்டினாள்,
“ப்ச்… அந்த சகர்கள விடுங்க, காத்துல கரைஞ்சு போற பசங்க… நான் சொல்ற பிரச்சனையே வேற!”
”என்ன பிரச்சனை?”
செழியன் தன் புன்னகை மாறாமல் அவளைக் கேட்டார்.
“ஹலோ பாஸ்… நீங்க ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ஆளுதான? என்ன பிரச்சனைனு கேக்குறீங்க! நம்பர் ஒன், வாரங்கல் ஃபோர் ஹெரிடேஜ் ப்ராபர்ட்டி, அங்க இருக்குற தோரண வாயில்கள அவ்ளோ ஈசியா நாம் எடுத்துட்டுப் போயிட முடியுமா? அதுலயும் அங்க உருப்படியா உடையாம இருக்குறதே அந்த நாலு தோரண வாயில்தான்! அதுமட்டுமில்ல பாஸ், அந்தக் ‘காலத் தோரணம்’ வாராங்கல் ஸ்டேட் எம்ப்ளம் வேற… நீங்க போனவுடனே இந்தாப்பா வெச்சுக்கனு தூக்கிக் கொடுத்துருவாங்களா?”
தேவி படபடவெனப் பொறிந்தாள். செழியனும் வராகமிகிரரும் புன்னகை மாறாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விக்ரம் கூட அவளின் கிண்டல் தொனியைக் கண்டு மெல்லச் சிரித்தான்.
“சரி அப்படியே தராங்கன்னே வெச்சுக்குவோம், இந்தியாவோட நாலு மூலைல அத எப்படிக் கொண்டு போய் வெப்பீங்க? சவுத் கார்னராச்சு நம்ம ஸ்டேட், ஏதோ முயற்சி பண்ணலாம், நார்த், ஈஸ்ட்லாம் சான்சே இல்ல… முதல்ல அங்கலாம் இந்தியாவோட பார்டர் எதுனே குழப்பத்துல இருக்கு… பாகிஸ்தான் சீனானு மல்லுகட்டிட்டு இருக்காங்க!”
என்று அவள் சொல்லி முடித்தாள்.
“இதெல்லாம் ஒரு தடை இல்லை, மகளே, தேவி பராசக்தி நமக்குத் துணை புரிவாள்…”
என்று வராகமிகிரர் அமைதியாகச் சொன்னார்.
“யாரு நம்மையும் கிளப்பிவிட்டு அந்த சகனுக்கும் வரங்கொடுத்து வெச்சிருக்காங்களே, அந்தம்மாவா?”
என்று தேவி நக்கலாகக் கேட்கவும், செழியன் முகத்தில் ஒரு கோவ நிழல் படர்ந்தது.
“தேவி, ஏன் இப்படிலாம் பேசுற? ரிலாக்ஸ்… வராகமிகிரர் என்ன சொல்றாரோ அதைச் செய்வோம்… முதல்ல நான் சி.எஸ். கிட்ட பேசுறேன், நமக்கு கவர்ன்மெண்ட் மிலிட்டரி ரெண்டு சப்போர்ட்டும் தேவைப்படும் போல, இந்தப் பிரச்சனையைக் கொஞ்சம் கொஞ்சமா மேலிடத்துக்குக் கொண்டு போகனும்…”
என்று விக்ரம் மனத்திற்குள் திட்டமிட்டபடியே பேசினான்.
“சரிதான், விக்ரம் நீ-”
என்று தேவி சொல்லி முடிப்பதற்குள் அவளது கைப்பேசி சிணுங்க, எடுத்து இயக்கி காதில் வைத்தாள்.
அழைப்பில் பேசியவளின் முகத்தில் பல உணர்ச்சிகள் வந்து போயின.
அழைப்பை முடித்துக் கைப்பேசியை அணைத்தவள், சற்று வெளிறிய முகத்துடன் விக்ரமை ஏறிட்டாள்,
“விக்ரம்… வீ ஆர் லேட்! அந்தச் சகன் முந்திக்கிட்டான்… கெங்கை கொண்ட சோழபுரம் கோயில்ல ஏதோ ரெனவேஷன் ப்ராஜக்ட் ஒன்னு சாங்ஷன் ஆயிருக்காம்… கோயிலைப் பிரிக்கப் போறாங்களாம்!”
என்றாள் அதிர்ச்சி கலந்த குரலில்.
”வாட்? எப்ப?”
என்று அருணும் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“நாளைக்குக் காலைலயே!”
தொடரும்…