Skip to content
Post Views: 2,212
அத்தியாயம் – 12
மனதில் பட்டாம்பூச்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து புல் இனங்களும் சிறகை விரித்துப் பறந்தன. மூளை தன் பங்கிற்கு ஹைபோத்தலாமஸை தூண்டிவிட்டு, காதல் ஹார்மோனை சுரந்தது. முதல் முறையாக அறிவும், மனமும் ஒருங்கே செயல்பட, எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் வெளிவரத் தொடங்கின.
Advertisement
தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த நந்தினியைக் கண்டதும், அவளுக்கு ரோஜா மலர் பிடிக்காது என்பதையும், புத்தகங்கள் தான் பிடிக்கும் என்பதையும் அறிந்து இருந்ததால், தன் கையில் இருந்த புத்தகத்தை ஒருமுறை சரி பார்த்தான். ‘காதல் செக்’.
அவள் தன்னிடம் வந்து, “ஆதி” என்றதும், “வெயிட் நந்து, இன்னைக்கு என்ன ஆனாலும் நான் உன்கிட்ட ஒரு விஷயத்த சொல்லிடுறதுனு ஒரு முடிவோடு வந்திருக்கிறேன்” என்றவுடன், அவள் அவனை அதிசயமாய் பார்த்தாள்.
சிறிது தயங்கி, “எனக்கு இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல. நிறைய படம் பார்த்து, நிறைய பாட்டு கேட்டு, நிறைய கவிதை படிச்சேன், நந்து. ஆனால், உன்ன பார்த்ததுக்கு அப்பறம் அதை எல்லாம், ஏற்கனவே யாரோ யாருக்கோ சொல்லிட்டாங்கனு தான் தோணுது.
Advertisement
அதனால உனக்கு நான் இந்த விஷயத்த வித்தியாசமா சொல்ல முடிவு பண்ணேன்” என்று கூறி இடைவெளி விட்டு, “நான் உன்ன வெறுக்கிறேன், நந்து. காதலிக்கிறவங்கக்குள்ள ஏதாவது ஒரு சின்ன விஷயத்துக்காக சண்டை வரும். அதனால, நான் உன் Tom- ஆவும் நீ என் Jerry- ஆவும் வாழ்க்கை முழுவதும் சண்டை போட உனக்கு சம்மதமா ?” என்று கேட்டான்.
Advertisement
நந்தினி சிரித்துக்கொண்டே, “ஆதி” என்றாள்.
இப்பொழுது ஒரு சந்தேகம் முளைத்தது. நந்தினியின் குரல் இப்படி இருக்காதே, இது ஏதோ ஒரு கரடியின் குரல் போல உள்ளதே. முகத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லையே என்று சிந்திக்க, இப்பொழுது “ஆதி” என்ற பெயர் காட்டு கத்தலாகக் கேட்டது.
இது ஆரியனின் குரல் ஆயிற்றே. திடீரென்று மயக்கத்திலிருந்து ஆதி விழித்தான். எதிரே ஒரு பனிகரடி இல்லை… இல்லை… ஆரியன் ஒரு நாற்காலியோடு சேர்த்து கட்டப்பட்டு இருக்க, அதைப் பார்த்த பிறகு தான் ஆதித்யனுக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நினைவுக்கு வர, எழ முற்பட்டபோது தான் தெரிந்தது தானும் நாற்காலியோடு கட்டப்பட்டிருந்தது.
Advertisement
ஆரியன், “ஏன்டா எருமை, எவ்வளவு நேரமா கத்திகிட்டு இருக்கேன் ? பைத்தியம் மாதிரி டாம்…ஜெரி–ன்னு உளறிட்டு இருக்க. எழுந்திருடா” என்றான்.
ஆதித்யன், தன்னை நினைத்தே வெட்கப்பட்டு, பின், “ஆரி, நந்தினிக்கு என்னாச்சுடா ? அவ எங்கே இருக்கா ? நீயும் நானும் மட்டும் இங்க தனியா இருக்கோம் ? எவ்வளவு நேரம்டா நான் மயக்கத்தில் இருந்தேன் ?” என்று சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தான்.
“படுபாவி ! ஒரு ரெண்டு மணி நேரம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு, இப்படியாடா பண்ணுவ ? செவனேனு இருந்த என்னைய வேற இழுத்துட்டு வந்து” என்று ஆரியன் திட்டியதை இடைமறித்து,
“ஆரியா, கோபப்படாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுடா” என்றான் ஆதித்யன்.
“நீ போயி கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மூணு பேரு வந்து நந்தினிய நீ கூப்பிட்டதா சொல்லி கூப்பிட்டாங்கடா. நானும் வரேன்னு சொன்னப்ப confidential- னு சொல்லி என்னைய வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, நந்தினி கத்துறது கேட்டதும், நான் வெளியே போக முயற்சி செஞ்சப்ப, என்ன ரெண்டு பேரு புடிச்சுகிட்டு வந்து இங்க கட்டி போட்டுட்டாங்கடா.
அதுக்கப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு உன்னையும் மயங்கிய நிலையில் இங்க கூட்டிட்டு வந்து கட்டி போட்டுட்டாங்க. அப்புறம் நானும் உன்ன காலால உதைச்சு, வாயால கத்தி எழுப்பி பார்த்தா ? ஹூம்ம்… முடியலப்பா உன் உளறல கேட்டது தான் மிச்சம்” என்றான் ஆரியன்.
எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கின்றோம் என்று மெல்லப் புரிய ஆரம்பித்தது, ஆதித்யனுக்கு.
“நாம இந்த இடத்துக்கு தான் வந்தது வேறு யாருக்கும் தெரியாது. இப்ப எப்படி நந்துவ காப்பாத்துறது ?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அதற்குள் ஆரியன், “டேய் ஆதி, என்ன தான்டா நடக்குது இங்க ? அவங்க எதுக்கு இப்ப நம்மள புடிச்சு வச்சிருக்காங்க ?” என்று கேட்கவும், நடந்த அனைத்தையும் ஆதி கூறினான்.
“முடிஞ்சிடுச்சு, எல்லாம் முடிஞ்சிடுச்சு, இப்ப நந்தினி வேற அவங்ககிட்ட மாட்டிகிட்டாளேடா ? இப்ப எப்படி இங்க இருந்து தப்பிக்கிறது ?” என்று கேட்டான் ஆரியன்.
“கொஞ்சம் யோசிச்சா ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்டா” என்று கூறிய ஆதியை இடைமறித்து,
“ஆமா ஆதி தூக்கத்துல என்ன கனவுடா ? என்னென்னமோ சொல்லிட்டு இருந்த ?” என்று கேட்கவும், தான் கண்ட கனவு நினைவு வர வெட்கப்பட்டான் ஆதி.
அது சகிக்காமல் அவன் காலை வேகமாக மிதிக்க, அவர்கள் எதிர்பார்க்காத காரியம் நடந்தது. அவர்கள் அணிந்து இருந்த காலணிகளில் பிளவு ஏற்பட்டு, அவை உடைந்தன. முதலில் அவர்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.
“நான் சும்மா தான மிதிச்சேன், அது ஏன்டா இப்படி ஆகிடுச்சு” என்று வாய்விட்டே கூறினான் ஆரியன்.
ஆதித்யன், அது ஏன் என்பது பற்றி ஆராயாமல், இந்த விஷயத்தை எவ்வாறு பயன்படுத்தி வெளியே தப்பிக்க வேண்டும் என்று யோசித்தான்.
“அவன் காலில் இருந்து வந்த ஏதோ ஒரு சக்தி தான் இதுக்கு காரணம்” என்று யோசித்தவன், ஆரியனிடம், “ஆரி, வேகமாக நான் உட்கார்ந்திருக்குற சேர (chair) உதடா” என்றான் ஆதி.
அவன் எதற்கு கூறுகின்றான் என்று தெரிந்ததும், ஆரியனும் தன்னால் முடிந்த அளவு வேகமாக உதைத்தான். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அதைக் கண்டவுடன் இருவருமே குழம்பினர்.
“இது என்ன விசித்திரமா இருக்கு ? போன தடவை உதைச்சப்ப உன் ஷுவே பிஞ்சு போச்சு ? இந்த தடவ ஏன் எதுவும் நடக்கல ?” என்று கேட்டான் ஆரியன்.
திடீரென்று ஏதோ தோன்ற, “ஆர்யா, நீ முடிஞ்ச அளவுக்கு திரும்பி நின்னுக்கிட்டு என்னைய நேரா வந்து மோது டா” என்றான் ஆதி.
அவன் கூறியவாறு, கஷ்டப்பட்டு நாற்காலியோடு சேர்ந்து எழுந்து மோதுவதற்குள், அவனே தடுமாறி ஆதி மேல் விழுந்தான். இந்த முறை அவர்களைச் சுற்றிக் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்தது. நாற்காலிகளும் உடைந்துவிட்டன. இருவரும் வேக வேகமாக எழுந்து கதவின் அருகே சென்றனர்.
அங்கே ஒரே ஒரு ஆள் மட்டும் நிற்க, “நம்ம ரெண்டு பேரோட உடம்பும் மோதுனா தான் ஏதோ ஒரு விதமான சக்தி உருவாகுது. ஆனா, இத வச்சு அந்த ஆள எதுவும் செய்ய முடியாதே” என்று கூறிய ஆதி, அந்த நபரின் பின் மண்டையில் ஓர் இடத்தில் குறிபார்த்து அடிக்க, அவன் மயங்கி விழுந்தான். அதைப் பயன்படுத்தித் தங்களைக் கட்டியிருந்த கயிற்றின் மிச்சத்தை வைத்து அவனை அங்கிருந்த ஒரு தூணோடு சேர்த்துக் கட்டினான் ஆரியன்.
இருவரும் அடிமேல் அடி வைத்து, மெதுவாக வெளியே செல்ல ஆதித்யன் நந்தினியை எங்கே வைத்திருப்பார்கள் என்று தெரிந்ததால், வேகமாக அங்கு செல்ல, ஆரியனும் அவனைப் பின் தொடர்ந்தான். ஆராய்ச்சி அறைக்கு வந்ததும் தனது Access Card-ஐ பயன்படுத்தி, உள்ளே நுழைந்தான் ஆதித்யன். அங்கு அவன் கண்ட காட்சியில் அவன் அதிர்ந்தான்.
நந்தினியின் உடலில் வெவ்வேறு இடத்தில் பல பின்கள் குத்தப்பட்டு இருக்க, நான்கு விஞ்ஞானிகள் அவளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தான் ஆதித்யனுக்கும் ஆரியனுக்கும், நந்தினியை இங்கு இருந்து காப்பாற்றினாலும், இங்கு இருந்து வெளியே செல்வது அசாத்தியமானது என்றே தோன்றியது .

இருப்பினும் இருளில் அம்பு எய்து பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன், அங்கு இருந்தவர்களிடம் சென்று, “இங்கு அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? இது என்னுடைய ப்ராஜெக்ட்” என்றான் ஆதித்யன்.
அவர்களுக்கு ஆதித்யனை முன்பே தெரியும். ஆதலால், “எங்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை, மிஸ்டர். பீட்டா, இந்தப் பெண்ணைப் பரிசோதிக்குமாறு மிஸ்டர். ஆல்ஃபா தான் எங்களுக்குக் கூறினார்” என்று ஒருவர் பணிவுடன் கூறினார்.
அவரை ஆதித்யன் அடுத்த கேள்வி கேட்கும் முன்பு, கதவைத் திறந்து வேகமாக நான்கு பாதுகாவலர்களுடன், ஆல்ஃபாவும் ஆயுத பிரிவு தலைவரும் நுழைந்தனர்.
ஆதித்யனைக் கேலியாகப் பார்த்து, “உங்களைக் கொஞ்சம் குறைத்து எடை போட்டு விட்டோம், ஆதித்யன். ஆனால், நீங்கள் எவ்வளவு புத்திசாலித் தனமாகச் செயல்பட்டும், உங்களுடைய அக்சஸ் கார்டு உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. பாவம், இனிமேல் உங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்காமல் இருந்தால், அது நன்றாக இருக்காது. அதனால் ஆரியனைக் கொன்று விடுங்கள்” என்று உத்தரவிட்டார் ஆல்ஃபா.
ஆரியன் அதிர்ச்சியடைய, ஆதித்யன் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க, நந்தினிக்கு அந்தக் கட்டளை காதில் விழுந்தது போல, அவளது முகத்தில் மாறுபாடுகள் தெரிய ஆரம்பித்தன. பக்கத்தில் இருந்த ECG-யில் அலைகள் வேகமாக வர ஆரம்பிக்க, பீப் சத்தமும் பெருகி, டக்கென்று வெடித்துவிட்டது.
ஆல்ஃபா, “அந்தப் பெண்ணை ஏதாவது செய்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள்” என்று கூறி முடிப்பதற்குள்,
ஆதித்யன் அவளிடம் வேகமாக சென்று, “நந்து, நான் தான் ஆதி பேசுறேன். உனக்கு கேக்குதா ? ஆரியனுக்கு ஒண்ணும் ஆகல” என்று கத்த, கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பினாள்.
மற்ற பாதுகாவலர்கள் ஆரியனைப் பிடித்துக்கொள்ள, ஒருவன் ஆரியனைக் குறி பார்த்தான். இதெல்லாம் சில நொடிகளில் முடிந்துவிட, ஆதித்யன் சுதாரிப்பதற்குள் அந்தப் பாதுகாவலன் ட்ரிக்கரில் கையை வைத்தான். ‘டும்’ என்று ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது.
அனைவரும் அங்கு ஏற்பட்ட அதிர்வில் கீழே விழுந்தனர். அந்த இடமே புகை மண்டலமாக மாறியது. “ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட குண்டால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுமா ?” என்று யாருக்கும் புரியவில்லை.
மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு, மறுபடியும் உயிர் பெற்றது. அந்த களேபரத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, நந்தினியைத் தூக்கிக் கொண்டான் ஆதித்யன். அவன் செல்லும் வழியில் யார் மேலோ மிதிப்பது போலத் தோன்ற, அப்பொழுதுதான் அவனுக்கு ஆரியனின் ஞாபகம் வந்தது.
வேகமாகக் கீழே தேட பின்னாலிருந்து யாரோ இழுப்பதை உணர்ந்தவன், பின்னோடு சாய முன்னால் ஒரு பாதுகாவலன் கடந்து சென்றான். ஆரியன் தான் தன்னை பின்னால் இழுத்ததை உணர்ந்த ஆதி, அவனோடு அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினான்.
சிறிது தூரம் சென்றதும் பின்னால் யாரோ கத்திக்கொண்டு தங்களைத் துரத்துவது போல இருக்க, வேகமாக ஓடத் தொடங்கினர். அப்பொழுது அங்கே திடீரென்று ஒரு பேரொளி தோன்றியது.
அதைப் பார்க்க முடியாமல் கண்கள் கூசத் தலைகுனிந்து ஓடினர். அருகே செல்ல செல்ல அந்த ஒளி தங்களை இழுப்பது போல ஓர் உணர்வு தோன்றியது. கால்கள் தாமாகவே காற்றில் மிதக்க தொடங்கின.
அந்த ஒலி அலைகள் உடலில் ஊடுருவி ஏதோ செய்ய, இன்னதென்று விளக்க முடியாத ஓர் உணர்வு மனதில் எழுந்தது. அந்த பேரொளி ஏற்படுத்திய தாக்கத்தால் அங்கிருந்த ஒவ்வொரு கருவியும் வெடிக்கத் தொடங்கின. பின்னால் துரத்திய ஆட்கள் அனைவரும் கத்தத் தொடங்கினர்.
ஆரியனுக்கும் ஆதித்யனுக்கும் இப்பொழுது யாரோ தங்களைத் தூக்குவது போல தோன்ற, அதை அந்த ஒளி அலைகள் யோசிக்க விடாமல் செய்ய, அப்படியே மயக்கத்திற்குச் சென்றனர்.
******
வழக்கத்திற்கு மாறாக, இந்த முறை நினைவு சிதறல்கள் அதிகமாகத் தோன்றின. காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டே இருந்தன.
கால வெள்ளத்தில் சிக்குண்டாற் போல இருந்தது. அந்தக் காலத்தில் ரீல்களை சுத்தி படம் காட்டுவது போல, வரிசையாக ஒவ்வொரு நிகழ்வையும் நேரே பார்க்கும் உணர்வு.
இதுவரை இயல்பாக வரும் பூக்கள் இப்பொழுது ஓர் உருவம் பெற்று, பேரழகியாக மாறின. அந்தப் பெண் தன்னைத் தூக்கி அவரது கையில் வைத்து தனது நெற்றியைத் தொட, ஏதேதோ நினைவுகள்…
அடுத்த காட்சியில் முன்பு பார்த்த அதே ஜோடிகள். ஆனால், இந்த முறை முன்பு அவர்களைப் பார்க்கும் பொழுது ஏற்பட்ட இனம் புரியா உணர்வின் பெயர் புரிந்தது.
தன்னையும் அறியாமல், தனது வாய் “அம்மா, அப்பா” என்ற வார்த்தைகளை உதிர்த்தன. அதைக் கேட்டு அவர்கள் பூரிப்பு அடைவது, அவர்களது முகத்திலேயே தெரிந்தது.
அவர்கள் இவளிடம் வந்து, அவளது தலையைப் பரிவுடன் தொட்டனர். அவர்கள் வாய் எதுவும் கூறாவிடினும், அவர்களது கண்கள் அவளுக்கு அதைத் தெளிவாக எடுத்துரைத்தன.
“உனது உலகிற்கு நீ தேவைப்படுகிறாய் மகளே ! உன்னைத் தூக்கி கொஞ்ச முடியாத துரதிர்ஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. திரும்பி வா மகளே ! உனது வாழ்க்கையின் குறிக்கோளை நிறைவேற்ற வா! உன்னுடைய…” என்று அவர்கள் கூறுவதற்கு முன், ஒரு கொடூர விலங்கு, அவர்களது பிம்பங்களைக் கிழித்துக் கொண்டு, இவள் முன் வந்து நின்றது.
ஆனால் இந்த முறை பயம் ஏற்படவில்லை. கயா கிரகத்தின் சிம்மாசனத்தின் வாரிசு இதற்கெல்லாம் அஞ்சலாமா ? என்ற எண்ணம் ரத்தத்தில் கலக்கத் தொடங்கின.
அந்த விலங்கு தன் இரையை ஆராய்ந்து முடிக்க, இவளைப் பார்த்துத் தாவ, திடீரென்று ஒரு சக்தி அவ்விருவருக்கும் இடையே தோன்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்தியது.
அந்த விலங்கு என்ன செய்தாலும் அதிலிருந்து காக்கும் வகையில் அந்தக் கவசம் செயல்பட்டது. அந்த விலங்கு கோபத்துடன் அகன்று விட, அந்தக் கவசம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது.
முழுவதும் மறைவதற்கு முன்னர், ஏதோ முணுமுணுப்பது போலத் தோன்றியது. உற்றுக் கேட்கையில் ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்ப கூறுவது கேட்டது. அந்த ஒற்றை வார்த்தை தனது வாழ்க்கையைக் களவாடக் கூடிய வல்லமை உடையது என்று அப்பொழுது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த வார்த்தை ‘க்ரிஸான்டா’.
அந்தக் காட்சியும் மாற, தன் முன்னே இரு டிராகன்கள் மண்டியிட்டு தனது கட்டளைக்காக காத்திருப்பது போல அமர்ந்து இருந்தன. தான் அதில் ஏறி அமர, மெல்ல மெல்ல அவை உயரப் பறக்க ஆரம்பித்தன.
தனக்கு அந்த மொத்த கிரகத்தையும் காட்டிவிடும் நோக்கத்துடன், வேகமாகப் பறக்க ஆரம்பித்தன. உயர்ந்த வளமான கோட்டைகள் பல இருந்தன அங்கே.
விண்ணை முட்டும் அளவுக்கு பெரியது என்பதற்குச் சான்றாக இருந்த ஒரு பரந்து விரிந்த கோட்டையின் தோட்டத்தில் அவளை இறக்கிவிட்டு விட்டு அந்த டிராகன்கள் பறந்து சென்றன.
அப்போது தன்னை யாரோ “வா, வா” என்று கூப்பிடுவது போலக் குரல் கேட்க, குரல் வந்த சத்தம் கேட்டு, அந்த இடத்தை நோக்கி கால்கள் தானாகவே சென்றன.
அங்கே இருந்த ஒரு பிரம்மாண்ட அறைக்கு நடு நாயகமாக ஒரு புத்தகம் வைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகத்தின் முன் சென்று நிற்க, அந்தப் புத்தகம் அந்தரத்தில் பறந்து அவளை ஆராய்ந்தது.
இவளது கருமையான விழிகள் தங்க நிறத்திற்கு மாற அந்த புத்தகம் அவளை அடையாளம் கண்டுகொண்டு, “செலினாவின் உத்தரவினால் உருவாக்கப்பட்ட கயா கிரக அரசின் வழிவந்த பேரரசர் சீரஸ் மற்றும் அரசி மினர்வாக்கு பிறந்த கயா கிரகத்தின் இளவரசி க்ரிஸாண்டா வாழ்க !” என்றது அந்தப் புத்தகம்.
வேறு ஏதோ கூறுவதற்குள், அனைத்து காட்சிகளும் சுக்கல் சுக்கலாக நொறுங்க தொடங்கின.
மறுபடியும் அந்த வரையறை இல்லாத கருப்பு நதியில், ஒரு பயணம்… அதில் இருந்து வந்த ஒரு வெளிச்ச கீற்றுக் கூறியது “க்ரிஸான்டா… க்ரிஸான்டா…”
இதனிடையே, “நந்துமா… நந்தினி…” என்ற குரல்கள். இவ்விரண்டிற்கும் இடையில் மாட்டி கொண்டு தலையே வெடிப்பது போன்ற உணர்வு எழுந்தது.
******
திடீரென்று எழுந்த போது, எதிரே ஒருவர் தன்னை ஆழ்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். நந்தினி படுத்திருந்த இடத்திலிருந்து எழ முயற்சிக்க, அவளால் வேகமாக எழ முடியவில்லை.
அப்பொழுது தான் இது கனவு இல்லை என்று புரிய தொடங்கியது. தனக்கு அருகில் ஆரியனும், ஆதித்யனும் படுத்துக் கிடக்க, ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல், அன்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது.
மனம் குழப்பத்தில் இருக்க, எதிரே இருந்த பெரியவர் அவளது நெற்றியின் மீது கை வைக்கவும், மனதில் சிறு அமைதி ஏற்பட்டது. அப்பொழுது தான் தன்னை சுற்றிக் கவனித்தாள் நந்தினி. ஏதோ ஒரு சுற்றுல தலமாக ஒதுக்கப்பட்டிருந்த காட்டில் இருப்பதை கவனித்தாள்.
மெல்ல தன் எதிரே இருந்தவரிடம், “நீங்க யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா ? அந்த ரிசர்ச் சென்டருக்கு போனுதுக்கு அப்புறம் அங்க நாங்க மூணு பேரும் மாட்டிக்கிட்டோம். நீங்க எப்படி எங்கள அங்க இருந்து கூட்டிட்டு வந்தீங்க ? ஏன் இன்னும் ஆதியும் ஆரியும் ஏந்திரிக்காம படுத்தே இருக்காங்க ? அவங்களுக்கு என்ன ஆச்சு ?” என்பதை எல்லாம் வாய் கேட்க நினைத்தாலும், குரல் வரவில்லை.
ஆனால், அதைப் புரிந்து கொண்டு அந்த பெரியவர், “க்ரிஸான்டா… இல்லை, நந்தினி இந்த அண்ட சராசரத்தின் தலைமை கிரகமான கயா கிரகத்தின் முதன்மை மந்திரி நான். என் பெயர் பொசய்டன். இந்நேரம் கயா கிரகத்தைப் பற்றி உனக்குக் கொஞ்சமேனும் தெரிந்து இருக்கும் அல்லவா ?” என்று கேட்டார்.
நந்தினி, “ஆமாம்” என்பது போலத் தலையை ஆட்ட,
“அந்த கிரகத்தின் பேரரசி ஆக வேண்டியவள்மா நீ ! இவர்கள் உன் நண்பர்களா ?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.
சிறிது சிறிதாக, அவர் தான் தங்களைக் காப்பாற்றினார் என்று அறிந்த பிறகு, நன்றி உணர்வும் சிறிது நம்பிக்கையும் ஏற்பட, “ஆமாம் தாத்தா, அவர் பெயர் ஆதித்யன். என்னோட கஸின். இவன் ஆரியன், என்னோட ஃப்ரண்ட்” என்றாள்.
“இவங்களுக்கு ஒண்ணும் ஆகல, க்ரி… நந்தினி, அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் தான். சிறிது நேரத்தில் எழுந்து விடுவார்கள்” என்றார். அவரது பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக நந்தனியுடைய பேச்சு வழக்கிற்கு பரிணாமம் பெறத் தொடங்கியது.
நந்தினி அடுத்து ஏதோ கேட்பதற்குள், ஏதோ முனகல் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கு ஆதித்யனுக்கும் ஆரியனுக்கும் நினைவு வரத் தொடங்கி இருந்தது.
நந்தினி உடனே அவர்களிடம் சென்றாள். அவர்கள் மெல்ல மெல்ல எழுந்து அமர, எதிரே ஒருவர் சகல சௌந்தரியத்துடன் அந்தக் காலத்து உடைகள் போல தங்கத்தில் இழைக்கப்பட்ட உடையை அணிந்து உட்கார்ந்து இருந்ததைப் பார்த்த ஆரியன், “என்ன ஏதாச்சும் நகைக்கடை மாடலா இருப்பாரோ ? எப்போலேர்ந்து தாத்தாக்கள வச்சு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சாங்க ?” என்று மனதிற்குள் எண்ண,
சரியாக அதே நேரம், பொசய்டன் அவனைப் பார்த்துச் சிரிக்க, “ஆஹா… நம்ப மனசுல நினைச்சத கண்டுபிடிச்சுட்டார் போலிருக்கே… எதுக்கும் இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்டா சூனாப்பானா” என்று சொல்லிக்கொண்டான்.
ஆதித்யனுக்கு யாரோ தங்களைத் தூக்கியது ஞாபகம் இருந்ததால், அது இவராகத்தான் இருப்பார் என்று சரியாக யோசித்தான்.
இருப்பினும் “இவர் யார் ? இவருக்கு எப்படி நாங்கள் அங்கு மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்தது ?” என்ற சந்தேகங்களும் சேர்ந்து எழுந்தன.
ஆனால், இப்பொழுது தான் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது என்பதை அவனுக்கு எதிரே இருந்த நந்தினி நிரூபித்தாள்.
நந்தினிக்கு தன் அறிவில் குழப்பங்கள் ஏற்படுவது போதாதென்று, இப்போது மனதிலும் குழப்பங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன. “எப்படி ஆதித்யனின் குரல் மட்டும் தன் இயல்பு நிலையை மீட்டுத் தருகிறது ? இன்று காலையில் ஆராய்ச்சியகத்திலும் சரி, இப்போதும் சரி அவனுடைய நந்துமா என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது”.
அது என்ன என்று யோசிப்பதற்குள், அங்கு இருந்த ஆரியன், “ஏம்மா நந்து, இனிமே எது பண்றதா இருந்தாலும் சொல்லிட்டு பண்ணுமா. நீ Inkheart-னு ஒரு படம் பார்த்து இருக்கியா ? அதுல வர்ற ஹீரோவுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கும், அவர் ஒரு கதையை படிச்சார்னா அப்படியே நடக்கும். ஆனா, நீ எத வரைஞ்சாலும் அது அப்படியே நடக்குதுமா. உனக்கு இருக்குறது Silverhand தான்” என்று கூற,
அதுவரை அமைதியாக இருந்த பொசய்டன், “நீ என்ன கூறுகிறாய், தம்பி ? நந்தினி வரைவது நடக்கின்றதா ?” என்று கேட்க, நந்தினி தன்னைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை சுருக்கமாகக் கூறினாள்.
அதைக் கேட்ட பொசய்டன், சிறிது மகிழ்ச்சி அடைந்தார். நந்தினி கூறுவது சரியென்றால், செலினா அவ்வப்போது இவளுக்குக் கனவுகள் மூலம் கடந்த காலத்தைச் சிறு சிறு நினைவு சிதறல்களாகக் கொடுத்துள்ளார் என்று நினைத்துக் கொண்டார்.
இப்பொழுது மற்ற மூவரின் கவனமும் பொசய்டன் மேல் திரும்பியது. அவர்கள் மனதில் இருந்த பல்வேறு கேள்விகளைத் தன் சக்திகள் மூலம் அறிந்து கொண்டார் பொசய்டன்.
பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்களுக்குப் புரிவது போலவே சொல்கின்றேன். ஓர் எறும்பு ஒரு மரத்தின் கிளையில் நடக்கின்றது என்று வைத்து கொள்ளுங்கள். அது என்னதான் வளைந்தோ அல்லது அந்தக் கிளையைச் சுற்றியோ சென்றாலும், அதன் பார்வைக்கு அது நேராகச் செல்வது போலத் தான் இருக்கும். ஏனென்றால், அவற்றால் இரண்டு பரிமாணங்களில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் உங்களால் அது செல்லும் உண்மையான பாதையை உணர முடியும். ஏனென்றால் உங்களால் முப்பரிமாணத்தில் பார்க்க முடியும்”
“அது போலத் தான் எங்களால், அதாவது, கயா கிரக வாசிகளால் பல பரிமாணங்களில் பார்க்க முடியும். அவற்றுள் நேரமும் ஒன்று. ஆனால், Time Travel செய்வதற்கு எங்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. முப்பரிமாணத்தில் உள்ள உங்களால் அதைப் புரிந்து கொள்ள இயலாது. அதுபோல சில கேள்விகளுக்கு உங்களுக்கு விடை புரியாது” என்றார்.
அவர் கூறிய அனைத்திற்கும் தலையசைத்த ஆரியன், “அதெல்லாம் புரியுது தாத்தா, இப்போது அதுக்கும் நந்துக்கும் என்ன சம்பந்தம்–னு சொல்லுங்க” என்றான்.
அவனது தாத்தா என்ற பதத்தில், அவர் அவனை முறைத்துவிட்டு தன் சக்தியைப் பயன்படுத்தி மிகவும் இளமையாக மாறினார். அவர்கள் மூவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டனர்.
ஆரியன் மட்டும், “ஆஹா இவரு சாதாரண தாத்தாவா இருப்பார்னு பார்த்தா… மேஜிக் தாத்தாவா இருக்காரே…” என்று எண்ணினான்.
அடுத்த கட்டமாக, “இப்பொழுது ஒரு பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. அது இன்று நேற்று உருவானது அல்ல, சுமார் இருபத்து மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. அதற்கான தீர்வு நீ தான் நந்தினி” என்றார்.






error: Content is protected !!