அத்தியாயம் – 30
முதல் நாள் :
பொசய்டன் (டைட்டன்) விண்கல விமானத்தில் அமர்ந்து, “நந்தினி இறுதிக் கட்டத்தின் பார்ச்மென்ட்டை எடுத்து வந்து விடுவாளா ?” என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில், அவருடைய கடந்த கால நினைவுகள் அவரைத் தங்களுக்குள் இழுத்துக் கொண்டன.
அவர் டைட்டனாக இருந்த காலத்துக்குச் சென்றார். அப்போதே, அவருக்குப் பலம் மீது பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. அது உடல் சார்ந்த விஷயம். ஆனால், அறிவு அப்படிப்பட்டதல்ல; அது என்றுமே அழியாதது. ஆனால், உடல் அழிந்து விட்டால், அதோடு அதில் இருக்கும் நினைவுகளும் சேர்த்துத்தான் அழிந்துவிடும். அங்கே தான் அவரது தேடல் தொடங்கியது.
பிறகு, அவர் மனதில் சிறிது மாற்றம் ஏற்பட்டு, Resistance கூட்டத்தில் சேர்ந்தார். இறுதியில், கயா கிரகத்தின் சிற்றரசராகப் பொறுப்பேற்ற பிறகு, மறுபடியும் அவர் தேடல் தொடங்கியது. இந்த முறை தனக்குத் தேவையானது அனைத்தும் கிடைக்க, அதற்குப் பின் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். படிப்படியாக ஒவ்வொரு அறிவியல் ரகசியங்களையும் தெரிந்து கொண்டு, தனது கண்டுபிடிப்புகளை மேம்படுத்தத் தொடங்கினார்.
அதற்குச் செலினாவும் உதவ, கயா கிரகம் வளர்ச்சியடையத் தொடங்கியது. அதற்கடுத்து, நினைவுகளில் இருந்து சக்திகளை உண்டாக்கும் கருவி கண்டு பிடிக்கப்பட்ட போதுதான், பிரச்சினை தொடங்கியது. தான் உருவாக்கிய கருவியின் பலனை அதற்குத் தொடர்பே இல்லாதவர்களோடு பங்கு போட்டுக் கொள்ளுமாறு செலினா கூறிய போது அவரது மொத்த உழைப்பும் வீணாகியதாகக் கருதினார். அதிலும், அவர் செலினா மீது வைத்திருந்த நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கியது.
அந்த விரக்தி, அவரது அடிப்படை இயல்பையே மாற்றியது. அதற்காக பழி வாங்குவதற்குப் பொறுமையுடன் காத்திருந்து, ஒவ்வொரு சிற்றரசரிடமும் அவர்களது சக்திகளைப் பெற்று புது அவதாரத்தை எடுத்தார். இறுதியில் செலினாவையும் ஏமாற்றி, porthole-ஐ பயன்படுத்தித் தான் செய்ய வேண்டிய அனைத்தையும் கன்வர்ஜென்ஸுக்கு முன் செய்து முடித்தார்.
இறுதியில் என்னவெல்லாமோ நடந்து அவரது அத்தியாயம் முற்றுப் பெற்றது. ஆனால், அது அதிக காலம் நிலைக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டைட்டன் பொசய்டனின் ரூபத்தில் வந்தார். தான் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் ப்ரொமேத்தியஸை பலிகடாவாக ஆக்கினார். அதிலும் ப்ரொமேத்தியஸ் அகஸ்டஸை ஒத்திருக்க, அவனை மேலும் பிடிக்காமல் போனது அவருக்கு.
இருந்தும் பல ஆண்டுகள் கடினப்பட்டு, ப்ரொமேத்தியஸை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு தன் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். ஆனால், ப்ரொமேத்தியஸ் சீரஸையும், மினர்வாவையும் கொன்ற போது, அவருக்கு மகிழ்ச்சியும் கோபமும் ஒருங்கே தோன்றியது.
சீரஸ், செலினா இருவரும் அந்த சதுரங்க விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்று மகிழ்ச்சியும், சோல் பாக்ஸின் சாவியைக் கைப்பற்றாமல் அவர்களைக் கொன்றதை நினைத்து ப்ரொமேத்தியஸ் மீது கோபமும் ஏற்பட்டது. அதற்குப் பிறகு, அவனது நடவடிக்கையை வைத்து அவன் இன்னும் தன் பகடைக்காயாகத் தான் இருக்கிறான் என்று நம்பினார்.
ஓர் உண்மையான கயா கிரக வாசியால் மட்டுமே அந்த ஈரின் கல்லை அடைய முடியும் என்பதால், அவர் அந்தக் காரியத்திற்கு நந்தினியைப் பயன்படுத்தினார். எங்கே தான் அவர்களுடன் சென்றால், தான் அந்த கிரகத்துக்குள் நுழைய முடியாததை வைத்து, தன்னைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்று எண்ணி, நந்தினிக்குள் இருக்கும் க்ரிசான்டாவை தூண்டி விடுவது போல் ஒரு நினைவைக் காட்டினார். அதற்கேற்றாற்போல் அவளும் நடந்துகொள்ள, அவரது திட்டம் வெற்றி அடைந்தது.
பின்னர், நந்தினியும், மற்றவர்களும் spaceship-க்கு திரும்புவதைக் கண்டு, தனது நடிப்பைத் தொடர்ந்தார். அடுத்து அவர்கள் செல்ல வேண்டிய கிரகம் ‘கயா’ என்று தெரிந்ததும், “இத்தனை வருடங்கள் தான் இருந்த கிரகத்திலேயே தான் அந்தக் கல் இருந்திருக்கிறதா ?” என்று கோபமடைந்தார்.
பின்னர் எழுவர் மலைக்குச் சென்றவுடன், நந்தினியிடம் இருக்கும் அந்த கல்லைப் பறிக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், அங்குச் சென்ற போது, அவளிடம் அந்தக் கல் இல்லாததைக் கண்டு, அவளைக் கொல்ல முடிவு செய்தார். ஆனால், அவர் எதிர்பாராதது ப்ரொமேத்தியஸின் மாற்றம்தான். இந்த நினைவுகள் எல்லாம் வெலாரிஸ் கோட்டையில் இருந்த டைட்டனுக்கு வர, இதுவரை புரியாத பல விஷயங்களுக்கு அன்று அவருக்குக் காரணம் புரிந்தது.
ஏற்கனவே வலி, ஏமாற்றம், தோல்வி என்று அனைத்தையும் சந்தித்தவர், இறுதியில் துரோகத்தையும் சந்தித்தார். அனைத்து உணர்ச்சிகளும் சேர்ந்து, அவரை மற்றொரு முடிவுக்குத் தள்ளின. முன்னர் ஒரு முறை, செலினாவிடம் கூறி, அதற்கு அவர் மறுத்ததால் கைவிடப்பட்ட திட்டத்தை மறுபடியும் செயல்படுத்தத் தொடங்கினார்.
அதாவது இந்த மனிதர்கள் அனைவரிடமும் ஏதோ ஒரு குறை இருக்கிறது. என்னதான் வளர்ச்சி அடைந்தாலும், இயல்பான குணங்கள் மாறவில்லை. அதனால், இந்த இனத்தையே அழித்து விட்டு, புதிதாக ஓர் இனத்தை உருவாக்குவது தான் அந்தத் திட்டம்.
நிகழ்காலத்திற்குத் திரும்பிய டைட்டன் தனது கடந்த கால நினைவுகளைத் தேடி நந்தினியின் நினைவுகளில் இருந்து அவர் எடுத்த சோல் பாக்ஸின் சாவியை ஓர் உண்மையான சாவியாக மாற்றினார். பிறகு, தனது போர் வியூகங்களை வகுத்தவர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். அனைத்தும் முடிந்த பிறகு, இறுதிப் போருக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.
இன்று:
வெலாரிஸ் கோட்டையைச் சுற்றிலும் எந்தவிதமான கட்டிடங்களோ, காடுகளோ இல்லை. அந்த இடத்தை விமானங்கள் நிரப்பியிருந்தன. வெகு தூரத்தில் நந்தினி நின்றிருக்க, அவளுக்குப் பின்னால் வல்கன், மெட்லடன், ஹெஸ்பரஸ் மற்றும் க்ரோனன் அமைதியாக காத்திருந்தனர்.
ஆதியும், ஆரியனும் ப்ரொமேத்தியஸ் கொடுத்த கருவியை எப்படி இயக்குவது என்று பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த இடைவெளியில் லூனாவும், அக்கிலஸும் ஆர்கஸையும், நிகேடரையும், எரேகனையும் தங்களது டிராகன்களில் சோல் பாக்ஸ் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் வந்தவுடன்,
நந்தினி, “டைட்டன் இன்னும் எதற்கு அமைதியாகக் காத்திருக்கிறான் ?” என்று யோசித்தாள். வல்கன், “நாம் எதற்கும் சிறிது நேரம் காத்திருப்பது நலம் என்று நினைக்கிறேன், க்ரிசான்டா” என்று கூற, நந்தினி அதற்குப் பிறகு சில நிமிடங்கள் காத்திருந்தாள்.
ஆனால், எந்த வேறுபாடும் இருப்பது போல் தெரியவில்லை. அதனால், நந்தினி வீரர்களை முன்னேறச் சொல்லி சைகை காட்டச் சொன்னாள். அக்கிலஸ் அந்த வீரர்களுக்குக் கட்டளையிட, பாதிப் படை வீரர்கள் முன்னால் சென்றார்கள். பிறகு, அவர்களுடன் லூனாவும், அகஸ்டஸூம் மற்ற இருவரையும் கூட்டிக்கொண்டு, அந்த இடத்திற்குச் சென்று சேர்த்தனர்.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில், கோட்டைக் கதவுகள் திறக்கப்பட, அதிலிருந்து நூற்றுக்கணக்கில் பெரிய பெரிய விலங்குகள் வெளிவந்தன. அவை ஒவ்வொன்றும் ஒரே மிதியில், ஐந்து வீரர்களை அழிக்கும் அளவுக்கு, அவற்றின் பாதங்கள் பெரியதாக இருந்தன. வீரர்கள் அனைவரும் பின் வாங்கத் தொடங்க, அக்கிலஸ் அந்த விலங்குகளிடம் நெருங்கி, ஆரியனிடம் “அந்தக் கருவியைச் செயல்படுத்து” என்று கூற, ஆரியன் விரைவாக அந்தக் கருவியை இயக்கினான்.
“இனி பிரச்சனை இல்லை” என்று நினைத்த அக்கிலஸ், அந்த உயிரினங்களின் அருகில் செல்ல, அவை அவனைக் கொல்லும் நோக்கத்துடன் பாய்ந்து வந்தன. அக்கிலஸ், டிராகனை வேகமாகச் செலுத்தியதில், ஆதி கீழே விழப்போனான்.
அவனை பத்திரமாகத் தூக்கிவிட்ட அக்கிலஸ், அங்கிருந்து வேகமாகத் திரும்ப, இங்கு லூனா, “ஆரியா, அத Activate பண்ணியா ? இல்லையா ? அங்க பாரு. கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும், ஆதி காலி” என்று கத்த, ஆரியன் நிலைதான் பரிதாபத்துக்கு உள்ளானது.
அவன் எவ்வளவு முயன்றும், அது செயலிழந்து போக, “எனக்கென்னமோ இது வேலை செய்யும்னு தோணல, லூனா” என்று கூற, லூனாவும் அந்த இடத்தை விட்டுப் பறந்தாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த டைட்டனும், தன் கையிலிருந்த கருவியைப் பார்த்து குழப்பம் அடைந்தான்.
அதை என்ன செய்வது எனப் புரியாமலிருக்க, இரண்டாம் கட்ட தாக்குதலைத் தொடங்கினான் டைட்டன். நந்தினி, அங்கு ஏதோ குழப்பம் ஏற்படுவதைக் கண்டு அங்கே செல்ல முயல, வல்கன், “பொறுமையாக இரு, க்ரிசான்டா” என்று கூறவும்,
வெலாரிஸ் கோட்டையிலிருந்து விமானங்கள் வர தொடங்க, அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாமல், நந்தினி, ”தாக்குதலைத் தொடங்குங்கள் !” என்றாள். வீரர்கள் அந்த விலங்குகளுடன் போராடத் தொடங்க, போர் விமானங்களில் இருந்தவர்கள் தாக்குதலைத் தொடங்கினர்.
நந்தினி தன் சக்திகளைப் பயன்படுத்தி, அந்தப் போர்க்களத்தில் நுழைந்து அந்த உயிரினங்களைத் தாக்கத் தொடங்கினாள். அதைக் கண்ட டைட்டன், “வா, க்ரிசான்டா ! இந்தத் தருணத்திற்காகத் தான் இவ்வளவு வருடங்கள் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியவர், மாறுபட்ட தனது கவசத்தை அணிந்து கொண்டார்.
*****
அக்கிலஸூம், லூனாவும் தங்களது டிராகன்கள் மூலம் நெருப்புக் குழம்பை ஊற்றத் துவங்க, அங்குத் திடீரென்று ஒரு செயற்கை டிராகன் அந்தக் கோட்டையிலிருந்து வெளிப்பட்டது. அதன் உடல் முழுவதும் உலோகத்தால் செய்யப்பட்டிருக்க, அதன் கண்கள் லேசர் ஒளிகளை வெளியிட்டன. அதை கண்ட அக்கிலஸூம், லூனாவும் அது இருந்த இடத்தை நோக்கிப் பறந்தனர்.
ஆரியனும், ஆதியும் தங்களுக்குத் தென்பட்ட விலங்குகள் அனைத்தையும் தாக்கிக் கொண்டிருந்தனர். கீழே இருந்த சிற்றரசர்கள் நால்வரும் சிறிது சிறிதாக அங்கிருந்து நகர்ந்து, பக்கத்தில் இருந்த சுரங்கப் பாதை ஒன்றுக்குள் நுழைந்தனர். ஒருவர் சென்ற பின் மற்றொருவர் நுழைந்த பிறகு, அந்த சுரங்கத்தை மூடிவிட்டு தங்கள் வழியில் செல்லத் தொடங்கினர்.
******
நந்தினியை ஐந்தாறு மிருகங்கள் ஒரே நேரத்தில் சுற்றி நிற்க, அவள் ஈரின் கல்லை உபயோகப் படுத்த தொடங்கினாள். தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கிக் கொண்டு, அந்த விலங்குகளைத் தாக்கத் தொடங்கினாள். அவள் அந்த விலங்குகளை ஒவ்வொன்றாக அழிக்க, அவற்றின் இடத்தை வேறு ஓர் உயிரினம் ஆக்கிரமித்துக் கொண்டன. நந்தினி ஒரு கட்டத்தில் மிகவும் கோபமாகி, தன் முழு சக்தியையும் பயன்படுத்தி, ஒரு பெரிய வெடிப்பை ஏற்படுத்தினாள். விமானங்கள் ஒன்றோடு மற்றொன்று மோதிக் கொண்டு, அழிய, அந்த இடமே தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
*****
அந்த இயந்திர டிராகனை பின்பற்றி, அக்கிலஸூம், லூனாவும் செல்ல, அவர்கள் நால்வரும் ஒரு இடத்துக்குத் தனியாகப் பிரிந்து வந்தார்கள். அந்த இயந்திர டிராகன், மற்ற இரு டிராகன்களையும் மாறி மாறி தாக்க, மெட்லடனின் சக்தியால் அவற்றிற்குப் பெரிதாக எந்த காயங்களும் ஏற்படவில்லை. லூனா, “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே சுற்றிக் கொண்டிருப்பது ?” என்று நினைத்தவள், அக்கிலஸிடம் சைகை காட்ட, அதைப் புரிந்து கொண்ட மற்ற மூவரும், ஒன்றாக இணைந்து தங்கள் சக்திகளை வெளிப்படுத்த, இரு டிராகன்களும் தங்கள் பங்கிற்கு அக்னி அருவியைக் கொட்டின.
அந்த இயந்திர டிராகன் பாகம் பாகமாக உடைந்துவிட, நால்வரும் வெற்றியைக் கொண்டாடினர். ஆனால், அதற்குள் ஒரு கருவி அந்த உடைந்த பாகத்தில் சக்தி கதிர்களைப் பாய்ச்ச, பாகங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து மீண்டும் அந்த இயந்திர டிராகனை உருவாக்கின. அதைக் கண்டு நால்வரும் அதிர்ச்சி அடைய, மீண்டும் அந்த இயந்திர டிராகன் தாக்குதலைத் தொடங்கியது.
******
சுரங்கப் பாதைக்குள் நடந்த சிற்றரசர்கள், சிறிது நேரம் அந்த maze-களுக்குள்ளே சுற்றி, இறுதியில் ஒரு கதவை அடைந்தனர். வல்கன், தன் பலத்தைப் பயன்படுத்தி அந்த கதவை தூக்கிப் பிடிக்க, மற்ற மூவரும் உள்ளே வேகமாக நுழைந்தனர். வல்கனும் சில நொடிகளில் வெளியே வந்துவிட, அந்தக் கதவு பழையபடியே மூடிக் கொண்டது. அவர்கள் நால்வரும் இப்போது வெலாரிஸ் கோட்டையின் அடித்தளத்தில் இருந்தனர். பொறுமையாக, யாருக்கும் கேட்காத வகையில் அவர்கள் மேலே ஏறி செல்ல, அங்கு டைட்டன் நின்றிருந்தான். அவனைச் சுற்றி நான்கு விலங்குகள் நின்று, அவனைப் பாதுகாக்க, அவர்கள் தைரியமாக டைட்டனை நெருங்கினார்கள்.
அவர்களைக் கண்ட டைட்டன், “வாருங்கள் சிற்றரசர்களே ! இதே போலொரு சூழ்நிலையில் தான் உங்கள் முன்னோர்கள் என்னிடம் தோற்று ஓடினார்கள். ஆமாம், நான்கு பேர்தான் இருக்கிறீர்கள். மீதம் மூன்று சிற்றரசர்களையும், உங்கள் பேரரசி க்ரிசான்டாவையும் காணோம்” என்று நக்கல் தொனியில் கேட்டான்.
வல்கன், “நீ கூறியதெல்லாம் உண்மைதான், டைட்டன். ஆனால், நாங்கள் யாரும் உன்னைக் குறைத்து மதிப்பிடவில்லை” என்று கூறிவிட்டு அவனைத் தாக்க வர, ஒரு வித்தியாசமான ஒலியை எழுப்பினான் டைட்டன்.
அதைக் கேட்டு அந்த விலங்குகள் அனைத்தும் அவர்களைத் தாக்க தயாராக, க்ரோனன் அந்த விலங்குகளைத் தனது சக்தியால் கட்டுப்படுத்திக் கொண்டு, “என்னால் எவ்வளவு நேரம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. வேகமாகச் செயல்படுங்கள்” என்று கூற, வல்கன், மெட்லடன் மற்றும் ஹெஸ்பரஸ், டைட்டனை தாக்க தொடங்கினர்.
******
சோல் பாக்ஸ் இருந்த இடத்தை சுற்றி, நிகேடர் பாதுகாப்பு வளையங்களை உருவாக்கத் தொடங்க, ஆர்கஸூம், எரேகனும் அவருக்குத் துணை புரிந்தனர். அப்போது, அந்த இடத்தில் ஒரு பேரொலி கேட்க, அவர்கள் மூவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே ஒரு நிழல் உருவம் தோன்றியது. அது கையில் ஒரு வாளை வைத்திருக்க, அதைச் சுழற்றிக் கொண்டே அவர்களை நோக்கி வந்தது. மூவரும் அந்த கருப்பு உருவத்தைத் தாக்க, அது அவர்களிடம் வேகமாக சண்டையிடத் தொடங்கியது. அவர்கள் மூவரும் இணைந்தும் கூட, அவர்களால் அதைத் தோற்கடிக்க முடியவில்லை.
******
போர்க்களத்தில் நந்தினி தன்னுடைய சோர்வையும் மீறி, சண்டையிட்டு கொண்டிருக்க, அவளது மனதில், “என்ன இன்னும் யாரையும் காணவில்லை ? அக்கிலஸ், லூனா, ஆதி, ஆரியன் எங்கே போனார்கள்?” என்று என்ன, சரியாக அதே சமயம் வெலாரிஸ் கோட்டையில் ஏதோ பிரச்சனை நடப்பது போலத் தோன்ற, நந்தினி வெலாரிஸ் கோட்டையை நோக்கிப் பறக்கத் தொடங்கினாள். அங்கு வல்கன், மெட்லடன் மற்றும் ஹெஸ்பரஸ் மூவருடனும் ஒரே நேரத்தில் சண்டை போட்டு கொண்டிருந்தான் டைட்டன்.
வல்கனை தவிர மற்ற இருவரும் வீழ்ந்து விட, அவர் கோபத்தோடு தாக்கத் தொடங்கினார். அவரது கோபத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட டைட்டன், வல்கனை வெற்றி பெறத் தொடங்கினார். இறுதியில், வல்கன் பழிவாங்கும் வெறியோடு டைட்டனை தாக்க, அவன் தடுமாறத் தொடங்கினான். வல்கன் டைட்டனின் தலையை நோக்கிக் குத்த, தலைக்கவசம் மட்டும் தனியாகப் பறந்து சென்று விழுந்தது. இப்பொழுது அது வெறும் கவசமாக நிற்க, டைட்டன் தங்களை ஏமாற்றுவதற்காக ஒரு கவசத்தை உருவாக்கி இருக்கிறான் என்று வல்கனுக்கு புரிய, அதே நேரம் அந்த விலங்குகள் அனைத்தும் க்ரோனனின் கட்டுப்பாட்டை விட்டு வெளியே வந்தன.
ஏற்கனவே, உடலில் பல காயங்கள் ஏற்பட்டிருக்க, அவர்கள் நால்வரும் தங்கள் முன் நின்றிருந்த விலங்குகளிடம் இருந்து, எப்படித் தப்பிப்பது என்ற யோசனையுடன் பார்த்துக்கொண்டனர். அப்போது அங்கே வந்த நந்தினி, தன் சக்தியைக் கொண்டு அந்த விலங்குகளை பழையபடி மாற்ற, அவை அங்கிருந்து ஓடத் தொடங்கின.
வல்கன், “க்ரிசான்டா நாம் இங்கிருந்து உடனே செல்ல வேண்டும்” என்று கூறவும், நந்தினி அங்குக் கீழே கிடந்த கவசத்தை பார்த்து விட்டு, அவருடன் ஓட தொடங்கினாள். வல்கன், “டைட்டன் நாம் அவனைத் தேடி இங்கு வர வேண்டும் என்று நினைத்து திட்டம் தீட்டி இருக்கிறான். அப்படியென்றால், இங்கே ஏதோ பேராபத்து இருக்கிறது” என்று கூற, அந்த நொடியில் மொத்த வெலாரிஸ் கோட்டையும் வெடித்தது.
உயிர் போகாவிட்டாலும், அந்த இடத்தில் ஏற்பட்ட ஒளி கதிர்வீச்சால் சிற்றரசர்களும், நந்தினியும் தூக்கி வீசப்பட்டனர்.
*****
அங்கு அந்த இயந்திர டிராகன், மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்த அக்கிலஸ், “இது என்ன மாயாஜாலமா ?” என்று கேட்டான்.
அதற்கு ஆதி, “இது magic இல்ல, அதீத வளர்ச்சி அடைந்த Shape Memory Alloy-ஆல இந்த டிராகனை உருவாக்கி இருக்காங்க” என்றான்.
லூனா, “அந்த டிராகனுக்குள்ள இருக்கிற அந்த சின்ன பாக்ஸ்ல தான் ஏதோ இருக்கு, அத அழித்துவிட்டோம்னா அந்த ட்ராகனையும் அழிச்சுடலாம்“ என்று வேறு திசைக்குப் பறந்தவாறே கத்தினாள்.
அதை எப்படிச் செய்யலாம் என்று மற்ற இருவரும் யோசிக்க, ஆரியன், “அந்த டிராகனுக்கு உள்ள போய் அதை அழிச்சிட்டா முடிஞ்சு போச்சு” என்று அசால்ட்டாக கூற, ஆதி. லூனா மற்றும் அக்கிலஸ் அவனைப் புன்னகையோடு பார்த்தனர். அவர்களுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஆரியன், “நீ சொந்த காசுலயே சூனியம் வெச்சிக்கிற டா” என்று முணுமுணுத்து விட்டு இறங்குவதற்குத் தயாராக, லூனா அந்த டிராகனுக்கு அருகில் செல்ல, அக்கிலஸ் அதைத் திசை திருப்பினான்.
சரியாக அதே நேரம், ஆரியன் அந்த இயந்திர டிராகன் மீது குதித்து, கிடைத்த இண்டு இடுக்கில் புகுந்து சென்றான். சில நொடிகளில் அந்த ட்ராகன் பழையபடி நொறுங்கி விழுந்துவிட, லூனா வேகமாகச் சென்று ஆரியனைத் தூக்கினாள். அவன் சுயநினைவற்று கிடக்க, அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று பதறி அவனை எழுப்ப முயன்றாள்.
அவன் உணர்வற்று கிடக்கவும், அவள் மனதை ஏதோ அழுத்த, ஆரியன் படக்கென்று எழுந்து அமர்ந்து சிரித்து கொண்டே, “இது எந்த month-னு தெரியல. ஆனா, அந்த month-தோட முட்டாள் நீதான்” என்று கூற, அவனை வெளியில் கோபமாக முறைத்தாலும், மனதில் ஒரு நிம்மதி தோன்றியது.
ஆதி, “ஒரு நிமிஷம், நாம எல்லாரும் இப்ப நந்தினிய விட்டுட்டு தனியா இங்க வந்து விட்டோம். அப்ப இது நம்மள distract பண்றதுக்கு டைட்டன் ஏற்பாடு பண்ணி இருப்பானா ?” என்று கேட்டான்.
அப்போது ஒரு பேரோசை கேட்க, அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினர். லூனா அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல், “வெலாரிஸ் கோட்டை” என்றாள்.
அனைவருக்கும் என்ன நடந்திருக்கும் என்பது புரிய, வேகமாக தங்களது டிராகன்களில் கோட்டையை நோக்கிப் பறந்தனர்.
******
சோல் பாக்ஸ் இருந்த சின்ன கோளில், அதைவிட பெரிய யுத்தம் நடக்கத் தொடங்கியது. ஆர்கஸூம், எரேகனும் மறைந்திருந்து பறந்து தாக்கினாலும் கூட, அந்த கருப்பு உருவம் அவர்களது தாக்குதலில் இருந்து தப்பித்து, எதிர்த் தாக்குதல் நடத்தியது.
நிகேடர் விதவிதமான ஆயுதங்களை உருவாக்கி, அந்த உருவத்தைத் தாக்க, அது தப்பித்துக் கொண்டே இருந்தது. பிறகு அந்த நிழல் உருவம் அவர்கள் மூவரையும் சரமாரியாகத் தாக்கி வீழ்த்திவிட்டு, அந்த கிரகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கவசத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, கயா கிரகத்தை நோக்கிப் பறந்தது.
*******
அந்தத் தாக்குதலில் அனைவரும் அதிர்ந்தனர். வெலாரிஸ் கோட்டை தகர்ந்தவுடன், வீரர்கள் இன்னும் வேகமாக தாக்க தொடங்கினர். சுற்றி நடந்து கொண்டிருந்த போரில் உண்டான சத்தத்தில், நந்தினி மயக்கம் தெளிந்து எழுந்தாள். தான் இருக்கும் சூழ்நிலை புரிய, சிற்றரசர்களைத் தேடினாள். அவர்கள் நால்வரும் வெவ்வேறு இடத்தில் கிடக்க, நந்தினி வல்கனிடம் சென்று, அவரை எழுப்ப முயன்றாள்.
இதற்கிடையே இரு டிராகன்களும் அங்கே தரையிறங்க, நந்தினி நன்றாக இருக்கிறாள் என்பதைப் பார்த்தவுடன், அக்கிலஸூம் லூனாவும் மற்ற இருவரையும் கீழே விட்டுவிட்டு, யுத்த களத்துக்குள் நுழைந்தனர். அக்கிலஸூம், லூனாவும் தங்களது தந்தைகள் அங்கு உணர்வற்று கிடந்தாலும், தங்களது கடமையை மறக்காது அதைச் செய்வதற்கு மனதை கல்லாக்கிக் கொண்டனர்.
அவர்கள் சென்ற பிறகு அந்த இடத்தில் இருந்த, கவசம் மெல்லப் பறக்க தொடங்கியது. அதனுடன் இயந்திர டிராகன்களிலிருந்து ஒரு பாகம் சேர, இறுதியில் அந்த நிழலுருவம் அதனுடன் சேர்ந்து, அங்கே டைட்டன் உருவாகினார். அதைக் கண்டு, நந்தினியைத் தவிர மற்ற அனைவரும் அதிர, நந்தினி ஆதியையும், ஆரியனையும் பார்த்து, “சிற்றரசர்களை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று கட்டளையிடும் தொனியில் கூற,
இருவரும் அவர்களை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
டைட்டன், ‘பரவாயில்லை, க்ரிசான்டா. நான் கற்றுக் கொடுத்த பாடம் உன்னில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறதே” என்று கேலி குரலில் கூற,
“ஆமாம், நீ கூறுவது உண்மைதான். சரி இப்போது உன்னை எப்படி அழைக்க வேண்டும், டைட்டன் என்றா ? டைட்டனுடைய வாரிசு என்றா ? இல்லை பொசய்டன் என்றா ?” என்று கேட்க,
உரத்த குரலில் சிரித்த டைட்டன், “நான் டைட்டனுடைய வாரிசா. நான்தான் டைட்டன், க்ரிசான்டா” என்று கூறியவனை, அதிர்ச்சியுடன் பார்த்த நந்தினி, “எப்படி இத்தனை நூற்றாண்டுகளாக ?…” என்று அதற்கு மேல் அதிர்ச்சியில் கேட்க முடியாமல், பாதியில் நிறுத்தினாள்.
“சற்று முன் தான் உன்னைப் புகழ்ந்து கூறினேன். அது தவறாகிவிட்டதே, க்ரிசான்டா. அவ்வளவு முன்னேற்பாடுகளைச் செய்து வைத்த நான், செலினா இதுபோல எதுவும் செய்வார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டேனா ?” என்று கேட்டவன் தொடர்ந்து, “நாம் எப்பொழுது இறப்போம், க்ரிசான்டா ? நம்முடைய நினைவுகள் நம் உடலை விட்டு பிரிந்து சக்திகளாக மாறும் போது தான். அதனால், நான் என்னுடைய நினைவுகளில் ஒரு பகுதியைப் பிரித்து, ஒரு கருவியில் சேமித்து வைத்தேன். இத்தனை நூற்றாண்டுகளாக அது பல்கி, பெருகி மீண்டும் எனது முழு நினைவும் உருவாகியது.
அந்த நேரத்தில் பொசய்டனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போது என்னுடைய கருவியைக் கண்டுபிடித்தார். நீங்கள் கொஞ்சமும் யோசனை செய்யாமல், சோல் பாக்ஸை சந்தேகப் பட்டு, ப்ரொமேத்தியஸை நான் என்று நினைத்துக் கொண்டீர்கள்” என்று கூறினான்.
நந்தினிக்கு, ப்ரொமேத்தியஸின் பெயரைக் கேட்டதும் கோபம் ஏறத் தொடங்கியது. டைட்டன் தன் திட்டம் வெற்றியை நோக்கி நடப்பதைக் கண்டு, அவளை மேலும் கோபப்படுத்தி, அவளை ஒரு சின்ன தவறைச் செய்ய வைக்க முயன்றார்.
“இன்னும் கன்வர்ஜென்ஸ்க்கு சில மணி நேரங்கள் தான் இருக்கிறது, க்ரிசான்டா. உனக்கு இந்த வாய்ப்பை விட்டால், வேறு வாய்ப்பு கிடைக்காது. முடிந்தால் இப்போதே என்னைத் தோற்கடிக்க முயற்சி செய்” என்றான்.
நந்தினி, வேகமாக தன் முழு பலத்தையும் பயன்படுத்தி டைட்டனை தாக்கத் தொடங்கினாள். டைட்டனும் அவளைத் திருப்பி தாக்க, அந்த இடமே ரணகளமாக மாறியது. நந்தினி தன்னை சுற்றி நூறு ஆயுதங்களை உருவாக்கி, டைட்டனை அதைக்கொண்டு சரமாரியாகத் தாக்க, அவனது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
டைட்டன் உடனடியாக அந்த இடத்தை விட்டுப் பறக்கத் தொடங்க, அவரது திட்டம் தெரியாமல், நந்தினியும் வேகமாக அவனை பின்தொடர்ந்தாள். இருவரும் பறந்து கொண்டே, கயா கிரகத்தைவிட்டு வெளியே வந்துவிட, அந்த இடத்தில் மீண்டும் கருமை சூழ்ந்துகொண்டது.
டைட்டன், “என்னுடைய கடைசி கண்டுபிடிப்பை பற்றி உன்னிடம் கூறவில்லையே, க்ரிசான்டா. என்னுடைய உடலை, ‘ஆத்மா, வெறும் உடல், என்னுடைய நிழல்’ என மூன்றாகப் பிரித்து என்னால் போரிட முடியும்” என்று கூறியவர், திடீரென தன்னை ஒரு கவசமாகவும், ஒரு விலங்காகவும், ஒரு நிழல் உருவமாகவும் மாற்றிக்கொண்டார்.
அந்தக் கவசமும், விலங்கும் நந்தினியைத் தாக்குவதற்காகப் பாய, அவள் அவற்றைக் கஷ்டப்பட்டுச் சமாளித்தாள். இதற்கிடையில் அந்த நிழல் உருவம் நந்தினிக்குத் தெரியாமல் அவள் முன் வந்து நின்று, அவளது நெற்றியைத் தொட்டது.
நந்தினி அலற ஆரம்பிக்க, அந்த உருவம் அவள் உடலிலிருந்து ஈரின் கல்லைப் பிரித்தெடுத்தது. நந்தினிக்கு நினைவு தப்ப, டைட்டன், “உன் பறக்கும் சக்தியை நீ இழந்து விட்டாய், க்ரிசான்டா” என்று கூறியவர் அவளைக் கயா கிரகத்தின் காற்று மண்டலத்துக்குள் தள்ளியவர், சோல் பாக்ஸை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
அக்கிலஸூம், லூனாவும் கீழே விலங்குகளுக்கிடையே மாட்டிக்கொண்டு, வெளிவர முடியாமல் போராட, ஆதியும், ஆரியனும் சிற்றரசர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். நந்தினியின் உடல் அந்தக் காற்று மண்டலத்தில் ஓர் இலை காற்றில் பறப்பது போலப் பறந்து கீழே வந்துகொண்டிருந்தது. தன்னைக் காப்பாற்ற வருவதற்கு யாருமில்லை என்று சுயநினைவு இல்லாமல் இருந்த நந்தினி அறிந்திருக்க வாய்ப்பில்லை.