“எங்கம்மா கூட போறேன்.. அந்த வீடு தான் என் வீடு...”
“அது உன் வீடு இல்லை.. அதுவுமில்லாம இங்க இல்லாமா என் கூட இல்லாம எங்க போக போற நீ..”
“அப்போ.. நீங்களும் வாங்க போலாம்.. நமக்கு இவங்க யாரும் வேணாம்.. யாருமே வேணாம்.. எல்லாம் எப்படியோ போகட்டும்.. உங்கம்மா சரியான சுயநலம்..” என்று விடாது பேசிக்கொண்டு போனவளை என்ன செய்தால் வாய் மூடுவாள் என்றுதான் பார்த்தான் கோவர்த்தன்..
சத்தியமாய் அவனுக்கு பொறுமை கரைந்துகொண்டே போனது, “ஏய் வாய் மூடு.. அப்போ இருந்து சொல்றேன்..” என்று அதட்டல் போட்டவன்,
“இன்னொரு தடவ கத்தின கொன்னுடுவேன்..” என்று விரல் நீட்டி மிரட்ட, எப்போதுமே இப்படியெல்லாம் பேசாதவன் இப்போது இப்படி பேசவும் பமீலா திகைத்துப் போய் கணவனைப் பார்க்க,
“வாய் மூடிட்டு பேசாம இங்க இருக்கணும்..” என்றுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்..
இந்திரா அப்போதும் கைகளை பிசைந்துகொண்டே நிற்க “அவதான் அப்படின்னா நீங்க ஏன் அத்தை எதுவும் சொல்ல மாட்டீங்களா??” என்று அவரிடம் கேட்க, அவரோ அப்போதும் பாவமாய் தான் மணிராதாவைப் பார்த்தார்..
நிச்சயமாய் இதெல்லாம் கோவர்த்தனுக்கு ஒரு எரிச்சலை தர, “ம்மா.. ஆனா ஒண்ணு.. நடக்குறது எல்லாத்துக்கும் வேற யாரும் காரணமில்லை.. அது உனக்கே தெரியும்..” என்று அவனும் தன் பங்கிற்கு சொல்லிவிட்டு செல்ல, இந்த வார்த்தைகள் எல்லாம் ஈட்டியாய் மணிராதாவை குத்த ஆரம்பித்தது..
முதல்நாள் திருமணம் நடந்த வீடு போலவே இல்லை அங்கே. ஆளாளுக்கு ஒரு அறையில்.. ஒவ்வொரு நிலையில்... மனதில் இருந்த திடம் இழந்து, என்னால் எதுவும் செய்ய முடியும் என்ற எண்ணம் இழந்து, உடலில் உள்ள மொத்த பலமும் இழந்தது போல் உணர்ந்து தோய்ந்து போய் சோபாவில் பொத்தென்று அமர்ந்தார் மணிராதா..
மனதிற்குள்ளே பல நூறு எண்ணங்கள்.. அனைத்துமே முன் நடந்தவை.. இதெல்லாம் என்ன பெரிய விசயமா என்று எண்ணியது எல்லாம் இப்போது பூதாகாரம் கொண்டு இருக்க, மகுடேஸ்வரன் தனக்குத் தெரியாமல் இப்படியொரு உயில் எழுதியது வேறு பெரும் அதிர்ச்சி அவருக்கு..
அனைத்தும் சேர்த்து அவரை அமைதி கொள்ள செய்ய, இந்திராவோ “ அண்ணி...” என்றார் மெதுவாய்..
“கொஞ்ச நேரம் தனியா இருக்க விடு இந்திரா.. நீயும் போய் கொஞ்சம் தூங்கு...” என்றவர் அப்படியே அமர்ந்துவிட, வாசலில் ஆட்களின் சப்தம் கேட்கவும், என்னவென்று போய் பார்த்தார்..
வீட்டின் வெளியே சிவகாமியும் ராணியும், சங்கலிநாதன் என்று அனைவரும் நிற்க, ஆட்கள் சீர் கொண்டு வந்துகொண்டு இருந்தனர்.... ஆனால் யாரும் உள்ளே வரவில்லை. ‘கடவுளே இது வேறயா..’ என்று மணிராதா பார்க்கும் போதே, சத்தம் கேட்டு வனமாலி எழுந்து வந்துவிட, “அட உள்ள வாங்க..” என்றபடி வேகமாய் அவன் வாசல்பக்கம் செல்ல,
மணிராதாவோ “இந்திரா நீ போய் பமீலா கூட இரு..” என்று அவரை அனுப்பினர்.
சிவகாமி தயங்கி அப்படியே நிற்க “அத்தை உள்ள வாங்க..” என்று வனமாலி அவரை அழைக்க,
அவரோ “இல்.. இல்ல வனா..” என்று லேசாய் தயங்க, வனமாலி திரும்பி மணிராதாவைப் பார்த்தான்.
அவரோ வேடிக்கை பார்ப்பதுபோல் நிற்க, “ம்மா...” என்று கடிந்து அவன் பார்த்த பார்வையில், அவருக்கு தன்னையும் அறியாது “வா.. வாங்க.. எல்லாம் வாங்க..” என்று சொல்ல வந்திட, அதன் பின்னே தான் அனைவரும் உள்ளே வந்தனர்.
சிவகாமி உள்ளே வந்தவர் மகளைத் தேட “இப்போதான் தூங்கினா..” என்றவன் “கமலி...” என்று வேகமாய் அவளைப் போய் எழுப்ப, அவளோ “என்னாச்சு..??!!” என்று பதறி எழ,
“ஹேய் ஹேய் ஒண்ணுமில்ல.. அத்தை.. எல்லாரும் வந்திருக்காங்க.. வா..” என,
“அ.. அம்மாவா...” என்று வேகமாய் வெளியே வந்தவள், “ம்மா..” என்று வேகமாய் அவரின் அருகே போக,
“கமலி...!!!!” என்று வனமாலி அழைத்தவனைப் பார்த்து புன்னகைதவள் “வாங்க தாத்தா.. வாங்க அத்தை..” என்று மற்றவர்களையும் வரவேற்க, நிஜமாகவே மணிராதாவிற்கு இவர்களின் திருமணம் திடீர் திருமணம் போன்றே தெரியவில்லை.
அதற்குள் வந்தனாவும் வந்திட, அவளும் வந்தவர்களை வரவேற்க, அறைக்குள்ளே இவர்களின் பேச்சு கேட்டாலும் இந்திராவும் பமீலாவும் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்து அமர்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது..
“பாத்தியா ம்மா.. கடைசியில எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்க..”
“ம்ம்ச்.. நீதான் தேவையில்லாம பேசுற பமீலா..” என்றவர் “நீ பாட்டுக்கு இரேன்..” என, “என்னால உன்னை மாதிரி எல்லாம் இருக்க முடியாது..” என்றாள் வெடுக்கென்று..
“என்னடி சொல்ற???”
“ஆமா இத்தனை வருஷம் அப்படிதானே இருந்த.. அத்தை சொல்ற எல்லாத்துக்கும் தலையை தலையை உருட்டி.. கடைசியில என்னாச்சு.. இதோ அவங்களே அங்க வாய் மூடி நிக்கிறாங்க.. என்னால உன்னை மாதிரி இப்படி பொம்மையாட்டம் ஒரு வாழ்க்கை வாழ முடியாது..” என்றாள் அம்மாவிடம் பேசுகிறோம் என்றில்லாது..
நிஜம்தானே.. இந்திரா இப்போது வரைக்கும் அப்படிதானே.. இல்லை அவரது குணமே அதுதானோ என்னவோ.. அதற்காகத்தான் மணிராதா இவரை மகுடேஸ்வரனுக்கு மணம் முடித்தாரோ என்னவோ. ஆனால் அந்த நிமிர்வு மட்டும் இந்திராவிற்கு இப்போது வரைக்கும் வரவேயில்லை..
அதை மகளின் வார்த்தைகளாய் கேட்கும்போது அவருக்கு இன்னும் மனம் வலிக்க, “நான் என்ன டி செய்ய..??” என்றார் பாவமாய்.
“என்ன செய்ய.. இதோ இப்படிதான் உக்காரணும்...” என்றவள் வெளியே பேசும் பேச்சை கவனிக்க,
அங்கே சிவகாமியோ “மறுவீட்டுக்கு அழைக்க வந்திருக்கோம்...” என்றார் பொதுவாய்.
இவர்கள் பேசுவதற்குள் வந்தனாவோடு, கமலியும் அடுக்களை போய் அனைவர்க்கும் குடிக்க ஜூஸ் போட்டுக்கொண்டு வர, சிவகாமிக்கு ஒரு திருப்தி மனதினுள்..
அங்கே எப்படித்தான் கமலி இருக்கப் போகிறாளோ என்று நினைத்து வந்தவருக்கு, அவள் அங்கே இயல்பாய் பொருந்திப் போனது இன்னமுமே ஆச்சர்யம்.. அதற்கு காரணம் வனமாலி என்று தெரியும் இருந்தாலும் மகளின் குணமும் அறிந்தவர் தானே..
மணிராதா வாயே திறக்கவில்லை, ராணிதான் “அக்கா.. இதுல நகை எல்லாம் இருக்கு..” என்று ஒரு நகைப் பெட்டியைக் கொடுக்க,
அவரோ வீம்பையும் விடாது, மகன் முன்னே மறுத்தும் பேச முடியாது என்ன செய்வது என்று திணறி, “அ.. இதெல்லாம்.. அ.. அது. இதெல்லாம் எதுக்கு..” என்றார் பெயருக்கேனும்.
“முறைன்னு ஒண்ணு இருக்குல்ல மணி..” என்று சங்கிலிநாதன் சொல்ல, அதற்குமேல் பேசாது, அதனை வாங்கியவர் மகனைப் பார்த்து “இந்தா வனா..” என்று சொல்ல,
“ம்மா இதெல்லாம் கமலிக்கு..” என்றான் லேசாய் சிரித்து.
மணிராதாவோ சரியாய் இவர்கள் முன்னே மாட்டிக்கொண்ட உணர்வில் “ம்ம்” என்று முகத்தை தூக்கியவர், “இந்தா...” என்று கமலியைப் பார்த்து சொல்ல, அவளும் வனமாலி போலவே மெதுவாய் சிரித்தவள், ஒன்றும் சொல்லாது நகைப் பெட்டியை வாங்கிக்கொள்ள, சிவகாமியோ “போய் பூஜை ரூம்ல வை..” என்றார் மகளிடம்..
வனமாலியோ “எல்லாருக்கும் லஞ்ச் சொல்றேன்..” என்று சொல்ல,
“அதெல்லாம் வேணாம் வனா... அங்க எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டுதான் வந்தோம்.. மறுவீட்டுக்கு கூப்பிடனும் இல்லையா..” என்ற சிவகாமி,
“அண்ணி.. பொண்ணையும் மாப்பிள்ளையும் நாளைக்கு மறுவீட்டுக்கு அனுப்பி வைங்க..” என்று மணிராதாவைப் பார்த்து நேருக்கு நேர் சொல்ல,
தன்னிடம் சிவகாமி நேருக்கு நேர் பேசுவார் என்று நினைக்காத அவரோ, “ஆ..” என்று திடுக்கிட்டு,
“ச.. சரி...” என்றவர், பின் என்ன நினைத்தாரோ “கல்யாணம் எல்லாம் என்னை கேட்டா நடந்துச்சு..” என்றார் வெடுக்கென்று.
“ம்மா..” என்று வனமாலி சொல்ல,
சிவகாமியோ “நடக்கனும்னு இருந்திருக்கு நடந்திருக்கு..” என்றவர், வந்தனாவிடம் “உன் கல்யாணத்துக்கு என்ன வேணும் சொல்லு..” என, அப்படியே பேச்சு வளர்ந்தது.
கமலி அனைத்தையும் அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. மணிராதாவும் அதே தான்.. என்னவோ தன் வீட்டிலே அந்நியமாய் அமர்ந்திருக்கும் ஓர் உணர்வு அவருக்கு.. எப்படி சிவகாமியை அவர் வாழ வேண்டிய வாழ்வில் இருந்து அந்நியப் படுத்தினரோ இப்போது அதுபோலவே.
ஒருவழியாய் அனைவரும் கிளம்ப, வனமாலி கோவர்த்தனுக்கு அழைத்து அனைவர்க்கும் மதிய உணவு வாங்கி வர சொல்ல, அப்படியே நேரம் போனதுதான் மிச்சம்.. கோவர்த்தன் வரவும், அவரவர் தட்டில் போட்டு உண்டுவிட, கமலியும் வனமாலியும் மட்டும் ஒன்றாய் அமர்ந்து கடைசியில் உண்ண,
வந்தனா வந்தவளோ “நானே உங்களை சாப்பிட கூப்பிட நினைச்சேன்..” என்றுவிட்டு போக, “எனக்கு நிஜமாவே கஷ்டமா இருக்கு..” என்றாள் கமலி..
வாயில் உணவை வைக்கப் போனவன் அவளைப் பார்த்துவிட்டு “நீ எதுவும் நினைச்சுக்க வேணாம்..” என்றவன், “எங்காவது வெளிய போலாமா??” என்றான் திடீரென..
“நா.. நாளைக்கு அம்மா வீடு போகணுமே..” என்று எதுவும் யோசிக்காது கமலி சொல்ல, அவள் சொன்னதில் வனமாலிக்கு சிரிப்பு வந்திட்டது..
“என்ன??!!” என்றாள் வாய் கொணட்டி..
“இல்ல இதுதான் உன் வீடுன்னு உனக்கு புரிய வைக்க நாளாகுமோன்னு நினைச்சேன்.. பரவாயில்ல.. நான் நினைச்சது மாதிரி இல்ல நீ..” என்று அவனும் சொல்ல,
“ஓ..!! அப்போ நீங்க என்னை என்ன நினைசீங்க??” என்றாள் இவளும்.
“இல்ல எப்படியும் நிறைய சண்டை வரும்னு நினைச்சேன்..”
“ஹா டொன்ட் வொர்ரி உங்களோட எண்ணத்தை நிறைவேத்திடலாம்..” என்று அவள் சொன்னதும் இருவருக்குமே சிரிப்பு வந்திட, அந்த பக்கம் எதேர்ச்சையாக வந்த மணிராதாவிற்கு இவர்களை கண்டு இப்போதும் ஆச்சர்யமாய் தான் போனது.