பாகம் - 4
இடம்: கிங் ஜார்ஜ் மருத்துவமனை
நேரம்: தேவலோகத்தினர் என்னை வாழ்த்திய தருணம்!
என்னை, அங்கு, அப்படிப் பார்த்தது அவனுக்கும் அதிர்ச்சிதானென்பது அந்த கண்களில் தெரிந்தது. சட்டென, என் அருகில் அமர்ந்து கையைப் பிடித்தபடி, ‘’ஹே, ஆர் யூ ஓ.கே? வாட் ஹாப்பண்ட்? என்றான்.
என் ராட்சஸனை காண்பேனா? என ஏங்கித்தவிக்கும் போது வறண்ட பாலவனத்தில் கிடைத்த நீறுற்று போல, அவனைக் கண்ட ஆனந்தமா இல்லை கால் வலியின் காரணமோ என்னவோ, சட்டென வார்த்தை ஏதும் கிடைக்காமல் ‘’ம்ம்ம்’’ என்று தலையாட்டினேன். அந்த ஒற்றை வார்த்தை பதில் அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எழுந்து நின்று, ஒரு தெரபிஸ்டாக தன் கடமையைச் செய்ய முயற்சித்தான்.
‘அமுதினி புருஷோத்தமன் (மிக நிதானமாக என் பெயரைப் படிக்கிறான்) ரைட்! மிஸ் ஆர் மிஸஸ்?’ ன்னு ஒற்றைப் புருவம் தூக்கி அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், அவனையே பார்த்தேன்.
‘பை எனி சான்ஸ் யூ ஆர் பிரக்ணண்ட்? ‘ ன்னு (இங்கிலாந்தில் எந்த மருத்துவ சந்திப்பிலும், பெண் நோயாளிகளிடம் இந்த கேள்வியை அவசியம் கேட்பார்கள்) அவன் அடுத்து கேட்கும் போது, நான் முழித்த முழியில் சிரித்தேவிட்டான்.
‘ஓ.கே.. லெட் மீ அளொ டூ சீ யுவர் னி’ என்றவாறு அடிபட்ட காலைத் தொட்டுப்பார்த்தான். முட்டியில் ஒவ்வொரு பகுதியாக அவன் தொடும் போது, வலி அதிகமாக, ‘ஸ்ஸ்ஸ்… வலிக்குது விடுங்க’ என்று முனகியதும் அவனுக்கு அப்படி ஓரு சந்தோஷம்.
‘’ஓய்… நீ தமிழா?’’ என்றான் உற்சாக குரலில்.
‘’ஆமா’’ என்றேன்.
‘’ஆனா, உங்கம்மாவைப் பார்த்தால் அப்படி தெரியலையே?’’ என்றான்.
‘’ வாட்! எங்கம்மாவை நீங்க எங்க பார்த்தீங்க? அவங்களை எப்படி உங்களுக்குத் தெரியும்?’’ என்று ஆச்சர்யத்தில் கேட்டேன்.
‘’ அன்னிக்கு கோயில்ல, ஒருத்தங்க முந்தானையை பிடிச்சிக்கிட்டே திரிஞ்சியே!, எங்க ஒரு நிமிஷம் அவங்களைப் பிரிஞ்சாலும், நான் கடத்திக்கிட்டு போய்டுவேங்கிற மாதிரி சீன் போட்ட’’ என்று புருவம் தூக்கியபடி வினவினான்.
‘ஹலோ…. அந்த ஆன்டியைப் பிரதோஷம் தவறாமல் பார்ப்பேன். பேசுவேன், அவ்வளவுதான்’.
‘இல்ல, அவங்க டிரஸ் பண்ணியிருந்த விதத்தில் வேற மொழி பேசறவங்கன்னு நினைச்சேன். உங்க ரெண்டு பேரயும் பார்த்தா, அம்மா பொண்ணு மாதிரி இருந்தது. அதான்’’.
(அடேய்..பச்ச தமிழச்சி நானு! அந்த அண்டா ஆன்டியோட பொண்ணு மாதிரியா நானிருக்கேன்? இது எங்கம்மாவுக்கு தெரிஞ்சுது, உன்னை கொல்லாம விட மாட்டாங்க)
‘’அப்ப..என்னை தீவிரமா கண்காணிச்சிருக்கீங்க போல!’’ என்று வினவினேன்.
‘’ஆனாலும் உன்னை மாதிரி செல்பி எடுக்கிற சாக்கில் போட்டோ எடுத்துவைக்கனும்ன்னு எனக்கு தோணலையே?’’ன்னு அவன் கேட்டபோது, வெட்கத்தில் என்னுடல் சூடானது.
‘இப்ப நான் சொல்லித்தர பயிற்சிகளை தினமும் 3 தடவை பண்ணு. வலி சரியாகற வரைக்கும் குதிகாலை அழுத்தி ஊன்றாதே. 1 வாரத்தில் சரியாகலைன்னா மறுபடியும் உன் டாக்டரைப் போய் பாரு’’ என்றான்.
‘’ம்ம்ம்… தேங்க்ஸ்’’
‘’சரி எப்படி வீட்டுக்கு போவ? கூட்டி போக யாராச்சும் வருவாங்களா?’’ என்றான்.
‘’ஊபர் புடிச்சு போய்டுவேன். பிரச்சனையில்லை’’
‘’ம்ப்ச்.. . இந்த வலியோட எப்படி சமாளிப்ப? கொஞ்ச நேரம் இரு. என் ஷிப்ட் முடிஞ்சிடும். நானே கொண்டுவந்து விடறேன். அதுவரைக்கும் என் ரூம்ல இரு’’ என்று என்னை எழுப்பி, நடக்க உதவி செய்து அவன் இருக்கையில் அமரவைத்துவிட்டு சென்றான்.
மத்த நேரமா இருந்தால், பிகு பண்ணியிருப்பேன். ஆனால் இந்த வலியோடு?. யாராவது உதவிக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் தோன்றியது.
ஆக என் ராட்சஸன் பேரு அர்ஜூன்!. ச்சோ ஸ்வீட்… அர்ஜூன், அஜி. என் அச்சுக்குட்டி.
மனசு ரொம்ப நிம்மதியாய் இருப்பதால் என்னவோ, அப்படியே, மேஜையில் சாய்ந்து கண்ணயர்ந்தேன்.
‘’ஹேய்… அமுதினி, எந்திரி போகலாம்’’ என்று தூக்கத்திலிருந்து அவன் எழுப்பும் போது, என் மகிழ்ச்சி பலமடங்கானது. இது கனவல்ல! அர்ஜூன் நிஜமாக என் கண்முன்னால் நிற்கின்றான்.
என் இடுப்பில் கைப்போட்டு தாங்கிப்பிடித்து (கைப்பட்டபோது என் மனசுக்குள்ள மைனஸ் டிகிரி) கூட்டிச்சென்று காரில் அமரவைத்தான். வீடு எங்கே என்று கேட்காமலேயே, நேவிகேஷனில் என் வீட்டு போஸ்ட்கோட் போட்டு, காரோட்ட ஆரம்பித்தான்.
ஹாஸ்பிட்டல் பைலில் என் வீட்டு முகவரி பார்த்திருப்பான். திருடா… டேய்!
வீட்டுக்கு போவதற்கு முன், காரை ‘மெக்டொனால்ட்’ முன்பு நிறுத்தி, ‘உனக்கு என்ன புடிக்கும்’ என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றான். எங்கம்மா எப்பவும் இப்படித்தான். ‘பசிக்குதா’ன்னு கேட்க மாட்டங்க. என் முகத்தை பார்த்தே, என் பசியறிந்து சாப்பாடு எடுத்துவைப்பாங்க.
காரில் அமர்ந்தவாறே, இருவரும் சாப்பிடும் போது, ‘’ஆமா, நான் தமிழ் பையன்னு எப்படி தெரியும்? வலிக்குதுன்னு தமிழ்ல சொல்ற? என்று கேட்டான் அர்ஜூன்.
அவன் காதை சுட்டிக்காட்டியபடி, ‘’காதுகுத்திய தழும்பு உங்களுக்கு இருக்கு. தமிழ் பசங்களுக்கு ரெண்டு காதும் குத்திய அடையாளம் தெரியும். அதுலதான் கண்டுபிடிச்சேன்’ என்றேன்.
‘’கில்லாடி நீ! என்னை இஞ்ச் இஞ்ச்சா அளந்திருக்க போல! காதை மட்டுமே இந்தளவு கவனிச்சிருந்தா, மத்ததெல்லாம் எந்தளவு பார்த்திருப்ப?’’ என்று கேலி செய்தான்.
அய்யோ… அசிங்கப்படுத்தறானே! எதாவது சொல்லி இவன் வாயை அடைக்கனுமே!
‘’ஏங்க… நீங்க இப்படித்தான் உங்க பேஷண்ட்ஸை, நீ, வா, போன்னு மரியாதை இல்லாமல் பேசுவீங்களா? ‘’ என்றேன்.
‘’இல்லை. உன்னை நான் அப்படிப்பார்க்கல, உங்கிட்ட இப்படிப் பேசத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. அதுக்காக என்னையும் நீ ன்னு மரியாதை இல்லாமல் கூப்பிடுன்னு சொல்ல மாட்டேன். நீ ‘ஏங்க’ன்னு சொல்றது ஏக்கத்தோடு சொல்ற மாதிரியே இருக்கு. அதையே கன்டின்யூ பண்ணு’’ன்னு உதடு சுளித்து கண்ணடித்தான்.
‘ஷிட்… இவன் உதட்டிலென்ன இத்தனை வரிகள் இருக்கு????
காதல் வளரும்